Wednesday 28 October 2015

சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல்

தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக்  கூட்டத்தில்
(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.  

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு  அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.

இரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.

தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி  அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன.  தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?

2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தாலனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா  தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப "ஒழுங்கை" நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.

போர் தொடுக்க முடியாத பங்காளிகள்
சீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும்.  அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது.  கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும். 

அமெரிக்கத்தூதுவரை அழைத்த சீனா
சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது. 

தென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்திற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration  தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.  இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும்.  ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா?

Tuesday 27 October 2015

ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்

இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கடலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும் பிரிந்து செல்ல வேண்டும் என அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள்.  இதில் அண்மைக்காலங்களாக செய்திகளில் கடலோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கடலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.

மொழிப்பிரச்சனைதான் முதற்பிரச்சனை
பொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்கு கடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கடலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கடலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கடலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கடலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.

வருமான மீள்பங்கீடு

ஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கடலோனியா ஆகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநில ஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.

வளம் மிக்க கடலோனியா
ஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற் கரைப் பிரதேசமும் கடலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால் அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கடலோனியாவினதாகும். கடலோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கடலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில்  பேச்சு வார்த்தை மூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.

கலந்தாலோசனையான கருத்துக் கணிப்பு

2014-ம் ஆண்டு கடலோனியப் பிராந்திய அரசு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற் பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கடலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கடலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கடலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கடலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயதிற்குக் குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

 Barcelonaவை மிரட்டும் Madrid
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய்தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் காத்திரமான வெற்றியைப் பெறவில்லை என ஸ்பானிய நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும் தொடுத்துள்ளது.

ஸ்கொட்லாந்து பிரிவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நடந்தது. அது கடலோனியர்களுக்கு ஒரு உந்து வலுவாக அமைந்தது. கடலோனியர்களின் பிரிவினை இனி ஸ்கொட்லாந்திற்கு உந்து வலுவாகலாம்.

Monday 26 October 2015

இரசியக் குண்டு வீச்சிலும் சிரியப் படைகள் பின் வாங்குகின்றனவா?


இரசிய விமானங்களில் இருந்தும் உழங்கு வானூர்திகளிலும் இருந்தும் செய்யப் படும் குண்டு வீச்சுக்கள் மத்தியில் சிரிய அரச படைகள் எதிரிகள் மீது தரைவழித் தாக்குதல் நடாத்தி முன்னேறாமல் இருப்பது இரசியப் படைத்துறை நிபுணர்களை விரக்தியடைய வைத்துள்ளது. சிரியாவில் நடந்த படைத்துறை நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் ஈரானிய நிபுணர்கள் சிரியப் படையினர்மீது பெரும் கூச்சலிட்டுக் குற்றம் சுமத்தினர்.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைத் தக்க வைக்க அவரது சிரிய அரபுப் படை என்னும் பெயர் கொண்ட அரச படைகளுடன் இரசியப் போர் வீரர்கள் இரண்டாயிரம் பேர், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரானியப் படைகள் ஆகியவை போர் புரிகின்றன. 2015 செப்டம்பர் 30-ம் திகதியில் இருந்து இரசியப் போர் விமானங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போர் புரியும் அமைப்புக்களின் நிலைகள் மீது குண்டுகளை வீசி வருகின்றன.

மூன்று இலட்சம் உயிர்களைப் பலிகொண்டும் பத்து இலட்சம் பேருக்கு மேற்பட்டோரை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் இரசியத் தலையீடு நிலைமை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றது. இரசியா நேரடியாகத் தலையிட முன்னர் இருந்தே ஐக்கிய அமெரிக்கா நான்கு வகைகளில் சிரியப் போரில் தலையிடத் தொடங்கி விட்டது.

முதலாவது நேரடியாக ஐ எஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானக் குண்டுத் தாக்குதல் செய்வது. ஓராண்டுகளாகச் செய்யும் தாக்குதல் பெரியளவில் ஐ எஸ் அமைப்பினருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

