Saturday 12 December 2015

சிரியாவில் ஈரானின் பின்வாங்கலும் இரசியாவின் மாற்றமும்

சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corpsஇன் சிறப்புப்  படையணியான Quad Forcesஐச் சேர்ந்த 7000 பேர் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாகப் போர் புரியவும் ஆலோசனைகள் வழ்ங்கவும் அனுப்பப்பட்டனர். தற்போது அவர்களின் தொகை 700ஆகக் குறைந்துவிட்ட்டது.

சுனி இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட சிரியாவில் சியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத் பதவியில் இருக்கின்றார். அவரது உதவியுடன் சியா முஸ்லிம் நாடான ஈரான் லெபனானில் உள்ள சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு தொடர்ந்து உதவி செய்கின்றது. அசாத்தின் ஆட்சி அகற்றப்பட்டால் அது ஈரானுக்கு ஒரு கேந்திரோபாய இழப்பாகும். இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஈரானுக்கு சிரியாவில் ஈரானுக்கு ஆதரவான ஆட்சி இருப்பது அவசியமாகின்றது. இந்த கேந்திரோபாய அவசியம் மதவாத ஈரானிய ஆட்சியாளர்களையும் மதசார்பற்ற ஆட்சி செய்து வரும் அல் அசாத்தையும் இணைத்து வைத்துள்ளது.


2011-ம் ஆண்டில் அரபு வசந்தத்துடன் உருவான அசத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையினராவர்கள் சுனி இஸ்லாமியர்கள் என்பதால் மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட கிளர்ச்சி சிய-சுனி இஸ்லாமியர்களிடையான மோதலாக மாறிவிட்டது. சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என சவுதி அரோபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் ஆகிய நாடுகள் முயல்கின்றன.


சிரியாவில் இரசிய விமானங்கள் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force of the Revolutionary Guard Corps சிரியப் போர் முனையில் பெரும் ஈடுப்பாடு காட்டுகின்றது. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிரியப் படைகள் பெரும் ஆளணி இழப்புக்களால் நிலை குலைந்து போயிருந்தன. அவர்களது உள்ள வலுவும் குறைந்து போயிருந்தது. இந்த நிலையிலேயே ஈரானும் இரசியாவும் சிரியாவில் அதிக ஈடுபாடுகள் காட்டின. ஈரானியப் படையினரின் சிரிய நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான தகவல்களை ஈரானிய அரசு தன் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.




ஈரானியப் படைகளுக்கு அண்மைக்காலங்களாக சிரியப் போர் முனையில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. ஈரானில் இருக்கும் கடுமையான செய்திக் கட்டுப்பாடுகளால் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் ஈரானியப் படையினருக்கு நடக்கும் இறுதிக் கிரியைகளில் இருந்தும் உச்சத்தலைவர் கொமெய்னியின் இரங்கற் செய்திகளில் இருந்தும் ஈரானியப் படைகளுக்கு ஏற்படும் உயிழப்புக்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கும் போது 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து 67ஈரானியப் படைகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகின்ற்து. இது முன்னைய மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளிலும் பார்க்க அதிகமானதாகவும் இருக்கின்றது.

அமெரிக்க வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி 2015-டிசம்பர்  -15-ம் திகதி செவ்வாய்க் கிழமை இரசியா சென்று சிரியா தொடர்பாகா இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வேற்பாடுகள் மற்றும் ஒற்றுமைஇ தொடர்பாக ஆராயவிருக்கின்றார்.

