Wednesday 23 March 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் பின்னணி

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் "தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் உடன் பிறப்புக்களை மாவீரர்களாக ஏற்றுக் கொள்ளும்படி அல்லாவை வேண்டுகின்றோம். அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "What is coming is worse and more bitter, Allah permitting. "Thanks be to Allah for his accuracy and success, and we ask Allah to accept our brothers among the martyrs."
 லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பிரஸல்ஸ் நகரக் குண்டுத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதனது அறிக்கையில் "No place in the world is safe from its evil and crimes, crimes that are derived from its black venom towards humanity,"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரி ஒருவரை பெல்ஜியக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 24 வயதான நஜீம் லாஷ்ரௌனி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். ஆனால் கைது செய்யப்பட்டவரின் பெயர் தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. 

The Anti-Mediaவின் இணயத் தளத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அறியப்படு முன்னரே இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவே ஏற்கவேண்டும் என Claire Bernish  என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தீவிரவாதத்தின் உற்பத்திக்கு ஏகாதிபத்தியமே காரணம் என அடித்துச் சொல்கின்றார்:-
  • Indeed, blaming an entire religion for the actions of a few falsely claiming they follow its teachings might be precisely what the ignominious war machine of U.S. imperialism needs. In fact, modern-day terrorism exists because of the actions of a specific religion — and it isn’t Islam. Imperialism, and its roots planted firmly in statism, inarguably create, foster, and perpetuate terrorism at an alarming rate. An active military campaign and overarching surveillance program ostensibly embarked upon to demolish terrorism — anywhere on the planet — instead manufacture terrorism at an increasingly rapid rate.

சல்லடை போடப்பட்ட பிரஸல்ஸ்
பிரஸல்ஸ் நகரிலேயே நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின தலைமையமும் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பெல்ஜியத்தினதும் தலைநகர் பிரஸல்ஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிர்ந்தது. பெல்ஜியத்தின் உளவுத்துறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பல இடங்களில் செய்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கான திட்டம் பிரஸல்ஸில் வைத்தே தீட்டப்பட்டது. பிரஸல்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கும் தளமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடியே ஒரு இலட்சம் மக்கள் வாழும் பெல்ஜியத்தில் பத்து இலட்சம் மக்கள் பிரஸல்ஸில் வாழ்கின்றனர். பாரிஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரஸல்ஸ் நகர் மூடப்பட்டு சல்லடை போட்டு தீவிரவாதிகள் தேடிக் கைது செய்யப்ட்டனர்.

தற்கொடைத் தாக்குதல்
பிரஸல்ஸ் பன்னாட்டு விமான நிலையமான ஜாவுன்டெம் (Zaventem) விமான நிலையத்தி புறப்பாடு முனையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகத்திற்கு அண்மையில் உள்ள பிரஸல்ஸ் நிலக்கீழ் சுரங்க தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கண்காணிப்பு ஓளிப்பதிவுகள் மூலம் ஒரு தாக்குதலாளி இனம் காணப்பட்டு அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மூவர் அப்பதிவில் உள்ளனர் அவர்களில் இருவர்  தற்கொடையாளிகள் என்றும் ஒருவர் தப்பி விட்டார் என்றும்  சொல்லப்படுகின்றது. இருவர் Khalid El Bakraoui, Brahim El Bakraoui என்னும் உடன் பிறப்புக்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு குண்டு வெடிக்காத நிலையில் வீடு ஒன்றில் இருந்து வேதியியல் பதார்த்தங்கள் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசின் கொடி ஆகியவற்றுடன் கண்டெடுக்கப் பட்டுள்ளது. புறப்பாடு முனையத்தில் காலை எட்டு மணியளவிலும் தொடருந்து நிலையத்தில் காலை 9.11 மணியளவிலும் குண்டுகள் வெடித்தன.

