Thursday 13 July 2017

ஏற்றுமதிசார் பொருளாதரங்களும் அவற்றின் பிரச்சனைகளும்

உலகின் முதல் மூன்று ஏற்றுமதி நாடுகளாக சீனா, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் ஏற்றுமதியில் இந்த மூன்று நாடுகளும் வேறு வேறு விதமாகத் தங்கியிருக்கின்றன. ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்படும் போது அதைச் சமாளிக்க இந்த மூன்று நாடுகளும் வேறு வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அமெரிக்காவின் பிரச்சனை சீனாவிலிருந்த வரும் இறக்குமதியே
ஐக்கிய அமெரிக்கா அதிகக் கவலை கொள்வது அதன் ஏற்றுமதியிலும் பார்க்க சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி பற்றியே. உற்பத்தித் துறையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு இழப்பின் காற்பங்கிற்கு சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அதிகரிப்பே காரணமாகும். சீனா தனது நாணத்தின் மதிப்பைத் திட்டமிட்டு குறைந்த நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்கர்களின் குற்றச்சாட்டாகும். அதுவே டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரையில் முக்கிய பங்கு வகித்தது. தான் வெற்றி பெற்றால் சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு 35விழுக்காடு தீர்வை வரி விதிப்பேன் என அவர் சூளுரைத்திருந்தார்.

ஜேர்மனி
ஜேர்மனியின் அரச செலவீனம் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 40 விழுக்காடாகும். உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த ஜேர்மனி இப்போது சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பின்னால் போய் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும் அதன் ஏற்றுமதி அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 12.5 விழுக்காடேயாகும். அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவைப் போலவோ ஜெர்மனியைப் போலவோ ஏற்றுமதியில் தங்கியிருக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஜேர்மனியின் பொருளாதாரம் 5.6 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருப்பதால் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சி அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. அதன் ஏற்றுமதி 23 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியில் வேலையற்றோர் தொகையும் 2008-ம் ஆண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஜேர்மனி அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக பிரான்ஸ் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவிற்கே ஜேர்மனி அதிக ஏற்றுமதியைச் செய்கின்றது. ஏற்றுமதி அதிகரிப்புக் குறைந்ததால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய ஜேர்மனி தனது அரச செலவீனத்தை மொத்த தேசிய உற்பத்தியின் 44 விழுக்காடாக அதிகரித்தது. அந்த மட்டத்தை தொடர்ந்து பேணி வருகின்றது. உள்நாட்டில் மக்களின் கொள்வனவையும் முதலீட்டையும் அதிகரிக்கவும் ஜேர்மனி பல நடவடிக்கைகளை எடுத்தது.

2015-ம் ஆண்டு ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 1.24ரில்லியன் டொலர்களாகவும் இறக்குமதி 989பில்லியன் டொலர்கள்.  ஜேர்மனியின் ஏற்றுமதியில் கார்கள் 153பில்லியன் டொலர்கள், வாகன உதிர்ப்பாகங்கள் 56.2 பில்லியன் டொலர்கள், மருந்துகள் 50பில்லியன் டொலர்கள், வான்கலங்கள் 32.8 பில்லியன் டொலர்கள்,


2017-ம் ஆண்டு ஜேர்மனியின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும் என சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் ஜேர்மனிய அரசு 2017-ம் ஆண்டு எற்றுமதி அதிகரிக்கும் என நம்புகின்றது. அத்துடன் உள்நாட்டு மக்களின் கொள்வனவு அதிகரிப்பு ஜேர்மனியப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை காப்பாற்றும் எனவும் ஜேர்மனிய அரசு நம்புகின்றது.

தஞ்சம் கோரி ஜேர்மன் வந்த வெளிநாட்டவர்களை வைத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஜேர்மனி முயற்ச்சி செய்கின்றது. ஜேர்மனியின் இளையோர் தொகைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் குறைவாக உள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஜேர்மனி குடிவரவாளர்கள் மூலம் சமாளிக்க முயல்கின்றது. 2016-ம் ஆண்டு ஜேர்மனி குடிவரவாளர்களுக்கு 23பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது இது அரசின் மொத்த செலவீனத்தில் 7 விழுக்காடாகும். ஆனால் இந்தச் செல்வுகள் குடிவரவாளர்களை திறன் மிக்க தொழிலாளர்களாக்க சில ஆண்டுகள் எடுக்கலாம்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 15 விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் அது 14 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 26 விழுக்காட்டாலும், சீனாவிற்கான ஏற்றுமதி 22 விழுக்காட்டாலும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 18 விழுக்காட்டாலும்  வீழ்ச்சியடைந்தன.

