Tuesday 28 July 2015

இரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள்

உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன. உலகம் ஈரானுடனான அணு உற்பத்தி உடன்படிக்கை தொடர்பாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 2008-ம் ஆண்டு இரசியாவால் ஜோர்ஜியாவிடமிருந்து அபகரிக்கப்பட்ட தெற்கு ஒஸேஸியாப் பிராந்தியத்தில் இரசியா தனது படைகளை மேலும் ஜோர்ஜியாவிற்குள் நகர்த்தி நில அபகரிப்புச் செய்துள்ளது.

போல்ரிக் வரலாறு
போல்ரிக் நாடுகள் மற்ற நாடுகளின் தொடர் ஆக்கிரமிக்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. 1939-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வியசெஸ்லவ் மொலொடோவும் ஜேர்மனிய வெளியுறத்துறை அமைச்சர் ஜோக்கிம் வொன் ரிப்பெண்ட்ரொப்பும்  கைச்சாத்திட்ட மொலொடோவ்-ரிப்பெண்ட்ரொப் உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிப்பதில்லை என ஒத்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் ஒரு இரகசிய இணைப்பின் படி போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா, பின்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளை சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றியும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டன. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்துப் பங்கு போட்டுக் கொண்டன. பின்லாந்தை சோவியத் ஆக்கிரமித்துக் தன்னுடன் இணைந்துக் கொண்டது. ருமேனியாவின் ஒரு பகுதியும் சோவியத்தின் வசமானது. சோவியத் ஒன்றியம் 1940-ம் ஆண்டு எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகளைத் தனதாக்கிக் கொண்டது.

இரசியாவிடமிருந்து மேலும் விலகிய போல்ரிக் நாடுகள்
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனி நாடுகள் ஆகியதுடன் 2004-ம் ஆண்டு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்து கொண்டன. இந்த நகர்வுகளை இரசியா தனக்கு அச்சமூட்டும் செயலாகப் பார்த்தது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து அதிக அச்சம் கொண்டிருந்த போல்ரிக் நாடுகள் நேட்டோப் படைகள் தமது நாட்டில் அதிக அளவின் நிலை கொள்ள வேண்டும் எனக் கருத்துக்கள் வெளியிட்டன. அந்த நாடுகளின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் 1991-ம போல்ரிக் நாடுகளைத் தனிநாடுகளாய் அங்கீகரிக்கும் போது இரசியா சட்டபூர்வமாகச் செயற்பட்டதா என்பது பற்றி ஆராயும் படி 2015 ஜூன் மாதம் முதலாம் திகதி இரசிய அரசின் சட்டத்துறையினர் பணிக்கப்பட்டனர். அதற்கு ஒரு வாரத்தின் முன்னர் 1953-ம் ஆண்டு நிக்கிட்டா குருஷேவ் கிறிமியாவை உக்ரேனுடன் இணைத்தது சட்ட விரோதமானது என இரசியச் சட்டதுறையினர் அறிவித்தனர். லித்துவேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் தமது நாடு சுதந்திரமடைந்தமை தொடர்பான இரசியாவின் சட்ட ஆய்வு ஆத்திரமூட்டுவதுடன் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் அபத்தமான ஒன்று என்றார்.

பயம் போக்கும் போர்வையில் அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.

லத்வியாவிற்குக் கட்டிய லாடன்

2015 ஜனவரியில் லத்வியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் லட்கேல் சுதந்திரக் குடியரசு ஒன்று இணையத்தில் பிரகடனப் படுத்தப் பட்டது. இந்தப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் இந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றியிருந்தனர். இதன் மூலத்தைத் தேடிச் சென்ற ஊடகவியலாளர்களும் உளவுத் துறையினரும் இப்பிரகடனத்திற்கும் இரசியாவிற்கும் தொடர்புண்டு என்றனர். இரசியாவிற்கு ஆதரவான விக்டர் யனுக்கோவிச் உக்ரேன் அதிபர்பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உக்ரேனைத் துண்டாடிச் சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கையில் லத்வியாவில் உள்ள இரசியர்களின் சுதந்திரப் பிரகடனம் லத்வியர்களைக் கரிசனை கொள்ள வைத்தது.

