Friday 5 January 2018

பாக்கிஸ்தானுக்கான அமெரிக்க உதவி இடைநிறுத்தத்தின் பின்னணி

பாக்கிஸ்த்தான் தொடர்பாக 2018 ஜனவரி 4-ம் திகதி அமெரிக்கா இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒன்று அமெரிக்காவின் படைத்துறை உதவிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.  2017-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாக்கிஸ்த்தானுக்கான படைத்துறை உதவிகளில் 255மில்லியன் டொலர்கள் இடை நிறுத்தப்பட்டன. 2018-01-04 வியாழக்கிழமை மேலும் இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும் தீவிரவாதக் குழுக்களுக்கு பாக்கிஸ்த்தானில் இருந்து தொடர்ந்து ஆதரவு கிடப்பதால் அமெரிக்கா அடைந்த விரக்தியே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்குச் செய்யும் 220மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். பாக்கிஸ்த்தானின் செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பிலும் மாற்றம் ஏற்பட்டால் உதவி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை பாக்கிஸ்த்தானில் மத சுதந்திரம் இல்லை எனக் குற்றம் சாட்டி அதை சிறப்புக் கண்கானிப்புப் பட்டியலில் இட்டுள்ளதாகவும் 2018-01-04 வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானில் தமது மதத்தைப் பின்பற்றிச் செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்கின்றது அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை. இதன் அடுத்த கட்டமாக பாக்கிஸ்த்தான் கடுமையான கரிசனைக்கு உரிய நாடு என்ற பட்டியலில் இணைக்கப்படலாம். உதவி நிறுத்தம் என்பது முழுமையான நிறுத்தம் அல்ல பாக்கிஸ்த்தான் செய்யும் ஒவ்வொரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கும் பார்த்துப் பார்த்து உரிய பணம்(கூலி) வழங்கப்படும்.

டிரம்பின் டுவிட்டர் அடியும் பாக்கிஸ்த்தானின் பதிலடியும்
2018-ஆண்டுப் பிறப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை காலமும் இருந்த அமெரிக்க அதிபர்கள் முட்டாள்த்தனமாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் எனவும் பாக்கிஸ்த்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கொடுத்த 33பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிக்குப் பதிலாக பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகள்க்கு புகலிடம் வழங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்குப் பாக்கிஸ்த்தான் ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்த்தானில் அடையும் தோல்விகளுக்கான காரணங்களை பாக்கிஸ்த்தான் மீது சுமத்தப் பார்க்கின்றார் எனக் கருத்து வெளியிட்டிருந்தன. பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Khawaja Muhammad Asif டிரம்பின் கருத்து ஒரு நட்பு நாட்டுத் தலைவரின் கருத்துப் போல் இல்லை எனவும் பாக்கிஸ்த்தான் அரசுறவியல் அடிப்படையில் தனிமைப் படுத்தப்பட்ட நாடல்ல அதன் ஆப்கான் கொள்கையை இரசியா, சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். பாக்கிஸ்த்தானில் இருந்து அமெரிக்க வான் படையினர் 57800 தாக்குதல்களை பாக்கிஸ்த்தானில் இருந்து மேற்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதே சரித்திரம் எமக்குக் கற்றுத்தரும் பாடம் என்றார். அமெரிக்க உதவியின்றி பாக்கிஸ்த்தானால் இருக்க முடியும் எனவும் பாக்கிஸ்த்தானை மிரட்ட முடியாது எனவும் பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரால் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு இதுவரை நூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றது பாக்கிஸ்தானிய அரசு. பாக்கிஸ்த்தானியப் படையின் ஜெனரல் அசிஃப் கபூர் நாம் பணத்திற்காக போர் புரிவதில்லை. எம்மால் முடியுமானவற்றைச் செய்கின்றோம். இதிலும் அதிகமாகச் செய்ய முடியாது என்றார்.
2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடிய பணயக்கைதி விடுவிப்பின் போது பாக்கிஸ்த்தான் கைது செய்த ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த திவிரவாதியை விசாரிக்க அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்க பாக்கிஸ்த்தான் மறுத்துவிட்டது.

அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தான் தேவை
ஆப்கானிஸ்த்தான் எல்லாப் பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 14,000 படையினருக்கான வழங்கல்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்த்தானூடகவே செல்கின்றன. பாக்கிஸ்த்தான் அப்பாதையை மூடினால் அமெரிக்கா மாற்றுப் பாதைகளை தேட வேண்டி இருக்கும். மற்ற நாடுகள் எல்லாப் பொருட்களையும் தமது நாட்டினூடாக எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டாது. அத்துடன் பெரும் செலவும் ஏற்படும். 2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் பிரவேசித்து பயங்கரவாதிகள் என எண்ணி பாக்கிஸ்த்தானியப் படையினரைக் குண்டு வீசிக் கொன்றது. இதைத் தொடர்ந்து பலுச்சிஸ்த்தானின் ஊடாக நேட்டோ நாடுகளது படையினரும் படைக்கலன்களையும் நகர்த்துவதை பாக்கிஸ்த்தான் தடை செய்தது. அந்தப் பாதையை திறப்பதற்கான பேச்சு வார்த்தை ஒரு புறம் இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் உறுப்பினர் ஒருவர் பாதை திறக்காவிடில் பலுச்சிஸ்த்தான் பிரிவினைக்கு அமெரிக்கா உதவும் என ஒரு மிரட்டலை விட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்புக் கேட்க பாதை திறக்கப் பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் மீண்டும் அது போன்ற ஒரு பாதை மூடல் நடக்க மாட்டாது என தான் நம்புவதாகச் சொல்லியுள்ளார்.

சீன பாக்கிஸ்த்தானிய உறவு
பாக்கிஸ்த்தான் பயங்கரவாத ஒழிப்பில் சிறப்பாகச் செயற்படுவதாக சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானின் பல உட்கட்டுமானனங்களில் சீனா முதலீடு செய்துவருகின்றது. பாக்கிஸ்த்தானின் கஷ்கர் நகரத்திற்கும் குவாடர் நகரத்திற்கும் இடையிலான 3500 கிலோ மீட்டர் நீளப் பாதையை நிர்மாணிக்க சீனா உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் சீனாவையும் இணைக்கும் கொரக்கோரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தவும் சீனா உதவி செய்கின்றது. தொடர்ச்சியான் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாக்கிஸ்த்தானியர்களுக்கு சீன முதலீடு ஒரு வரப்பிரசாதமாகும். பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் 4 விழுக்காடு தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆண்டு தோறும் புதிதாக வேலை தேடிவரும் முன்று மில்லியன் இளையோருக்கு வேலை கொடுக்க குறைந்தது 7 விழுக்காடாவது வளரவேண்டும். சீன முதலீட்டில் 25பில்லியன் டொலர்கள் வலு உற்பத்தி சார்ந்ததாக இருக்கின்றது. வழமையாக பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யும் நாடுகள் தமது முதலீடுகளைக் குறைத்த வேளையில் சீனா பாக்கிஸ்த்தானில் அதிக முதலீடு செய்கின்றது. பாக்கிஸ்த்தான் தேவையான நேரம் எல்லாம் உதவி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது.

சீன பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரப் பாதை
ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமாகும். பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிக்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீனாவின் பொருளாதாரப் பாதை.

பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அண்மைக்காலங்களாக அமெரிக்காவும் இந்தியாவும் எடுக்கும் நடவடிக்கைக்கள்:
  1. அமெரிக்கப் பாராளமன்றத்தில் பாக்கிஸ்த்தானை ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாகப் பிரகடனப் படுத்தும் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
  2. இந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறை ஒத்துழைப்புக்களை அதிகரித்து வருகின்றன. ஒரு நாட்டின் படை நிலைகளை மற்ற நாடு தனது பராமரிப்பு மற்றும் எரிபொருள் மீள் நிரப்புதலுக்குப் பாவிக்கக் கூடியவகையில் இரு நாடுகளும் LEMOA என்னும் ஒப்பந்தம் செய்துள்ளன.
  3. நரேந்திர மோடி பலுச்சிஸ்த்தானியப் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் இந்திய சுதந்திர நாளன்று உரையாற்றினார்.
  4. கஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் செய்பவை பொதுவாக இரகசியமாக வைக்கப்படும். ஆனால் 2016 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா செய்த தாக்குதலுக்கு பெரும் பரப்புரை செய்யப் பட்டது.
  5. ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாக்கிஸ்த்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எனச் சொன்னார்.
  6. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா செய்யும் பல நகர்வுகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளை பலுச்சிஸ்த்தானை நோக்கி நகரச் செயவதாக இருக்கின்றது.
  7. இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  8. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பகுதியான ஊறியில் நடந்த தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்த்தானை தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
  9. அமெரிக்காவும் இந்தியாவும் Communications and Information Security Memorandum Agreement (CISMOA) என்னும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. இதன் படி அமெரிக்காவின் பல தொடர்பாடல் தொழில் நுட்பங்களை இந்தியா வாங்க முடியும்.
  10. முன்பு அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்வதில்லை எனத் தடுத்து வைத்திருந்த பல படைக்கலன்களை அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.
  11. அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவிருக்கும் Basic Exchange and Cooperation Agreement for Geospatial Intelligence (BECA) என்னும் ஒப்பந்தத்தின் படி இந்தியப் படைத்துறைத் தலைமை தனது போர்விமானங்களுடனும் போர்க்கப்பல்களுடனும் பாதுகாப்பான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இரு நாடுகளும் தமது உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
பாக்கிஸ்த்தானை சீனா விட்டுக் கொடுக்காது.
சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பாக்கிஸ்த்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதையில் இருந்து பாக்கிஸ்த்தானுக்கு ஒரு பொருளாதாரப் பாதை வகுக்கும் திட்டத்தை சீனா ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அத்திட்டத்திற்கு சீனா “சீன-பாக் பொருளாதாரப்பாதை” (China-Pakistan Economic Corridor -CPEC) எனப் பெயரும் இட்டுள்ளது. சீனா பொருளாதார உதவியாகவும் முதலீடாகவும் பாக்கிஸ்த்தானில் 62 பில்லியன்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமும் ஆப்கானிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடமுமாகும். ஒரு புறம் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைக்களுக்கு பாதை வழிவிடுவது உட்படப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. மறு புறம் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாக்கிஸ்த்தான் உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிர்க்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீன-பாக் பொருளாதாரப்பாதை. 2017 ஒக்டோபர் 17-ம் திகதி முதல் 24-ம் திகதிவரை சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை கட்சியிலும், ஆட்சியிலும், படையிலும் முடிசூடா மன்னன் ஆக்கிக் கொண்டார். உலக அரங்கில் சீனாவின் நிலையையும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய ஜின்பிங் தனது கிழக்கு வாசலான பாக்கிஸ்த்தானில் எதிரிகளின் கைகள் ஓங்குவதை அனுமதிக்க மாட்டார்.

இந்தியா மகிழ்ச்சியடையலாமா?
அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை, அதிலும் மோடிக்கு முன்னைய காலத்தில் அவர்கள் இந்தியாவின் நட்பை விரும்பின எனச் சொல்லலாம். வேறு பல அமைப்புக்கள் இந்திய எதிர்ப்பை தமது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றில் சில பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டவை என இந்தியா குற்றம் சாட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் சில அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையுடனௌம் தலிபானுடனும் தொடர்புகளை வைத்திருக்கின்றன. அதனால் அவற்றிற்கு இரு தரப்பில் இருந்தும் உதவிகளும் கிடைக்கின்றன. பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை இட்டு இந்தியா மகிழ்ச்சியடைய முடியாது. அந்த முறுகல் நிலை ஒரு பிளவு நிலையாக மாறினால் பாக்கிஸ்த்தான் சீனாவில் அதிகம் தங்கியிருக்கும் அமெரிக்க விரோத நாடாக மாறும். அமெரிகாவின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சீனாவில் பெரிதும் தங்கியிருக்கும் பாக்கிஸ்த்தானால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்.
பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அதிகம் முரண்டு பிடிக்கவும் முடியாது. ஆனால் முரண்டு பிடிப்பது போல் பாவனை செய்வது அதை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும். அமெரிக்காவால் பாக்கிஸ்த்தானில் இலகுவாக ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்க முடியும். பலுச்சிஸ்த்தானில் பிரிவினைவாதப் போரை உருவாக்க முடியும். அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானை முழுமையாக ஒதுக்கி விடாது. இரு நாடுகளும் மீசையில் மண்படாத வகையில் தமக்கிடையே உள்ள பிணக்குக்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