சிரிய அரச படைகள்  போர் புரிந்து கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றாத நிலையில் அவர்களுடன் ஒரு பேச்சு வார்த்தையின் மூலம்  ஹொம்ஸ் நகரை சிரிய அரசு பெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக Free Syrian Army உட்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் செய்வதில்லை என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. இதை உறுதி செய்யும் முகமாக Free Syrian Armyயின் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு இரசியா விமானக் குண்டு வீச்சு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் இரசியா படைக்கலன்களும் வெடிபொருட்களும் Free Syrian Armyக்கு வழங்கப் போவதாக புட்டீன் அறிவித்துள்ளார்.  ஹொம்ஸ் நகரில் இரசியா ஒரு விமானத் தளதையும் உருவாக்கவுள்ளது. Free Syrian Army போராளிகளை இதுவரை பயங்கரவாதிகள் என அழைத்து வந்த இரசியா இப்போது அவர்களுடன் இணைந்து ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடுவது ஒரு திருப்பு முனையாகும்.

Tuesday 8 December 2015

இஸ்லாமிய அரசு அமைப்பின் தசாவதாராம்.

ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அதில் பதினையாயிரம் பேர் 90இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து போய் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்கள். அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பு தற்போது சிரியாவின் கிழக்குப் பகுதியிலும் ஈராக்கின் மேற்குப் பகுதியிலும் பெரு நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

வடிவங்களைமாற்றிக் கொண்டிருக்கும் ஐ எஸ்

முதல் அவதாரம் அல் கெய்தாவின் கிளை:
2003-ம் ஆண்டு சதாம் {ஹசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன.  அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவியினால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது.  இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது.

இரண்டாவது அவதாரம் ஐ எஸ் ஐ எஸ்:
ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது.  இஸ்லாமிய முறைப்படியான அரசு ஒன்றை தாம் நிறுவுவதாக அவர்கள் பிரகடனப் படுத்தினர். அல் கெய்தா அமெரிக்காவை ஒழித்துக் கட்டிய பின்னர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடையது. ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய மார்க்கப் படி ஆட்சியை நிறுவி அதன் மூலம் அமெரிக்காவை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கூறுகின்றது. இஸ்லாமிய அரசை உருவாக்கியதாக ஐ எஸ் அமைப்பு அறிவித்த பின்னர் உலகெங்கும் இருந்தும் பல இளையோர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.

மூன்றாவது அவதாரம் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்:
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு  பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது.

நான்காம் அவதாரம்: அல் கெய்தாவிற்கு எதிரான அமைப்பு
சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இதனால் சிரிய உள்நாட்டுப் போர் ஒரு மும்முனைப் போராக மாறியது.

ஐந்தாம் அவதாரம்: மரபுப் படையணி
சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.  ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஆறாவது அவதாரம்: நிதிவளமிக்க அமைப்பு
ஈராக்கில் ஐ எஸ் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து பெரும் நிதியை அவர்கள் வங்கிகளில் இருந்தும் வேறு நிறுவனங்களில் இருந்தும் தமதாக்கிக் கொண்டனர். சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களும் அவர்கள் வசமானது. மாதம் ஒன்றிற்கு நாற்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் வருமானமாகப் பெறுகின்றார்கள். சிரிய அரச படைகள் கூட அவர்களிடம் இருந்தே தமக்குத் தேவையான எரிபொருளைப் பெறுகின்றன. இதில் முப்பது மில்லியன் அமைப்பிற்காகப் போர் புரிபவர்களுக்கும் பணி புரிபவர்களுக்கும் ஊதியமாக வழங்கப் படுகின்றது.

ஏழாவது (ஐயப்படும்) அவதாரம்; இஸ்ரேலிய உளவாளிகள்
ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்தர் அல் பக்தாதி ஒரு யூதப் பெற்றோர்க்குப் பிறந்தவர் என்றும் அவரது உண்மையான பெயர் எலியட் சைமன் என்றும் அமெரிக்காவில் இருந்து உளவு இரகசியங்களுடன் இரசியாவிற்குத் தப்பிச் சென்றவரான எட்வேர்ட் ஸ்நோடன் தெரிவித்ததாகச் சில செய்திகள் தெரிவித்தன. ஈரனிய உளவுத் துறையும் இதையே நிழற்பட ஆதாரங்களுடன் தெரிவித்தது. கலிபா அரசர் என அழைக்கப்படும் அபு பக்தாதி என்னும் எலியட் சைமன் அரபு பிரதேசங்களைக் கைப்பற்றி பின்னர் அதை இஸ்ரேலுக்குக் கையளித்து ஒரு அகன்ற யூத அரசை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப் படுகின்றது. பலஸ்த்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ ஐ எஸ் அமைப்புத் துணை போவதில்லை.
   
