Friday 14 August 2015

செஞ்சோலைக் கொலையாளிகளைக் தண்டிக்காமல் பன்னாட்டு விசாரணை முடிந்ததா?

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை  நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
போட்டுச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ

பட்டெனும் குழலும் பிறையெனும் புருவமும்
பல சந்த மாலை மடல் பரணி பாவையர்
நஞ்சென வீழ்ந்த குண்டுகளால்
பஞ்செனக் கருகிச் சாம்பலான
வல்லிபுனக் கொடுமையை
வரலாறு மறக்குமோ
பதினாறு குண்டுகளில்
அறுபத்தொரு சிட்டுக்கள்
சிறகொடிந்த கதை
ஈழவன் மறப்பானோ

புகரப் புங்க வன்னி மன்றில்
பவளத் துங்க வரிசை வாயுடை வஞ்சியர்
நகரவிருத்தி நாடுவிருத்தி
எனப்பயில வந்த காலை
செருவுக்கஞ்சி காலை ஏழுமணிக்கு
புக்காராவில் வந்து கொன்ற கதையை
வன்னி நிலத்து வல்லிபுனத்துக்
கொடுமையை வரலாறு மறக்குமோ

முகாமையில் மேலாண்மை
தலைமைத்துவத்தில் தனித்திறமை
ஆண் பெண் சமத்துவம்
தன்னம்பிக்கையில் முக்கியத்துவம்
கால முகாமைத்துவம் ஆகியவை
ஆழப் பயின்று நாளைய ஈழம்
நடத்த முன்வந்த சிட்டுக்கள்
வல்லிபுனத்தில் சிறகொடிந்தன

சங்கு போல் மென் கழுத்து
கதிர் ஆழித் திங்கள்
வதனமெனக் கொண்ட வஞ்சியரை
மேலோர் ஆக்க முயலுகையில்
செஞ்சோலையில் வதைத்த கதை
ஈழத் துயரக் கடலிடை
துளியாய் நிற்பதல்ல
ஈழத்தாய் நெஞ்சத்திடை கனலாய்
என்றும் கொதிக்கும்
வல்லிபுனத்து வன்கொலை

இனக்கொலையாளியை அழைத்து
வெண் குடை விருது
கொடி தாள மேள தண்டிகை எனப்
பாரதம் பாராட்டி மகிழ்ந்த பாதகத்தினை
வல்லிபுனத்து வஞ்சியர் கொலையதை
நினைத்தால் பொறுக்குமோ

2006 ஆகஸ்ட் 14
விடியலைத் தேடி நின்ற
இனத்திற்கு என்றும் போல் விடிந்தது
விடிவின்றிக் கதிர் புலர்ந்தது - துயருக்கு
முடிவொன்று தேடும் இனத்திற்கு
இடியொன்று விழுந்தது
செஞ்சோலையில் எம் பூந்தளிர்களை
கீபீரில் வந்த அரக்கர்கள்
குண்டுகளுக்கிரையாக்கினர்
போர்க்குற்ற வாளிகளை
பூண்டோடு கூண்டேற்றாமல்
பன்னாட்டு விசாரணை வேண்டாம்
உள்நாட்டு விசாரணை போதுமென்பாரை
தேர்தல் களத்தில் காண்கின்றோம்

பூஞ்சோலையாய் பூத்துக் குலுங்க வைக்க
தேர்தெடுந்த வன்னிக் கொழுந்துகள்
தலைமைத்துவப் பயிற்ச்சிக்கும்
அனர்த்த முகாமைத்துவத்துக்கும்
கடைந்தெடுத்த வருங்கால வல்லவர்கள்
தமிழர் தாயக நிர்வாகத்தை
பின்னாளில் தம் பிஞ்சுத் தோளில் தாங்கவந்த
அஞ்சுக மொழி பேசும் பிஞ்சுப் பெண்களை
அழித்தனர் வஞ்சகர் குண்டுகளால்

பயங்கரவாதப் பயிற்ச்சி முகாமை
அழித்தோம் எனக் கொக்கரித்தனர்
சிங்களப் பேரினவாதிகள்
பேசாமல் நின்றனர் இந்தியப் பேரினவாதிகள்
கண்டனம் தெரிவிக்காமல்
இணைத் தலைமை நாடுகள் என்னும்
தறுதலை கூட்டமும் பாராமுகமாயிருந்தது

போர் நிறுத்தத்தை கண்காணித்தோரும்
போய்ப்பார்த்து ஆய்ந்து சொன்னனர்
படை நிலையல்ல அதுவென்று
அக்கொலைகள் செய்த போர்க்குற்றவாளிகளை
இன்றுவரை கூண்டு ஏற்றாக் கோழைகள்
தேர்தல் களத்தில் மார் தட்டி நிற்கின்றனர்

Wednesday 12 August 2015

சீனாவின் நாணய மதிப்பிறக்கம் நாணயப் போரை உருவாக்குமா?