பாரிஸ் தாக்குதலின் பின்னர் உயிருடன் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) கைது செய்யப் பட்டு நான்கு நாட்களின் பின்னர் பிரஸல்ஸ் தாக்குதல் நடந்துள்ளது.  பாரிஸ் நகரத்தில் 2015 நவம்பர் மாதம் 13-ம் திகதி நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் காற்பந்தாட்ட மைதானத்திற்குள் குண்டு வெடிக்க வைக்கச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) வாசலில் இருந்த கடுமையான   சோதனை காரணமாக உட்செல்ல முடியாமல் குண்டை வெடிக்க வைக்காமல் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்றார். பிரஸல்ஸ் குண்டு வெடிப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் தனது தாயாரின் வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைது செய்யப் பட்டார். இவர் கைது செய்யப்பட்ட மொலன்பீக் பகுதி அதிக அளவான இஸ்லாமியர்கள் வாழும் பிரஸல்ஸ் நகரின் ஓர் ஏழ்மையான பகுதியாகும். சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) தான் முன்பு பாவித்த கைப்பேசியை  மீளவும் செயற்படுத்திப் பாவிக்கத் தொடங்கியமையால் அவரின் நடமாட்டங்களை அவதானிக்கக் கூடிய நிலை உருவானது. பெல்ஜிய சட்டப்படி இரவு நேரத்தில் கண்டபடி வீடு புகுந்து சோதனை செய்ய முடியாது. இதனால் அவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் அவர் கண்காணிக்கப் பட்டார். 

பிரஸல்ஸ் நகரின் மொலன்பீக் பகுதியில் கைது செய்யப் பட்ட 26 வயதான சல்லா அப்டெஸ்லாம் ஒரு வழங்கல் ஏற்பாடு நிபுணராவர் (logistics specialist). ஒரு தாக்குதலுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்வதில் அவர் வல்லவர். பாரிஸ் நகரத் தாக்குதலுக்குத் தேவையான பொருட்கள் போக்குவரத்து, தங்குமிடம்,  இவரே ஏற்பாடு செய்திருந்தார். பாரிஸ் தாக்குதல் மேற்கு நாடுகள் எதிர்பார்த்திருந்ததிலும் பார்க்க தீவிரவாதிகள் தொழில்நுட்ப ரீதியில் நவீனமடைந்திருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தது.

மற்ற நாடுகளிலும் பார்க்க அதிகமான போராளிகள் பெல்ஜியத்தில் இருந்து சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து மேற்காசியாவில் போர் செய்கின்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பெல்ஜியம் திரும்பியுள்ளனர்.

TATP வகைக் குண்டுகள்
2004-ம் ஆண்டு ஸ்பானிய நகர் மட்ரீட்டில் தொடருந்தில் செய்யப்பட்ட குண்டுத் தாக்குதலில் 191 பேர் கொல்லப்பட்டனர். இலண்டனில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் திகதி 52 பேர் கொல்லப்பட்டனர். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் திகதி பாரிஸில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 130பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் வெடித்த குண்டுகளில் triacetone triperoxide, or TATP பாவிக்கப்பட்டது. இக்குண்டுகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு உருவாக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களில் வெடித்த குண்டுகள் TATPஐக் கொண்டு உருவாக்கப் பட்டவையே. இவை இலகுவாக உருவாக்கக் கூடியவை என்றாலும் இலகுவில் வெடிக்கக் கூடியவை என்பதால் இவற்றைக் கையாள சிறந்த பயிற்ச்சி தேவை. 2009-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் அல் கெய்தாவின் ஜிஜி என்பவர் முதன்முறையாக தலை முடிக்கு மை பூசப்பாவிக்கப் படும் வெள்ளையாக்கிகளில் (hair bleach) இருந்து TATP குண்டுகளை உருவாக்கினார்.