 இரண்டாவது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் சுதந்திர சிரியப் படை என்னும் அரச எதிர்ப்புக் குழுவினருக்கும் அதன் ஆதரவுக் குழுவினருக்கும் ஐந்து மில்லியன் டொலர் செலவில் பயிற்ச்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.  இக்குழுக்களிடையே இருந்து போராளிகளைத் தெரிவு செய்து பயிற்ச்சியளித்து துருக்கி ஊடாக  அனுப்பப் பட்ட 60 போராளிகள் சிரியாவிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் மேல் சிரியக் கிளர்சிக் குழுக்களில் ஒன்றான  ஜபத் அல் நஸ்ரா அவர்கள் மீது ஓர் அதிரடித் தாக்குதல்களைச் செய்தது. முதலாவது தாக்குதலில் அவர்களின் தலைவரான நதீம் அல் ஹஸன் உட்படப் 18 பேரைக் கைப்பற்றிக் கடத்திச் சென்றது. அவர்களிடமிருந்து படைக்கலன்கள் பாதுகாப்பு வண்டிகளையும் தனதாக்கியது. இரண்டாவது தாக்குதலில் ஐந்து பேரைக் கொன்று 16பேரைப் படுகாயப் பட்டுத்தியது. அமெரிக்கா சிரியாவிற்கு பயிற்ச்சி கொடுத்து அனுப்பிய இன்னும் ஒரு தொகையினர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இத்துடன் பெண்டகன் தனது 500மில்லியன் பயிற்ச்சியும் படைக்கலன் வழங்குதலும் திட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தது.

மூன்றவதாக அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்கு படைக்கலங்களை வழங்குதல்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய BGM-71 TOW என்னும் ஏவுகணைகளே சிரியாவில் அரச படைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.  இந்த ஏவுகணைகளுக்கு அசாத்தை அடக்கிகள் எனப் பெயரிடப்பட்டன. சிரியாவின் வடபிராந்தியத்தில் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பெரிதும் பயன்படுத்தினர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இந்த ஏவுகணைகளைப் பாவிக்கும் காணொளிகள் யூரியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அரச படையினரின் இரசியத் தயாரிப்பு தாங்கிகளையும் கவச வண்டிகளையும் துவம்சம் செய்தனர். இந்த ஏவுகணைகளைப் பாவிக்கத் தொடங்கிய முதல் நாளிலேயே 24 தாங்கிகளும் கவச வண்டிகளும் கிளர்ச்சிக்காரர்களால் அழிக்கப்பட்டன.  BGM-71 TOW என்னும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் படைக்கல இருப்பில் இருந்தே துருக்கியூடாக கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட படைக்கலன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு கவனமாகத் திட்டமிடப்பட்டே வழங்கப்படுகின்றன. அவர்கள் ஒரு முழுமையான வெற்றி ஈட்டி அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றாமல் அசாத்தின் படைகளுக்கு இழப்பை ஏற்படுத்தி ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசத் பதவியில் இருந்து விலகுவதை அமெரிக்கா விரும்பியது. சிஐஏயின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சிரியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தையை மையப்படுத்தியதாக இருந்தன.  எண்பதுகளில் சோவியத் படைகளுக்கு எதிராக சிஐஏ முஜாஹிதீன் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கிய Stinger என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சோவியத்தை நிலை குலையச் செய்தது போல் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குக் கொடுத்த BGM-71 TOW ஏவுகணைகள் சிரியப் படைகளைத் திக்கு முக்காட வைத்தன.

 நான்காவதாக ஐக்கிய அமெரிக்கா குர்திஷ் போராளி அமைப்புக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களை வழங்கியது. ஆனால் துருக்கி தனது எல்லையில் குர்திஷ் மக்கள் தமது கட்டுப்பாட்டில் ஒரு பிராந்தியத்தையும் படையினரையும் வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்தது. ஐ எஸ் போராளிகள் வெற்றி பெறுவதையே துருக்கி விரும்பியது.சிரியாவில் உள்ள எல்லாப் போராளிக் குழுக்களிலும் சிறந்த முறையில் போராடுவது குர்திஷ் பெண்போராளிகளே.



இரசியப் படைகள் சிரியவினுள் வந்த பின்னர் சிஐஏ தனது ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் படைக்கலன்களின் அளவை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவையாவும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா  விற்பனை செய்யும் படைக்கலன்களில் இருந்தே செல்கின்றன. இதனால் அமெரிக்காவின் வருமானம் அதிகரிக்கின்றது. அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக இப்போது ஐ எஸ் அமைப்போ  அல்லது ஜபத் அல் நஸ்ரா அமைப்போ தாக்குதல்கள் நடாத்துவது குறைவு. இரசியத் தலையீடு இவர்களுக்கு இடையிலான போரை நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிப் படைகள் சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தி முன்னேறி வருகின்றனர். லதக்கியாவில் தங்கியுள்ள மூன்று இரசியப் படையினரும் இவர்களின் எறிகணை வீச்சால் கொல்லப் பட்டுள்ளனர் என வெளிவந்த செய்தியை இரசியா மறுத்துள்ளது. அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படையினருக்கு மேற்கு நாடுகளினதும் பல அரபு நாடுகளினதும் உளவுத் துறையினர் பெருமளவில் உதவி செய்கின்றனர். சவுதி அரேபியா குரோசியாவிடமிருந்து வாங்கிய RBG-6 என்னும் பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் இப்போது கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இரசியப் படைகள் சிரியா வந்த பின்னர் சுதந்திர சிரியப்படையினர் Meaar Kabi, Lahaya ஆகிய இரு நகரங்களை அரச படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த இரசியப் படையினர் இவர்களின் மருத்துவ மனைமீது தாக்குதல்களை நடாத்தியதாகக் கிளர்ச்சிக் காரர்கள் தெரிவித்தனர்.

