Wednesday 23 March 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் பின்னணி

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் "தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் உடன் பிறப்புக்களை மாவீரர்களாக ஏற்றுக் கொள்ளும்படி அல்லாவை வேண்டுகின்றோம். அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "What is coming is worse and more bitter, Allah permitting. "Thanks be to Allah for his accuracy and success, and we ask Allah to accept our brothers among the martyrs."
 லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பிரஸல்ஸ் நகரக் குண்டுத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதனது அறிக்கையில் "No place in the world is safe from its evil and crimes, crimes that are derived from its black venom towards humanity,"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரி ஒருவரை பெல்ஜியக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 24 வயதான நஜீம் லாஷ்ரௌனி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். ஆனால் கைது செய்யப்பட்டவரின் பெயர் தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வருகின்றன. 

The Anti-Mediaவின் இணயத் தளத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அறியப்படு முன்னரே இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவே ஏற்கவேண்டும் என Claire Bernish  என்பவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தீவிரவாதத்தின் உற்பத்திக்கு ஏகாதிபத்தியமே காரணம் என அடித்துச் சொல்கின்றார்:-
  • Indeed, blaming an entire religion for the actions of a few falsely claiming they follow its teachings might be precisely what the ignominious war machine of U.S. imperialism needs. In fact, modern-day terrorism exists because of the actions of a specific religion — and it isn’t Islam. Imperialism, and its roots planted firmly in statism, inarguably create, foster, and perpetuate terrorism at an alarming rate. An active military campaign and overarching surveillance program ostensibly embarked upon to demolish terrorism — anywhere on the planet — instead manufacture terrorism at an increasingly rapid rate.

சல்லடை போடப்பட்ட பிரஸல்ஸ்
பிரஸல்ஸ் நகரிலேயே நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பின தலைமையமும் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பெல்ஜியத்தினதும் தலைநகர் பிரஸல்ஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிர்ந்தது. பெல்ஜியத்தின் உளவுத்துறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பல இடங்களில் செய்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கான திட்டம் பிரஸல்ஸில் வைத்தே தீட்டப்பட்டது. பிரஸல்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளை உருவாக்கும் தளமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடியே ஒரு இலட்சம் மக்கள் வாழும் பெல்ஜியத்தில் பத்து இலட்சம் மக்கள் பிரஸல்ஸில் வாழ்கின்றனர். பாரிஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரஸல்ஸ் நகர் மூடப்பட்டு சல்லடை போட்டு தீவிரவாதிகள் தேடிக் கைது செய்யப்ட்டனர்.

தற்கொடைத் தாக்குதல்
பிரஸல்ஸ் பன்னாட்டு விமான நிலையமான ஜாவுன்டெம் (Zaventem) விமான நிலையத்தி புறப்பாடு முனையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகத்திற்கு அண்மையில் உள்ள பிரஸல்ஸ் நிலக்கீழ் சுரங்க தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கண்காணிப்பு ஓளிப்பதிவுகள் மூலம் ஒரு தாக்குதலாளி இனம் காணப்பட்டு அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மூவர் அப்பதிவில் உள்ளனர் அவர்களில் இருவர்  தற்கொடையாளிகள் என்றும் ஒருவர் தப்பி விட்டார் என்றும்  சொல்லப்படுகின்றது. இருவர் Khalid El Bakraoui, Brahim El Bakraoui என்னும் உடன் பிறப்புக்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு குண்டு வெடிக்காத நிலையில் வீடு ஒன்றில் இருந்து வேதியியல் பதார்த்தங்கள் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசின் கொடி ஆகியவற்றுடன் கண்டெடுக்கப் பட்டுள்ளது. புறப்பாடு முனையத்தில் காலை எட்டு மணியளவிலும் தொடருந்து நிலையத்தில் காலை 9.11 மணியளவிலும் குண்டுகள் வெடித்தன.