எட்டாவது அவதாரம்: இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைக்களம்
அல் கெய்தா அமைப்பு போராளிகளைப் பயிற்றுவித்து மேற்கு நாடுகளுக்கு தாக்குதல்கள் செய்ய அனுப்பும் கொள்கையைக் கொண்டது. ஆனால் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடுடையவர்களை தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அழைத்து வைத்துள்ளது. இது மேற்கு நாடுகளில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை அகற்றிச் சுத்தப் படுத்தியுள்ளது. அத்துடன் அத்தனை பேரும் விமானக் குண்டு வீச்சுக்களால் கொல்லப் படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒன்பதாவது அவதாரம்: பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள்.
ஈராக்கிலும் சிரியாவிலும் அதிக கவனம் செலுத்தி வந்த ஐ எஸ் அமைப்பு திடீரென இரசியப் பயணிகள் விமானத்தை வானில் வைத்துக் குண்டு வைத்து தகர்த்தும் லெபனானிலும் பிரான்ஸ்லும் தீவிரவாதத் தாக்குதல்களை நடாத்தியும் உலகை உலுப்பியது. அது போதாது என ஐக்கிய அமெரிக்காவிலும் ஓர் இளம் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களைக் கொன்றவர்கள் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என நம்பப்படுகின்றது.

பத்தாவது அவதாரம்: உலகெங்கும் ஐ எஸ்
தற்போது ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையில் அவர்களால் உலகெங்கும் உள்ள பல நாடுகளிற்குத் தப்பிச்செல்ல முடியும். துருக்கியில் அவர்களுக்கு பேராதரவு உண்டு. பாரிஸ் குண்டு வெடிப்பின் பின்னர் துருக்கியில் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நடந்த நட்புக் காற்பந்தாட்டப் போட்டியின் போது பாரிஸில் கொல்லப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய போது மைதானத்தில் இருந்த பலரும் கூச்சலிட்டும் ஐ எஸ்ஸிற்கு ஆதரவாக அல்லாஹு அக்பர் என்று குலரெழுப்பியும் குழப்பம் விளைவித்தனர். துருக்கியினூடாக ஐ எஸ் அமைப்பினரால் தப்பி பல நாடுகளுக்குச் செல்ல முடியும்.

நெரிசலில் தப்பும் ஐ எஸ் அமைப்பு

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பினருக்கு ஒன்றுடன் ஒன்று பல் வேறு வகைகளில் முரண்படும் பல தரப்பினர் தாக்குதல் நடத்துகின்றார்கள். சிரிய அரச படைகளுக்கு எதிராக நூற்றிற்கு மேற்பட்ட அமைப்புக்கள் போராடுகின்றன. ஒரு புறம் சிரிய அரச படைகள், இரசியப் படைகள், ஈரானியப் படைகள், ஹிஸ்புல்லா அமப்பு ஆகியன ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன. இரசிய விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகச் செய்வதிலும் பார்க்க மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவும் சிரிய அரச படைகளுக்கு எதிராகவும் செயற்படும் அமைப்புக்களுக்கு எதிராகவே அதிக தாக்குதல்களைச் செய்கின்றன. துருக்கியப் படைகள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் செய்வதிலும் பார்க்க குர்திஷ் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். இரசியா குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குர்திஷ் போராளி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றது. சிரியாவில் வாழும் துருக்கியர்களின் போராளி அமைப்பு மீது இரசியா தாக்குதல் செய்வது துருக்கியை ஆத்திரப் படுத்தி அது இரசிய விமானத்தைச் சுட்டு விழுத்தியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்துவதை விட்டு ஒன்றின் மீது ஒன்று சேறு வீசிக் கொண்டிருக்கின்றன. மேற்காசியாவிலோ வட ஆபிரிக்காவிலோ ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் இறங்குவது பிரான்ஸ்தான். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

