Thursday 11 June 2015

அமெரிக்காவும் வியட்னாமும் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் வியட்நாமும் ஒன்றை ஒன்று பாதுக்காக்கும் உடன்படிக்கைக செய்து கொண்டன. ஐக்கிய அமெரிக்கா சார்பில் பாதுகாப்புத் துறைச் செயலர்  அஸ்டன் கார்ட்டரும் வியட்னாம் சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர்ஃபுங் குவாங் தானும்  "பாதுகாப்பு உறவு தொடர்பான இணை நோக்குக் கூற்று" (Joint Vision Statement) என்னும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று போர் புரிந்த ஐக்கிய அமெரிக்காவும் வியட்னாமும் இப்போது சீனாவைப் பொது எதிரியாகக் கொண்டு ஒன்று பட்டு வருகின்றன.  சென்ற ஆண்டு வியட்னாமிற்கு எதிரான படைக்கல விற்பனைத் தடையை அமெரிக்கா தளர்த்தி இருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு 2011- ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பாணையின் படி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வியட்னாம் தனது படைக்கலன்களில் 90 விழுக்காட்டை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. வியட்னாமிற்கு அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயல்கின்றது. ஐக்கி நாடுகள் சபையின் பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை வியட்னாமியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. ஒரு மனித உரிமை மீறும் பொதுவுடமை நாடாகக் கருதப்படும் வியட்னாமின் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் பயிற்ச்சி அளிப்பதா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஐநா பணி என்ற போர்வை பாவிக்கப்படுகிறது.


ஐக்கிய அமெரிக்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவின் இருபதாம் ஆண்டு நிறைவில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு ஆழமாக்கப்படும் என்றார் அமெரிக்க ப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஷ்டன் கார்ட்டர். வியட்னாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்கள் போல் தடையாக இருக்கின்றது.

ஆசிப பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனிமைப் படுத்தி தனது நட்பு வட்டத்தைப் பெருக்க முயலும் அமெரிக்காவிற்கு வியட்னாமின்  உறவு முக்கியமானதாகும். 1979-சினாவும் வியட்னாமும் போர் புரிந்தன. 2014-ம் ஆண்டு மே மாதம் சீனக் கப்பல் ஒன்று  வியட்னாம் தனது எனச் சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பினுள் எரிபொருள் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டது. அதைத் தடுக்கச் சென்ற வியட்னாம் கப்பலை சீனா மூழ்கடித்தது. இது சீனாவிற்கு எதிரான உணர்வை வியட்னாமில் தூண்டியது. வியட்னாமில் உள்ள சீன முதலீகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. பின்பு சீன எரிபொருள் ஆய்வுக் கப்பல் இரண்டு மாதங்களில் சீரற்ற கால நிலை காரணமாக விலகிச்சென்றது. வியட்னாமின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். வியட்னாமில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உள்ளீடுகளிற்கு சீனாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பல சீன உட்கட்டுமானங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. சீனாவின் மிரட்டல்கள் அத்து மீறல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க வியட்னாமிற்கு மாற்று வழி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க இராசதந்திரிகள் வியட்னாமிற்குப் பயணம் செய்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் வியட்னாமின் கடற்படைத் தலைமையகத்திற்கும் ரோந்துபடைத் தலைமையகத்திற்கும் சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வியட்னாமிற்கு போர்ப்படகுகளை வழங்க முன்வந்தது. இவற்றைத் தொடர்ந்து சீனப் பொதுவுடமைக் கட்சி யின் உயர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் வியட்னாமிற்குச் சென்றார். ஆனாலும் சீன வியட்னாம் உறவு சீரடையவில்லை. இதன் பலனாக அமெரிக்காவுடன் வியட்னாம் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்துள்ளன.

Monday 8 June 2015

லிபியாவிலும் கால் வைத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு

ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது மும்மர் காடாஃபியின் கொலைக்குப் பின்னர் பல கூறுகளாகப் பிளவு பட்டிருக்கும் லிபியாவை கைப்பற்றுவது இலகு. இரண்டாவது லிபியாவின் எரிபொருள் வளம். மூன்றாவது லிபியாவைக் கைப்பற்றினால் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினரால் இலகுவாகத் தமது போராளிகளை ஐரோப்பாவிற்கு நகர்த்த முடியும்.