சீனா தனது றென்மின்பி நாணயத்தின் பெறுமதியை 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி 1.9 விழுக்காடும் பின்னர் 12-ம் திகதி  1.6 விழுக்காடும் குறைத்து உலக அரங்கில் ஓர் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உடனடி விளைவாக சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. சீனாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. ஓகஸ்ட் 12-ம் திகதியும் சீனாவின் றென்மின்பியின் பெறுமதி குறைக்கப்பட்டது. நாணயப் பெறுமதியை குறைத்ததுடன் பெறுமதி மீதான சீன மைய வங்கியின் பிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.

சீனா தனது நாணயத்தை உலகச் சந்தையில் "மிதக்க" விட்டதைத் தொடர்ந்து அதன் நாணயத்தின் பெறுமதி மாற்றம் 0.6 விழுக்காடு வரையிலான ஏற்ற இறக்கத்துள் மட்டுப்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தது. சீனா திடீரென  தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தமைக்குச் சொல்லப்படும் காரணங்கள்:
1. ஏற்றுமதியை அதிகரிக்க.
2. தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றும் முன்னேற்பாடு
3. தனது பங்கு விலைச் சரிவை சரிக்கட்ட
4. பன்னாட்டு நாணய நிதியத்தில் தனது நாணயத்தையும் "கூடை நாணயங்களில்" ஒன்றாக ஏற்றுக் கொள்ளச் செய்ய.
5. உலக எரிபொருள் விலை வீழ்ச்சி சீனாவிற்கு சாதகமானது 

சீன நாணயமான றென்மின்பியின் பெறுமதியைக் குறைத்தது சீனப் பொருளாதாரத்தின் வலுவிழந்த நிலையைக் காட்டுகின்றது என்றும் சீன ஆட்சியாளர்கள் அதையிட்டுக் கலவரமடைந்துள்ளனர் என்றும் கருத்துக்கள் பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2015 ஜுலை மாதத்திற்கான சீன ஏற்றுமதி 8.3விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. தனது ஏற்றுமதியைத் தக்க வைத்துக்கொள்ள றென்மின்பியின் பெறுமதி டொலருக்கு எதிராக 15 விழுக்காடு குறைய வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள்.

நாணயப் போர் உருவாகுமா?
சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு  ஒரு நாணயப் போரை உருவாக்குமா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவில் சீனா தனது நாணயத்தைத் திட்டமிட்டு பெறுமதியைக் குறைத்து வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் பாதிப்படைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.  சீன நாணய மதிப்பிறக்கத்தால் அமெரிக்கா செய்யும் என எதிர்பார்த்த வட்டி விழுக்காட்டுக் குறைப்பு கால தாமதமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது டொலரின் மதிப்பைக் குறைக்கும். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் பலர் சீனாவின் நாணயத்தின் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது டொலரின் பெறுமதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரப் போட்டியிடும் Donald Trump சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பேரிடியாகும் என்றார்.

சீன நாணயத்தின் டபுள் ரோல்
சீனாவின் நாணயம் றென்மின்பி மற்றும் யுவான்  என்னும் இரண்டு பெயர்களைக் கொண்டுள்ளது. பொதுவுடமை ஆட்சியின் பின் மக்கள் நாணயம் என்னும் பொருள்கொண்ட றென்மின்பி என்னும் பெயர் சூட்டப்பட்டது. அது இரு பெயர்கள் மட்டுமல்ல இரட்டைத் தன்மையும் கொண்டது. உள்நாட்டு (onshore) றென்மின்பி என்றும் வெளிநாட்டு (offshor) றென்மின்பி என்றும் இரு வேறு பெறுமதிகளை சீன நாணயம் கொடுள்ளது. சீனாவின் வெளிநாட்டு றென்மின்பி 2.9 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது உள்நாட்டு நாணயத்தின் 2 விழுக்காடு வீழ்சியிலும் பார்க்க அதிகமானதாகும். வெளிநாட்டு நாணய வர்த்தகர்களின் செயற்பாடுகளில் இருந்து தனது நாணயத்தின் பெறுமதியைக் காப்பாற்ற இந்த இரட்டைத் தன்மை பேணப்படுகின்றது.