Thursday 4 January 2018

ஈரானிய ஆர்ப்பாட்டம் உள்ளக எழுச்சியா வெளிநாட்டுச் சதியா?

ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து கிளர்ச்சியாக மாறுவதுண்டு. கிளர்ச்சி பின்னர் புரட்சியாக மாறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆட்சி மாற்றம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருக்கலாம். தீய ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டும் வரலாம். 2017-12-28-ம் திகதி ஈரானில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் ஒரு வாரத்துக்குள் வேறு வேறு வடிவம் எடுத்தது. ஆரம்பத்தில் பொருளாதாரக் காரணங்களுக்காக அதிபர் ரௌஹானிக்கு எதிராக உருவான ஆர்ப்பாட்டம் பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டமாக மாறியது. இப்போது உச்சத் தலைவர் கொமெய்னி ஒழிக என்றும் ஆட்சிமுறைமை மாற்றப்பட வேண்டும் என்றும் கூக்குரலிடும் ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.

அரச ஆதரவு ஆர்ப்பாட்டம்
2018-01-03 புதன் கிழமை ஈரானிய அரசு அரச ஊழியர்களையும் மாணவர்களையும் அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் படி தூண்டியது.  முதலாம் திகதி திகட்கிழமை வரை 12 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் மூன்றாம் திகதி அது 21 ஆக உயர்ந்து விட்டது. ஈரானிய அரசு பொதுமக்கள் உடையில் தனது படையினரை ஏவு விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதாகவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.


பச்சைப் புரட்சி
2009-ம் ஆண்டு பச்சைப் புரட்சி என்னும் பெயரில் நடந்த ஆர்ப்பாட்டம் அடக்கப்பட்டது. அதில் 2 முதல் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அது மத்திய தர வர்க்கத்து மக்கள் தேர்தலில் ஊழல் நடந்தது என்ற ஆத்திரத்தில் செய்த ஆர்ப்பாட்டம். இப்போதைய ஆர்ப்பாட்டம் ஈரானிய அடித்தட்டு மக்களால் செய்யப்ப்டுகின்றது. இது ஈரானிய வட கிழக்கு நகர் மஷ்சட்டில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் விலைவாசி எதிர்ப்புத்தான் ஆரம்ப நோக்கமாக இருந்தது. அதிலும் முக்கியமாக அரிசி விலைக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகத்தான் ஆரம்பித்தது.  முக்கிய பங்கு வகித்தது. இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் கொம் நகருக்குப் பரவியது. தொடர்ந்து ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்கும் விரிவடைந்தது. தற்போது பெரும்பாலான ஈரானிய நகர்களில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

மரியாதை இழந்த கொமெய்னி
இஸ்லாமியக் குடியரசு வேண்டாம். புரட்சிப்படை அழிக. சர்வாதிகாரி ஒழிக.  “death to Rouhani” “death to khamenei” என்பவை அவர்களின் கூக்குரலாக இருந்தது. கொம்ய்னி என்ற சொல் பாவிக்காமல் செய்யட் அலி என்ற அவரது முதற்பெயரைப் பாவித்தனர். காவற்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் கொழுத்தப்பட்டன. ஈரான் ஐந்து வல்லரசு நாடுகளுடனும் ஜேர்மனியுடனும் செய்த யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான உடன்படிக்கையின் படி நீக்கப்பட்ட பொருளாதரத் தடையால் வறிய மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஈரானில் வேலையற்றோர் 12%. இளையார் மத்தியில் 12%இலும் அதிக வேலையின்மை காணப்படுகின்றது. விலைவாசி அதிகரிப்பு பத்து விழுக்காட்டிலும் அதிகமாகும்.