இரசியாவின் குடியேற்றவாதம்!
லத்வியாவில்  38 விழுக்காடும் எஸ்த்தோனியாவில் 24விழுக்காடும் இரசியர்கள் வசிக்கின்றார்கள். இவர்களை வைத்து தனது பிராந்திய ஆதிக்கக் காய்களை நகர்த்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முயல்கின்றார் என்பது ஒரு குற்றச் சாட்டாக முன்வைக்கப்படுகின்றது.  லத்வியாவில் இருக்கும் குடியுரிமையற்ற 280,000 வெளிநாட்டவர்கள் அந்த நாட்டின் மக்கள் தொகையின் 14 விழுக்காட்டினராகும். இவர்களுக்கும் வாக்குரிமையுமில்லை அரச உயர்பதவிகள் வகிக்க் அனுமதிக்கப்படுவதுமில்லை. இவர்களின் அதிருப்தியையும் இரசியா தனது பிராந்திய நலன்களுக்குப் பயன்படுத்த முடியும். உக்ரேனில் உள்ள 17 விழுக்காடு இரசியர்களை வைத்து இரசிய அதிபர் விளடிமீர் விளையாடிய அரசியல் சதுரங்கத்திலும் பார்க்க அதிக அளவு விளையாட்டை லத்வியாவிலும் எஸ்த்தோனியாவிலும் விளையாட முடியும்.

இரசிய எதிர்ப்புவாதம்
2012-ம் ஆண்டு லத்வியாவில் இரசியா இரண்டாவது அரச மொழியாக இருப்பது ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஒழிக்கப்பட்டது. எஸ்த்தோனியாவில் இரசியர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு காணப்படுகின்றது. அங்கு அவர்களுக்கு குடியுரிமை இல்லை. சோவியத் ஒன்றியம் எஸ்த்தோனியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் குடியேறிய  இரசியர்களுக்கு அங்கு குடியுரிமை இல்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாது. குடியுரிமை பெறுவதற்கு அவர்கள் எஸ்த்தோனிய மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அச்சத்தின் உச்சத்தில் லித்துவேனியர்கள்
லித்துவேனியாவில் சுமார் 177,000 இரசியர்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இது 5.8 விழுக்காடு மட்டுமே. மற்ற இரு நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையாகும். ஆனால் போல்ரிக் நாடுகள் மூன்றிலும் இரசிய ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சத்தால் அதிகம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் லித்துவேனியர்களே. 2015-ம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆக்கிரமிப்பின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பான கையேடு ஒன்று லித்துவேனிய அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டத்து. உக்ரேனில் இரசியா செய்த நில அபகரிப்பைத் தொடர்ந்து லித்துவேனியாவில் 2,500 பேரைக் கொண்ட ஒரு துரித நடவடிக்கைச்  சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 16,000 படையினரை மட்டும் கொண்ட லித்துவேனியாவை ஒரு சில நாட்களுக்குள் இரசியாவால் ஆக்கிரமிக்க முடியும். இதனால்  லித்துவேனிய படைத்துறைக்கு கட்டாயமாக ஆட் சேர்ப்புச் செய்யும் சட்டத்தை 2015- ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தியது. போல்ரிக் கடலில் இரசியாவின் கலினினிகிராட் கடற்படைத் தளத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் லித்துவேனியா இருப்பதால் மற்ற இரு போல்ரிக் நாடுகளையும் விட அது இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் கீழ் லித்துவேனியர்கள் அனுபவித்த கொடுமைகளை லித்துவேனியர்கள் இன்னும் மறக்கவில்லை. சோவியத் ஆட்சிக்கு எதிரானவர்களை சைபீரியாவிற்கு கடத்திச் சென்று கடும் பனியில் வாழவைத்ததை இன்றும் லித்துவேனியர்கள் ஆத்திரத்துடனும் அச்சத்துடனும் நினைவு கூருகின்றனர்.

