Saturday 30 May 2015

வெள்ளை மாளிகையில் பர்மிய இனக் கொலையாளி: தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.

இது 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இட்ட பதிவு:

பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது. 

பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் அதிபர் தெயின் செயின் இருந்த செய்தி எமது காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தெயின் செயினைச் சந்தித்துள்ளார். இதுவரை காலமும் படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி  மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. 

ஒரு சில மாதங்களின் முன்னர் தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். 

ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.

கச்சின் மாகாணத்தில் இனக்கொலை
பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள்  செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். )  போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்). 

இத்தனைக்கும் மத்தியில் ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயினை வெள்ளை மாளிகையில் ஏன் சந்தித்தார்? ஒரு அரசியல் ஆய்வாளர் இப்படிச் சொன்னார்:
  • The reopening of Burma to the Western world is a blow to Chinese influence in Southeast Asia. For much of the past 20 years China was one of the big investors in Burma.
பர்மிய அரசு சீனாவில் இருந்து விலகி மேற்கு நாடுகளின் சார்பாக மாறியதுதான் காரணம். சீனப் பிடியில் இருந்து இலங்கையில் சீன ஆதிக்கம் அகற்றப்படுமானால் நாளை ராஜ்பக்ச சகோதரர்கள் வெள்ளை மாளிகையில் விருந்து உண்பார்கள்.

Tuesday 26 May 2015

மோடி மேம்படுத்துவது இந்தியாவின் வர்த்தகத்தையா? அல்லது வர்த்தகர்களையா?

இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமது பிரச்சனைகளை ஒரு புறம் வைத்து விட்டு இரு நாடுகளும் தமது பொருளாதரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடியின் சீனப் பயணத்தைப் பயன்படுத்தின. சீனா வலுவாக இருக்கும் துறைகளில் நாம் சீனாவின் சேவைகளைப் பெற விரும்புகின்றோம் என்றார் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது சீனப் பயணத்தின் போது. மேலும் அவர் இந்தியாவின் அபிவிருத்தியில் சீனாவின் ஈடுபாட்டையும், வாய்ப்பையும், திறனையும் இந்தியாவில் காட்டும் படி வேண்டுகின்றோம் என்றார்.

மோடியின் மூன்று நாள் (மே மாதம் 14,15,16-ம் திகதிகள்) சீனப் பயணத்தை முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்த சீனாவும் இந்தியாவும் முயன்றன.  உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளரும் நாடு என்ற சீனாவின் இடத்தை இந்த ஆண்டு இந்தியா பிடிக்க இருக்கும் வேளையில் மோடியின் சீனப் பயணம் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. 2014-ம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்குப் பயணம் செய்த வேளை சீனப் படைகள் இந்தியாவினுள் ஊடுருவி இருந்தன.  ஆனால் மோடியின் சீனப் பயணத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக் கொண்டது. இனிவரும் காலங்களில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியமான ஒன்றாகும்.

சண்டை சண்டையாக இருக்கட்டும் வியாபாரத்தைக் கவனி
உலகில் எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்று பார்க்கும் போது ஒரு நீண்ட வரலாறு இருக்கும். ஆனால் சீன இந்திய இடையிலான உறவு வரலாறு ஒப்புவமை இல்லாமல் நீண்டது எனச் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும் ரோமப் பேரரசு மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த இடங்களைப் பிடித்தன. இந்தியா மீண்டும் உலகத்தில் பெரிய பொருளாதார நாடாக வரத் துடிக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பவை:

1. அருணச்சலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம்
2. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையிலான 4,000கிலே மீட்டர் எல்லைப் பிரச்சனை.
3. சீனா கைப்பற்றிய இந்திய நிலப்பரப்பு
4. பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரூடாக சீனா ஒரு பெரும் தெருவை அமைப்பது
5. தீபெத் தொடர்பாகவும் தலாய் லாமா தொடர்பாகவும் இரு நாடுகளின் முரண்பட்ட நிலைப்பாடுகள்.

இவை எல்லாவற்றிலும் மேலாக இரு நாடுகளிற்கும் இடையில் உள்ள வர்த்தகச் சமநிலை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.

மெதுவாகச் செல்லும் புல்லட் தொடரூந்து.
மோடியின் சீனப் பயணத்திற்கு முன்னர் புது டில்லியில் இருந்து சென்னைக்கான புல்லட் எனப்படும் மிக விரைவு தொடரூந்துத் திட்டத்தை நிறவேற்றுவதைத் துரிதப் படுத்தும் படி சீனா இந்தியாவிடம் வேண்டு கோள் விடுத்தது. சீனா இந்தியாவில் செய்யவுள்ள இத் திட்டம் 36பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையதாகும். நாளொன்றிற்கு இரண்டரைக் கோடி மக்கள் பாவிக்கும் இந்தியத் தொடரூந்துச் சேவையை மேம்படுத்தும் மோடியின் திட்டத்தில் தான் பங்கு பற்றி இலாபம் ஈட்டுவது சீனாவின் நோக்கமாகும். முன்னோடித் திட்டமான சென்னையில் இருந்து பெங்களூருவிற்கான தொடரூந்துப் பாதையை மேம்படுத்தும் திட்டத்தையாவது உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்புகிறது.