அமெரிக்கா மேலும் ஐம்பது சிறப்புப் படையினரை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3400 அமெரிக்கப் படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுரை வழங்க அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்புப் படையினர் சிறு குழுக்களாகச் சென்று தெரிவு செய்யப் பட்ட இலக்குகள் மீது, தெரிவு செய்யப் பட்ட ஐ எஸ் தலைவர்கள் மீது நன்கு திட்ட மிட்ட துணிகரத் தாக்குதல்கள் செய்வர். . ஆனால் டிசம்பர் முதலாம் திகதி வெளிவந்த வாஷிங்டன் போஸ்ற் தினசரியில் பல ஈராக்கியர்கள் அமெரிக்கா ஐ எஸ் அமைப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக நம்புகின்றார்கள். பலர் அமெரிக்க உழங்கு வானூர்திகள் ஐ எஸ் அமைப்பினருக்கு படைக்கலன்களும் நீர்ப் போத்தல்களும் வழங்குவதை நேரில் கண்டதாகவும் வாஷிங்டன் போஸ்ற் தெரிவித்துள்ளது. ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்லும் பார ஊர்திகளை அமெரிக்காவால் இலகுவாக விமானத் தாக்குதல் மூலம் அழிக்க முடியும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை அமெரிக்கா செய்யவில்லை. இப்போது அந்தப் பார ஊர்திகளுக்கு எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் வீசி அதன் ஓட்டுனர்களைத் தப்பி ஓடச் சொல்லி விட்டுத் தாக்குதல் செய்கின்றன. அமெரிக்காவின் நட்பு நாட்டுக் குடிமக்களைக் கொல்லாமல் இருக்கவே இப்படி அமெரிக்கா செய்கின்றதாம்.

இதுவரை காலமும் பிரித்தானியா ஈராக்கில் மட்டும் ஐ எஸ் அமைபினருக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதல்கள் ஈராக்கிய அரசின் வேண்டுதலின் பேரில் நடந்த படியால் பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் தாக்குதல் செய்யக் கூடியதாக இருந்தது. சிரிய அரசு அப்படி ஒரு வேண்டுதலை விடுக்காதப் படியால் பிரித்தானியா சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலைச் செய்யவில்லை. டிசம்பர் இரண்டாம் திகதி பத்து மணித்தியால விவாதத்தின் பின்னர் பிரித்தானியப் பாராளமன்றம் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த பிரித்தானியப்பாரளமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெறும் விமானத் தாக்குதல் மட்டும் ஒரு கரந்தடிப் போர் செய்யும் படையை அழிக்க முடியாது. அதை அடக்க மட்டும் முடியும். ஐ எஸ் அமைப்பினர் தமது தளங்களை வேறு பல இடங்களுக்கு மாற்ற முடியும்.

Monday 7 December 2015

சீனாவின் உலக நாயகன் கனவும் உலக நாணயக் கனவும்

உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகை, மிகப் பெரிய ஏற்றுமதி, மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், இரண்டாவது அதிக படைத்துறைச் செலவு, மிகப் பெரிய படையினர், பெரிய நீர்மின் உற்பத்தி அணை, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு, அதிக அளவு உற்பத்தித்துறை ஆகியவற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் என்றும் அதனது நாணயம் உலக நாணயமாக வரவேண்டும் என்றும் நினைப்பதில் குறை ஒன்றும் இல்லை.

