Friday 19 February 2016

பகடைக் காய்களாக இருக்கும் குர்திஷ் மக்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்




சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் போரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக காத்திரமான தாக்குதல் செய்யக் கூடியவர்களாகவும் கணிசமான வெற்றியை ஈட்டியவர்களாகவும் குர்திஷ் போராளி அமைபினரே இருக்கின்றனர். ஐ எஸ் அமைப்பினர் இரண்டு வகைகளில் குர்திஷ் போராளிகளுக்கு அஞ்சுகின்றனர். ஒன்று அவர்கள் தீரமிக்க போராளிகள். மற்றது அவர்களின் பெண் போராளிகள் ஆண்களிலும் பார்க்க வீரமாகப் போராடுகின்றார்கள். ஒரு பெண்ணால் கொல்லப்படும் புனிதப் போராளி நரகத்திற்குப் போவன் என ஐ எஸ் அமைப்பினர் உறுதியாக நம்புகின்றார்கள்.

நிலம் பிடிக்கும் குர்துகள்
இரசியப் படைகளின் உதவியுடன் அலெப்பே பிராந்தியத்தில் சிரியப் படைகள் பெரும் தக்குதல்கள் செய்யும் போது குர்திஷ் போராளிகள் தமக்கென சில நிலப்பரப்புக்களைக் கைப்பற்றினர். இரசியப் படைகளினதும் சிரியப் படைகளினதும் நோக்கம் துருக்கிய எல்லையில் இருந்து அமெரிக்க சார்பு போராளிக் குழுக்களைத் துண்டிப்பதாகும். இதனால் அவர்களுக்குத் துருக்கியில் இருந்தும் துருக்கியூடாகவும் கிடைக்கும் விநியோகங்களைத் தடுக்க முடியும். இரசியப் படைகள் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் மற்றக் கிளர்ச்சிக்காரரிகளிடமிருந்து நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதை இரசியா விரும்புகின்றது அல்லது ஆட்சேபனை இன்றி இருக்கின்றது எனச் சொல்லலாம். 

ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழ்கின்றார்கள். அவர்கள்து போராட்டம் பல இனக்கொலைகளுக்கு மத்தியில் ஒரு நூற்றாண்டாகத் தொடர்கின்றது. சிரியாவில் அவர்களுக்கு என்று குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. சிரியாவில் அவர்கள் வாழும் பிரதேசத்தில் 2.5பில்லியன் பீப்பாய் எரிபொருள் உண்டு ஆனால் அதனால் கிடைக்கும் வருமானத்தில் எதுவும் அவர்களுக்குப் பயன் தருவதில்லை. துருக்கியில் இரண்டு கோடி குர்திஷ் மக்கள் வாழ்கின்றனர். முதலில் அவர்கள் தனிநாடு கோரியும் பின்னர் சுயாட்சி வேண்டியும் போராட்டம் செய்கின்றனர்.

குர்திஷ் மக்களைப் பாதுகாப்பதாக இரசியா உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சிரிய எல்லையைத் தாண்டிச் சென்று துருக்கி தாக்குதல்கள் நடத்தினால் இரசியாவுடன் ஒரு பெரும் போரைத் துருக்கி எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சிரியாவில் உள்ள குர்திஷ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அப்படி ஒரு உத்தரவாதம் குர்திஷ் மக்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறு. ஆனால் குர்திஷ் மக்களை மோசமான எதிரிகளாகப் பார்க்கும் சிரிய ஆட்சியாளர்களுக்கும் அலவைற் இனக்குழுமத்தினருக்கும் தற்போது இரசியா மிக நெருங்க்கிய நட்பைப் பேணுகின்றது. எதிரியின் நண்பனின் உத்தரவாதத்தை எந்த அளவிற்கு நம்பலாம்? இரசியாவைப் பொறுத்தவரை குர்திஷ் மக்களிலும் பார்க்க அரபு மொழி பேசும் அலவைற் இனத்தினர் அதைக கேந்திரோபாய முக்கியத்துவ பெற்றவர்கள். 

குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையான போதெல்லாம் குர்திஸ் மக்களின் போராட்டத்திற்கு உதவுபோல் பாசாங்கு காட்டிக் கொண்டு அவர்களைத் தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வைப்பதும் பின்னர் அவர்களைக் கைவிடுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. குர்திஸ் மக்களும் தமிழர்களைப் போலவே சரித்திரத்தில் இருந்து கற்றுக் கொள்வதில்லை.

ஓர் இனத்திற்கு அந்நியர்கள் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொடுத்து வலுமிக்க அல்லது எண்ணிக்கை அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட எதிரிக்கு எதிராகப் போராட வைப்பது ஆபத்து மிக்கது. அது இனக்கொலையிலேயே போய் முடியும்.

1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது.

1967-ம் ஆண்டு ஈராக்கில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தை விரிவாக்க முயன்ற போது அவருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியது. அப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஈரானுடாக இது நடந்தது. 1972-ம் ஆண்டு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்ட ரிச்சட் நிக்சனும் ஹென்றி கிஸ்ஸிங்கரும் குர்திஷ் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்ற உறுதி மொழியையும் வழங்கினர். ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஈரானின் அமெரிக்காவின் ஒரு மோசமான எதிரியாக மாறிய பின்னர் ஈரானால் ஈராக்கிற்கு ஆபத்து என்ற எண்ணம் ஈராக்கில் திட்டமிட்டு விதைக்கபட்டது. இதனால் ஈராக் ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை வளர்த்துக் கொண்டது. ஈரான் ஈராக் போர் மூண்டது. 1975-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட போது அமெரிக்கா தமக்கு உதவும் என குர்திஷ் மக்கள் நம்பி ஏமாந்தனர். ஈராக்கிய குர்திஷ் மக்களின் தலைவர் Mullah Mustapha Brazani  ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள் அவரது செவியில் ஏறவில்லை.