சீன் போட்டு ஃபில்ம் காட்டத் தவறாத மோடி
சீனாவில் உரையாற்றும் போது "இருதரப்பினருக்கும் இடையிலான பங்காண்மையை முழுமையாகச் செயற்படுத்தமுடியாமல் பின் இழுப்பவைகள்  பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவையை நான் இங்கு அழுத்திக் கூற விரும்புகின்றேன். இந்தியாவிற்கென்று சில மனக் குறைகள் உண்டு." என்றார் மோடி.  இந்தியாவிற்கும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட மோடியின் உரையில் "சீனா இருதரப்பு உறவை கேந்திரோபாயமாகவும் நீண்டகால அடிப்படையிலும் நோக்க வேண்டும்." என்பதையும் தெரிவித்தார். மோடியில் உரை வழமையாக ஆசிய நாட்டுத் தலைவர்கள் வேறு நாடுகளில் ஆற்றும் உரையுடன் ஒப்பிடுகையில் சற்றுக் கடினமான தொனியில் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவர் இந்தியர்களுக்குச் "சீன் போடுவதிலும் ஃபில்ம் காட்டுவதிலும்" வல்லவர். அதனால் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் தன் உரையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

சமமடையாத வர்த்தகச் சமநிலை
2000-ம் ஆண்டு இரண்டு பில்லியன் டொலர்களாக இருந்த சீன வர்த்தக வர்த்தகம் தற்போது 75பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது சீன அமெரிக்க வர்தகத்தின் பெறுமதியான 569 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில் சிறிதளவாகும். இரு நாடுகளும் 2015-ம் ஆண்டு தமக்கிடையிலேயான வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக உயர்தத் திட்டமிட்டுள்ளன.  இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் ஒன்றுக்கு ஒன்றைத் தேவையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாக இருக்கின்றது. 2014-15-ம் ஆண்டிற்கான இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60.39பில்லியன் டொலர்களாகவும் சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 11.95 பில்லியன் டொலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா வர்த்தகம் செய்யும் முன்னணி 25 நாடுகளில் 16 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்கக் குறைவானதாகும். ஈராக்குடனான இந்திய வர்த்தகத்தில் 93 விழுக்காடு இந்தியா செய்யும் இறக்குமதியாகும். இந்த விழுக்காடு சுவிஸ்ற்லாந்துடன் 83ஆகவும் ஒஸ்ரேலியாவுடன் 62ஆகவும் இருக்கின்றது. இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவற்றதாகும். தனது ஒரு பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான தரம் மிக்க பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கின்றது. இதனால் இந்தியாவின் இறக்குமதி அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனா தனது தரம் குறைந்த உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனக் குறியீடு இட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் சீனா உலக அரங்கில் இந்திய உற்பத்திப் பொருட்களை பற்றிய தாழ்வான எண்ணத்தை உருவாக்க முயல்வதுடன் ஆபிரிக்காவில் உள்ள வறிய மக்களிடம் தனது வர்த்தகத்தைச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தியா தனது மருந்துகளையும் இறைச்சி வகைகளையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க முயல்கின்றது.

ஏற்றுமதியில் பின்தங்கிய இந்தியா
சீனா இந்தியாவிற்கு தான் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. இவற்றில் தொலைதொடர்புச் சாதனங்களும், கணனி வன்பொருட்களூம், தொழிற்துறை இயந்திரங்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்தியா சீனாவிற்கு பெரும்பாலும் மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. அவை முக்கியமாக உள்ளவை பருத்தி, செப்பு, இரும்புத்தாது, பெற்றோலியப் பொருட்களாகும். உலக அரங்கில் ஏற்றுமதித் துறையில் சீனா போட்டி போடத் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்தியா ஏற்றுமதித் துறையில் உலக அரங்கில் போட்டி போடத் தொடங்கியது. சீனர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய இராச்சியம் முதலாம் இடத்திலும் சீனா பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் சீனாவிலும் பார்க்க மலேசியா போலாந்து ஆகிய நாடுகள் அதிக முதலீடு செய்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியம் 21.5பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் சீனாவின் முதலீடு அரை பில்லியன் டொலர்களிற்கும் குறைவானதாகும்.

பாக்கிஸ்த்தானிலும் சிறிய இந்தியா
மோடியின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 22 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இந்தியர்கள் தமது சாதனைகளை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள். சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்து கொண்ட 46 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையுடன் ஒப்பிடுகையில் சிறிதாகும். இதை காங்கிரசுக் கட்சியின் மணிசங்கர ஐயர் பெரிதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வர்த்தகர்களின் மேம்பாடுகள்
மோடியின் சீனப் பயணத்தின் போது பார்த்தி எயார்டெல் நிறுவனத்திற்கு சீன அபிவிருத்தி வங்கி இரண்டு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உடன்பட்டது. அத்துடன் பார்த்தி எயார்டெல் நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துடன் கேந்திரோபாய ஒத்துழைப்புச் செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் அம்பானிகளின் எஸ்ஸார் ஓயில் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் குரூப்பிற்கும் 1.2பில்லியன் டொலர்கள் கடனை சீன அபிவிருத்தி வங்கி கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அடானிக்குச் சொந்தமான சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் தொழில் ஆரம்பிப்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மோடியின் சீனப் பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டிலும் பார்க்க ஆளும் கட்சிக்கு தேர்தலில் உதவி செய்த வர்த்தகர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...