கூடையின் சீனாவின் றென்மின்பி
2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி கூடிய பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு யுவான் என்றும் றென்மின்பி என்றும் அழைக்கப்படும் சீனாவின் நாணயத்தை நிதியத்தின் நாணயக் கூடைக்குள் அனுமதித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு நாணயங்கள் நாணயக் கூடை எனப்படும். இந்த அனுமதி 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும். சீன நாணயத்தை நாணயக் கூடைக்குள் அனுமதித்தது பெருமிதமடைய வேண்டிய வெற்றி என சீன ஆட்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒரு வளர்முக நாடு முதற்தடவையாக இந்த நிலையை எட்டியுள்ளது. இதுவரை முதலாளித்துவ நாடுகளே இந்த நிலையைப் பெற்றிருந்தன. முதற்தடவையாக ஓர் அரச முதலாளித்துவ நாடு இந்த நிலையை எட்டியுள்ளது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பு
பன்னாட்டு நாணய நிதியத்தின்  கையிருப்பாக அமெரிக்க டொலரும் தங்கமும் இருந்தன. பின்னர் 1969-ம் ஆண்டு சிறப்புப் பணம்பெறும் உரிமை (special drawing rights ) உருவாக்கப் பட்டது. நிதியத்தின் உறுப்பு நாடுகள் இதிலிருந்து கடன் பெறலாம். சிறப்புப் பெறும் உரிமையில் அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், பிரெஞ்சு பிராங், மேற்கு ஜேர்மனியின் மார்க் ஆகிய நாணயங்களே முக்கிய பங்கு வகித்தன. இந்த நாணயங்களுக்குக் கொடுக்கப் படும் பாரமதிப்பு சிறப்புப் பணம்பெறும் உரிமத்தின் பெறுமதியைக் தீர்மானிக்கும். தற்போது அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானியப் பவுண், ஜப்பானிய யென் ஆகிய நான்கு நாணயங்களே சிறப்புப் பணம்பெறும் உரிமையின் மதிப்பை நிர்ணயிக்கும் கூடை நாணயங்களாக இருக்கின்றன 2016-ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து சீனாவின் யுவான் ஐந்தாவது நாணயமாக இணைகின்றது. சிறப்புப் பணம் பெறும் உரிமை ஒரு நாணயமாகக் கருதப்படா விட்டாலும் அது ஒரு நாணயமாகச் செயற்படுவதுண்டு. எகிப்தின் சூயஸ் கால்வாயினூடாகச் செல்லும் கப்பல்களுக்கான கட்டணம் சிறப்புப் பணம்பெறும் உரிமையிலேயே அறவிடப்படுகின்றது. அமெரிக்க டொலர் 41.73விழுக்காடும், யூரோ 30.93 விழுக்காடும், சீன றென்மின்பி (அல்லது யுவான்) 10.92விழுக்காடும் ஜப்பானிய யென் 8.33விழுக்காடும் பிரித்தானியப் பவுண் 8.09விழுக்காடும்  நாணயக் கூடையில் இருந்து சிறப்புப் பணம்பெறும் உரிமையின் பெறுமதியைத் தீர்மானிக்கும்.

யென்னையும் பவுணையும் பின் தள்ளிய சீன யுவான்

2007-ம் ஆண்டில் இருந்து சீனா உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்றது. உலக அரங்கில் சீனாவின் வர்த்தகம் அதிகமாக நடைபெறுவதால் அதன் பாவனை பிரித்தானியப் பவுணிலும் ஜப்பானிய யென்னிலும் பார்க்க அதிகரித்துள்ளது. சீன நாணயமான யுவான்(றென்மின்பி) உலகில் நான்காவது அதிகம் பாவிக்கப் படும் நாணயமாக இப்பொது இருக்கின்றது. இதனால் இந்த இரு நாணயங்களுக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடைக்குள் கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பு குறைக்கப் பட்டுள்ளது. இனி உலகில் மற்ற நிதி நிறுவனங்களும் நடுவண் வங்கிகளும் தமது நாணய காப்பொதுக்க வைப்பீட்டை யுவானில் செய்யும் என சீனா எதிர்பார்க்கின்றது. இதுவரைகாலமும் அமெரிக்க டொலரிலேயே பெருமளவு நாணய காப்பொதுக்க வைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. சீனா தனது நாணயத்தை உலகமயமாக்கும் முயற்ச்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவும் சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள். மேலும் இது சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள்.