நெருக்கடியில் இருக்கும் ஐ எஸ்
உலகெங்கும் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் தமது நிலப்பரப்பில் 20 விழுக்காட்டை இழந்துள்ளனர். அவர்கள் தமது இக்கட்டான நிலையில் இருந்து கொண்டு செய்யவிருக்கும் தாக்குதல்களுக்கு பிரஸல்ஸ் தாக்குதல்கள் முன்னோடியாக அமையலாம்.  இதனால்தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் வெளியிட்ட அறிக்கையில் அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். சல்லா அப்டெஸ்லாமின் கைதுக்கான பழிவாங்கல் தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பு என்ற கருத்து பரவலாக முன்வைக்கப் பட்டபோதிலும் 4 நாட்களுக்குள் இப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது.ஒரு தீவிரவாத அமைப்புக்கு அது செய்யும் தாக்குதல்களின் வெற்றிகளே அதன் இருப்பை உறுதி செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்க்கும்.

அமெரிக்காவில் வேறு
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் உடனடியாக வேலை செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள். அதனால் அவர்கள் இலகுவாக மற்ற சமூகத்தினருடன் இணைந்து கொள்கின்றார்கள். அமெரிக்காவில் பல இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு முறியடிக்கபடுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் படுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப் பட்டுக் கொண்டே போகின்றன. குடியேறுபவர்களை மக்களும் காவற்துறையினரும் தீவீரவாதிகளாகப் பார்ப்பது அதிகரித்துக் கொண்டே போகின்றது. பெல்ஜியத்தில் இருந்து சிரியா சென்று ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து போராடியவர்களில் நூறு பேர் இப்போது மீண்டும் பெல்ஜியம் திரும்பியுள்ளனர். இவர்களால் ஐரோப்பாவின் பல நகரங்களில் தாக்குதல்கள் நடத்த முடியும். அமெரிக்கா பல ஐரோப்பாவின் உளவுத் துறையினர் ஐரோப்பிய நாடுகளின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றன என எட்வேர்ட் ஸ்நோடன் அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க உளவுத் துறையினர் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது அல்லது நிறுத்தியது திவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 எல்லையில்லாத் தொல்லை தரும் Sykes-Picot எல்லைகள்
 பெல்ஜியத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் பலவிதத்திலும் ஓரம் கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வேலைவாய்ப்பு, சமூகநலக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் அவர்கள் வஞ்சிக்கப் படுகின்றார்கள். இது பலரை விரக்தியடையச் செய்து தீவிரவாதிகளாக மாற்றுகின்றது.பிரஸல்ஸ் நகரத்தின் செல்வர்கள்  வாழும் பகுதியையும் ஏழைகள் வாழும் பகுதியையும் ஒரு கால்வாய் பிரிக்கின்றது. ஏழைகள் வாழும் பகுதியில் மொலன்பீக்கும் அடக்கம். அங்கு பல குற்றச் செயல்கள் நடக்கின்றன. விமான நிலையக் குண்டு வெடிப்பில் பங்கு பற்றியதாகக்  கருதப்படும் Khalid El Bakraoui, Brahim El Bakraouiஆகிய  உடன் பிறப்புக்கள் இதுவரை குற்றச் செயல்கள் புரிந்தமைக்காகவே தேடப்பட்டு வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகளாக பெல்ஜியக் காவற்துறையினாரால் கருதப்படவில்லை. இது போன்ற காரணங்களுக்காக பெல்ஜிய உளவுத்   துறை திறமையற்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. குண்டு வெடிப்புக்களின் காரணங்கள் என்று தேடிப் போனால் முதலாவாது   காரணம் ஓரம் கட்டப்பட்ட இஸ்லமியர்கள். இரண்டாவது காரணம் பலஸ்த்தீனம், ஆப்கானிஸ்த்தான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமையின்மை. மூன்றாவது காரணம் மேற்காசியாவில் பல்வேற்பட்ட இனக் குழுமங்களை தமது ஆட்சியின் கீழ் அடக்கி வைத்திருந்த சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃப் போன்றோர் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டமையும் அவர்களுக்குப் பதிலாக நீதியான ஆட்சி நிலைநாட்டப்படாமையும். மூல காரணம் என்று பார்த்தோமானால் முதலாம் உலகப் போரின் பின்னர் ஒரு இஸ்லாமிய வல்லரசு உருவாகக் கூடாது என்ற கபட நோக்கத்துடன் லெபனான், சிரியா, ஈராக், லிபியா, அல்ஜீரியா, மாலி போன்ற நாடுகளின் எல்லைகள் Sykes-Picot எல்லைகள் என்னும் பெயரில் வரையப்பட்டன. இனங்களின் பரம்பல்களைச் சரியாகக் கருத்தில் கொண்டு இந்த எல்லைகள் மீள் வரையப்படாவிட்டால் இஸ்லாமியத் தீவிரவாதம் தொடரும்.

