Thursday 9 July 2015

புதிய ஆட்சியாளருக்கும் அடங்க மறுக்கும் பொக்கோ கரம்

நைஜீரியாவில் செயற்படும் மதவாத அமைப்பான பொக்கோ ஹரம் ஜுலை மாதம் முதலாம் திகதி இரவு ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியுள்ளது. வட கிழக்கு நைஜீரிய நகரான குக்கவாவில்  புனித ரம்ழான் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எண்பது பேர் இதில் படுகொலை செய்யப்பட்டனர். ஏழு மகிழுந்திலும் ஒன்பது விசையுந்திலும் வந்த பொக்கோ ஹரம் போராளிகள் பல பள்ளிவாசல்களில் இத்தாக்குதலை நடாத்தினர். இதற்கு முதல் நாள் அவர்கள் மேற்கொண்ட இன்னொரு தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஒரு படையினர் சோதனைச் சாவடியிலும் தாக்குதல் நடாத்தப் பட்டது. மூன்று தாக்குதல்களிலும் மொத்தம் 140 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள்ப் படத்தளபதி முஹம்மது புஹாரி நைஜீரியாவின் அதிபராகப் பதவி ஏற்றபின்னர் பொக்கோ ஹரம் அமைப்பு அடக்கப் படும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.  அவர் பதவி ஏற்று ஒரு மாதங்களில் பல தொடர் தாக்குதல்களை பொக்கோ ஹரம் அமைப்பினர் செய்துவருகின்றனர். மார்ச் மாதம் நடந்த நைஜீரியத் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனார்த்தன் பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தினார். அதை வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம என அவர் நம்பினார். பொக்கோ ஹரமும் அடக்கப் படவில்லை குட்லக் ஜொனார்த்தனும் வெற்றி பெறவில்லை. பொக்கோ ஹரம் அமைப்பினரின் தாக்குதலால் 15 இலட்சம் நைஜீரியர்கள் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெண்கள் 12 வயதுக்கு மேல் படிக்கக் கூடாது.
நைஜீரிய அரசு இசுலாமிய விதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். இவர்கள்  மேற்கத்தைய கலாச்சாரம், சமூக முறைமை போன்றவை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.  பெண்கள் 12 வயதிற்குப் பிறகு பாடசாலைக்குச் செல்லக் கூடாது என்ற கொள்கையால் உந்தப்பட்டு பொக்கோ ஹரம் அமைப்பினர் அவர்களைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். 2014-ம் ஆண்டு இருநூறு சிறுமிகளைப் பாடசாலையில் இருந்து கடத்திச் சென்ற போது பொக்கோ ஹரம் அமைப்பினர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தனர்.



நைஜீரியாவில் பின் தங்கிய இஸ்லாமியர்கள்
நவீனமான எதுவும் பொக்கோ ஹரம் அமைப்பினருக்குப் பிடிப்பதில்லை. மத சார்பின்மை என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அல்லாவின் போதனைகளை மீறி நடப்பவர்கள் எல்லை மீறியவர்களாகும் என்ற குரான் வாசகம் இவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. கார் குண்டு வெடிப்புக்கள், தற்கொடைக் குண்டு வெடிப்புக்கள் போன்றவற்றை நிறையச் செய்கின்றார்கள்.  ஆசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பொக்கோ ஹரம் அமைப்பினர் மிகவும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்கள். நைஜீரியாவில் கிறிஸ்த்தவர்கள் வாழும் பிரதேசங்கள் வளர்ச்சியடைந்தும் இஸ்லாமியர்கள் வாழும் பிரதேசங்கள் பிந்தங்கியும் இருப்பது பொக்கோ ஹரம் அமைப்பினருக்கான ஆதரவுக்கு ஏதுவாக இருக்கின்றது.

வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.  2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர். 2015-ம் ஆண்டு மே மாதம் சாட் நாட்டிலும் பொக்கோ ஹரம் அமைப்பினர் பல தாக்குதல்களைச் செய்தனர். அத்துடன் நிஜர் நாட்டிலும் உகண்டா நாட்டிலும் அவர்கள் பல தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

ஐ எஸ்ஸுடன் கை கோர்த்த பொக்கோ ஹரம்
ஐக்கிய அமெரிக்கா பொக்கோ ஹரம் அமைப்பினர் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் என்றும் இசுலாமிய அரசு என்றும் அழைக்கப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பிற்கும் பொக்கோ ஹரம் அமைப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு அண்மைக் காலங்களாக உருவாகியுள்ளதாக அஞ்சப்படுகின்றது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் திகதி அபுபக்கர் ஷெகௌவின் தலைமையில் இயங்கும் பொக்கோ ஹரம் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து விட்டதாக செய்திகள் முதலில் வெளிவந்தன. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருடனான இணைவு பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு அதிக நிதி, அதிக உறுப்பினர்கள், நவீன படைக்கலன்கள், சிறந்த பயிற்ச்சி போன்றவற்றை பொக்கோ ஹரம் அமைப்பினரால் பெற முடியும்.

ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்பட்டு வந்த ஐ எஸ் அமைப்பு லிபியா, எகிப்து, லெபனான், யேமன், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கும் தமது நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ளது. இதனால் பொக்கோ ஹரம் அமைப்பையும் அடக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. நைஜீரியப் படையினருக்கு அமெரிக்கப் படையினர் பயிற்ச்சி அளிக்கின்றனர். நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக அமெரிக்கா நைஜீரியாவிற்குப் படைக்கலன்கள் விற்பனை செய்வது அமெரிக்காவில் சட்ட விரோதமாகும். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி வாஷிங்டனுக்குப் பயணம் செல்ல விருக்கின்றார். இதன் பின்னர் அமெரிக்கா பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம்  என எதிர்பார்க்கப் படுகின்றது.

Sunday 5 July 2015

நெல்லியடி நாயகன் முதல் அத்தனை வேங்கைகளையும் போற்றுவோம்

கார்த்திகை மலர்கள் தேர்ந்தெடுத்து
மாலை தொடுமின்
நன்றியினை நெய்யாக்கி நினைவுத்திரியில்
நற்றீபம் வைமின்
ஈழமகளும் தமிழ்மகளும் கால மகளோடு
தியாகப் பண் பாடுமின்
வீர யாழெடுத்து தீர இசை கூட்டி
பக்க வாத்தியமிசைமின்
நெல்லியடி நாயகன் முதல்
அத்தனை தியாகிகளையும்
நினைவு கொள்மின் நினைவு கொள்மின்

புவியில் நிகரில்லாப் புண்ணியரைப்
போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும்
தாயகக் கனவோடு போன தனயரைப்
போற்றிப் துதித்தேற்ற வேண்டும்
எழுமின் இசைமின் ஏற்றிப் பாடுமின்
நஞ்சணி நெஞ்சினரை நாநிலம்
மறவாதிருக்க போற்றிப் போற்றிப்
பாடுமின் தொழுமின்

கோட்டையைப் பிடித்தமை பாடி
கொக்காவிலைச் சரித்தமை பாடி
கொக்கட்டிச்சோலையில்
மார்தட்டி நின்றமை பாடி
சாஹரவர்த்தனாவை மூழ்கடித்தமை பாடி
நெல்லியடியில் தவிடுபொடியாக்கியமை பாடி
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கியமை பாடி
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுத்தமை பாடி
சீக்கியைரை சிதறடித்தமை பாடி
கூர்காக்களை கூறு போட்டமை பாடி
நீழ்கடலெங்கும் நிமிர்ந்து நின்றமை பாடி
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கியமை பாடி
அம்பாந்தோட்டையில் துணிவோடு தூக்கியமை பாடி
அநுராதபுரத்தில் எல்லாளனாய் நின்றமை பாடிப் பாடிப்
போற்றித் துதிப்போமே துதிப்போமே.

கனியணி மரங்கள் ஆட ஆட
கடலலை ஓயாமல் ஆட ஆட
காற்றலை இசையோடு ஆட ஆட
தீபச் சுடர்கள் ஒளியோடு ஆட ஆட
கார்த்திகை மலர்களும் ஆட ஆட
வேங்கைகளும் வீரமாய் ஆட ஆட
எம் கைகள் உயர்தி பிடித்து
புண்ணியர் புகழ் பாடி ஆடுவோமே

   
படைக்கலன்கள் தோள்களில் ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர்கள் கூடி ஆர்ப்ப ஆர்ப்ப
நாட்டுக்கெனப் பிறந்தவர் ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் புகழை ஆர்ப்ப ஆர்ப்ப
கடலோடு காற்றும் ஆர்ப்ப ஆர்ப்ப
வானோடு மண்ணும் ஆர்ப்ப ஆர்ப்ப
நாளும் மறக்கக் கூடா நாயகரைப்
போற்றிப் பாடி ஆர்ப்போமே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...