Monday 13 February 2017

இரசியாவின் மிக்-35 போர்விமானங்கள்


2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம் திகதி இரசியா தனது Mig-35 போர் விமானங்களின் பறப்பை ஆரம்பித்து வைத்தது. இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் முப்பது நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Mig-35 போர்விமானங்கள் MiG-29இல் இருந்து மேம்படுத்தப்பட்டவையாகும். இப்போர்விமானங்கள் ஆரம்பத்தில் thrust vectoring எனப்படும் திசைமாற்றுத் திறன் தொழில்நுட்பமும் AESA radarரும் இல்லாமல் இருந்தன. பின்னர் அவை Mig-35இல் இணைக்கப்பட்டன. இரசியாவின் RSK-MiG போர்விமான உற்பத்தி நிறுவனத்தின் தொடர் இருப்பை உறுதி செய்யும் வகையில் மிக்-35 போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து வானுக்கும் தரைக்கும் கடலுக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் மிக்-35 போர்விமானங்கள் வீசக்கூடியவை. 2018-ம் ஆண்டிற்குள் 37 மிக்-35 போர்விமானங்கள் இரசிய வான்படையில் இணைக்கப்படும்.

இரசியப் போர்விமான உற்பத்தியும் பிரித்தானியாவும்
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் போரில் தன்னுடன் இணைந்து ஜேர்மனிக்கு எதிராகப் போர் புரிந்த சோவியத் ஒன்றியத்திற்கு நட்பின் அடையாளமாக பிரித்தானியா அப்போது மிகவும் உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட விமான இயந்திரங்களை வழங்கியது. Rolls Royce Derwent V and Nene I & II turbojets என்னும் அந்த இயந்திரங்கள் இரசிய விமான உற்பத்திக்கு பெரும் உதவியாக இருந்தது. அதற்கு முன்னர் இரசியா உற்பத்தி செய்த விமான இயந்திரங்கள் பரிசோதனையின் போது வெடித்துச் சிதறியது. விமான உற்பத்தித் துறையில் தாம் பிந்தங்கி விட்டோமோ என இரசியர்கள் அஞ்சிக் கொண்டிருக்கையில் பிரித்தானியாவின் உதவி இரசியாவைத் தூக்கி விட்டது. 1979இல் ஈரானின் மன்னர் ஷாவின் வீழ்ச்சிப் பின்னர் ஈரானிடமிருந்த அமெரிக்கப் போர்விமானங்களில் உள்ள தொழில் நுட்பங்களை இரசியா பெற்றுக் கொண்டது. கொரியப் போரில் அமெரிக்காவின் F-86 போர் விமானம் வட கொரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்டு அதன் தொழில்நுட்பம் இரசியாவால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மிக்-15, மிக்-17 ஆகிய போர்விமானங்கள் இரசியாவால் மேற்கு நாடுகளுக்கு இணையான போர்விமானங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்தன. மிக்-19 இரசியாவின் முதலாவது ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடிய போர்விமானமாகும். உலகப் போர்விமான வரலாற்றில் மிக் விமானங்களுக்குத் தனி இடம் உண்டு. உலகிலேயே அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டவை மிக்-21 போர்விமானங்களாகும். அவை பத்தாயிரத்திற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் பாவிக்கப்பட்டன. 

போர் விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
பறப்பு வேகம், தாங்கிச் செல்லக் கூடிய படைக்கலன்களின் எடை(payloads) துரிதமாகத் திசைமற்றும் தன்மை(maneuverability), புலப்படாத்தன்மை (stealth), எதிரி இலக்குகளை இனம்காணும் தன்மை, வானாதிக்கம் செலுத்தும் திறன் (air superiority), பார்வைத் தொலைவு (Beyond Visual Range), எரிபொருள் மீள் நிரப்பும்வரை பறக்கக் கூடிய தூரம் ஆகியவை போர்விமானங்களின் முக்கிய அம்சங்களாகும். விமாங்கள் வானில் இருந்து எதிரி விமானத்துடன் போர் செய்வதை நாய்ச்சண்டை என அழைப்பர்.