பாரிஸ் தாக்குதலின் பின்னர் உயிருடன் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) கைது செய்யப் பட்டு நான்கு நாட்களின் பின்னர் பிரஸல்ஸ் தாக்குதல் நடந்துள்ளது.  பாரிஸ் நகரத்தில் 2015 நவம்பர் மாதம் 13-ம் திகதி நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் காற்பந்தாட்ட மைதானத்திற்குள் குண்டு வெடிக்க வைக்கச் சென்ற சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) வாசலில் இருந்த கடுமையான   சோதனை காரணமாக உட்செல்ல முடியாமல் குண்டை வெடிக்க வைக்காமல் பிரஸல்ஸிற்குத் தப்பிச் சென்றார். பிரஸல்ஸ் குண்டு வெடிப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் தனது தாயாரின் வீட்டிற்கு சில மீட்டர் தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைது செய்யப் பட்டார். இவர் கைது செய்யப்பட்ட மொலன்பீக் பகுதி அதிக அளவான இஸ்லாமியர்கள் வாழும் பிரஸல்ஸ் நகரின் ஓர் ஏழ்மையான பகுதியாகும். சல்லா அப்டெஸ்லாம் (Salah Abdeslam) தான் முன்பு பாவித்த கைப்பேசியை  மீளவும் செயற்படுத்திப் பாவிக்கத் தொடங்கியமையால் அவரின் நடமாட்டங்களை அவதானிக்கக் கூடிய நிலை உருவானது. பெல்ஜிய சட்டப்படி இரவு நேரத்தில் கண்டபடி வீடு புகுந்து சோதனை செய்ய முடியாது. இதனால் அவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் அவர் கண்காணிக்கப் பட்டார். 

பிரஸல்ஸ் நகரின் மொலன்பீக் பகுதியில் கைது செய்யப் பட்ட 26 வயதான சல்லா அப்டெஸ்லாம் ஒரு வழங்கல் ஏற்பாடு நிபுணராவர் (logistics specialist). ஒரு தாக்குதலுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்வதில் அவர் வல்லவர். பாரிஸ் நகரத் தாக்குதலுக்குத் தேவையான பொருட்கள் போக்குவரத்து, தங்குமிடம்,  இவரே ஏற்பாடு செய்திருந்தார். பாரிஸ் தாக்குதல் மேற்கு நாடுகள் எதிர்பார்த்திருந்ததிலும் பார்க்க தீவிரவாதிகள் தொழில்நுட்ப ரீதியில் நவீனமடைந்திருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தது.

மற்ற நாடுகளிலும் பார்க்க அதிகமான போராளிகள் பெல்ஜியத்தில் இருந்து சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து மேற்காசியாவில் போர் செய்கின்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பெல்ஜியம் திரும்பியுள்ளனர்.

TATP வகைக் குண்டுகள்
2004-ம் ஆண்டு ஸ்பானிய நகர் மட்ரீட்டில் தொடருந்தில் செய்யப்பட்ட குண்டுத் தாக்குதலில் 191 பேர் கொல்லப்பட்டனர். இலண்டனில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் திகதி 52 பேர் கொல்லப்பட்டனர். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் திகதி பாரிஸில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 130பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் வெடித்த குண்டுகளில் triacetone triperoxide, or TATP பாவிக்கப்பட்டது. இக்குண்டுகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு உருவாக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களில் வெடித்த குண்டுகள் TATPஐக் கொண்டு உருவாக்கப் பட்டவையே. இவை இலகுவாக உருவாக்கக் கூடியவை என்றாலும் இலகுவில் வெடிக்கக் கூடியவை என்பதால் இவற்றைக் கையாள சிறந்த பயிற்ச்சி தேவை. 2009-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் அல் கெய்தாவின் ஜிஜி என்பவர் முதன்முறையாக தலை முடிக்கு மை பூசப்பாவிக்கப் படும் வெள்ளையாக்கிகளில் (hair bleach) இருந்து TATP குண்டுகளை உருவாக்கினார்.

நெருக்கடியில் இருக்கும் ஐ எஸ்
உலகெங்கும் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிலும் சிரியாவிலும் தமது நிலப்பரப்பில் 20 விழுக்காட்டை இழந்துள்ளனர். அவர்கள் தமது இக்கட்டான நிலையில் இருந்து கொண்டு செய்யவிருக்கும் தாக்குதல்களுக்கு பிரஸல்ஸ் தாக்குதல்கள் முன்னோடியாக அமையலாம்.  இதனால்தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் வெளியிட்ட அறிக்கையில் அல்லா தயை கூர்ந்தால் இனி வருபவை மோசமானவையாகவும் கடுமையானவையாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். சல்லா அப்டெஸ்லாமின் கைதுக்கான பழிவாங்கல் தான் பிரஸல்ஸ் குண்டு வெடிப்பு என்ற கருத்து பரவலாக முன்வைக்கப் பட்டபோதிலும் 4 நாட்களுக்குள் இப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது.ஒரு தீவிரவாத அமைப்புக்கு அது செய்யும் தாக்குதல்களின் வெற்றிகளே அதன் இருப்பை உறுதி செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்க்கும்.