நிபந்தனையில் விட்டுக் கொடுத்த நாணய நிதியம்

ஒரு நாணயம் பன்னாட்டு நிதியத்தின் நாணயக் கூடைக்குள் சேர்க்கப்படுவதாயின் அந்த நாணயம்  முக்கியமாக இரண்டு நிபந்தனைகளைத் திருப்தி செய்ய வேண்டும். முதலாவதாக அந்த நாணயம் பரவலாக உலக அரங்கில் பாவிக்கப் படவேண்டும், இரண்டாவதாக அந்த நாணயம் சுதந்திரமாகப் பாவிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த நாணயத்தின் நாட்டின் மொத்தப் பொருளாதார் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும். பரவலாகப் பாவிக்கப் படும் நிலையை சீன நாணயம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று விட்டது. உலகில் 120 நாடுகளின் பெரிய வர்தகப் பங்காளியாக சீனா இருக்கின்றது. இரண்டாவது நிபந்தனையான சுதந்திரமாகப் பாவிக்கக்க் கூடிய தன்மை பற்றி வாதப் பிரதிவாதங்கள் நிலவுகின்றன. 2010-ம் ஆண்டு சீனா பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணயக் கூடையில் தனது நாணயத்தையும் இணைக்க முயன்ற போது அதன் யுவான் நாணயத்தை சுதந்திரமாக மாற்ற அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதிக்கின்றது என ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்த்தன. அதனால் யுவான் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு சீனா தனது நாணயத்தின் பாவனையின் மீது உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இனிவரும் மாதங்களில் சீனா தனது நாணயத்தின் பாவனைமீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டி வரும் அத்துடன் சீனா தனது நாணயத்தின் மதிப்பைக் குறைந்து செல்ல அனுமதிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனாலும் சீனா தனது நாணயம் மற்ற நாணயங்களாக மாற்றப் படுவதையோ அல்லது மற்ற நாணயங்கள் யுவானாக மாற்றப்படுவதையோ நூறு விழுக்காடு சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப் போவதில்லை. சுதந்திரமாக மாற்றப்படும் தன்மை வரும் போது பல சீனச் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து பெருமளவு நிதியுடன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் குடியேறுவார்கள். ஏற்கனவே சீனாவில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு களவாக 600பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வெளியேறுகின்றது. கடந்த 14 ஆண்டுகளில் 91000 செல்வந்தர்கள் சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில் ஒருவரின் சொத்து ஆகக் குறைந்தது ஒரு மில்லியன் டொலர்களாகும். இது மேலும் அதிகரிக்கும் போது சீனாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு வீழ்ச்சியடையும். சீன அதிபர் ஜி ஜின்பிங் தமது நாணயம் தொடர்பான தமது கொள்கையில் பெரும் மாற்றம் வரப் போவதில்லை என்றும் ஆனால் தமது பொருளாதாரச் சீர் திருத்தங்கள் தொடர்ந்தும் செய்யப்படும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

