Tuesday 29 May 2018

எரிபொருள் அரசியலும் வெடி பொருள் அரசியலும்

2018 மே மாதம் 18-ம் திகதி வரையான தொடர்ந்து ஆறு வாரங்களாக எரிபொருளின் விலை அதிகரித்து வந்தது. 2018 மே 29-ம் திகதி 66டொலர்களாக இருக்கும் ஒரு பீப்பா மசகு எண்ணெய் விலைஇன்னும் சில மாதங்களில் நூறு டொலர்களாக அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2020இல் இரசியாத தனது படைத்துறையை உலகின் முதற்தரப் படைத்துறையாக மாற்றும் திட்டத்தைக் குழப்புவதற்கென உலகச் சந்தையில் திட்டமிட்டு எரிபொருள் விலை வீழ்ச்சி உருவாக்கப் பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து செயற்பட்டன. இரசியாவின் வெடிபொருட்கள் அதிகரிக்காமல் இருக்க எரிபொருள் விலை மீது தாக்குதல் செய்யப்பட்டது.

யூரேனிய ஒப்பந்தம்
ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்தமையும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மீளவும் கொண்டிவரவிருப்பதும் ஈரானிய எரிபொருள் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானிய எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இலாப்திறன் மிக்கதாக்குவதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகின்றது. யூரோனியம் பதப்படுத்தல் ஒப்பந்தம் செய்யப் பட்ட பின்னர் ஈரானுக்குக் கிடைத்த அதிக வருமானத்தில் பெரும்பகுதியை அது ஈராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் நடக்கும் உள்நாட்டுப் போரின் வெடிபொருட்களுக்குச் செலவிட்டு அந்த நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க ஈரான் முயன்றது.

 உலகெங்கும் எரிபொருள் காய்ச்சல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி கண்ட ஜப்பான் 2018இன் முதலாம் காலாண்டில் சுருக்கமடைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு அதன் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வெனிசுவேலாவிலும் நைஜீரியாவிலும் லிபியாவிலும் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு குறைந்துள்ளது. மெக்சிக்கோவிலும் கஜகஸ்த்தானிலும் எரிபொருள் உற்பத்தி குறைந்துள்ளது. சவுதி அரேபியாவை நோக்கி யேமனில் இருந்து அவ்வப் போது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. எரிபொருள் விலை உயர்ந்தால் ஈரானின் வருமானத்தை அது அதிகரிக்கும். அவை ஈரானால் ஹூதி கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஈரான் தனது ஏவுகணைகளின் திறனை அதிகரித்து வருகின்றது. அது மேலும் வலிமை மிக்க ஏவுகணைகளை ஹூதி கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கினால் அது சவுதி அரேபியாவில் எரிப்பொருள் உற்பத்தியையும் இருப்பையும் பெரிதும் பாதிக்கும். 2018 நவம்பரில் அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவையின் எல்லாத் தொகுதிகளுக்கும் மூதவையின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையிலும் பாதகமான தேர்தல் முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்பைப் பதவியில் இருந்து விலக்கப்படும் ஆபத்தைக் கொண்டுவரும் சூழலிலும் டிரம்ப் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பார் என எதிர்பார்க்கலாம். எதிர்பாராத முடிவுகளை சடுதியாக எடுக்கும் குணம் மிக்க டிரம்ப் அமெரிக்காவின் ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க அரசு உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் புதிய கிணறுகளைத் தோண்டி இலாபம் ஈட்டுவதற்கு உலகச் சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பா 53 டொலர்களுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். 2018 மேமாதம் நடுப்பகுதியில் மசகு எண்ணெய் விலை 70 டொலர்களாக உயர்ந்தமை ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவிருக்கின்றது. இரசியாவிற்கு நிதி நெருக்கடி கொடுக்க இரு நாடுகளும் தமது நாடுகளில் ஷேல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் கொடுக்கலாம். இரசியப் பொருளாதாரம் நல்ல நிலையிற் செயற்பட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை குறைந்தது 70டொலர்களகாக இருக்க வேண்டும்.

ஈராக்கில் குழப்பம் தொடரும்
ஈராக்கியத் தேர்தல் முடிவுகள் மேற்காசியாவின் உறுதித் தன்மையை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஈராக்கில் ஈரானும் அமெரிக்காவும் தத்தமக்குச் சார்பானவர்கள் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக முயற்ச்சி செய்தனர். ஆனால் ஈராக்கிய மக்கள் தமக்கு அமெரிக்க சார்பானவர்களோ அல்லது ஈரான் சார்பானவர்களோ ஆட்சியில் வேண்டாம் ஈராக்கில் நலனில் அக்கறை உள்ளவர்களே வேண்டும் என அமெரிக்காவை ஈரானையோ சாராத மதகுரு முக்தடா அல் சதர் (Muqtada al-Sadr) தலைமையிலான கூட்டணி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஈரானுக்கு ஆதரவான அணி இரண்டாவதாகவும் அமெரிக்காவிற்கு ஆதரவான அணி மூன்றாவதாகவும் வந்தது. ஈராக்கில் இனி ஈரானின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படும் என நம்பப்படுகின்றது. அது ஈராக்கில் ஓர் அமைதியற்ற சூழலை உருவாக்கும். அது எரிபொருள் விலையை அதிகரிக்கலாம்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஜெருசேலம்
ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொண்டமையும் அங்கு தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை நிறுவியைமையும் மேற்காசியாவில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உக்கிரமடைவதற்கு இதனால் வாய்ப்புண்டு. அது அப் பிராந்திய உறுதிப்பாட்டைக் குலைத்து எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யலாம்.

