Monday 14 August 2017

இலுமினாட்டிகள் உலகத்தை ஆள்கின்றார்களா?

உலகம் என்பதே இலுமினாட்டி என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக வரலாறுபற்றிய தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும்; இலுமினாட்டிகள் தம்மை மறைவாகவே வைத்திருக்கின்றனர்; இவை இலுமினாட்டிகளைப் பற்றி எழுதுபவர்கள் சொல்வதாகும். இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை அது வெறும் சதிக் கோட்பாடு மட்டுமே என வாதிடுவோரும் உண்டு. இலுமினாட்டிகளின் தோற்றம் இருப்பு செயற்பாடு போன்றவற்றைப் பற்றிய காத்திரமான சாட்சியங்கள் இல்லை எனவும் சிலர் சொல்கின்றார்கள். இலுமினாட்டிகள் எனப்படுபவர்கள் உலகமயமாக்கப்பட்ட நாஜிகள் எனச் சொல்வோரும் உண்டு. அமெரிக்காவில் பல நூற்றுக் கணக்கான இரகசிய அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் வலிமை மிக்கது இலுமினாட்டியே. இலுமினாட்டி என்பது ஒளியூட்டப்பட்டவர் என்பதாகும்.

வல்லமை மிக்க இலுமினாட்டிகள்
நாம் என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிடவேண்டும், எமக்கு என்ன நோய்கள் வரவேண்டும், என்ன மருந்து சாப்பிட வேண்டும், எதைப்பார்க்க வேண்டும் எதை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு சிறு குழுவான இலுமினாட்டிகள்தான்  தீர்மானிக்கின்றனர் என்பது அச்சமூட்டுவதாகவும் ஆச்சரியமூட்டுவதாக  இருப்பினும் இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் அந்தக் கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலுமினாட்டிகளிடம் இரகசியாமான அல்லது மாயமான வலிமைகள் உண்டு எனவும் நம்பப்படுகின்றது. அவை அவர்களுக்கு யூத மன்னரான அறிவாளி சொலமனது இரகசியங்கள் சிக்கின எனவும் கருதப்படுகின்றது.

சொலமன் என்னும் அறிவாளியான் யூத அரசர்
யூத மன்னர் சொலமன் கிரேக்கர்கள், பபிலோனியர்கள், எகிப்தியர்கள் போன்றவர்களது இரகசியக் கலைகளையும் நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தார். கோலியாத்தைக் கொன்ற டேவிட்டின் போர்க்கலையை அவர் அறிந்திருந்தார். டேவிட்டின் ஆறு முனை நடசத்திரத்தை அவர் தனது சின்னமாக்கினார். இன்றும் இஸ்ரேலியர்களின் தேசியக் கொடியில் அது உண்டு. பபிலோனிய மன்னர் நிம்ரொட் ஒரு மேசன் அவர் ஒரு பெரு நகரத்தையே நிர்மாணித்தவர். அவரின் இரகசியங்களை சொலமன் அறிந்து வைத்திருந்தார். கலைகளின் ஆரம்பம் லமெக் (Lameck) என்பவரின் பிள்ளைகளாகும். அவரின் ஒரு பிள்ளை கேத்திரகணிதம், ஒரு பிள்ளை இசை, ஒரு பிள்ளை உலோகக்கலை, ஒரு பிள்ளை நெசவு ஆகிய கலைகளை உருவாக்கினார்கள். லமெக்கின் வழித்தோன்றலான நோவா தான் கப்பல் மூலம் பெரு வெள்ளத்தின் போது எல்லோரையும் காப்பாற்றியவர். அந்த இரகசியங்களை எல்லாம் சொலமன் அறிந்து தனது அரண்மனையில் பாதுகாத்து வைத்திருந்தார்.