பேசும் கைப்பேசிகள்
ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் கைப்பேசிகளினூடகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடந்தபோது ஒரு மில்லியன் கைப்பேசிகள் மட்டும் ஈரானில் பாவனையில் இருந்தன. இப்போது 48மில்லியன் கைப்பேசிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40மில்லியன் மக்கள் பாவிக்கும் செயலி டெலிகிராஃப் மூலமாக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்துபவர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ஜாம். ஆனால் ஆர்ப்பாட்டம் ஒரு தலைமை இன்றி நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. விகிதாசார அடிப்படையில் உலகில் அதிக அளவு இறப்புத் தண்டனை ஈரானில் வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஈரானிய ஆர்ப்பாட்டங்களுக்கு வேறு வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டன:

1. ஈரானில் கடுமையான மதவாதிகள், மிதமான மதவாதிகள் என இரு பிரிவினர் ஆளும் தரப்பினரிடையே உள்ளனர். கடந்த அதிபர் தேர்தலில் மிதவாதிகளே வெற்றி பெற்றனர். மிதவாத அதிபருக்கு இடைஞ்சல் கொடுக்க கடும்போக்காளர்கள் கிளப்பிய ஆர்ப்பாட்டமாக இருக்கலாம். 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஹசன் ரௌஹானி.
2. இயல்பான மக்கள் எழுச்சியால் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
3. வெளியார் சதியால் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. இதில் சவுதி அரேபியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இணைந்து அல்லது தனியாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூபம் போட்டிருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன் ஈரானிய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கவனமாகக் கையாள்வதன் மூலம் ஆர்ப்பாட்டம் பெருகாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

ஈரானிய மக்கள் உணவிற்காகவும் சுதந்திரத்துக்கும் அழுகின்றார்கள் என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஈரானிய மக்கள் தமது அரசை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்றார் டிரம்ப்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதுவர் Gholamali Khoshroo அமெரிக்கா ஈரானிய விவகாரங்களில் தலையிடுவதாக தனது கடிதம் மூலம் குற்றம் சுமத்தினார். அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தை மீறியுள்ளதுடன் பன்னாட்டுச் சட்டங்களையும் மீறியுள்ளது என்றார் அவர். இதற்காக அமெரிக்கா மீது மற்ற நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.  அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தத்தமது டுவிட்டர்களில் அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு ஈரானிய மக்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என்ற குற்றச் சாட்டையும் அவர் முன் வைத்தார்.


ஜோர்ஜ் டபிளியூ புஷ் காலத்தில் துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எலியட் ஏப்ராம்ஸ் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்க ஆதரவை ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் சதிதான் இந்த ஆர்ப்பாட்டம் என்ற சாயத்தைப் பூச வழிவகுக்கும் எனச் சொல்லும் சிலர் அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஈரானிய ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதன் மூலம் அதற்கு ஈரானிலும் உலகிலும் பிரபல்யப்படுத்த முடியும் எனச் சிலர் நம்புகின்றனர்.

பெண்டகனில் பணிபுரிந்தவரும் தற்போது American Enterprise Instituteஇல் ஒரு கல்வியாளராகப் பணிபுரிவருமான மைக்கேல் ரொபின் வார்த்தைகள் மூலமான ஆதரவை மட்டும் அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் அதைத் தாண்டி இப்போது செல்லக் கூடாது என்கின்றார். ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூதாவை உறுப்பினர் ரொம் கொட்டன் இது அமெரிக்காவின் பிரச்சனை அல்ல ஈரானிய மக்களின் பிரச்சனையாகும் என்றார். அமெரிக்கா அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் தாராண்மைவாதிகள் பலரின் கருத்தாக இருக்கின்றது.