Tuesday 22 March 2016

சிரியக் குர்திஷ் போராளிகள் ஏன் தனிநாட்டுப் பிரகடனம் செய்யவில்லை?

அரபுக்கள், துருக்கியர், ஈரானியர் ஆகியோரின் மோசமான எதிர்ப்புக்களுக்கும் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான கால் வாரல்கள் மத்தியிலும் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வருகின்றனர் குர்திஷ் மக்கள். ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கு என பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன குர்திஷ் போராளிகள். கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் தீரத்துடன் போராடி வரும் சிரியாவில் உள்ள  (People’s Democratic Union -PYD) கட்சியின் போராளிகளின் உறுப்பினர்கள் 200 பேர் Rmeilan நகரிமக்கள் குடியாட்சி ஒன்றியம்ல் ஒன்று கூடி சிரியாவின் வட கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள ரொஜாவா பிராந்தியத்தை ஒரு இணைப்பாட்சி அரசாகப் (Federal State) பிரகடனப் படுத்தியுள்ளனர். ஏன் அவர்கள் தனி நாட்டுப் பிரகடனம் செய்யவில்லை?

இரசியாவின் இரு முனைத் தாக்குதல்
ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் சுயநிர்ணயப் பிரகடனம் செய்வதைத் தாம் ஆதரிப்பதாக ஈராக்கில் உள்ள இரசியத் தூதுவராலயம் கருத்து வெளியிட்டுள்ளது. இது இரசியாவின் இரு முனைத் தாக்குதலாகும். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அமெரிக்காவுடன் நெருங்கமாக உள்ளனர். ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் அப்படி ஒரு பிரகடனம் செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்கப் போவதில்லை. அமெரிக்க-குர்திஷ் உறவுக்கு இரசியா கொடுக்கும் ஓர் அடி இந்த ஆதரவாகும். மற்ற அடி குர்திஷ் மக்கள் எங்கும் சுதந்திரம் பெற்றுவிடக் கூடாது என இருக்கும் துருக்கிக்காகும். இரசியாவின் கருத்து: “Everyone should know that the price of Kurds' sacrifices is much bigger than independence, and the entire world is responsible for these [tragedies],” சிரியாவில் குர்திஷ் போராளிகள் செய்த இணைப்பாட்சிப் பிரகடனம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒரு சாத்தியமான தெரிவு என்றது. இரசியாவும் சிரிய ஆட்சியாளரகளின் அதிருப்தியைச் சம்பாதிக்க விரும்பவில்லை.

அமெரிக்காவின் கபடம்
குர்திஷ் போராளிகள் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும்.    குர்திஷ் போராளிகள் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்ததை அவர்களின் கூட்டாளியான ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் மக்களுடன் தேவை ஏற்படும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு பின்னர் அவர்களின் கால்களை வாரிவிடும்  இரசியா மற்றத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டால் இது ஒரு சாத்தியமான தெரிவு என்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களுடன் அது வைத்திருக்கும் உறவிலும் பார்க்க துருக்கியர்களுடன் வைத்திருக்கும் உறவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திஷ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றை அறிய கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்(click):
பகடைக் காய்களாக இருக்கும் குர்திஷ் மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள் 
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின்  படைத்துறைச் சேவைக்கான குழுவின் முன் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் துருக்கியுடன் இணைந்து அமெரிக்காவும் சிரியாவில் குர்திஷ் மக்களின் இணைப்பாட்சி அரசுப் பிரகடனத்தை எதிர்க்கின்றது என்றார்.