ஃபிரீமேசன் அமைப்பும் இலுமினாட்டிகளும்
1118-ம் ஆண்டு ஐரோப்பாவில் மதகுருக்கள் ஜெருசேலத்தை மீட்பதற்காக படை ஒன்றை உருவாக்கினர்.. இவர்களின் படையில் தேவாலயங்கள் கட்டுவதற்கு மேசன் தொழில் செய்பவர்கள் இணைக்கப்பட்டனர். அப்போது இருவகையான மேசன்கள் இருந்தனர். ஒருவர் சாதரண கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை Rough Masons என அழைப்பர். மற்றவர்கள் சிறப்பு வடிவமான கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை freestone Masons என அழைப்பர். இவர்கள் ஓர் உக்கிரமான போர் மூலம் ஜெருசேலம் நகரை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றினர். அந்தப் போர் இரத்தக் களரி மிருந்ததாக இருந்தது. குதிரைகளின் கணுக்கால் வரை இரத்தம் வெள்ளமாக நின்றது முதலாம் சிலுவைப் போர் என அழைக்கபடும அந்தப் போரில். இவர்கள் ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியபோது அங்கிருந்த temple of soloman எனப்படும் யூத அரசன் சொலமனது அரண்மனையைக் கைப்பற்றினர். ஜெருசேலத்தைக் கைப்பற்றிய Freestone Masonsகளுக்கு Knights of Temple of King Soloman என்னும் பட்டம் சூட்டப்பட்டது. . சுருக்கமாக Templars எனவும் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கைப்பற்றிய சொலமனது அரண்மனையில் அவர்கள் பல இரகசியங்களைக் கைப்பற்றினர். . யூதர்களின் பழமை மிக்க மாயக் கலையால கபாலா இவர்கள் சொலமனின் அரண்மனையில் இருந்து கைப்பற்றியதால் இவர்களால் பெரும் செல்வம் திரட்ட முடிந்தது. இவர்களை பிரேஞ்சு அரசு கிறித்தவத்திற்கு விரோதமானவர்கள் எனத் தண்டித்தது. இதனால் பலர் ஸ்கொட்லாந்திற்கு தப்பி ஓடி அங்கு ஃபிரீமேசன் அமைப்பை ஆரம்பித்தனர். 1730-ம் ஆண்டு ஃபிரீமேசன்கள் அமெரிக்காவிற்குச் சென்றனர். இது ஆரம்பத்தில் கல்வியில் தேர்ந்த மேல் நடுத்தர வர்க்கத்தினரின் (upper-middle class) மக்களின் அமைப்பாக இருந்தது. இது கடவுளைத் தந்தையாகக் கொண்டு எல்லா மக்களும் சகோதரர்கள் போல் வாழவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டது. அதில் எந்த மதத்தினரும் இணையலாம். ஐக்கிய அமெரிக்காவை ஆரம்பித்தவர்களில் பெரும்பாலனாவர்கள் ஃபிரீமேசன்களாக இருந்தார்கள். 1789 அமெரிக்காவின் முதல் அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் ஃபிரீ மேசன் சடங்குகளுடன் பதவி ஏற்றார். அவரது ஜெனரல்களில் பெரும்பாலானோர் ஃபிரீ மேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது அதிபரும் ஒரு ஃபிரீமேசன். பிரான்சைச் சேர்ந்த ஃபிரீமேசன் அமைப்பினரே அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை வழங்கினர் எனவும் சொல்லப்படுகின்றது. ஃபிரீமேசன் அமைப்பினரின் இலச்சினைகளாகக் கருதப்படும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளின் இலச்சினையாக இருப்பதால் ஃபிரீமேசன் அமைப்பினரே இலுமினாட்டிகள் என வாதிடுகின்றனர். ஃபிரீமேசன் அமைப்பினரில் தம்மை பன்னாட்டுவாதிகள் (INTERNATIONALISTS) என நிருபிப்பவர்கள் மட்டுமே முதலில் இலுமினாட்டி அமைப்பில் அனுமதிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஃபிரீமேசன்கள் தாம் ஜெருசேலத்தில் கைப்பற்றிய இரகசியங்களுக்கு ஏற்பவே நிர்மாணித்தனர். பெண்டகன் கட்ட்டிடமும் ஃபிரீமேசன்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