ஒன்றியத்துடன் ஒன்றுபட்டதால் வந்த வாழ்வு
உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியம் இரசிய ஆதிக்கத்தில் இருந்து பறித்து தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்ற போது உக்ரேனில் உள்ள இரசியர்கள் இரசியாவை ஆதரித்து அதன்கேந்திரோபயா நோக்கங்களை நிறைவேற்ற உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது போல போல்ரிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உள்ள இரசியர்கள் கிளர்ச்சி செய்தவதற்கான வாய்ப்புக் குறைவு என்று சொல்லலாம். உக்ரேனிய மக்களின் வாழ்கைத் தரத்திலும் பார்க்க இரசியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த மூன்று போல்ரிக் நாடுகளின் வாழ்க்கைத் தரம் இரசியர்களின் வாழ்கைத் தரத்திலும் உயர்வானது. அத்துடன் போல்ரிக் நாடுகளின் ஆட்சி முறைமையும் இரசிய ஆட்சி முறையிலும் மேம்பட்டது. இதனால் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளில் வாழ்வதை அவர்கள் விரும்புகின்றார்கள். அத்துடன் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அவர்கள் குடியேறி வாழவும் வேலை தேடிச் செல்லவும் முடியும்.

இரசியாவைச் சமாளிக்க அமெரிக்காவின் அதிரடி         
                                      ஐக்கிய அமெரிக்கா அவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது. தற்போது அமெரிக்காவின் வான் படையின் செயலராக இருக்கும் டெபரா ஜேம்ஸ் விண்வெளிப் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்டருக்கு ஆலோசகராக விரைவில் நியமிக்கப்பட விருக்கின்றார்.  சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் விண்வெளியில் உருவாகியுள்ள சவால்களை சமாளிக்க அடுத்த ஆறுமாதங்களுக்குள் Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் அமெரிக்காவால் திறக்கப்படவிருக்கின்றது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மீள் சீரமைப்புச் செய்யும் படி வேண்டியுள்ளது. இதற்கான காரணங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாத போதிலும் இரசியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் அல்லது இரசியாவை அடக்கும் வகையில் இந்த நிதி மீள் ஒதுக்கீட்டு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. நீர்மூழ்கிகளை இனம் காணும் கருவிகள், கவச ஊர்திகளுக்கான மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், அணுக்குண்டு கட்டளையகத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவை ஆதிக்க நாடுகள் தமது போட்டிக்களமாக மீண்டும் மாற்றிவிட்டன.

Monday 27 July 2015

20 தொகுதிகளில் வெற்றி கேட்கும் சம்பந்தர் ஐயா உங்க judgement ரெம்பத் தப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 2015 ஓகஸ்ட் மாதம் 17-ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் தம்மை 20 தொகுதிகளில் வெல்ல வைத்து தமக்கு பேரம் பேசும் வலுவை வழங்கும் படி தமிழ் மக்களை வேண்டியுள்ளனர்.  அது எப்படி இந்த 20 தொகுதிக் கணக்குப் போட்டார்கள் என்று தெரியவில்லை. 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் உலகமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடேங்கப்பா எங்களுக்குத் தீர்வு பெறுவதற்கு எத்தனை தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

குடியரசு தேர்தலில் பேசாத பேரம்
இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் அட்மிரல் டெனிஸ் சி பிளேயர் தெரிவித்ததைப் பார்க்கும் போது 2015 ஜனவரியில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தேவையான ஆட்சி மாற்றத்தை தமிழர்களின் வாக்கு இலகுவாகச் செய்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகின்றது. அந்த வாக்கு வலுவை வைத்துக் கொண்டு சீனா அரசுறவாளர்களைச் (இராசதந்திரிகள்) சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தி பின்னர் அமெரிக்க மற்றும் இந்திய அரசுறவாளர்களையும் சிங்களத் தலைவர்களையும் சந்தித்துக் கதைத்து பேரம் பேசத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி யாருடன் எப்படிப் பேரம் பேசப் போகின்றது?

சம்பந்தனின் பகிடி
“நாம் அதிகபட்சமாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை, நாம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்யத் தயாராகவுள்ளோம்." இது இரசவரோதயம் சம்பந்தர் அவர்கள் திருமலை சேருவாவெலத் தொகுதியில் தனது கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தாகும். இந்தக் கருத்துடன் திரு இராசவரோதயம் சம்பந்தர் தனது திருவாசகத்தை நிறைவு செய்ய வில்லை. மேலும் ஒரு நகைச்சுவையையும் அவர் உதிர்த்துள்ளார்:

  • "மைத்திரிபால சிரிசேன இனவாதத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை. (மைத்திரிபால சிரிசேன) மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார்."
பேரம் பேசும் வரலாறு
அண்மைக் கால சரித்திரத்தைப் பார்த்தோமானால் தமிழ் அரசியல்வாதிகளின் முதல் பேரம் பேசும் பணி இலண்டனில் சோல்பரிப் பிரபுவுடன் ஆரம்பித்தது. திரு ஜி ஜி பொன்னம்பலம் இலங்கைக்கான அரசமைப்பு யாப்பை எழுதிக் கொண்டிருந்த சோல்பரிப் பிரபுவை இலண்டனில் சந்தித்து அவர் எழுதும் யாப்பில் இலங்கைப் பாராளமன்றத்தில் சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு ஐம்பது  விழுக்காடு பிரதிநிதித்துவமும் வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டிக் கொண்டார்.சோல்பரிப் பிரபு ஜி ஜி பொன்னம்பலத்தின் ஆங்கிலப் புலமையையும் நாவன்மையையும் பாராட்டி விட்டு அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

1960இல் செய்த பேரம்
1960-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் சி பி டி சில்வா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முக்கிய கட்சிகளாகப் போட்டியிட்டன. மொத்த 151(ஆறு நியமன உறுப்பினருடன் 157) தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 50 தொகுதிகளிலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி 46 தொகுதிகளிலும் தந்தை செல்வாவின் தலைமையில் தமிழரசுக் கட்சி 15 தொகுதிகளிலும் லங்கா சமசாஜக் கட்சி 10 தொகுதிகளிலும்  மக்கள் ஒற்றுமை முன்னணி 10 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றன. இதனால் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அரசு ஒன்றை அமைப்பதற்கு  அவசியம் தேவைப்பட்டது. தேர்தல் முடிந்து தந்தை செல்வநாயகமும் மற்றத் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களும் இரத்மலான விமான நிலையத்தில் இறங்கிய போது அவரை "வரவேற்க" ஐக்கிய தேசியக் கட்சியினரும் சுதந்திரக் கட்சியினரும் மட்டுமல்ல சௌமிய மூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக திரு ராமானுஜம் என்ற முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் காத்திருந்தார். அவரை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி அப்போது இருந்தது. அப்போது சிங்களக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு தமது நான்கு கோரிக்கைகளை தமிழரசுக் கட்சியினர் முன்வைத்தனர்:
1. பண்டா செல்வா ஒப்பந்தத்தில் ஒத்துக் கொண்ட படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிராந்திய அரசை உருவாக்குதல்.
2. அரச மொழியாக சிங்களத்துக்கு ஈடாக தமிழையும் இணைத்தல்
3. பறிக்கப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமையை மீளளித்தல்.
4. மலையக மக்களுக்கு நான்கு பாராளமன்ற நியமன உறுப்பின பதவி வழங்கல்.

இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுத்து விட்டது.  தந்தை செல்வா தனது இரண்டாவது மற்றும் நான்காவது கோரிக்கைகள் தொடர்பில் சிலவிட்டுக் கொடுப்புக்களைச்  செய்யத் தயாராக இருந்தார். டட்லி முதலாவது கோரிக்கைக்கு மறுத்து தமிழரசுக் கட்சிக்கு அமைச்சுப்பதவி கொடுக்க முன் வந்தார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தந்தை செல்வா மறுத்து விட்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிராந்திய சபை கொடுக்க மறுத்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களுக்கான தனித்தனி மாவட்ட சபைகளை உருவாக்கி அவற்றிற்கு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் செய்ய முன் வந்தது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஒலிவர் குணத்திலகா அழைத்தார். ஆனால் அரியணை உரையின் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்ளித்து அந்த ஆட்சியை ஒரு சில நாட்களில் தமிழரசுக் கட்சியினர் கவிழ்த்தனர். பின்னர் ஆளுநர் ஒலிவர் குணத்திலகா சுதந்திரக் கட்சியின் தலைவர் சி பி டி சில்வாவை ஆட்சியமைக்க தனது மா்ளிகைக்கு அழைத்தார். அங்கு தந்தை செல்வாவும் சில்வாவுடன் சென்றார். அப்போது குணத்திலகா ஒரு குண்டைத் தூக்கி தந்தை செல்வாவின் முன் போட்டார். அது "நீ நிபந்தனையற்ற ஆதரவை சி பி டி சில்வாவிற்கு வழங்குகின்றாயா?" என்ற கேள்வியாகும். இந்தக் கேள்வி தந்தை செல்வாவிற்கும் சுததிரக் கட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான குணத்திலகாவின் திட்டமிட்ட சதியாகும். நிபந்தனை அற்ற ஆதரவு அல்ல எனத் தந்தை செல்வா நேர்மையாகப் பதிலளிக்க நாட்டின் உறுதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் பாராளமன்றத்தைக் கலைத்து புதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் ஒலிவர் குணத்திலகா தெரிவித்தார். தொடர்ந்து வந்த தேர்தலில் சிறிலங்கா சுததிரக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கூட்டணி அமைக்காமல் இணைந்து போட்டியிட்டன. ஏற்கனவே சி பி டி சில்வாவுடன் ஒத்துக் கொண்டவை யாவும் தேர்தலில் வெற்றி பெற்ரு ஆட்சி அமைத்தால் நிறைவேற்றப்படும் என அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தந்தை செல்வாவிற்கு உறுதி வழங்கினார். ஆனால் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சிறிமா தந்தை செல்வாவின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை.