தீரமிக்க குர்திஷ் போராளிகள்
வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. உலகிலேயே மிகத் திறமையாகப் போராடக் கூடிய பெண் போராளிகளாக தற்போது சிரியாவிலுள்ள குர்திஷ் பெண்களே இருக்கின்றார்கள். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போர் புரிவதில் குர்திஷ் போராளிகளே முன்னணியில் திகழ்கின்றார்கள்.

வேடிக்கையான பிரகடனம்.
ஒரு இனம் இணைப்பாட்டி அரசைப் பிராகடனம் செய்வது இதற்கு முன்பு நடந்ததாகவும் தெரிவில்லை அரசியலமைப்பு நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் தெரியவில்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் ஏற்காதவரை இந்த இணைப்பாட்சிப் பிகடனம் செல்லாக் காசே. இப்படி இருக்கையில் குர்திஷ் போராளிகளின் இந்தப் பிரகடனம் சற்று வேடிக்கையானதே. நான் தனியாக ஒரு வியாபாரம் தொடங்குவதற்கு அடுத்தவன் அனுமதி தேவையில்லை ஆனால் அடுத்தவன் ஒருவனுடன் பங்காக இணைந்த்து வியாபாரம் தொடங்குவதாயின் அந்த அடுத்தவனின் சம்மதம் அவசியம்.

ஆதரவு தெரிவிக்கும் மற்றப் போராளி அமைப்புக்கள்.
Rmeilan நகரில் குர்திஷ் போராளிக ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிரியாவில் உள்ள அரபுக்கள், துருக்கியர், கிறிஸ்த்தவர்கள் ஆகியவர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் இணைப்பாட்சிப் பிரகடனத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்தனர். சிரியாவின் வெவேறு பிரதேசங்கள் வெவ்வேறு படைக்கலன்கள் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாடுகளின் கீழ் இருக்கும் நிலையில் ஓர் இணைப்பாட்சி அரசு அமைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன. குர்திஷ் போராளி அமைப்பினர் பெரும் நிதி நெருக்கடியின் கீழ் இருக்கின்ற நிலையில் ஒரு தனிநாட்டுப் பிரகடனம் நிலைமை யை மோசமாக்கும் எனவும் கருதப்படுகின்றது.

ஈராக்கிலும் பிரகடனம் செய்யப் படுமா?
சிரியாவில் உள்ள வைபிஜி/வைபிஜே குர்திஷ் போராளிகளிலும் பார்க்க உறுதியான ஒரு நிழல் அரசை ஈராக்கில் உள்ள பெஷ்மேர்கா என்னும் குர்திஷ் போராளி அமைப்பு நிறுவியுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே ஈராக்கிய அரசியலமைப்பில் அரை இணைப்பாட்சி (semi-federal) அலகு வழங்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய போது குர்திஷ் போராளிகள் தாம் வாழும் பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஏர்பில் நகரை தலைநகராகக் கொண்டு அவர்கள் உலக வர்த்தகத்திலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தமது ஆளுமையை நாளுக்கு அதிகரித்து வருகின்றனர். அவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வார்களா என்ற கேள்வி போய் எப்போது செய்வார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஈராக்கில் குர்திஷ் மக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வதை ஈராக்கும் துருக்கியும் மட்டும் எதிர்க்காது. சவுதி அரேபியா போன்ற சுனி முஸ்லிம் நாடுகளும் கடுமையாக எதிர்ப்புக்காட்டலாம். ஈராக்கில் இருந்து குர்திஷ் மக்கள் பி்ரிந்து சென்றால் அது ஈராக்கில் மக்கள் தொகைக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அங்கு சிறுபான்மையினராக வாழும் சுனி முஸ்லிம்களின் நிலைமை மேலும் வலுவிழக்கச் செய்யப்படும். ஈராக்கில் தனிநாட்டுப் பிரகடனம் செய்வது மட்டும் குர்திஷ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காது. அவர்களிடையே உள்ள இரு பிரிவினர் 1990களில் கடுமையாக மோதிக் கொண்டனர். தற்போது ஒற்றுமையாக உள்ளனர். மீண்டும் அவர்களிடையே உள் மோதல் வெடிக்கலாம். வெளி  வலுக்கள் அதற்குத் தூபம் போடலாம்.