ஜேர்மனியின் கார் உற்பத்தி நிறுவனங்கள் 2009-ம் ஆண்டின் பின்னர் ஜேர்மனியில் அவை செய்யும் கார் உற்பத்தி அதிகரிப்பிலும் பார்க்க பார்க்க வெளிநாடுகளில் உள்ள தமது தொழிற்சாலைகளில் செய்யும்  உற்பத்தி அதிகரிப்பு அதிகமாக இருக்கின்றது.  அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தமது ஏற்றுமதி வருமானத்தை அந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் முதலீடு செய்வதுண்டு. அந்த வகையில் ஜேர்மனி அதிக அளவு முதலீட்டை அமெரிக்காவில் செய்கின்றது. அமெரிக்காவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டில் 10 விழுக்காடு ஜேர்மனியில் இருந்து செய்யப்படுகின்றது. ஜேர்மனி அமெரிக்காவில் செய்த முதலீட்டில் 670,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
.
அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜேர்மனி அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா இருக்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2019-ம் ஆண்டு வெளியேறிய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தால் அது ஜேர்மனியின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதிக்கும்.

2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. அதனால் 10 விழுக்காடாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் தற்போது ஏழு விழுக்காட்டிலும் குறைவான அளவில் வளருகின்றது. இந்த பொருளாதார வளர்ச்சி வேகக் குறைப்பைச் சமாளிக்க சீனா பலவழிகளில் முயற்ச்சி செய்தது கொண்டிருக்கின்றது. அந்நிய முதலீடுகளைக் கவருவதில் சீனா முதலாம் இடத்தில் இருந்தது. 2015-ம் ஆண்டு இந்தியா அந்த முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது. 2016-ம் ஆண்டு உற்பத்தித் துறையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் சீனத் தொழிலாளர்களின் ஊதியம் ஐந்து மடங்காக  இருந்தது.
1. மிகையான உற்பத்தி சாதனங்கள்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உச்ச நிலையில் இருந்த சீனாவின் ஏற்றுமதிக்காக உருவாக்கப் பட்ட உற்பத்தி சாதனங்கள் பல இப்போது பயன்பாடற்று இருக்கின்றன. இவற்றில் அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபத்திறனற்றுக் கிடக்கின்றன.
2. உயர் தொழில்நுட்பத்துக்கு மாற முடியாத நிலைமை
சீனா தனது உற்பத்தியை உயர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே முன் தங்கியுள்ள மேற்கு நாடுகள் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் போது தாமும் மேம்படுத்தி தொழில்நுட்ப இடைவெளியை சீனாவால் குறைக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன.
3. உள்ளூராட்சிச் சபைகளின் நிதி நிலைமை
சீனாவின் பல உள்ளுராட்ச்சிச் சபைகள் கடன் பளுவால் தவிக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த சீன அரச வங்கிகள் அறவிட முடியாக் கடன்களால் தவிக்கின்றன.

2012- ம் ஆண்டு ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த போது 2008-ம் ஆண்டில் உலகில் உருவான பொருளாதாரப் பிரச்சனை சீனாவின் ஏற்றுமதியை பெரிதும் பாதித்துக் கொண்டிருந்தது. அதனால் ஷியின் தலைமையில் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஷியின் தவறான கொள்கையோ அல்லது வழிநடத்தலோ சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்தமைக்குக் காரணம் அல்ல. சீனாவில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கையில் சீனப் படைத்துறையில் மூன்று இலட்சம் பேர்களைக் குறைப்பது பல பொருளாதாரச் சவால்களையும் ஏற்படுத்தும். அதிபர் ஷி ஜின்பிங் படைத்துறைச் செலவைக் குறைக்கும் நோக்கத்துடனும் படைத்துறையின் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனுமே ஆட்குறைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றார்.  சீனாவின் பொருளாதாரம் 2008இன் பின்னர் ஏற்றுமதி குறைவதால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்ற போதிலும். சீனாவால் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். சீனக் கூட்டாண்மைகள் (corporations) ஆண்டு தோறும் மூன்று ரில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டுகின்றன. அதிலும் பல மடங்கு தொகையை சீன மக்கள் ஆண்டு தோறும் சேமிப்பதுடன் அவர்களது சேமிப்பு வளர்ச்சி ஆண்டுக்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டு போகின்றது. சீன அரசு சமுகப் பாதுகாபு நிதியம், அரசி நிதியம் (sovereign wealth) வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு ஆகியவற்றில் பல ரில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த அரச நிதியங்களின் முதலீகள் இலாபகரமானதாகவே இருக்கின்றன. இதனால் சீன அரசு தனது பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேண்டிய எந்த நிர்பந்தத்திற்கும் முகம் கொடுக்கவில்லை. சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பார்க்க நான்கு மடங்கு கதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு அமெரிக்காவினதிலும் பார்க்க அதிகமானதாக வளரும். தற்போதைய படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி Commanders win battles. Economies win wars. தளபதிகள் சண்டைகளில் வெல்வார்கள் பொருதாரங்கள் போரில் வெல்லும். சீனப் பொருளாதாரம் உலகில் மிகப் பெரியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமுண்டோ?