ஆரம்பம் 18-ம் நூற்றாண்டில்.
Adam Weishaupt என்பவர்தான் இலுமினாட்டியை 01-05-1776இல் ஆரம்பித்தவர். ஒரு யூதரான இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டார். பின்னர் இலுமினாட்டிகளில் ஒருவராகக் கருதப்படுக் ரொத்சைல்ச் குடும்பத்தின் பணியாளரானார். ஆரம்பத்தில் அவர் இலுமினாட்டி அமைப்பிற்கு "Brother Spartacus" என்னும் பெயரைச் சூட்டினார். Spartacus அடிமைத்தனத்திற்கு எதிராகக் கிரேக்கத்தில் புரட்சி செய்த வீரனாகும்.

காசேதான் கடவுளடா யேசு இல்லையடா
இந்த உலகத்தை விரும்பாமல் பரலோகத்தில் வாழும் எம் தந்தையை விரும்புங்கள். இந்த உலகத்தையோ அதில் உள்ளவற்றையோ விரும்புபவர்கள் எம் தந்தையை விரும்ப முடியாது என்பதுதான் ஜேசுவின் போதனையாக இருந்தது. இது இந்த உலகில் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கும் பெரும் செல்வந்தர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவர்கள் வேறு போதனைகளை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் அதனால் உருவானவர்கள்தான் இலுமினாட்டிகள் என்கின்றார்கள் பல கிறிஸ்த்தவர்கள். ஆனால் வத்திக்கானும் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றது என்ற கருத்தை முன் வைப்பவர்களும் உண்டு. வேறு சிலர் இலுமினாட்டிகள் திருச்சபைக்குத் தெரியாமல் அங்கு ஊடுருவியுள்ளார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களும் உண்டு. 1738-ம் ஆண்டிற்கும் 1890-ம் ஆண்டிற்கும் இடையில் ஃபிரிமேசன் அமைப்பு கத்தோலிக்கத்திற்கு எதிரானது என வத்திக்கான் பல தடை உத்தரவுகளை விடுத்தது. அதனல் பல நாடுகளின் அது தடை செய்யப்பட்டது. இலுமினாட்டிகள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் தலைமறைவாகச் செயற்பட்டு தம்மை மேலும் வலுவாக்கிக் கொண்டு பல அமைப்புக்களில் ஊடுருவத் தொடங்கினர்.


13 இலுமினாட்டிக் குடும்பங்கள்
1. அஸ்டர் குடும்பம் (The Astor Bloodline ) 2. பண்டி குடும்பம் (The Bundy Bloodline)  3. கொலின் குடும்பம் (The Collins Bloodline) 4. டியூபொண்ட் குடும்பம் (The DuPont Bloodline) 5. ஃபீரிமன் குடும்பம் (The Freeman Bloodline)  6. கெனடி குடும்பம் (The Kennedy Bloodline) 7. லீ குடும்பம் (The Li Bloodline) 8. ஒனாஸிஸ் குடும்பம் (The Onassis Bloodline) 9. ரொக்ஃபெல்லர் குடும்பம் (The Rockefeller Bloodline) 10. ரஸல் குடும்பம் (The Russell Bloodline) 11. வான் டுயான் (The Van Duyn Bloodline) 12. மெரொவிஜியன் குடும்பம் (The Merovingian Bloodline) 13. ரொத்சைல்ட் குடும்பம் (The Rothschild Bloodline) இந்தக் குடும்பங்கள் உலகின் செல்வத்தில் 90 விழுக்காட்டை தம் வசம் வைத்திருந்து அரசுகள், ஊடகங்கள், வங்கிகள், பல உற்பத்துறைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கத் தேசியக் கொடியில் சிவப்பிலும் வெள்ளையிலும் 13 கோடுகள் இருப்பது இந்தப் பதின்மூன்று குடும்பகளைக் குறிக்கிறதாம். தேசியக் கொடியில் உள்ள கழுகின் கையில் 13 அம்புகள் இருக்கின்றன. கழுகின் வாலில் 13 சிறகுகள், கழுகின் கவசத்தில் 13 வரிகள். கையில் 13 அம்புகள், ஒலிவ் இலையில் 13 இலைகள், 13 ஒலிவ் காய்கள். கிறிஸ்த்தவர்கள் வெறுக்கும் 13 எண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாணயமான டொலரில் மேசன்களின் சின்னமான பிரமிட்டும் அதன் உச்சியில் ஒற்றைக் கண்ணும் எப்படி வந்தது? பிரிமிட்டின் மேலே 13 எழுத்துக்கள் கொண்ட வாசகம் Annuit coeptis பொருள் favor our undertakings.