2009-ம் ஆண்டு ஈரானில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போதிய ஆதரவை வழங்காமல் இருந்தது தவறு என எல்லாம் முடிந்த பின்னர் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாய் இருந்த ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார். ஈரானின் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை கொடுக்க 2009இல் கிடைத்த சந்தர்ப்பத்தை பராக் ஒபாமா கை நழுவ விட்டார் என்ற குற்றச் சாட்டும் அப்போது முன் வைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எதிரான ஈரானிய அரசின் அடக்கு முறைகளைச் சாக்காக வைத்து ஈரானுக்கு எதிராக மேலதிகப் பொருளாதாரத் தடைகளை மனித உரிமைகளைக் காரணம் காட்டி கொண்டு வருவதற்கு டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் காத்திருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி அமெரிக்காவின் சதிதான் ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என ஈரானிய உச்சத் தலைவர் தெரிவித்த கருத்து அபத்தமானது எனச் சொல்லி நிராகரித்தார். மேலும் அவர் ஈரானிய மக்கள் சுதந்திரம் வேண்டி இயல்பாகக் கிளர்ந்து எழுந்துள்ளார்கள்; 2009-ம் ஆண்டு உலகம் விட்ட தவறை இம்முறையும் விடக்கூடாது என்றார். ஈரானியக் குடிமக்கள் அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் வெள்ளை மாளிகைப் பேச்சாளர்.

அமெரிக்கா ஈரானிய ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக எழுப்ப வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. நிக்கி ஹேலி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் என்றார்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல ஆனால் நடக்கும் ஆர்ப்பாடத்தால் ஈரானிய அரசு தனது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர். உண்மையில் 2018 ஜனவரி 4-ம் திகதியில் உள்ள நிலைமையின் படி ஈரானில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருமளவிற்கு ஆர்ப்பாட்டம் தீவிரமடையவில்லை. வெளியுறவுத் துறை அதிகாரிகளின் கருத்தும் டிரம்பின் டுவிட்டர்களும் நிக்கி ஹேலியின் உரைகளும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாகவே இருக்கின்றன.

இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஈரானிய ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்கும் மக்கள் ஈரானிய அரசைத் தூக்கி எறிவார்கள் என்கின்றார். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாட்டு வெளியுறவுத் துறையினர் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமது கருத்துக்களை கவனமாக வெளியிடுகின்றனர். ஈரானிய மக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றார் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரி. அவரது கருத்து ஈரானிய அதிபரின் கருத்தை ஒட்டியதாக இருக்கின்றது.

ஈரானுக்கு மூன்று மோசமான எதிரிகள் இருக்கின்றனர்.

முதலாவது இஸ்ரேல். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலகில் இருக்கக் கூடாது என்பது ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஈரான் பலவகைகளில் உதவி செய்கின்றது. ஈரானியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கின்றது. ஈரானியப் படைகள் அடுத்து லெபனானிலும் பெருமளவு நிலைகொள்ளலாம் என இஸ்ரேல் கருதுகின்றது. ஈரானியப் படைகள் லெபனான் கோலான் குன்றுகள் பக்கம் போனால் நிச்சயம் அங்கு போர் வெடிக்கும்.

ஈரானின் இரண்டாவது எதிரி அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு அழிவு வரட்டும் என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் அடிக்கடி பாவிக்கும் பதமாகும். ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும்பயங்கரவாதிகளுக்குஈரான் ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இப்போதும் பின் லாடனின் குடும்பத்தினர் ஈரானில் வசிக்கின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் நடந்து கொள்கின்ற விதமும் யேமனில் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஈரான் உதவி செய்தவும் அமெரிக்காவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மூன்றாவது எதிரி சவுதி அரேபியா. இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பகைமை சியா பிரிவிற்கும் சுனி பிரிவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டால் உருவானது என்பதிலும் பார்க்க ஈரானில் மதப் புரட்சி நடந்து மதவாத ஆட்சி ஏற்பட்டமையே பகமைக்கு முக்கிய காரணம். ஈரானிய மதவாதிகள் அதே போன்ற ஆட்சி முறைமையை சவுதி உட்பட மற்ற அரபு நாடுகளிலும் உருவாக்க முனைகின்றார்கள் என்ற அச்சம் சவுதி ஆட்சியாளர்களை ஈரானிய ஆட்சியாளர்களைக் கடுமையாக வெறுக்க வைக்கின்றது.