1965-ம் ஆண்டு நடந்த பேரம்

1965-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அறுதிப் பெரும் பான்மை பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி-66, சுதந்திரக் கட்சி -41. தமிழரசுக் கட்சி 14, சமசமாஜக் கட்சி-10, தமிழ் காங்கிரசுக் கட்சி -3 எனத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடனும், தமிழ் காங்கிரசுக் கட்சியுடனும் இணைந்து ஒரு கூட்டணி அரசை அமைத்தார். வடக்குக் கிழக்கில் தமிழ் அரச மொழியாக்குவதாகவும் மாவட்ட சபை அமைப்பதாகவும் ஒத்துக் கொள்ளப் பட்டதுடன் மூதவை உறுப்பினர் மு திருச்செல்வத்திற்கு உள்ளூராட்சி அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் மாவட்ட சபை உருவாக்காமல் தந்தை செல்வா ஏமாற்றப்பட்டார்.

1970இல் கண்ட பேரம் பேசல் கனவு
1970-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிகளின் மேடையில் அ அமிர்தலிங்கத்தின் முக்கிய பரப்புரையாக இருந்தவாசகம் "இந்த முறைத் தேர்தலில் எந்த ஒரு சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மாட்டாது. எம்மை எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம்." ஆனால் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி தனது தேர்தல் பரப்புரையாக அமிர்தலிங்கத்தின் உரையைப் பாவித்தது. தமிழரசுக் கட்சியின் ஆதரவுடனா நாம் ஆட்சி அமைப்பது? எம்மைப் பெரு வெற்றி ஈட்டச் செய்யுங்கள் என்ற பரப்புரை செய்யப்பட்டதுடன் அமிர்தலிங்கத்தின் உரை துண்டுப் பிரசுரமாக சிங்களத்தில் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் சிறிமா என்றுமே இல்லாத அளவு பெரு வெற்றி பெற்று தமிழர்களுக்கு  இருந்த உரிமைகளையும் பறித்தார். அன்று அமிர்தலிங்கம் சொன்னதைப் போலத்தான் இன்று சம்பந்தர் ஐயா சொல்கின்றார்.

காலம் மாறிவிட்டது சம்பந்தர் ஐயா
அறுபதுகளில் இருந்தது போல் அல்ல இன்று சிங்களத்து அரசியல் நிலைமை அறுதிப் பெரும்பானமை இல்லாத கட்சி இரத்மலான விமான நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. சில அமைச்சுப் பதவிகளையும் பிற பதவிகளையும் விட்டெறிந்தால் கூட்டமாக பாராளமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள். ஆனால் சம்பந்தர் ஐயாவைச் சேர்த்துக் கூட்டணி அமைத்தால் அரசியலமைப்பை மாற்றி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதற்கு. தமிழர்களின் ஆதரவுடன் மட்டும்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என ஒரு நிலைமை ஏற்பட்டால் பௌத்த தீவிரவாதிகளும் மகாசங்கத்தினரும் களத்தில் இறங்கி சிங்கள அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்துவார்கள்.

சம்பந்தர் ஐயா உங்கள் ஜட்ஜ்மென்ற் எப்போதும் தப்பு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...