சீனா இலகு கடன் பெறலாம்

சீன நாணயத்திற்கு கொடுக்கப் பட்டுள்ள பாரமதிப்பால் அது குறைந்த வட்டிக்கு பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறலாம். இதனால் சீனா தனது உட்கட்டுமான அபிவிருத்திக்குத்  தேவையான பணத்தை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடனாகப் பெறலாம்.  கட்ந்த பல ஆண்டுகளாக சீனாவின் ஏற்றுமதியால் கிடைத்த மிகையான அமெரிக்க டொலர்களை அமெரிக்காவின் கடன் முறிகளை வாங்குவதிலும் சீனா ஆபிரிக்க நாடுகளில் விவசாய நிலங்களை வாங்குவதிலும் பாக்கிஸ்த்தானிலும் இலங்கையிலும் துறைமுகங்களைக் கட்டுவதிலும் நியூசிலாந்தில் பாற்பண்ணைகளை வாங்குவதிலும் கனடாவில் எரிபொருள் நிறுவனங்களை வாங்குவதிலும் ஐஸ்லாந்தின் வடதுருவப் பிரதேசத்தில் பனிப்பாறைகளை ஆய்வு செய்வதிலும் செலவழித்தது. அத்துடன் புதிய அபிவிருந்தி வங்கி, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி எனப் பன்னாட்டு வங்கிகளையும் ஆரம்பித்தது. மேலும் பட்டுப்பாதை, புதியபட்டுப்பாதை, பட்டுப்பதையை ஒட்டிய பொருளாதார வலயம் எனவும் பெரும் நிதிகளை முதலீடு செய்தது. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 272விழுக்காடாக இப்போது இருக்கின்றது. இந்தக் கடனில் பெரும்பான்மையானவை சீனாவின் கூட்டாண்மைகளின் கடனாகும். அதில் பெரும் பகுதி அமெரிக்க டொலரில் பெற்ற கடனாகும். அமெரிக்கா இந்த மாதம் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. அப்படிச் செய்யும் போது சீனா யுவானிற்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது சீனாவில் டொலரில் கடன் பட்ட பெரு நிறுவனங்களைக் கலங்கச் செய்யும். சீனா தனது நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தன்னிடமுள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான் 3.5ரில்லிய்யன் டொலரை விற்று யுவானை வங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் கரைக்கும்.

கனவே கலையாதே
சீனா உலகின் தன்னிகரில்லாத பெரு வல்லரசாக வேண்டும் என்ற கனவுடனும் சீன நாணயம் உலக நாணயமாக்கப் பட வேண்டும் என்ற கனவுடனும் சீன ஆட்சியாளர்கள்  இருக்கின்றார்கள். உலக வர்த்தகத்தில் தற்போது 2.79 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப்படுகின்றது. சீனாவின் சொந்த வர்த்தகத்தில் 24.6 விழுக்காடு மட்டுமே சீன நாணயத்தில் செய்யப் படுகின்றது. சீன நாணயம் உலகில் மற்ற எல்லா நாணயங்களையும் விட அதிக அளவு பாவிக்கப் படுவதற்கு சீன இன்னும் மிக நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுக் கடன் முறிகளில் முதலீடு செய்வதற்குக் கட்டுப்பாட்டு உண்டு. சீன பல நாடுகளுடன் தனது வர்த்தகத்தை அமெரிக்க டொலர்களில் செய்யாமல் யுவான் நாணயத்தில் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.  

ரெம்பத்தூரம் போக வேண்டும்

உலகின் முதற்தர வல்லரசு ஆவதற்கு அதிக அளவு படையினரும் படைக்கலன்களும் இருந்தால் மட்டும் போதாது. அடிக்கடி போரில் ஈடுபட்டு களமுனை அனுபவம் உள்ள படையினர் இருக்க வேண்டும். உலகெங்கும் செயற்படும் உளவுத் துறை இருக்க வேண்டும். பல நாடுகளுடன் நட்பும் படைத்துறை ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். பல நாடுகளில் தேவை ஏற்படின் ஆட்சி மாற்றம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் பர்மா எனப்படும் மியன்மாரில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்திலும் சீனா ஓரம் கட்டுப்பட்டுவிட்டது என எண்ணத் தோன்றுகின்றது.நாடுகளில் ஆட்சி மாற்றம் கொண்டு வரக்கூடிய ஒரு நிலையைச் சீனா அடைய இன்னும் பல தூரம் சீனா பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...