எரிபொருள் சந்தையில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம்
உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தியாளராக அமெரிக்கா உருவெடுக்கின்றது. அமெரிக்கா நாளொன்றிற்கு 12பில்லியன் பீப்பாய் எரிபொருளை உற்பத்தி செய்கின்றது. அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு சவுதி அரேபியா, இரசியா ஆகியவற்றிலும் பார்க்க அதிகமாகும். அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு அதிகரித்திருப்பதால் உலக எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் பாவிப்பதற்கு என அமெரிக்கா வைத்திருந்த காப்பொதுக்கத்தில் அரைப் பகுதியை 2027இற்குள் படிப்படியாக விற்பனை செய்து முடிப்பது என அமெரிக்கா 2018 பெப்ரவரியில் முடிவெடுத்தது. இந்த விற்பனை முடிவு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று எரிபொருள் விலை அதிகரிப்பதைத் தடுப்பதன் மூலம் இரசியாவிற்கு நிதி நெருக்கடியைக் கொடுப்பது. இரண்டாவது விற்பனை மூலம் அமெரிக்காவால் ஆறுபில்லியன்களுக்கு மேற்பட்ட நிதியை திரட்ட முடியும். அது அமெரிக்க அரசின் வரவு செலவின் பற்றாக்குறையைக் குறைக்கும்.

தென் சீனக் கடலும் சீனாவும்
தென் சீனக் கடலில் எந்த நாடோ, நிறுவனமோ எரிபொருள் ஆராய்ச்சியோ அகழ்வோ தனது அனுமதியின்றிச் செய்யக் கூடாது என சீனா அறிவித்தது. அத்துடன் தென் சீனக் கடலில் தான் நிர்மாணித்த தீவுகளை தொடர்ந்து படைத்துறை மயப்படுத்தி வருகின்றது. தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. தென் சீனக் கடலின் எரிபொருள் வளத்தை தனதாக்குவதற்கு சீனாவிற்கு நிறைய வெடிபொருட்கள் தேவைப்படுகின்றது. அங்கு அவ்வப்போது வரும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பற்குழுக்களை சீனா சமாளிப்பதற்காவும் ஒரு போர் என்று வந்தால் அவற்றை அழிப்பதற்காகவும் பல ஆண்டுகள் ஆய்வு செய்து ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. அந்த ஏவுகணைகளால் உலகின் எப்பாகத்திலும் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பற்குழுவை சீனாவால் அழிக்க முடியும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிவித்துள்ளது.

சீனாவின் எரிபொருள் தேவையை இரசிய தனக்குச் சாதகமாக்க முயல்கின்றது. கிறிமியாவை இரசியா 2014il ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டதன் பின்னர் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் கொண்டு வந்த போது இரசியா தனது ஏற்றுமதிக்கு இந்த நாடுகளில் தங்கியிருப்பதைத் தவிர்த்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் தனது எரிவாயு விற்பனையை அதிகரிப்பதில் அதிக அக்கறை காட்டியது.

மோடிக்கு பேரிடி
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நல்வாய்ப்பு உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததே. மோடி பெரிய அளவில் உள்ளூர் எரிபொருள் விலையைக் குறைக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவரை தேர்தலில் வெற்றியடைய வைத்த இந்தியப் பெருமுதலாளிகள் எரிபொருள் விற்பனையால் பெரும் பணம் சம்பாதிக்க வழிவகுப்பது. மற்றது அரச நிதி நெருக்கடியை எரிபொருள் வரியை அதிகரித்து சீர் செய்வது. இந்தியாவின் அரச நிதி இருப்பை வீழ்ச்சியடைந்த எரிபொருள்விலை அதிகரித்தது. இதனால் இந்தியா உலகச் சந்தையில் பெருமளவு படைக்கலன்களை தொடர்ந்து கொள்வனவு செய்யக் கூடியதாக இருந்தது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை தற்போது இருக்கும் 72டொலரில் இருந்து நூறு டொலராக அதிகரித்தால் அது 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மோடிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியாவின் மசகு எண்ணெய் பதனிடும் நிலையங்கள் ஈரானிய மசகு எண்ணெய்களை பதனிடுவதற்கு உருவாக்கப்பட்டவை. ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டால் ஈரானின் விலைக்கு சமமான வகையில் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்கப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சவுதி சாதகமாகப் பதிலளித்துள்ளது.

டொலரும் எரிபொருளும்
2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி இந்த ஆண்டு குறையும் என எதிர்பார்க்கப் பட்டது. டொலரின் பெறுமதி அதிகரிப்பு வளர்முக நாடுகளுக்கு தலையிடியாகவே அதிகம் அமைகின்றது. அவை பட்ட கடன்களுக்கான வட்டியும் தவணைப்பணமும் டொலரிலேயே செலுத்த வேண்டியிருப்பதால் அவை நிதி நெருக்கடியை எதிர் நோக்கும். அத்துடன் எரிபொருள் இறக்குமதி அதிகம் செய்யும் வளர்முக நாடுகள் தமது எரிபொருள் கொள்வனவிற்கான பணத்தை டொலரிலேயே செலுத்து கொன்றன. எரிபொருள் விலை அதிகரிப்பும் டொலரின் பெறுமதி அதிகரிப்பும் எரிபொருள் கொள்வனவிற்கு வளர்முக நாடுகள் செலுத்தும் பணம் அதிகரிக்கும். இப்படி இரட்டிப்புப் பாதிப்பு எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அதிகரிக்கும் போது. எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இரட்டிப்பு நன்மையடைகின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...