எங்கும் நிறை இலுமினாட்டிகள்
உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு நாணய நிதியம், நேட்டோ ஆகியவற்றை நடத்துபவர்கள் இலுமினாட்டிகளே எனச் சொல்கின்றனர் சதிக்கோட்பாட்டாளர்கள். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை 1921-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வெளியுறவுத் துறைச் சபை (The Council on Foreign Relations) தான் தீர்மானிக்கின்றது. இதை ஆரம்பித்து வைத்தவர்கள் இலுமினாட்டிகளே. அதில் முக்கியமானவர் டேவிட் ரொக்ஃபெல்லர். வெளியுறவுத் துறைச் சபை உறுப்பினர்களாக அமெரிக்க அதிபர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்காவின் வெளிநாட்டுக்கான தூதுவர்கள் மட்டுமல்ல அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியைச் சேர்ந்தவர்கள், வால் ஸ்றீட் முதலிட்டாளர்களும் அடங்குவர். இந்தச் சபைதான் ஐக்கிய நாடுகள் சபையையும் கட்டுப்படுத்துகின்றது.

நடுவண் வங்கியான Federal Reserveவும் இலுமினாட்டிகளும்
அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த வுட்றோ வில்சன் அரசதான் ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்றிருந்தார். கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913ஐ பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா?  ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் ஐநா சபையும்
அமெரிக்காவில் Council on Foreign Relation என்ற சபையை இலுமினாட்டிகளே ஆரம்பித்தனர். இலுமினாட்டிகளில் ஒருவரான ரொக்ஃபெல்லர் குடும்பத்தினரே இதை முன்னின்று ஆரம்பித்தனர். இதில் அமெரிக்க அரசில் இருந்தும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த சபைக்கு நியமிக்கப்பட்டனர். அமெரிக்க வெளியுறவுக் கொளைகையை இலுமினாட்டிகளுக்கு ஏற்ப வகுப்பதே இதன் நோக்கம். அதன் மூலம் உலக ஆதிக்கத்தை செய்யவதே அடிப்படையாகும். உலகத்தை ஒரு சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை இலுமினாட்டிகள் உருவாக்கினர். ஐக்கிய நாடுகள் சபைக்குத் தேவையான நிலத்தை ரொக்ஃபெல்லர் குடும்பமே நன்கொடையாக வழங்கியது.
ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்காவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட 74 பெரும் இந்த வெளியுறவுத் துறைச் சபையின் உறுப்பினர்களாகும். ரொக்ஃபெல்லர் கொடுத்த காணியில் ஐநா கட்டிடம் உருவாக்கப்பட்டது. உலகெங்கும் பலர் இலுமினாட்டிகளின் கையாட்களாக இருந்து உலகத்தை ஆள்கின்றார்கள்.