ஊடகங்களின் பூடகங்கள்
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் பிரபலமான ஊடகமான அல் மொனிட்டர் ஈரானிய ஆர்ப்பாட்டம் இஸ்ரேலை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது என்கின்றது. ஆர்ப்பாட்டம் தீவிரமடையும் விதம் அமெரிக்காவை ஆச்சரியப்பட வைக்கின்றது என்றது அமெரிக்காவின் பிரபல ஊடகமான வேல் ஸ்றீட் ஜேர்ணல். ஈரான் தனது வெளியுறவுத் துறையின் செயற்பாட்டிற்காக அதிலும் முக்கியமாக யேமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் செலவு செய்யும் பல பில்லியன் டொலர்களை நிறுத்தி அதை உள் நாட்டு அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்கின்றது வேல் ஸ்றீட் ஜேர்ணல். அரப் நியூஸ் என்ற சவுதி அரேபிய ஊடகத்தின் ஆசிரியத் தலையங்கத்தில் ஈரான் அயல் நாடுகளைக் குழப்புவதை விடுத்து தன் நாட்டில் நல்லபடியாக ஆள முயல வேண்டும் என்கின்றது.  அல் ஜசீரா ஈரானில் கடுமையான பதவிப் போட்டி இருப்பதன் விளைவே ஆர்ப்பாட்டம் என்கின்றது.

ஈரானில் ஓர் உள்ளக கிளர்ச்சி இயல்பாகவே தோன்றுவதற்கான காரணிகள் பல உண்டு. ஈரானில் 2017 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான சலுகைகள் பல நிறுத்தப்பட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்டது. ஈரானிய அதிபர் ரௌஹானிக்கும் அவருடன் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற Mohammad Baqer Qalibafஇற்கும் இடையில் இன்னும் பகைமை நிலவுகின்றது. ரௌஹானியின் இன்னொரு போட்டியாளர் இப்ராஹிம் ரைசி. அவரது தலைமையில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கூட்டு செயற்படும் நகரமான மஷ்சட்டில்தான் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. அந்த நகரின் பள்ளிவாசலில் அவரது மாமனர் மதகுருவாக உள்ளார்அடுத்த உச்சத் தலைவர் யார் என்ற போட்டியும் கடுமையாக உள்ளது. 

அட்ர் பிரான்ஸ் அதிபர் போட்ட குண்டு
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து தமது பொது எதிரியான ஈரானுக்கு எதிராக ஒரு போரை ஆரம்பிக்க உலகை இட்டுச் செல்கின்றன என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் குற்றம் சாட்டினார்.

ஈரானில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உள்ளே உருவாக்கப் பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அதை ஈரானின் மூன்று எதிரிகளும் ஈரானின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அதைத் திருப்ப தம்மால் முயன்ற எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் ஈரானில் உச்சத்தலைவர், பாராளமன்றம், அதிபர், படைத்துறை ஆகிய நான்கு முக்கிய அதிகார மையங்கள் உள்ளது. படைத்துறையும் உச்சத் தலைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன. அந்த ஒற்றுமை இருக்கும் வரை ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது கடினம். படைத்துறைக்குள் வெளி சக்திகள் ஊடுருவுவது மிகவும் கடினம் என்பதை சிஐஏ ஈரானியப் படைத்தளபதிக்கு ஒரு இடை ஆள் மூலம் ஈராக் மற்றும் சிரியா தொடர்பாக அனுப்பிய கடிதத்தை அவர் வாசிக்கவே மறுத்து விட்டார். அந்த அளவிற்கு ஈரானியப் படையினர் மத்தியில் அமெரிக்க வெறுப்பு உள்ளது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...