Monday 15 May 2017

Supercarrier என்னும் பெருவிமானந்தாங்கிக் கப்பல்கள்



1991இல் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் கடற்படையும் கடல்சார் படையும் குறைந்த அளவு சவால்களையே எதிர் கொண்டிருந்தன. ஈரான், ஈராக், வட கொரியா மற்றும் சில தீவிரவாத அமைப்புக்கள் அமெரிக்கக் கடற்படைக்கு சிறிய அளவு அச்சுறுத்தலையே விடக்கூடிய நிலையில் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவினதும் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் தமது பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. ஆனால் சீனாவின் துரித வளர்ச்சியும் இரசியாவின் மீள் எழுச்சியும் நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட்டன. இரசியா தனது படைத்துறையை 2020இலும் சீனா தனது படைத்துறையை 2030இலும் உலகின் முதற்தரப் படைத்துறைகளாக மாற்றத் திட்டமீட்டன. இதனால் அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கதை வகையில் படைத்துறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தி சீனாவினதும் இரசியாவினதும் சவால்களை 2030இல் சமாளிக்கத் திட்டமிட்டது. அத்திட்டத்தின் முக்கியமான ஒன்று USS FORD வகை விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கமாகும். முதலாவது USS FORD வகை விமானந்தாங்கிக் கப்பல் தற்போது தயார் நிலையில் உள்ளது

ஐக்கிய அமெரிக்கா தனது விமானந்தாங்கிக் கப்பல்களின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக அடிக்கடி மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. மென்பொருள் ரீதியாவும் வன்பொருள் ரீதியாகவும் இந்த மேம்படுத்துதல் தொடர்கின்றது. தனது போட்டி நாடுகளிலும் பார்க்க தான் எப்போதும் ஒரு படி முன்னே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படிச் செய்கின்றது. 

நாசகாரிகள் சூழ வலம்வர.....
விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்
இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்


என்ன இந்த Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிகள்?
கப்பல்களின் எடை அது கடலில் அமிழும்போது இடப்பெயர்வு செய்யும் நீரின் எடையை வைத்து அளவிடப்படும். Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள்
1. 64,000மெற்றிக் தொன்களிலும் அதிக எடையை உடையவை.
2. அறுபதிற்கும் மேற்பட்ட விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை. 3. ஒரேயடியாக ஐந்து விமானங்கள் மேல் எழும்பிப் பறக்கும் வசதியுடவை. அமெரிக்காவிடம் தற்போது பத்து நிமிட்ஸ் வகையைச் சார்ந்த பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இரசியாவும் சீனாவும் ஒவ்வொரு பெருவிமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றன. பிரித்தானியாவின் இரு பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் 2018இல் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அடுத்த தலைமுறைப் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
அமெரிக்காவின் அடுத்த தலைமுறைப் பெருவிமானம் தாங்கிக் கப்பலாக USS Gerald R. Ford உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள்:
  • ஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது. 
  • இதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. 13800 வோல்ற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. இது நிமிட்ஸ் வகை விமானந்தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க மூன்று மடங்காகும்.
  •  
  •  EMALS முறைமை மூலம் விமானங்கள் இதிலிருந்து பறக்கும்
  • முப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.
  • உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.
  • மற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.
  • இதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.
  • அடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படலாம்.
·         அமெரிக்காவின் முன்னணி விமானங்களான F-35 fighter FA-18E/F super hornet ஆகியவை இதில் உள்ளடக்கப்படும்.
  • கப்பலின் அடிப்பாகத்தில் இருந்து பத்து உயர்த்திகள் மூலம் குண்டுகளும் படைக்கலன்களும் விமானத்தின் மேற்பாகத்துக்கு கொண்டு வந்து விமானங்களில் துரிதமாக ஏற்றப்படும். ஒவ்வொரு உயர்த்தியும் இரண்டு இலட்சம் இறாத்தல் எடையைத் தூக்க வல்லவை. அவை மற்றைய கப்பல்களிலும் பார்க்க இரண்டு மடைங்கு வலுவுடையவை.
உலகவரலாற்றில் மிகவும் செலவு மிக்க Gerald R Ford விமானம் தாங்கிக் கப்பல் திட்டமாகும். பத்துக் கப்பல்களுக்குமான மொத்தத் திட்டச் செலவு 36பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உருவாக்கி முடிக்கும் போது ஒரு கப்பல் 13பில்லியன் டொலர்கள் பெறுமதியானவையாக இருக்கும். அவற்றில் இணைக்கப்படவுள்ள F-35C போர்விமானங்கள் அறுநூற்றைம்பது மைல்கள் பறப்புக் கொண்டது. மிகவும் தொலை தூரங்களுக்கு வேவுபார்க்கக் கூடியவை. உன்னதமான புலப்படாத்தன்மையைக் கொண்டவை.