இசைத்துறையிலும் இலுமினாட்டிகள்
உலகில் பெரு வருமானமீட்டும் துறைகளில் இசைத்துறையும் ஒன்றாகும். பாடல்களுக்கான காப்புரிமை மூலம் இலுமினாட்டிகள் பெரும் வருமான ஈட்டுகின்றனர். இவர்களின் தயவின்றி இசைத்துறையில் யாரும் உலகப் புகழ் பெற முடியாது. தற்போது பிரபலமாக உள்ள Ketty Perry, Rihana, Mily Cyrus, Lady Gaga, Jay Z, Justin Bieber, Kim Kadashian, Kanye West, Britney Spears, Beyonce ஆகிய பிரபல பொப்பிசைப் பாடகர்கள் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களது பாடல் காணொலிகளில் இலுமினாட்டிகளின் இலச்சினைகளான பிரமிட், ஒற்றைக் கண் அடிக்கடி காண்பிக்கப்படும். இவர்கள் நடனமாடும் போது இலுமினாட்டிகளின் இலச்சினைகளை முத்திரையாகப் பிடித்துக் கட்டுவர். மைக்கேல் ஜக்சன் மூலம் இலுமினாட்டிகள் பல பில்லியன் டொலர்களைச் சம்பாதித்தார்கள். இலுமினாட்டிகளின் இம்சைகளுக்கு மைக்கேல் ஜக்சன் உள்ளானார். ஒரு கட்டத்தில் தனது பாடல்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒருவரை மைக்கேல் ஜக்சன சாத்தான் என விபரித்தார். அதில் இருந்து அவரது அழிவு தொடங்கியது. அவரது பழைய வாழ்க்கையை கிளறி அவர் சிறுவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை அம்பலப்படுத்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தனர். அவரது மருந்தின் மூலமே அவரைக் கொன்றனர். அவர் இறந்த பின்னர் அவரது பாடல்கள் மிக அதிகமாக விற்பனையானது. அதன் மூலம அவர்கள் பில்லியன் கணக்கில் சம்பாதித்தனர்.

Rothschild குடும்பம்
ஜேர்மனியில் தமது வட்டி வியாபாரத்தை ஆரம்பித்த Rothschild குடும்பம் உலகெங்கும் செயற்படக் கூடிய வங்கியை உருவாக்கியது. ஐந்து சகோதரர்கள் இலண்டன், பரிஸ், பிராங்பேர்ட், வியன்னா, நப்பிள்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் தமது வங்கிகளை நிர்வகித்தனர். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் உலகின் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பம் ஆகினர். அந்த நிலையையே இன்றுவரை பேணிவருகின்றனர். 19-ம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தின் 90விழுக்காடு பிரித்தானியக் கப்பல்களால் செய்யப்பட்டது. அவர்களின் நிதியை ரொத்சைல்ட் குடும்பத்து வங்கிகள் நிர்வகித்தன. நேத்தன் ரொத்சைல்ட் “எந்தப் பொம்மை வேண்டுமானாலும் பிரித்தானிய அரியணையில் அமரட்டும். சூரியன் மறையாத பேரரசை ஆளட்டும். ஆனால் அதன் நிதியை எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நான் பிரித்தானியப் பேரரசை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றேன்” என்றார். ஆனால் இதை ரொத்சைல்ட் குடும்பத்தினர் மறுக்கின்றனர். 1850-ம் ஆண்டு அவர்களின் செல்வம் 10பில்லியன் டொலர்களாக இருந்தது. இப்போது அவர்களின் செல்வம் 500ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். இரண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் தங்க விலையை தமக்கு ஏற்ப மாற்றி தமது செல்வத்தைப் பெருக்கி வருகின்றார்கள் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க நாணயமும் இலுமினாட்டிகளும்
அமெரிக்க டொலரின் பின்புறத்தில் இருக்கும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டவை எனச் சொல்லப்படுகின்றது. அவர்கள் உலக நிதியை தம்வசம் ஆக்கும் நோக்கத்துடன் அதைச் செய்தார்களாம். அமெரிக்காவின் நடுவண் வங்கி இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அதை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜோன் எஃப் கெனடி(அவரும் ஒரு இலுமினாட்டி) முயன்றபோது அவரை மற்ற இலுமினாட்டிகள் கொலை செய்தனர் என ஒரு சதிக் கோட்பாடும் ஒன்று.