1980களின் ஆரம்பத்தில் இருந்து முழு அரச உதவியுடன் மலிவான ஊதியத் தொழிலாளர்களுடன் உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்ததால் சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. பொருளாதாரத்தில் அதிகமான அரச முதலீடும் அளவிற்கு மிஞ்சிய அரசியல் தலையீடும் ஒரு திறனற்ற உற்பத்தித் துறையை சீனாவில் உருவாக்கியது . இதனால் 2008-ம் 2009-ம் ஆண்டுகளின் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால். சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. எப்போதும் வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றது.  இதனால் ஏற்படும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க சீன ஆட்சியாளர்கள் பெரும் சிரமப் படுகின்றார்கள். சீன மக்களின் கொள்வனவு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 34 விழுக்காடு மட்டுமே.  இந்த விழுக்காடு அமெரிக்காவில் 70 ஆகவும் ஜப்பானில் 61 ஆகவும் தென் கொரியாவில் 50 ஆகவும் இந்தியாவில் 59 ஆகவும் இருக்கின்றது. இதனால்தான் உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீனாவின் வர்த்தக வங்கித் துறை சீன நிதித்துறையின் மோசமான வலுவின்மைப் புள்ளியாக இருக்கின்றது. Liuzhou Bank என்னும் வர்த்தக வங்கியில் 4.9பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஊழல் நடந்துள்ளது. இது அதன் மொத்த சொத்துப் பெறுமதியின் மூன்றில் ஒரு பங்காகும். சீனாவின் வங்கித் துறையில் நிலவும் ஊழல் வங்கிகளின் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதற்கு Liuzhou Bank உதாரணமாகக் காட்டப்படுகின்றது.

மூடிமறைக்கும் திட்டம் - debt-for-equity swap
கூட்டாண்மைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை அந்தக் கூட்டாண்மைகளில் வங்கிகளின் பங்குகளாக மாற்றும் முயற்ச்சியை சினா 2016-ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் வங்கிகளின் நிதி நிலை இருப்பில் அறவிட முடியாக் கடன்களை முதலீடுகளாக மாற்றுவது பிரச்சனையை மூடி மறைக்கும் செயல் மட்டுமே. அது பிரச்சனையைத் தீர்க்காது. வங்கிகள் தாம் கடன் கொடுத்த கூட்டாண்மைகளின் பங்குகளை உலகச் சந்தையில் விற்பது சீனாவின் உபாயமாகும். இதன் மூலம் தனது உள்நாட்டுக் கடன் பிரச்சனையை 7.6பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளாக உலகச் சந்தைக்குத் தள்ள சீனா முயற்ச்சிக்கின்றது. உலக முதலீட்டு முகாமையாளர்கள் சீனாவின் பங்குகளாக மாற்றப்பட்ட செயற்படாக் கடன்களில் (non-performing loans) அதிக அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது நிச்சயம். அதனால் அடிமாட்டு விலைக்கு அப் பங்குகள் விற்கப்படலாம். முதலீடுகளைத் தரவரிசைப் படுத்தும் நிறுவனங்கள் சீனாவின் இப் புதிய பங்குகளைத் தரவரிசைப் படுத்த மறுத்துள்ளன. அதுவும் இப்பங்குகளின் விலையை குறைக்கும். இதனால் சீனாவின் இப் புதிய பங்கு விற்பனைத் திட்டத்தை பன்றிக்கு உதட்டுச் சாயம் பூசும் செயல் என ஒரு நிதித் துறை விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது கடன் கொடுத்த வங்கிகளின் இருப்பு நிலைக்குறிப்பை (balance sheet) மாற்றியமைக்கலாம் ஆனால் அவற்றின் அடிப்படைக் கடன் பிரச்சனையை மாற்றாது.


சீன மக்கள் பட்ட கடனும் படும் தொல்லைகளும்
சீனாவின் மக்கள் பலர் தாம் பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்க மேலும் கடன் பட்டு தமது கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் பெண்களுக்கு வழங்கும் கடனிற்கான உறுதிப் பத்திரமாக அவர்களது நிர்வாணப் படங்களை கேட்டு வாங்குகின்றார்கள். பின்னாளில் அவர்களை மிரட்டிப் பணம் வாங்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் தம்மிடம் கடன் பட்டவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அவர்களது வீடுகளை உடைத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களைச் செய்கின்றார்கள். சில மாணவிகள் படிப்பதற்கு வாங்கிய கடனுக்கு மீளளிப்பாக தமது உடலையே கொடுக்க வேண்டியும் இருக்கின்றது. நிழல் வங்கிகள் எனப்படும் பதிவு செய்யப் படாத வங்கிகளின் அடாவடித்தனத்தை அடக்க சீன அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகின்றது.
சீனாவும் உலக வர்த்தகமும்
1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.

சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது.  2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான்.

நாடுகளிடையேயான ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசமும் அந்த நாடுகள் அந்த வித்தியாசத்தை தவிர்க்க எடுக்கும் ஒன்றை ஒன்று கழுத்தறுக்கும் நடவடிக்கைகளும் அவற்றிடையேயான வர்த்தகத்தைப் பாதிப்பதுடன் உற்பத்தித் திறனையும் பலியிடுகின்றது.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...