கூடையில் சீனக் கருவாடும்
தற்போது 7 விழுக்காடு வளரும் சீனப் பொருளாதாரம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நான்கு விழுக்காட்டிற்கு குறைவான அளவே வளரும் என்பதாலும் 2015 ஜூன் மாதத்தில் சீனப் பங்குச் சந்தை பெரு வீழ்ச்சியைக் கண்டதாலும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்து தனது நாட்டினது குறைந்து கொண்டிருக்கும் ஏற்றுமதியைத் தூண்ட முயல்கின்றது. அதே வேளை சீனாவின் இன்னும் ஒரு நோக்கமான தனது நாணயத்தை உலக நாணயமாக்குவதையும் சீனா நிறைவேற்ற முயல்கின்றது. இனி சீன நாணயம் பெறுமதி குறைவடையாது என்ற நிலையை சீனா உருவாக்கியுள்ளது. சீனா தனது நாணயத்தையும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF)முக்கிய நாணயங்களான "கூடை நாணயங்களில்" ஒன்றாக இணைக்க விரும்புகின்றது. அதற்காக சீனா தனது நாணயத்தின் நடவடிக்கை தொடர்பாக பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. சீன நாணயத்தை கூடை நாணயங்களில் ஒன்றாக இணைப்பது தொடர்பான தீர்மானத்தை 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை ஒத்தி வைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடைக்குள் தற்போது அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென், பிரித்தானியப் பவுண் ஆகிய நாணயங்கள் மட்டுமே இருக்கின்றன.  சீனாவின் நாணயத்தை சுதந்திரமாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டு நாணயத்தின் நிபந்தனையாகும்.

நடுப்புள்ளி
தற்போது சீன நாணயத்திண் பெறுமதியை அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயிக்கின்றது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே  பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடை நாணயங்களுள் ஒன்றாக சீன நாணயம் இணைக்கப்படும். ஆனால் சீன நாணய வர்த்தகம் சுதந்திரமாக நடந்தால் நான்கு ரில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சீனாவிடம் இருப்பதால் அதன் பெறுமதி உயர வாய்ப்புண்டு. அது சீனாவின் ஏற்றுமதியைப் பாதிக்கும்.இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. சீனா செய்த இந்த நகர்வை பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்துவீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பும் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் செய்யும் முடிவிற்கு சாதகமாக உள்ளது.

உலக நாணயமாக றென்மின்பி
கடந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக யூரோ  22 விழுக்காடும் ஜப்பானிய நாணயமான யென்  24 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் சீனாவின் 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி தனது நாணயத்தின் மதிப்பை குறைப்பது அதன் ஏற்றுமதியை அதிகரிக்க அவசியமான ஒன்றாகும்.
சீனா உலகின் முன்னணி நாடாக தான் வரவேண்டும் என்ற கொள்கைக்கும் முயற்சிக்கும் அதன் நாணயம் உலக நாடாக மாற்றப்படுவது அவசியம். இதற்கு ஏற்ப சீனா ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியது. கடந்த 2,200 ஆண்டுகளாக சிறந்த சமூகக் கட்டமைப்பு, சிறந்த கல்வித்தரம், தொழில்நுட்பத்தில் மேன்மை கொண்ட நாடாக இருந்து வருகின்றது.  அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் சீனாவின் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க ஐந்து மடங்கு. 1.3 மில்லியன்(1,300கோடி) மக்கள் தொகையை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனா உலகில் 79வது இடத்தில் இருக்கின்றது. இதனால் சீனா ஒரு முதல்தர நாடாக மாற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது.

அமெரிக்காவிற்கு இலாபம்
சீன நாணயத்தின் மதிப்புக் குறைந்த படியால் அமெரிக்கா சீன பொருட்களை மலிவாக வாங்கலாம். அதன் வெளிநாட்டு செல்வாணியை இது அதிகரிக்கும். அமெரிக்காவில் விலைவாசி குறையும். அப்பாவிச்  தற்போது இருக்கும் நிலையில் அமெரிக்காவும் தனது நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முயலாது. ஐரோப்பிய யூரோ நாணயமும் ஜப்பானின்  யென்னும் ஏற்கனவே பெறுமதி குறைக்கப்பட்டு விட்டன. அப்பாவிச் சீனத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.