1991-ம் ஆண்டு சதாம் ஹுசேய்ன் குவைத்தை ஆக்கிரமித்த போது சிஐஏ சவுதி அரேபியாவில் இருந்து செய்யப் பட்ட ஒரு வானொலி மூலம் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. அவர்களுக்கு எதிராக சதாம் தாக்குதல் செய்த போது அவர்களுக்கு என ஒரு பாதுகாப்பு வலயம் உருவாக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அப்பாதுகாப்பு வலயத்தில் வைத்தே அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு அமெரிக்கா சதாம் ஹுசேய்ன் பேரழிவு விளைவிக்கும் படைக்கலனகளை வைத்திருக்கின்றார் என்ற போர்வையில் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போதும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ குர்திஷ் மக்களையும் சதாமிற்கு எதிராகப் போர் செய்ய வேண்டியது. மீண்டும் குர்திஷ் மக்கள் அமெரிக்காவுடன் இணைந்து போராடினார்கள். மீண்டும் பெரிய அளவில் இனக்கொலைக்கு உள்ளானார்கள். 2008-ம் ஆண்டு துருக்கியப் படைகள் ஈராக்கின் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களை வேட்டையாடிய போது குர்திஷ் போராளிகள் தொடர்பாகவும் அவர்களது நிலைகள் தொடர்பாகவும் தேவையான தகவல்களை சிஐஏ துருக்கிக்கு வழங்கியது. .

குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK) - இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா - இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.

மீண்டும் குர்திஷ் மக்களும் தமிழர்கள் போலே
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியப் பத்திரிகையான தி இண்டிப்பெண்டென்றில் ஒவ்வொரு பிராந்திய அரசுகளும் குர்திஷ் மக்களுக்குத் துரோகமிழைத்தன என்னும் தலைப்பில் ரொபேர்ட் பிஸ்க் எழுதிய கட்டுரையின் முதல் வரி "குர்திஷ் மக்கள் துரோகம் இழைக்கப்படுவதற்குப் பிறந்தவர்கள்" என அமைந்தது.

Syrian Kurdish Democratic Union Party (PYD)இன் படைப்பிரிவான YPG அலேப்பே நகரில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றுகின்றார்கள் என்பதால் துருக்கி 2016-ம் பெப்ரவரி 16-ம் திகதி அவர்களின் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. மறுதினம் துருக்கியில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன அது குர்திஷ் "பயங்கரவாதிகளின்" செயல் என்றார் துருக்கியத் தலைமை அமைச்சர். ஈழ மக்களின் போராட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் குண்டு வெடிப்பை யார் செய்திருப்பார்கள் என்பதை இலகுவாக ஊகித்து அறிந்து கொள்வார்கள். ஓர் இனம் இன்னொரு நாட்டினுள் தனக்கு என ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கும் போது இன்னும் ஒரு நாடு ஏன் இப்படி நடந்து கொள்கின்றது என்பதற்கான விடையையும் ஈழப் போராட்டத்தையும் அமைதிப் படையின் செயற்பாட்டையும் அறிந்தவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள்.

துருக்கியின் Indecent proposals)
சிரியக் குர்திஷ் போராளிகளுடன் சமாதானமாகப் போக துருக்கி இரண்டு அசிங்கமான முன்மொழிவுகளைச்  (Indecent proposals) செய்துள்ளது: 1 குர்திஷ் போராளிகள் சிரிய அதிபர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து விரட்ட போர் செய்ய வேண்டும். 2 தங்களுக்கு சுயாட்சி கோருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.  தற்போது குர்திஷ் மக்கள் சிரியாவில் கொபானி, ஜஜீரா ஆகிய நகரங்களில் நிழல் அரசுகளை நடத்தி வருகின்றார்கள். இரண்டையும் இணைக்கும் பிரதேசம் ஐ எஸ் போராளிகளிடமுள்ளது. அதைக் கைப்பற்றுவதே அவர்களின் தற்போதைய முக்கிய நோக்கமாகு. ஆனால் இந்தப் பிரதேசம் துருக்கியுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பொறுப்பாகும்
தற்போது உள்ள சூழ்நிலையில் துருக்கிக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தைச் செய்து வைக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். அமெரிக்காவுடன் குர்திஷ் மக்கள் இணைந்து போராடுவத்தால் அது அமெரிக்காவின் பொறுப்பாகும். ஆனால் அமெரிக்கா யாரையும் நண்பனாகக் கருதுவதில்லை 1970இல் அமெரிக்கா ஈராக்கில் குர்திஷ் மக்களின் கால்களை வாரியபோது அதன் நியாயத் தன்மையைப் பற்றி கேள்வி கேட்ட போது ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன பதில்: இரகசிய நிலக்கீழ் படை நடவடிக்கை வேறு மதப்பரப்பு (missionary) நடவடிக்கைகள் வேறு என்றார். தற்போது இரசியா குர்திஷ் போராளிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்கா அவ்வப் போது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றது.  இறுதியில் அவர்கள் பலிக்கடா ஆக்கப்படுவார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...