அலெப்பே பிராந்தியத்தில் ஐ எஸ் போராளிகள் பல முனைகளில் சிரியப் படைகளைக் குழப்பும் விதத்தில் தாக்குதலைத் தொடுத்து சில பகுதிகளில் முன்னேறி சிரியப் படைகளை விரட்டியடித்தனர். மஸ்கோவில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த விளடிமீர் புட்டீன் சிரியப் படைகளின் தரை நகர்வை வலியுறுத்தினார். அவரைச் சந்தித்த பின்னர் எகிப்த்தின் அல் சிசி, சவுதி அரசர் சல்மன், ஜோர்தானிய அதிபர் அப்துல் ஃபட்டா, துருக்கியத் தலைமை அமைச்சர் எர்டோகன போன்ற சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரசிய விமானங்கள் ஒக்டோபர் 23-ம் திகதிவரை 934 பறப்புக்களைச் (sorties) செய்து "பயங்கரவாதிகளின்" 819 நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தியுள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப காத்திரமான முன்னகர்வுகள் எதையும் சிரிய அரச படைகள் செய்யவில்லை. இரசிய வான் தாக்குதல்களுக்குப் பின்னர் தரை நகர்வு செய்யும் சிரியப் படைகளுக்குக் காத்திருப்பவை நிலக் கண்ணி வெடிகளும் இரசியத் தயாரிப்பு Konkurs ஏவுகணைகளும் அமெரிக்காவின் சிஐஏ வழங்கிய TOW ஏவுகணைகளும் ஆகும். இரசிய விமானிகள் பாலைவனப் புழுதியில் விமானங்களை ஓட்டுவதற்குச் சிரமப் படுகின்றார்கள் தாக்குதல் விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அடிக்கடி இடையில் தமது பறப்புக்களைத் திசை மாற்றி தளம் திரும்புகின்றன. படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் விமானங்களில் பாதி தமது பறப்பை முழுமையாக மேற்கொள்ளாமல் இடையில் திரும்புகின்றன. இரசிய விமனங்களிற்கான உதிரிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன. அமெரிக்கப் படைத்துறையினர் தமது விமானங்கள் 80 விழுக்காடு பறப்புக்கள் முழுமையாக நடக்கின்றன என்கின்றனர்.

அமெரிக்காவின் தரைநகர்வு ஆதரவு விமானங்களான சுடுதிறன்மிக்க  A-10 Warthogs துருக்கியில் வந்து இறங்கியுள்ளன. இவை சிரியக் குர்திஷ் போராளிகள் ஐ எஸ் அமைப்பினரின் சிரியத் தலைமையகம் இருக்கும் ரக்கா நகரைக் கைப்பற்ற உதவி செய்யும். இவர்களுடன் சிரிய கிறிஸ்த்தவப் போராளிகளும் இணைந்து கொள்வார்கள்.

இரசியப் படைகள் சிரியாவிற்கு வரும்வரை இஸ்ரேல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளிற்கு சிரியா போவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆனால் இரசியப் படையினரின் வருகையின் பின்னர் இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது. ஒன்று சிரியா கோலான் குன்றுகளைக் கைப்பற்றுமா என்ற அச்சம். மற்றது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிக படைக்கலங்களை லெபனானிற்கு எடுத்துச் செல்லப் போகின்றார்கள் என்ற அச்சம். 

இந்தப் பன்னாட்டுத் தலையீடுகள் சிரியப் போரை எந்த விதத்திலும் முடிவுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஒரு விடிவையோ விமோசனத்தையோ தரப்போவதில்லை. மாறாக சிரியா பல துண்டுகளாகப் பிளவுபடப்போகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...