Tuesday 11 August 2015

சீனாவில் உருவாக்கப்பட்ட பல அம்பாந்தோட்டைகளால் அவதியுறும் பொருளாதாரம்

சீனாவின் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்கின்றது. இந்த வளர்ச்சிக்கு அதன் ஏற்றுமதியும் அதனது உள்நாட்டு முதலீடும் நல்ல பங்களிப்பைச் செய்கின்றன. 2008-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்த பின்னர் வேகமாக வளர்ந்து வந்த சீன பொருளாதாரம் தனது வேகத்தை இழந்து விட்டது. சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல கீன்சிய முறைமையும் நிதிக்கொள்கையாளர்களின் முறைமையையும் சேர்த்துக் கடைப்பிடிக்கின்றது. அதன்படி சீனாவில் பணப் புழக்கம் அதிகரிக்கச் செய்ததுடன் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டன.

அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது.  2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான். ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்கின்றனர்.

சீனக் கூட்டாண்மைக் கடன்
சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது.  20ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. 2015இல் சீனக் கூட்டாண்மைகளின் மொத்தக் கடன் 16.1 ரில்லியன்கள் ஆகும்.  சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 160 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது.  கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

வர்த்தகத்தைக் கணனி மயமாக்கும் முயற்ச்சி
சீனாவின் தொழிற்துறையில் ஏற்றுமதி அதிகரிப்பை நோக்காகக் கொண்டு அதிக முதலீடு செய்யப்பட்டது. ஆனால் தொழில் துறையில் முப்பது விழுக்காடு ஏற்றுமதி வீழ்ச்சியால் செயற்படாமல் இருக்கின்றது.  வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்வது போல இலத்திரனியல் வர்த்தகத்தை (e-commerce) வளர்ப்பது,  திறன்படு கைப்பேசிகளில் (smart phones) செயலிகள் (apps) மூலம் வர்த்தகங்களைப் பெருக்குவது, முகில் கணனிப் பயன்பாடு (cloud computing) போன்றவற்றிலும் 2015 மார்ச் மாதத்தில் இருந்து சீனா கவனம் செலுத்தி வருகின்றது.

வட்டிக்குறைப்பு வேலை செய்வதில்லை
பங்குச் சந்தையில் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் சீனப் பொருளாதாரத்தைத் தூண்டவும் சீனாவில் வட்டி விழுக்காடு 2014 நவம்பருக்கும் 2015 ஜூனுக்கும் இடையில் நான்கு தடவை குறைக்கப்பட்டது. சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அரசத் துறை பெரும் பங்காற்றுகின்றது. அரசுத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் வட்டி குறையும் போதோ அல்லது குறையும் போதோ பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவ நாடுகளில் வட்டிக் குறைப்பு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதுபோல் அரச முதலாளித்துவ நாடுகளில் அதிகரிப்பதில்லை.

சீனாவின் லோக்கர் முயற்சி

சீனா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்ட உள்ளூராட்சி மட்டத்தில் செலவுகளைக் கூட்டியது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரச வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் முதலீடுகள் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்க சீனா முயன்றது. உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றை நடாத்தும் பொதுவுடமைக் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளைச் செய்தனர். இதனால் உற்பத்தி பெருகியதுடன் அதிக வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன.

சீன அம்பந்தோட்டைகள்
சீனாவின் உள்ளூராட்சி மன்றங்கள் செய்த முதலீட்டினால் அதன் மூலதனங்கள் அதிக வினைத்திறன் தரக்கூடிய வகையில் பகிரப்படவில்லை. பொதுவாக அரச முதலாளித்துவ நாடுகளில் முதலீடுகள் வினைத்திறனாகச் செய்யப்படுவதில்லை என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் முதலீட்டினால் அம்பாந்தோட்டையில் செய்தது போல போதிய அளவு பயன்படுத்தப் படாத நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் பல உருவாக்கப்பட்டன.  சீனாவின் அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்திற்குமான ஆணைக்குழு 2014-ம் ஆண்டு வெளிவிட்ட அறிக்கையின் படி 2009இற்கும் 2014இற்கும் இடையில் 6.8 ரில்லியன்(68 இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வினைத்திறன் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனாவில் செய்யப்பட்ட வினைத்திறனற்ற முதலீடுகள் பத்து ரில்லியன் (நூறு இலட்சம் கோடி அல்லது கோடானுகோடி) அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  சீன உள்ளூராட்சி மன்றங்களின் கடன் ஐந்து ரில்லியன் (ஐம்பது இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களானது. இந்தக் கடன் பளுவைத் தணிக்க சீன அரசு உள்ளூராட்சி மன்றங்கள் கடன் முறிகளை விநியோகித்து நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.