கடாஃபியின் கோட்டையில் ஐ எஸ் ஐ எஸ்

முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபியின் கோட்டையாகக் கருதப்பட்ட  சேர்ட் நகரின் விமான நிலையத்தை ஐ எஸ் ஐ எஸ் என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் மே மாதம் 29-ம் திகதி வெள்ளிக் கிழமை கைப்பற்றினர். தலைநகர் திரிப்போலியில் ஆட்சியில் இருக்கும் பன்னாட்டு சமூகத்தால் அங்கிகரிக்கப்படாத மொஹமட் அல் ஷமியின் ஃபஜிர் லிபியாப் படையினர் ஐ எஸ் ஐ எஸ் படையினரின் தக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடினர். திரிப்போலியில் இருந்து 450 கிலோ மீட்டர்(280 மைல்கள்) தொலைவில் உள்ள சேர்ட் விமான நிலையத்துடன் ஒரு ஃபஜிர் லிபியாப் படையினர் முகாமும் இருந்தது. படையினர் விமான நிலையத்தில் இருந்து எல்லா உபகரணங்களையும் தம்முடன் கொண்டு சென்று விட்டனர். பாவனைக்கு உதவாத ஒரு விமானத்தை மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். சேர்ட் நகரைக் கைப்பற்றிய ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மிசுரட்டா நகரின் மீது தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

லிபிய விடிவும் பெருமை நடவடிக்கையும்
கேணல் மும்மர் கடாஃபி கொலை செய்யப் பட்ட பின்னர் லிபியாவில் உள்ள இனக் குழுமங்களிடையே மோதல்கள் தீவிரமாகின. தற்போது இரு பிரிவினர் லிபியாவின் எண்ணெய் வளங்களையும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கைப்பற்றுவதில் போட்டி போடுகின்றனர். ஒரு பிரிவினர் திரிப்போலியில் இருந்து ஓர் அரசையும் மற்றப்பிரிவினர் டொப்ரக் நகரில் இருந்து ஓர் அரசையும் நடாத்துகின்றனர். திரிப்போலியில் இருப்பவர்கள் தம்மை "லிபிய விடிவு" என அழைக்கின்றனர். இவர்களின் படையே ஃப்ஜில் லிபியாப் படை. டொப்ராக்கில் இருப்பவர்கள் தம்மை "பெருமை நடவடிக்கை" என அழைக்கின்றனர். லிபிய விடிவினர் பெருமை நடவடிக்கையினரை கடாஃபி ஆதரவாளர்கள் என்றும் பெருமை நடவடிக்கையினர் லிபிய விடிவினரை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கின்றனர். கடாஃபியின் வீழ்ச்சிக்குப்பின்னர் தெரிவு செய்யப் பட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மீண்டும் கடாஃபி ஆதரவாளார்கள்
டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசினர் மும்மர் கடாஃபியின் ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்வதற்கான தடைகளை நிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. திரிப்போலியில் இருக்கும் அரசு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குச் சார்பானது. இந்த அரசுக்கு துருக்கியும் கட்டாரும் ஆதரவு வழங்குகின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கியும் சவுதி அரேபியாவும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் துருக்கியும் கட்டாரும் சிரியாவில் அல் அசாத்திற்குப் பின்னர் யார் அரசாள வேண்டும் என்பதில் சவுதி அரேபியாவின் கொள்கையுடன் முரண்படுகின்றன.

குழம்பிய இளைஞர்கள்
லிபிய அரபு வசந்தத்தின் போது கிளர்ந்து எழுத்த இளைஞர்கள் இப்போது யாருக்காகப் போராடுகிறோம் யாருக்கு எதிராகப் போராடுகின்றோம் என்பது தொடர்பாகப் குழப்ப நிலையில் உள்ளனர்.  முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் படையினர் அவரது மறைவிற்குப் பின்னர் லிபியாவிலும் எகிப்து போன்ற அயல் நாடுகளிலும் பதுங்கியிருந்தனர். அவர்கள் இப்போது ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து போராடுகின்றனர். சேர்ட் நகர் இப்போது கடாஃபியின் ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என மிஸ்ராட் நகரவாசிகள் நம்புகின்றனர். மே மாதம் 30-ம் திகதி சனிக்கிழமை பிரிகேட் - 166 இன் படையினர் சேர்ட் நகரத்தின் மேற்குப் புறமாக உள்ள ஐ எஸ் ஐ எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தினர். ஞாயிறு காலைவரை சண்டை தொடர்ந்தது. ஐ எஸ் ஐ எஸ் போராளிகள் கார் வெடி குண்டு மூலம் தற்கொடைத் தாக்குதல் நடாத்தினர்.


பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.

லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.  கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். 

கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.

கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.   .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.

பிராந்திய முரண்பாடு

லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்தது.


லிபியாவின் படைத்துறைக் காவல் அதிபர் (head of Libya's military police) சட்டத்துறை தலைமை வழக்குத் தொடுநர், இந்திய மருத்துவர், இப்படிப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்படுகின்றார்கள். கடாஃபிக்குப் பிந்திய லிபியாவில் எவரும் பாதுகாப்பாக இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...