துருக்கியும் இந்தியா போலே
துருக்கி சிரியாவின் தேசிய ஒற்றுமையும் பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்படவேண்டும் எனச் சொன்னது. இதைத்தான் இலங்கை தொடர்பாக இந்தியா அடிக்கடி கூறுவதாகும். ஜெனிவாவில் சிரியப் பிரச்சனை தொடர்பாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஆட்சேபனை தெரிவித்ததால் குர்திஷ் மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.குர்திஷ் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என இரசியா வலியுறுத்தி இருந்தது. அமெரிக்காவுடன் இணைந்து ஐ எஸ் அமைப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்கள் குடியாட்சி ஒன்றியத்தின் போராளிகளுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. அந்த ஏமாற்றத்தின் விளைவாகவும் இணைப்பாட்சிப் பிரகடனம் கருதப் படுகின்றது. குர்திஷ் போராளிகள் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருந்த்தால் பிரடனம் செய சில மணித்தியாளங்களுக்குள் துருக்கியப் படையினர் குர்தீஷ் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. புவிசார் நிலைமைகள் துருக்கிக்குச் சாதாகமாக இருக்கின்றன. இதனால் சிரியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் ஓர் இணைப்பாட்சி அரசாக இருப்பது அவர்களுக்கு துருக்கிக்கு எதிரான அரசுறவியல் (இராசதந்திர) கவசத்தை வழங்குகின்றது. குர்திஷ் தலைவர்களின் கருத்து இப்ப்படி இருந்தது:
  • Syrian Kurds are willing to stay within the country's borders after announcing plans to create a federal region in northern Syria, co-chair of the Syrian Kurdish Democratic Union Party (PYD) Saleh Muslim told Sputnik on Thursday.
குர்திஷ் போராளிகளின் இணைத்தலைவரான சலேஹ் முஸ்லிம் சிரியக் குர்திஷ் மக்கள் இணைப்பாட்சிப் பிரகடனத்தின் பின்னரும்  சிரிய நாட்டின் எல்லைக்குள் இருக்க விரும்புகின்றார்கள்  என்றார்.

ஐக்கிய அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் உள்ள உறவு இன்னும் பல ஆண்டுகள் ஒரு வளர்ச்சி நிலையில் இயங்குவதற்கான சூழ் நிலைதான் காணப்படுகின்றது. குர்திஷ் மக்களின் மோசமான எதிரிகளான துருக்கியர்களுடன் நட்பாக இருக்கும் அமெரிக்காவுடன் குர்திஷ் மக்களின் உறவு எந்த நன்மையையும் இனியும் தரப்போவதில்லை.  ஏற்கனவே ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப் படுவார்கள்.

Monday 21 March 2016

துடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும் -

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமை நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஈரானில் நடந்த இரண்டு தேர்தல்கள் கடந்த 37 ஆண்டுகளில் நடந்த மற்றப் பல தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் மக்கள் அதிக அக்கறை காட்டுவனவாகவும் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட தேர்தால்களாகவும் அமைந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளமன்றத் தேர்தலும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலுமே நடைபெற்றன.
ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர்
5. உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution)
6. ஈரானியப் படைத்துறை

உச்சத் தலவரே உச்சமானவர்
தற்போது உச்சத் தலைவராக இருப்பவர் அலி கமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். காப்பாளர் சபையில் உள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் படைத்தளபதியும் உச்சத் தலைவர் ஆவார். அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.

அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே
தேர்தலில் போட்டியிட வந்த சீர்திருத்தவாதிகளில்பலரை அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution) நிராகரித்திருந்தது. இது வாக்காளர்களை விரக்தியடைய வைத்து பலர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஈரான் ஒரு மக்களாட்சி முறைமையிலான குடியரசு அல்ல என விமர்சிக்கப் படுவது இந்த பாதுகாவலர் சபைக்கு இருக்கும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையினாலாகும். நாட்டின் மொத்த அறிஞர் சபை உறுப்ப்புரிமையான 88இல் 16 தலைநகர் ஈரானுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட முன்வந்த எல்லாப் பெண்களையும் பாதுகாவலர் சபை நிராகரித்திருந்தது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 50பேர் மீண்டும்போட்டியிட அனுமதிக்கப் படவில்லை.

மக்கள் அக்கறை காட்டினர்
55 மில்லியன் வாக்காளர்களில் 34மில்லியன் பேர் வாக்களிப்பில் பங்குபற்றினர். இம்முறை தேர்தல் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கடும் போட்டியாகக் கருதப்படுகின்றது. மூன்றாம் தரப்பினரான மிதவாதிகள் பழமைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக அளவு வாக்காளர்கள்கள் வாக்களித்த ஈரானியத் தேர்தலில் இளையோர் அதிக அக்கறை காட்டியுள்ளனர். ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகள் நீக்கப் பட்ட பின்னர் நடந்த தேர்தல் என்றபடியால் இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஈரானில் முதலீடு செய்யத் துடிக்கும் மேற்கு நாடுகள் ஈரானியத் தேர்தலை அக்கறையுடன் அவதானித்தன. இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் கொடுக்கும் ஆதரவு ஆகியவை ஈரான் மீது மேற்கு நாடுகள் வைக்கும் குற்றச் சாட்டுகளில் முக்கியமானவை. தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அல கொமெனி உடல் நலம் குன்றியிருப்பதால் அவரது இடத்திற்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.  ஈரானிய நகரவாசிகள் ஈரானில் ஒரு சீர்திருத்தம் அவசியம் எனக் கருதுகின்றனர். சிலர் ஈரான் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டனர்.