திறனற்ற முதலீடு
தேவையற்ற கட்டிட நிர்மாணங்கள், மிகையான உட்கட்டுமானங்கள், பயனுறா(idle) உற்பத்தித்துறையில் முதலீடு ஆகியவற்றில் அரசு செய்த செலவுகளே 2008-ம் ஆண்டின் பின்னர் சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பகுதியாக அமைந்தது. எழுபது விழுக்காடு செயற்திறன் கொண்ட தொழிற்துறையால் போதிய அளவு இலாபம் ஈட்ட முடியவில்லை. இதனால் சீனாவின் பங்குச் சந்தை ஜுலை மாதத்தில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. சீன அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளையும் மீறி பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்தித்தது. இந்த இழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது.

கண்டு பிடி சீனா கண்டுபிடி
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் (சில கணிப்பீடுகளின் படி முதலாவது) சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடையாத நாடாகவே இருக்கின்றது. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization),  பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே  அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.


சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புப் பிரச்சனை
சீனாவின் பிரச்சனைகளுக்குள் பெரும் பிரச்சனையாக இருப்பது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பு. அங்கு வேலை செய்யும் மக்கள் தொகைக்கும் வயோதிபர்களின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாசாரம் மோசமடைந்து கொண்டு போகின்றது.   வேலைசெய்வோரின் தொகையுடன் ஒப்பிடுகையில் வேலை செய்ய முடியாத வயோதிபர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போகின்றது. இதை ஈடு செய்ய அங்கு உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். ஆனால் சீன உற்பத்தித் திறனும் குறைந்து கொண்டே போகின்றது.  பார்க்க
எதையும் பிளான் பண்ணிச் செய்யும் சீனர்களால் முடியும்
சீனாவில் வருமான வரி செலுத்துவோரின் தொகை சீன மக்கள் தொகையில் 2 விழுக்காட்டிலும் குறைவானவர்களே. இது சீன பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது அரச நிதி நிலைமையில் ஒரு மோசமான நிலையைத் தோற்றுவிக்கலாம்.  தற்போது 7 விழுக்காடு வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் 2017-ம் ஆண்டு 4 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பின்னணியில் சீனாவில் அரச நிதி நிலையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்பத் திட்டமிட்டு அத்திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றும் திறமையும் அனுபவும் சீனர்களிடம் நிறைய உண்டு.

Monday 10 August 2015

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையில் இறங்குமா

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையை வெறுக்கும் அமைப்பு. 1928-ம் ஆண்டு எகிப்த்தில் உள்ள சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா உட்பட எண்பத்து ஐந்திற்கு மேற்பட்ட நாடுகளில் இதன் செயற்பாடு உண்டு. இது தற்போது எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்பும் தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மாறியதாகக் கருதப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேர்சி
எகிப்த்தில் 2011-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் கிளர்ச்யின் பின்னர் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை அப்போது நன்கு கட்டமைக்கப் பட்ட அமைப்பாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அப்புரட்சியின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பிக் கொண்டார். அவர் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபர் பதவிக்கு வந்தார். அவர் நாட்டில் இஸ்லாமிய மதவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்ட இளையோர் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்தவே விரும்பினர். இதனால் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இதைத் தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திய எகிப்தியப் படைத் துறையினர் எகிப்தை மீண்டும் தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இஸ்லாமிய சகோரத்துவ அமைப்புத் தடை செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறப்புத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் இன்று(ஓகஸ்ட்-2015) வரை சிறையில் இருக்கின்றார். நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேர்சியின் பேச்சாளராகத் தொழில் பார்த்த பெண்ணுக்குக் கூட ஆளில்லா நிலையில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சகோதரத்துவ அமைப்பிற்கு எதிரான வன்முறைகள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைத் தடை செய்த எகிப்தின் படைத்துறையினரின் அரசு அதற்கு எதிராக என்றும் இல்லாத அளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு  இறப்புத் தண்டனை நீதி மன்றங்களால் விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு நாடாக துருக்கி இருக்கின்றது. துருக்கியில் அந்த அமைப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருக்கின்றது.