வான் ஆதிக்கப் போர்விமானங்களும் பற்பணிப் போர்விமானங்களும்
ஐரோப்பிய நாடுகளின்Eurofighter, இரசியாவின் Mig-35, பிரான்சின் Rafale சுவீடனின் Saab JAS 39 Gripen ஆகியவை வானாதிக்கம் செலுத்தக் கூடிய போர் விமானங்களாகும். இவை எதிரியின் வான்பரப்புக்குள் சென்று அங்கு இனம் கண்டு அழிக்கப்படாமல் பறந்து கொண்டு எதிரியின் இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடியவை. வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகள் மீதும் தாக்குதல், வானில் இருந்து வானில் உள்ள இலக்குகள் மீதும் தாக்குதல் செய்யக் கூடிய போர் விமானங்கள் பற்பணிப் போர் விமானங்களாகும். அமெரிக்காவின் F-16, F18, F-35, பிரான்ஸின் Rafale ஆகியவற்றுடன் இரசியாவின் Mig-29, Mig-35 போர்விமானங்களும் சீனாவின் J-20 போர்விமானமும் பற்பணிப் போர்விமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புகைத்தல் கூடாது
மிக்-35 போர்விமானங்களில் புதிய விமனத்தினுள்ளான பாதுகாப்பு முறைமை (on-board defense system), புதிய தாழ்நிலை தேடுதலும் தடயமறிதலும் முறைமை (infrared search and track அதன் முக்கிய அம்சங்களாகும் மிக்-35 அமெரிக்காவின் புலப்படா விமானங்களை இனம் காணக்கூடியவை என அதன் உற்பத்தியாளர்கள் சொல்கின்ற போதிலும் அதன் உண்மை போர்களத்தில் பரீட்ச்சிக்கப்படும் போதே தெரியவரும். மிக்-35இன் RD-33MKB இயந்திரங்கள் இரு கோடுகள் கொண்ட புகை கக்காமல் பயணிக்கக் கூடியவை. அதனால் வானில் வைத்து எதிரியின் போர்விமானிகளால் இலகுவாக கண்ணால் அவதானிப்பது கடினம். இது வானில் நடக்கும் நாய்ச்சண்டைக்கு உதவியாக அமைகின்றது. சில மிக்-35 ஒற்றை இயந்திரம் கொண்டவையாகவும் சில இரட்டை இயந்திரங்கள் கொண்டவையாகவும் இருக்கின்றன. இலவுகாக திசைகளை மாற்றுவதைப் பொறுத்தவைர மிக்-35 தன்னிகரில்லாத ஒரு விமானமாகத் தற்போது திகழ்கின்றது.

புலப்படாத்தன்மை
மிக்-29உடன் ஒப்பிடுகையில் மிக்-35இல் ரடாருக்குப் புலப்படும் தன்மை எழில் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. மிக்-29இல் ஆறு படைக்கலன் தாங்கிகள் இருந்தன. மிக்-35இல் அது எட்டாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் தற்போது உள்ள படைக்கலனகளுடன் எதிர்காலத்தில் உருவாக்கப் படும் லேசர் படைக்கலங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Zhuk-MA என்றழைக்கப்படும் ரடார்கள் மிக்-35இல் பொருத்தப்பட்டுள்ளன. இவை 85வான் மைல் தொலைவிற்குள் உள்ள பத்து முதல் முப்பது வரையிலான எதிரி இலக்குக்களை இனம் கண்டு ஒரே நேரத்தில் தொடரக்கூடியவை. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் மிக்-35 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை அண்மித்துள்ளன என்றார்.