சீர் திருத்தத் துடிக்கும் ரௌஹானி

2013-ம் ஆண்டு நடந்த ஈரானின் அதிபர் தேர்தலில் ஈரானில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கொள்கையுடைய ஹசன் ரௌஹானி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். அவர் தனது சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாதவகையில் பாராளமன்றத்தில் பழமைவாதிகள் பலர் இடம்பிடித்திருந்தனர். 2016-02-29-ம் திகதி நடந்த ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் பல பழமைவாதிகள் தோல்வியடைந்துள்ளனர். ஈரானில் அரசியல் கட்சிகள் இல்லை. பொதுக் கொள்கையுடைய வேட்பாளார்கள் ஒருமித்து தேர்தல் பரப்புரை செய்வர். கட்சிகள் இல்லாதபடியால் இந்தக் கொள்கையுடைய இத்தனைபேர் வெற்றி பெற்றார்கள் எனச் சொல்ல முடியாது. ஈரானியத் தேர்தலில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றார்கள் என மேற்குலக ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் ஈரானிய பழமைவாதிகளின் ஊடகங்கள் அதைப் பச்சைப் பொய் என்கின்றன. தெஹ்ரான் நகரில் மட்டும் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றனர் என்பதை பழமைவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர். அது வெளிநாட்டுத் தீய வலுக்களுடன் இணைந்து பெற்ற வெற்றி எனவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். நாடாளவிய முடிவுகளில் தாமே வெற்றி பெற்றதாகவும் பழமைவாதிகள் சொல்கின்றனர். நிபுணர்கள் சபையிலும் தாமே பெரும்பான்மை வலுவுடன் இருப்பதாகவும் அவர்கள் முழங்குகின்றனர். சீர்திருத்தவாதிகளிடையே உள்ள மிதவாதிகள் பெரும் சீர்திருத்தவாதிகள் அல்லர். அத்துடன் தீவிர சீர்திருத்தவாதிகளைத் தேர்தலில் போட்டியிட பாதுகாவலர் சபை அனுமதிக்கவுமில்லை. 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் பழமைவாதிகள் 112 இடங்களிலும் சீர்திருத்தவாதிகளும் மையசாரிகளும் 90 இடங்களிலும் ஏனையவர்கள் 29 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக சில மதிப்பீடுகள் சொல்கின்றன. பாராளமன்றத்தில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றாலும் பாராளமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்தச் சட்டமும் பாதுகாவலர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உச்சத்தலைவர் உடன்படார்
உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி சீர்திருத்தவாதிகளிடம் நாட்டை ஓப்படைத்தால் அது தனக்கு தானே வேட்டு வைத்ததாக அமையும் என்பதையும் நன்கறிவர். அதே வேளை அதிபர் ஹசன் ரௌஹானி மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப் பட வேண்டும் என்பதையும் அறிவார். மேற்கு நாடுகளின் முதலீடுகளிலும் பார்க்க சீனாவிடமிருந்து பெரு முதலீட்டை ஈரானல் பெற முடியும்.

ஐக்கிய அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியமைக்கு சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானியின் கைகளை வலுப்படுத்துவதும் ஒரு காரணமாகும். அதனால் ரௌஹானி தொடர்பாகவும் அவரது சீர்திருத்தம் தொடர்பாகவும் உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி மிகவும் கவனமாகவே இருப்பார். ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாகச் செய்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த பலர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்கள். கடந்த பாராளமன்றத்தின் அவைத்தலைவராக இருந்தவரும் அவர்களில் ஒருவராகும். ரௌஹானியின் நண்பரும் முன்னாள் அதிபருமான Akbar Hashemi Rafsanjani தேர்தலில் பெருவெற்றியடைந்துள்ளார்.

வோட்டு உனக்கு வேட்டு என்னிடம்
பாராளமன்றத் தேர்தலில் ஈரானிய மதவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து. அதிபர் ரௌஹானிக்கு உலக அரங்கில் தலையிடி கொடுக்கும் வகையில் ஈரானியப் படைத் துறையினர் எறியியல் ஏவுகணைகளை (ballistic missile) வீசிப் பரிசோதனை செய்தனர். ஈரானுடன் ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இப்படி ஒரு பரிசோதனை செய்யக் கூடாது என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆட்சேபனை தெரிவித்தன. அவை மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என்கின்றன. பொருளாதாரத் தடை நீக்கத்தால் மக்கள் மத்தியி புகழ் பெற்ற அதிபர் ரௌஹானிக்கும் அதற்காக அவரை ஆதரிக்கும் மக்களுக்கும் ஈரானிய மதவாதிகளும் படைத் துறையினரும் தம்மிடம் தான் படைவலு இருக்கின்றது என்ற செய்தியை ஏவுகணைப் பரிசோதனை மூலம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைகான குழுவின் தலைவர்

மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.
பெரும் எரிபொருள் இருப்பும் பலதரப்பட்ட உற்பத்தித் துறையும் நன்கு கல்வியறிவு பெற்ற மக்களும் ஈரானை ஒரு சிறந்த முதலீட்டுக் களமாகச் சுட்டி நிற்கின்றன. ஈரானின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் 30 வயதிலும் குறைந்தோரே. தற்போது உள்ள உலக வயோதிபர் பிரச்சனையில் இது ஈரானுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதிபர் ரௌஹானியால் ஈரானைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்க சில சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...