அமைதியா வன்முறையா என்ற குழப்பம்
தொடரும் அடக்கு முறைகளால் பல இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் வன்முறைசார் போராட்டத்தைத் தாம் ஆரம்பிக்க வேண்டும் என குமுறுகின்றனர். ஆனால் அதன் தலைமை அமைதியான வழிகளைக் கடைப்பிடிக்கும் படி உறுதியாகச் சொல்கின்றது. இதனால் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன அந்த அமைப்புக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. எகிப்திய அரசு எல்லா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரையும் பயங்கரவாதிகளாகக் கருதுகின்றது. சிறையில் இருந்து 2015 மே மாதம் விடுதலையான சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் குஜ்லான் அடக்கு முறை மிகுந்த அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பது தணலைக் கையில் எடுப்பது போலாகும் என்றார். மேலும் அவர் அமைதியைக் கடைப்பிடித்தல் படைக்கலன்களை ஏந்துவதிலும் பார்க்க வலிமையானது. இப்படிச் சொன்னதால் அவர் பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.

பிளவுகள்
ஏற்கனவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்த்தீனக் கிளையினர் பிளவடைந்து வன் முறையில் இறங்கியதால் உருவாகிய அமைப்புத்தான் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்பட்டு இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பு. 1987இல் ஏற்பட்ட இந்தப் பிளவின் இஸ்ரேலிய உளவுத் துறையும் பலஸ்த்தின விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் பங்கு பற்றி இருந்தது. இது போன்ற இன்னும் ஒரு பிளவு சகோதரத்துவ் அமைப்புக்குள் தோன்றுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு எகிப்தில் தனது நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்றது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவராக இருக்கும் அய்மன் அல் ஜவஹாரி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவரே.

எகிப்திய ஆட்சியாளரை தண்டிக்கச் சொல்லும் அறிஞர்கள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் எகிப்தை ஆளும் அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியின் ஆட்சிக்குத் துணை செய்பவர்களும் ஊழியம் செய்பவர்களும் இஸ்லாமிற்கு எதிராகச் செயற்படும் குற்றவாளிகள் என்கின்றனர். இக்குற்றாவாளிகள் கொல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி எகிப்தின் சினாய் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு உரிமை கோரி இருந்தது. ஆனால் எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிசி அந்தக் குண்டு வெடிப்பை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா தீண்ட விரும்பாத சகோதரத்துவ அமைப்பு
2015 ஜூன் மாதம் இஸ்லாமியச் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்த போது அவர்களை அமெரிக்க அரசு சந்திக்க மறுத்து விட்டது.  1950களிலும் 1960களிலும் அப்போதைய எகிப்தின் அதிபர் அப்துல் கமால் நாசர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். மத சார்பற்றவரான நாசர் மதவாத அமைப்பான இஸ்லாமிய சகோதரத்து அமைப்பினருக்கு எதிராகச் செயற்பட்டார். அதிலும் மோசமான நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அல் சிசியால் எடுக்கப்படுகின்றது.

தம்மை ஆய்வு செய்யும் சகோதரத்துவ அமைப்பு
இத்தகைய சூழ் நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக மாற்ற வேண்டும் என அமைப்பின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கின்றன. அமைப்பின் மேல் மட்ட உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு அரபுப் புரட்சியினால் அப்போதைய படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியைக் கலைத்ததில் இருந்து  2013-ம் ஆண்டு மொஹமட் மேர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டமை வரை தமது அமைப்பின் செயற்பாடுகளை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.  தமது அமைப்பைச் சேர்ந்த இளையோர் சினாயில் இருந்து செயற்படும் அன்சர் பெயிற் அல்-மக்திஸ் (Ansar Beit al-Maqdis) என்னும் ஐஸ் எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய அமைப்புடனோ அல்லது நேரடியாக ஐ எஸ் அமைப்பினருடனோ இணைவதையிட்டுக் கரிசனை கொண்டுள்ளது. எகிப்த்தில் புரட்சித் தண்டனை என்னும் பெயரிலும் பிரபல எதிர்ப்பியக்கம் என்னும் பெயரிலும் இரு புதிய அமைப்புக்கள் உருவாக்கியுள்ளன.  இவை வன்முறைப் போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.

மாறவேண்டும்
தற்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கையாளும் போது அமைப்பு தனது வன்முறை அற்ற கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகின்றது. அல்லாவிடில் அதற்குள் பிளவு ஏற்படும் அல்லது ஐ எஸ் அமைப்பை நாடி அதன் உறுப்பினர்கள் செல்வார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...