இந்தியா ஏன் Mig-35ஐ வாங்கவில்லை
இந்தியா தனது வான்படைக்கு 126 போர்விமானங்களை இணைக்கத் திட்டமிட்ட போது அவை மிக்-35ஆகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா மிக்-35ஐ வாங்கவில்லை. இந்தியாவிடம் ஏற்கனவே அறுபத்தியாறு மிக்-29 போர்விமானங்கள் இருக்கின்றன. அதனால் மேலதிகமாக மிக்-35 போர்விமானங்களை வாங்கும் போது பராமரிப்பு மற்றும் பயிற்ச்சிக்கன செலவு குறைந்த அளவிலேயே இருக்கும். விமானப் போரியலில் நாய்ச் சண்டை என அழைக்கப்படும் வானில் இரு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று அண்மித்த நிலையில் நின்று சண்டையிடுவது இருந்த காலத்தில் இரசியாவின் மிக் விமானங்கள் பிரபலமடைந்திருந்தன. ஆனால் தற்போது பார்வைக்கு அப்பாற்பட்ட தூர ஏவுகணைகள் (beyond-visual-range missile) உள்ள காலத்தில் தொலைவில் வைத்தே எதிரி விமானங்களை இனம் காணக்கூடிய தன்மை விமானப்போரியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அத்துடன் எதிரியின் தாழ்சிவப்பு வழிகாட்டல் (IR guided missiles) ஏவுகணைகளால் விமானத்தின் இயந்திரம் தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையிலும் பத்திரமாக தரைஇறக்கும் தன்மையுள்ள போர்விமானங்கள் முக்கியத்துவ பெறுகின்றன. ஏற்கனவே இரசியாவில் இரண்டு மிக்-29 போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளான போது இரசியா எல்லா மிக்-29களினதும் பறப்புக்களை நிறுத்தியதும் இந்தியாவை மிக் போர்விமானங்களின் செயற்பாடுகள் பற்றி சிந்திக்க வைத்தது. சீனாவினதும் பாக்கிஸ்த்தானினதும் காலாட்படையணிகளியும் தாங்கிகளையும் சிறந்த லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லக் கூடிய விமானங்களாலேயே சமாளிக்க முடியும் அதற்கு பிரான்ஸின் ரஃபேல் போர் விமாங்கள் உகந்தவை என இந்திய விமானப் படையினர் கருதினர். இந்தியாவிடம் தற்போது உள்ள இரசியத் தயாரிப்பு விமானங்களான முன்னூறு  Su-30 MKIபோர் விமானங்களும் அறுபது MiG 29 UPG போர் விமானங்களும் அதன் வான்பரப்பைப் பாதுகாக்கப் போதுமானவையாகும். அவற்றிற்கு உறுதுணையாக இந்தியாவின் ஆகாஷ் என்னும் தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளும் இருக்கின்றன. எதிரியின் வான்பரப்புக்குள் சென்று தாக்குதல் செய்யக்கூடிய இலகுரக மலிவான போர்விமானங்களுக்கான தேவையை பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்களே நிறவு செய்யும் என்பது இந்திய வான்படை நிபுணர்களின் கருத்தாக இருந்தது. இந்தியாவிடம் இருக்கும் பிரான்ஸின் ஜகுவார் மற்றும் மிராஜ்-2000 போர்விமானங்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள். இவற்றை 2030-ம் ஆண்டு வரை இந்தியாவால் பாவனையில் வைத்திருக்க முடியும். இவற்றில் ஏற்பட்ட நம்பிக்கையே இந்தியாவை மிக்-35 வாங்காமல் ரஃபேலை வாங்க வைத்தது

இந்தியாவின் தெரிவு பிரெஞ் ரஃபேல்
ஸ்ரெல்த் எனப்படும் ரடார் தவிர்ப்பு பிரான்ஸின் ரஃபேல் போர்விமானங்களில் இல்லை என்பது ஒரு பெரும் குறை என்றாலும் அதன் பல சிறந்த செயற்பாடுகள் அதை வாங்கும்படி இந்தியாவைத் தூண்டியது. பிரான்சின் ரஃபேல் விமானங்கள் இடைமறிப்பு, வான்வேவு, வானில் இருந்து தரைக்கான தாக்குதல், தரைப்படைக்கு ஆதரவு வழங்குதல் எதிரியின் பிராந்தியத்தினுள் ஆழச் சென்றூ தாக்குதல் செய்தல், கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான் தாக்குதல், அணுப்படைகலத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பல பணிகள் செய்யக் கூடியதாகும். அதனால் அது எல்லாப் பணிகளும் (multi-role) செய்யக்கூடிய விமானமாகக் கருதப்படுகின்றது.

சீனா வேண்டாம் என்ற மிக்-35
மிக்-35 தாங்கு திறன் குறைந்தது (short endurance) படைக்கலன்கள் தாங்கிச்செல்லும் அளவும் குறைவானது அதனால் சீன வான்படையினர்  இரசியாவின் Su-27 , Su-30 ஆகிய போர்விமானங்களை வாங்குவதில் தாம் அதிக அக்கறை காட்டியதாகத் தெரிவித்துள்ளனர். இரசியாவின் Su-27 போர் விமானங்கள் மலிவானதும் வானில் நடக்கும் நாய்ச்சண்டையில் சிறப்பாகச் செயற்படக்கூடியதுமாகும். இரசியாவின் SU-27,MIG-31, MIG-29 ஆகிய போர்விமானங்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்த பின்னர் சீன வான்படையினர் SU-27 போர்விமானங்களை வாங்குவதாக முடிவு செய்தனர். 1990-1991இல் நடந்த குவைத்தை சதாம் ஹுசேய்னின் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட வளைகுடாப் போரின் போது அமெரிக்காவின் F-15, F-16 ஆகிய போர்விமானங்களுக்கு எதிராக செயற்படும் திறன் இரசியாவின் SU-27 போர் விமானங்களில் இருப்பதாகத் தாம் கருதுகின்றோம் என்றனர் சீன வான்படை நிபுணர்கள். மிக்-35 புலப்படாத்தன்மை (stealth) என்பதே இல்லை என்னும் அளவிற்கு இருக்கின்றது.