இந்தியாவின் விமானந்தாங்கிக் கப்பல்கள்
இந்தியாவின் தொடர்ச்சியான கடும் முயற்ச்சிகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்கா EMALS முறைமையை விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாதான் இந்த முறைமையைக் கொண்ட விமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றது. இந்தியாவின் ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்காக ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலை இரசியா உருவாக்குகின்றது. ஆனால் முறைமைத் தொழில்நுட்பம் இரசியாவின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா விரும்பாது. 1990-ம் ஆண்டின் பின்னர் இரசியா விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குவது குறைவு. இதனால் இரசியாவின் அனுபவமின்மை விஷாலைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

சீனாவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
சீனாவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல் 2021-ம் ஆண்டு சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு CV-18 எனத் தற்காலிகப் பெயரிடப்பட்டுள்ளது. சீனா லியோனிங் என்ற விமானம் தாங்கிக் கப்பலை ஏற்கனவே உருவாக்கிச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் ஒரு விமானந்தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய வலிமை சீனாவின் நாசகாரிக் கப்பல்களிடம் இல்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் சீனாவிடம் தற்போது இருக்கும் லியோனிங் விமானம் தாங்கி
கப்பல் ஒரு பயிற்ச்சி விமானந்தாங்கிக்கப்பல் மட்டுமே எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் விமானந்தாங்கிக்கப்பற்துறையில் சீனா முக்கியமான முதற்படியை லியோனிங் மூலம் எடுத்து வைத்துள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் போய் சீனாவின் லியோனிங்கால் செயற்பட முடியாது.

இரசியவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல்
சோவியத் ஒன்றியத்தின் கப்பல் கட்டுமானத் துறை உக்ரேனில் பெருமளவு நிலை கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா புதிதாக எந்த ஒரு விமானந்தாங்கிக் கப்பல்களையும் உருவாக்கவில்லை. இரசியா தனக்கு என இரு போர்க்கப்பல்களை நிர்மாணிக்கும் வேலையை பிரான்ஸிடம் ஒப்படைத்திருந்தது. அது நிறைவேறும் தறுவாயில் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தது. அதனால் இரசியாவிற்கான அந்தப் போர்க்கப்பல் விற்பனை நிறுத்தப்பட்டது. அந்த இரண்டு போர்க்கப்பல்களையும் எகிப்து வாங்கியது. ஆனால் இரசியாவின் Krylov State Research Center ஒரு பெருவிமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தை வரைந்துள்ளது. அது அமெரிக்காவின் நிமிட்ஸ் வகைக் கப்பல்களுக்கும் போர்ட் வகைக் காப்பல்களுக்கும் இணையாகக் கூடிய வகையில் உள்ளன. ஆனால் இரசிய அரசு அதில் பெரும் அக்கறை காட்டவில்லை. இரசியாவிடம் தற்போது இருக்கும் விமானந்தாங்கிக் கப்பல் Admiral Kuznetsov சிரியாவிற்குச் செல்லும் போது அதனுடன் ஒரு இழுவைக் கப்பலும் சென்றது. உரிய பராமரிப்பு இன்மையால் அது பழுதடையலாம் என்ற அச்சமே அதன் காரணம். சிரிய அரசுக்கு ஆதரவான படை நடவடிக்கையின் போது பல தடவைகள் Admiral Kuznetsovஇல் இருந்து கிளம்பும் போதும் தரையிறங்கும் போதும் விபத்துக்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகின்றது

சீனாவின் பதிலடி
சீனாவின் DF-21 "Carrier Killer" என்னும்  antiship ballistic missile என்ற ரக ஏவுகணைகளால் 810 கடல் மைல்கள் தொலைவில் உள்ள 1,100 அடி நீளமானதும் 70 விமானங்களைக் கொண்டதும் ஆறாயிரம் பேரைக் கொண்டதுமான ஒரு பெரிய விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும் எனச் சொல்லப் படுகின்றது.  1995-ம் ஆண்டு அமெரிக்காவின் இரு விமானந்தாங்கிக் கப்பல்கள் தைவானை ஒட்டி நகர்தப்பட்டதால் சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தைக் கைவிட்டது. அதன் பின்னர் சீனா அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கியது. சீனா DF-21 "Carrier Killer" ஏவுகணைகள உருவாக்கிய பின்னர் இரசியா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளும் அதே மாதிரியான ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் இனிச் செல்லாக்காசு ஆகிவிடும் எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். சீனாவின் DF-21 "Carrier Killer" என்னும் ஏவுகணைகள் தரையில் இருந்து நகரக் கூடிய பார ஊர்திகளில் இருந்து ஏவப்படக் கூடியவை. அவை ஒலியிலும் பார்க்கப் பலமடங்கு வேகத்தில் பாயும். அதன் பின்னர் அமெரிக்கா அந்த ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி 2016-ம் ஆண்டு வெற்றிகரமான பல பரிசோதனைகளைச் செய்தது. அதன் மூலம் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா பல நீர்மூழ்கி-வேட்டையாடும் விமானங்களயும் உலங்கு வானூர்திகளையும் உருவாக்கியது. அத்துடன் நீரின் கீழ் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்கியது.

சீனா, இந்தியா போன்ற நாடுகளால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஆகக் கூடியது ஐந்து பெருவிமானந்தாங்கிக் கப்பல்களை மட்டுமே வைத்திருக்க முடியும். தற்போது அமெரிக்கா வைத்துள்ள பத்து நிமிட்ஸ் வகை பெருவிமானந்தாக்கிக் கப்பல்களும் இனி உருவாக்கவிருக்கும் பத்து போர்ட் வகை பெருவிமானந்தாங்கிக் கப்பல்களும் எண்ணிக்கை அடிப்படையிலும் தொழில்நுட்ப மேம்பாட்டு அடிப்படையிலும் தந்நிகரில்லதவையாக இருக்கின்றன. இதனால் உலகக் கடற்பரப்பில் அமெரிக்க ஆதிக்கம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தொடரப் போகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...