Friday 19 June 2015

ஜெருசலம் யாருக்குச் சொந்தம்?

அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு வகையில் முக்கியத்துவம் பெற்றது. முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் செயற்பாட்டில் எந்த அளவு தூரம் அதன் பாராளமன்றம் தலையிடலாம் என்பது. இரண்டாவது ஜெருசலம் தனக்குச் சொந்தமானது என இஸ்ரேல் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மையானது. ஏப்ரகாமிய மதங்கள் எனக் கருதப்படும் யூத மதம், கிருஸ்த்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகிய மூன்றிற்கும் ஜெருசலம் நகர் முக்கியமானதாகும்.

2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.

இஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசும் இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாக வெளிப்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருந்தது. அதே வேளை ஜெருசலம் இந்த இரு அரசுகளுக்கும் சொந்தமில்லாத ஒரு தனிப்பிராந்தியமாக ஐக்கிய அமெரிக்க அரசு கருதி வருகின்றது. அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.  2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய கடவுச்சீட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்ட ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தில் உள்ளது போல் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடப்படுவதைத் தான் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய சட்டம் அமெரிக்க அரசமைப்பு குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வழங்கிய உரிமையை மீறுவது என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. அவருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கடவுட்சீட்டு என்பது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடவுட்சீட்டுக்குரியவர் தொடர்பான தகவல் பரிமாற்றப் பத்திரம் என்றும் அதில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.

ஜெருசலம் நகர்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்த போது எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுடன் தூவரக உறவைக் கொண்ட நாடுகள் எல்லாம் தமது தூதுவரகங்களை டெல் அவீவில் மட்டுமே திறந்தன.

 பலஸ்த்தீனியத் தேசியவாதம்
பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.

இஸ்ரேலின் உருவாக்கம்
தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.

அரபுக்களின் ஆத்திரம்
இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.ஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார். அதன் மூலம் பிறந்த  ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.


இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம். ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது. சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். இரத்தக் களரியையே கடந்த காலமாகக் கொண்ட புனித நகரான ஜெருசலம் இனிவரும் காலங்களிலும் மூன்று புனித மார்க்கங்களில் இரத்தைக்கறை பூசும் என்பது நிச்சயம்.

Monday 15 June 2015

துருக்கித் தேர்தலின் புவிசார் அரசியலும் குர்திஷ் மக்களின் போராட்டமும்.

உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.

நேட்டோத் துருக்கி
நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார். அவர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சியை விரும்பினார். லிபியாவிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் திரிப்போலியில் நடத்தும் ஆட்சிக்கு உதவுகின்றார். சுனி முஸ்லிமான எர்டோகான் மத்திய கிழக்கில் தான் ஒரு சுனி முஸ்லிம் கூட்டணியில் ஒருவராகத் தன்னைக் காட்டாமல் சியா மற்றும் சுனி முஸ்லிம்களிடையேயான முறுகலின் நடு நிலையாளராகக் காட்ட விரும்புவர். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எர்டோகான் ஒத்துழைக்க மறுத்தார். துருக்கியில் உள்ள நேட்டோவின் படைக் கூட்டமைப்பு முறைமயையும் துருக்கிய விமானத் தளங்களையும் அமெரிக்கா பாவிக்க அனுமதி மறுத்தார் அவர். மத்திய கிழக்குப் பிராந்தியப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டும் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக முன்னிறுத்த விரும்புகின்றது.

மேற்கே போன துருக்கி
மேற்கு நாடுகளுடன் இணைந்த ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

துருக்கியின் அடக்குமுறை ஆட்சியாளர்
ஊடகங்களுக்கு எதிராகவும் எர்டோகானின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருந்தன. அவரை எதிர்க்கும் பல ஊடகங்கள் மிரட்டப்பட்டன. மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ஊடகர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச் சாட்டுக்கள் புனையப்பட்டன. இதனால் அவருக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் துருக்கிய எதிர்க் கட்சிகள் இருக்கவில்லை. முன்னணி எதிர்க் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி இந்த முறைத் தேர்தலில் கடும் போட்டியைக் காண்பித்தது. எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் துருக்கியின் அரசமைப்பை மாற்றி ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவராகத் தன்னை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இல்லை.

எதிர்பார்த்தது கிடைக்கவில்லை

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துருக்கியப் பாராளமன்றத்தின் தேர்தல் 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. ஊழல் மிக்க ஆட்சியை எர்டோகான் செய்கின்றார் என 2013-ம் ஆண்டு ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் அடக்கினார். நீதித் துறையில் எர்டோகான் தலையிடுவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இடது பக்கம் சாய்ந்த குர்திஷ் மக்களின் வாய்ப்பு

ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி  13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர்.

குர்திஷ் மக்களின் சோக வரலாறு

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாத்திருந்திருக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படையாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சியதால் எந்த ஒரு மனித நேய நடவடிக்கையையும் துருக்கி செய்யவில்லை. உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்¬களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர். முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்¬ப¬டிக்¬கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்¬டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். துருக்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பு நாடாக இணையும் வரை குர்திஷ் மொழி பொது இடங்களில் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.

விடிய இன்னும் நேரமிருக்கு

தற்போது நடந்த தேர்தலில் எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாதபடியால் அது 45 நாட்களுக்குள் ஒரு கூட்டணி அரசை அமைக்க வேண்டும். அல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும். மறு தேர்தல் நடந்தால் குர்திஷ் மக்களின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறி தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். இதனால் குறைந்த அளவான 10 விழுக்காடு வாக்கு அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் குர்திஷ் மக்கள் படைக்கலப் போராட்டத்திற்கு மீண்டும் தள்ளப் படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...