இரசியாவின் மிக்-35 அமெரிக்காவின் F-35
இரசிய வான்படையினர் மிக்-29மீது நம்பிக்கை இழந்து அவற்றை வாங்குவதைக் கைவிட்டனர். அதைத் தொடர்ந்து மிக் போர் விமான உற்பத்தி நிறுவனம் தன் இருப்பை உறுதி செய்யும் வகையில் பெரும் பாடு பட்டு மிக்-35 உருவாக்கியது. இரசிய வான்படை 37 மிக்-35 போர் விமானங்களை மட்டுமே வாங்க உத்தேசித்துள்ளது. அதே வேளை அமெரிக்காவின் மிகப் புதியதர F-35 போர் விமானங்கள் 1763 அமெரிக்க வான்படையின் வாங்க முடிவு செய்துள்ளனர். அமெரிக்கக் கடற்படை  286 F-35 வாங்கவுள்ளது. லொக்கீட் மார்டின் நிறுவனம் 399பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாகிய F-35 பிரித்தானியா, ஒஸ்ரேலியா, துருக்கி, நெதர்லாந்து, டென்மார்க், கனடா ஆகிய நாடுகள் வாங்க முன் வந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப இரகசியப் பேணுதல் போன்ற காரணங்களுக்காக  சீனா, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு F-35 விற்க முடியாது. தென் கொரியா, ஜப்பான், இஸ்ரேல், பெல்ஜியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் F-35 போர்விமானங்களை வாங்க விரும்புகின்றன. இஸ்ரேலுக்கு F-35 விற்பனை செய்வதை சவுதி அரேபியா உட்பட பல மேற்காசிய நாடுகள் விரும்பவில்லை. மிக்-35 எகிப்து மட்டுமே வாங்க முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவின் F-35 மிகவும் செலவு மிக்கது என அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களே பலமுறை சாடியுள்ளார். இதனால் F-35இன் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் குறைந்த விலைக்கு விற்கவும் லொக்கீட் மாட்டின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. F-35 பல தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுள்ள ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக இருக்கின்ற போதிலும் அதன் பறப்பு உயரம் பறப்பு வேகம் ஆகியவை போதாது என்ற குறைபாடு உள்ளது. F-35 மணிக்கு 1200மைல்களும் மிக்-35 1491மைல்களும் பறக்கக் கூடியவை. F-22 ரப்டர் போர்விமானங்கள் ஒலியிலும் வேகமாக ஐம்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடியவை. F-35 ஆல் எனத அளவு தூரம் வானாதிக்கம் செய்ய முடியும் என்பதை உண்மையான போர் முனையிலேயே கண்டறிய முடியும். ஆனால் தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதைல் F-35 தன்னிகரற்றது எனச் சொல்லப்படுகின்றது

மிக்-35 போர்விமானங்களை வாங்கும் எகிப்து
எகிப்தியப் போர்விமானிகளுக்கும் மிக் போர்விமானங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எகிப்தின் இஸ்ரேலுக்கு எதிரான போர்களில் மிக் போர் விமானங்கள் பெரும் பங்கு வகித்தன. அவர்களுக்கு மிகவும் பழக்கப் பட்டவை மிக் போர்விமானங்களாகும். எகிப்து மிக்-35 போர்விமானங்களை வாங்குவதற்கான முக்கிய காரணி எகிப்தியப் படைத்துறைக்கு மிக் போர்விமாங்களுடன் இருக்கும் பரீச்சயமாகும். பராக் ஒபாமா ஆட்சியில் இருக்கும் போது எகிப்த்திற்கும் அமெரிக்காவிற்கும் இடயில் நல்லுறவு நிலவாத நிலையிலேயே எகிப்து தனது படைக்கலன்கள் கொளவனவிற்கு இரசியா பக்கம் மீண்டும் திரும்பியது.  ஆனால் டொனால்ட் டிரம்ப் எகிப்திய அதிபர் அல் சிசியை சிறந்த மனிதர் எனப் பராட்டினார். அவர் எகிப்த்துடன் நல்லுறவை மீளக் கட்டியெழுப்பும் போது மிக்-35இன் இரகசியங்கள் அமெரிக்காவிற்கு வழங்கப்படலாம். இதனால்தான் இரசியா SU-35 போர்விமானகளை விற்கவில்லைப் போலும்.
இனி எந்தப் போர்முனையில் F-35, SU-35, மிக்-35 ஆகிய போர்விமாங்களும் தாட், S-400 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளும் மோதிப் பார்க்கப் போகின்றன?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...