உலகும் இலுமினாட்டிகளும்
இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் உலகத்தில் நடப்பவற்றில் இலுமினாட்டிகளின் வகிபாகம் பற்றிய வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. இந்தியாவும் சீனாவும் பூட்டானில் ஒரு போருக்குத் தயாராவதை என்னால் இலுமினாட்டிகளுடன் சம்பந்தப்படுத்த முடியும். அந்தக் கற்பனை இப்படிப் போகும்: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் சீனாவிலும் பல செல்வந்தர்கள் உருவாகி வருகின்றார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் அந்த நாட்டு அரசுகளின் பின்னால் இருக்கும் பெரும் செல்வந்தர்களும் இலுமினாட்டிகளுக்கு சவாலாக அமைவதைத் தடுக்க இரு நாடுகளும் போர் செய்து அழிந்து போக வேண்டும் என இலுமினாட்டிகள் சதி செய்கின்றார்கள். இரு நாடுகளும் போர் செய்யும் போது அவற்றிற்கு இலுமினாட்டிகள் படைக்கலன்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். இது எனது கற்பனை மட்டுமே! அது உண்மையாக இருக்கலாம். இலுமினாட்டிகள் பல தொற்று நோய்களை வேண்டுமென்றே உருவாக்கி அவற்றிற்கான மருந்துகளை விற்பனை செய்வதில் பெரும் செல்வம் ஈட்டுகின்றார்களாம்.

இலுமினாட்டிகளின் தலைமைச் செயலகம்.
அமெரிக்காவில் உள்ள டென்வர் விமான நிலையத்தில் நிலத்தின் கீழ் உள்ள ஆறுமாடிக் கட்டிடத்தில் இலுமினாட்டிகளின் தலைமைச் செயலகம் இருக்கின்றது என இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் சொல்கின்றனர். அந்த விமான நிலையம் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது. தீடீரென அது புனரமைக்கப்பட்டது. திட்டமிட்டதிலும் பார்க்க மூன்று பில்லியன்கள் அதிகமாகச் செலவழிக்கப்பட்டு எதிர்பார்த்ததிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் தாமதித்து அந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டது.

இலுமினாட்டிகளின் புதிய உலக ஒழுங்கு
மேற்கு நாட்டு அரசியல்வாதிகளும் தலைவர்களும் கடந்த நூறு ஆண்டுகளாக அடிக்கடி புதிய உலக ஒழுங்கு என்ற பதத்தைச் சொல்கின்றார்கள். அதன் பின்னால் இலுமினாட்டிகளே இருக்கின்றார்கள் என்ற விவாதம் முன்வைக்கப்படுகின்றது. இலுமினாட்டிகள் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபையும் அதற்காகவே செயற்படுகின்றது. என்ன இந்தப் புதிய ஒழுங்கு என சரியான விளக்கத்தை முன்வைக்கின்றார்கள் இல்லை. உலகம் எங்கு மக்களாட்சி, உலகெங்கும் தங்கு தடையற்ற வர்த்தகம் என்பது தான் அதன் முன்னணி இலக்குகளாக இருக்கின்றன. அதாவது இலுமினாட்டிகள் உலகத்தை சுரண்ட வழிசமைப்பதே புதிய உலக ஒழுங்கு.


நான் முன்வைக்கும் சதிக் கோட்பாட்டின் சதிக்கோட்பாடு
.உலகம் பெரும்பாலும் முதலாளித்துவப் பொருதார முறையைச் சார்ந்து இயங்குகின்றது. அந்த இயக்கம் ஒரு சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் முழு உலகத்தையும் கொண்டு வந்து விட்டது அல்லது கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. அதைத்தால் லெனின் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதிபத்தியம் என்றார். தற்போது உலகின் 90விழுக்காடு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைக்கு இந்த முதலாளித்துவப் பொருளாதரம்தான் காரணமாகும். அந்த உண்மையை உணர்ந்தால் உலக மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராக கிளர்ந்து எழுவதைத் தடுக்க எல்லாப்பிரச்சனைக்கும் இந்த 13 குடும்பங்கள்தான் காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு அல்ல எனத் திசைத் திருப்பவே இந்த இலுமினாட்டிச் சதிக்கோட்பாடு முயல்கின்றது.


இலுமினாட்டிகளின் செயற்பாடுகள் பற்றி பல சதிக் கோட்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் மிகவும் அச்சமூட்டும் கோட்பாடு உலக மக்கள் தொகையை அவர்கள் பெருமளவில் குறைக்க விரும்புகின்றனர் என்பதாகும். அது என்ன பேரழிவைக் கொண்டு வருமோ?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...