அமெரிக்காவில் வேறு
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் உடனடியாக வேலை செய்ய அனுமதிக்கப் படுகின்றார்கள். அதனால் அவர்கள் இலகுவாக மற்ற சமூகத்தினருடன் இணைந்து கொள்கின்றார்கள். அமெரிக்காவில் பல இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு முறியடிக்கபடுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப் படுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. அவர்களுக்கான சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப் பட்டுக் கொண்டே போகின்றன. குடியேறுபவர்களை மக்களும் காவற்துறையினரும் தீவீரவாதிகளாகப் பார்ப்பது அதிகரித்துக் கொண்டே போகின்றது. பெல்ஜியத்தில் இருந்து சிரியா சென்று ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து போராடியவர்களில் நூறு பேர் இப்போது மீண்டும் பெல்ஜியம் திரும்பியுள்ளனர். இவர்களால் ஐரோப்பாவின் பல நகரங்களில் தாக்குதல்கள் நடத்த முடியும். அமெரிக்கா பல ஐரோப்பாவின் உளவுத் துறையினர் ஐரோப்பிய நாடுகளின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றன என எட்வேர்ட் ஸ்நோடன் அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க உளவுத் துறையினர் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியது அல்லது நிறுத்தியது திவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது என சில அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 எல்லையில்லாத் தொல்லை தரும் Sykes-Picot எல்லைகள்
 பெல்ஜியத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் பலவிதத்திலும் ஓரம் கட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வேலைவாய்ப்பு, சமூகநலக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் அவர்கள் வஞ்சிக்கப் படுகின்றார்கள். இது பலரை விரக்தியடையச் செய்து தீவிரவாதிகளாக மாற்றுகின்றது.பிரஸல்ஸ் நகரத்தின் செல்வர்கள்  வாழும் பகுதியையும் ஏழைகள் வாழும் பகுதியையும் ஒரு கால்வாய் பிரிக்கின்றது. ஏழைகள் வாழும் பகுதியில் மொலன்பீக்கும் அடக்கம். அங்கு பல குற்றச் செயல்கள் நடக்கின்றன. விமான நிலையக் குண்டு வெடிப்பில் பங்கு பற்றியதாகக்  கருதப்படும் Khalid El Bakraoui, Brahim El Bakraouiஆகிய  உடன் பிறப்புக்கள் இதுவரை குற்றச் செயல்கள் புரிந்தமைக்காகவே தேடப்பட்டு வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகளாக பெல்ஜியக் காவற்துறையினாரால் கருதப்படவில்லை. இது போன்ற காரணங்களுக்காக பெல்ஜிய உளவுத்   துறை திறமையற்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. குண்டு வெடிப்புக்களின் காரணங்கள் என்று தேடிப் போனால் முதலாவாது   காரணம் ஓரம் கட்டப்பட்ட இஸ்லமியர்கள். இரண்டாவது காரணம் பலஸ்த்தீனம், ஆப்கானிஸ்த்தான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமையின்மை. மூன்றாவது காரணம் மேற்காசியாவில் பல்வேற்பட்ட இனக் குழுமங்களை தமது ஆட்சியின் கீழ் அடக்கி வைத்திருந்த சதாம் ஹுசேய்ன், மும்மர் கடாஃப் போன்றோர் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டமையும் அவர்களுக்குப் பதிலாக நீதியான ஆட்சி நிலைநாட்டப்படாமையும். மூல காரணம் என்று பார்த்தோமானால் முதலாம் உலகப் போரின் பின்னர் ஒரு இஸ்லாமிய வல்லரசு உருவாகக் கூடாது என்ற கபட நோக்கத்துடன் லெபனான், சிரியா, ஈராக், லிபியா, அல்ஜீரியா, மாலி போன்ற நாடுகளின் எல்லைகள் Sykes-Picot எல்லைகள் என்னும் பெயரில் வரையப்பட்டன. இனங்களின் பரம்பல்களைச் சரியாகக் கருத்தில் கொண்டு இந்த எல்லைகள் மீள் வரையப்படாவிட்டால் இஸ்லாமியத் தீவிரவாதம் தொடரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...