Saturday 23 May 2015

மணற்புயலைப் பயன்படுத்தி ஐ எஸ் அமைப்பினரின் அதிரடித் தாக்குதல்கள்

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும் நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் அரைப்பங்கு நிலப்பரப்பு இப்போது அவர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்த்தானில் பௌத்த புரதானச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல், ஈராக் நகரான மொசுலில் சியா முஸ்லிகளின் மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல் பல்மைரா நகரில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய புரதானச் சின்னங்கள் அழிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹொம்ஸ் மகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்மைரா நகர் தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிரியாவின் மையப் பகுதியில் உள்ள பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பினர் மே மாதம் 20-ம் திகதி தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சிரியாவின் 95000 சதுர மைல்கள் இப்போது ஐ எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் 14 மாகாணங்களில் ஒன்பதில் ஐ எஸ்ஸின் ஆதிக்கம் நிலவுகின்றது. சிரியாவின் முக்கிய தெருக்கள் பலவற்றை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் பல எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களையும் தமது கட்டுபபட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்

ஒரு நகரை ஐ எஸ் அமைப்பினர் சிரியாவில் தமது முற்று முழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இது முதற் தடவையாகும். ஐ எஸ் படையினர் பல்மைரா நகரைக் கைப்பற்றியதில் இருந்து சிரிய விமானப் படைகள் கண்மூடித்தனமாக அங்கு விமானத் தாக்குதல்கள் நடாத்தின.

மே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றியமை ஈராக்கிய அரச படையினருக்க்குப் பேரிழப்பாகும். ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது.  அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

ஈராக்கில் ரமாடியிலும் சிரியாவில் பல்மைராவிலும் செய்த தாக்குதல்கள் மூலம் ஐ எஸ் அமைப்பினர் போரியலில் தமது திட்டமிடுதலும் நிறைவேற்றுவதிலும் உள்ள திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் சவுதி அரேபியா, அல்ஜீரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளிலும் தமது அமைப்பை விரிவுபடுத்தியுள்ளனர். . ஏற்கனவே அவர்களது செயற்பாடுகள் எகிப்து சூடான், லிபியா, மாலி, நைஜீரியா, ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ளது. . லிபியா ஐ எஸ் அமைப்பின் முக்கிய பயிற்ச்சி நிலையமாக மாறியுள்ளது. சிரியாவில் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களை நோக்கி அது தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் குடிசார் நிர்வாகத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். நீர் விநியோகம், தெரு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

சதாம் ஹுசேய்னின் படையில் இருந்தவர்களும் முன்னாள் அல் கெய்தாப் போராளிகளும் ஐ. எஸ் அமைப்பில் இணைந்திருப்பதால் அவர்களால் சிறப்பாகப் போர் புரிய முடிகின்றது. அமெரிக்கப் படைத்தளபதி Gen Martin Dempsey அவர்களின் கருத்துப்படி ரமாடியாவில் இருந்து ஈராக்கிய அரச படைகள் போர் மூலம் வெளியேற்றப் படவில்லை அவர்கள் ஐ எஸ் படையினர் வருவதைக் கண்டு தாமாக விலகிக் கொண்டார்கள். சிரியாவில் பல்மைரா நகரைக் கைப்பற்ற சில நூறு ஐ எஸ் போராளிகள் மட்டுமே ஈடுபட்டனர். ஈராக்கில் டிக்ரிட் நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீட்ட பின்னர் ஐ எஸ் போராளிகளின் முடிவு ஆரம்பித்து விட்டது என்ற கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சென்ற ஆண்டு மொசுல் நகரைக் கைப்பற்றியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்.  

ரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியது  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு விழுந்த பேரிடி என அமெரிக்க எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கப் படையினரால் பயிற்றுவிக்கப் பட்ட ஈராக்கிய அரச படையினர் மீண்டும் தமது தாங்கிகளையும், கவச ஊர்திகளையும், எறிகணைகளையும்  கேந்திர நிலைகளையும் விட்டு தப்பி ஓடி உள்ளனர். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஈராக்கியப் படையினரிடமிருந்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர். அப்போது அவர்கள் தம்மிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கிய அரச படையினரைச் சின்னா பின்னப் படுத்தினர்.

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. அப்போது குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார். அதன் பின்பு குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா அமைப்பின் போராளிகள் மிகவும் தீரமாகப் போராடி ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஈரானும் ஈராகிய அரச படையினருக்கு உதவி செய்து வருகின்றது. ஈராக்கில் இப்போது ஆட்சியில் இருப்பது சியா முஸ்லிகளாகும். அவர்களை எதிர்க்கும் ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைக் கொண்டது. இதனால் சியா முஸ்லிம் நாடான ஈரான் ஈராக்கிய அரச படைகளுக்கு உதவி செய்து வருகின்றது.

ராமாடி நகர் சுனி முஸ்லிம்களின் புரதான நகராகும்.
ஐ எஸ் அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள எரி பொருள் வளமிக்க மொசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் கடந்த ஓர் ஆண்டாக திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் ஐ எஸ் அமைப்பினர் ரமாடி நகரைக் கைப்பற்றியுள்ளனர்.
ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு "மக்களாட்சியை" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருந்தார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது.பின்னர் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆதரவுடன் ஹைத அல் அபாடி 2014இல் ஈரானின் தலைமை அமைச்சர் ஆனார். இவருக்கு ஈராக்கில் வாழும் சுனி, சியா மற்றும் குர்திஷ் மக்களின் ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கா நேரடியாகப் படைக்கலனகளை வழங்கியது. அத்துடன் ஈராக்கிய அரச படையினருக்குப் பயிற்ச்சி வழங்க அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர். யஷீதியர்களுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பினர் அட்டூழியங்கள் செய்யத் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria    என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசு ஒன்றைப் பிரகடனம் செய்ததில் இருந்து அதன் பெயர் ஐ எஸ் எனப் பரவலாக அழைக்கப்படுகின்றது.

சிரியாவிலும் ஈராக்கிலும் இருக்கு சியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இருக்கின்றது. இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஐ எஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் ஐ எஸ் அமைப்பினருக்கு சவுதியில் இருந்து பணம் நிறையக் கிடத்தது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடாத்துகின்றது. சவுதியில் உள்ள பள்ளிவாசலில் மே மாதம் 22-ம் திகதி சியா முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமது மகான்  இமாம் ஹுசேய்னின் பிறந்தநாளிற்கான தொழுகை செய்து கொண்டிருக்கும்போது ஒரு தற்கொடைத்தாக்குதல் நடாத்தப் பட்டது. இதற்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். சவுதியில் நடாந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளது இதுவே முதற்தடவையாகும். வீரச்சாவு வேண்டிய தமது போராளி ஒருவர் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்து மாவீரராகியுள்ளார் என்கின்றது ஐ எஸ் அமைப்பு. 12 விழுக்காடு சியா முஸ்லிம்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் சியா முஸ்லிம்கள் தமக்கு அதிக உரிமைகள் வேண்டிப் போராடி வருகின்றார்கள். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சியா முஸ்லிகளின் பேரணி ஒன்றில் கண்மூடித்தனமாக இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். அதற்கு யாரும் உரிமை கோரவில்லை.

ஈராக்கிலும் சிரியாவிலும் இரு நகரங்களைக் கைப்பற்றியததைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கை கண்டனத்துக்கு உள்ளாவதுடன் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது

Wednesday 20 May 2015

அடங்க மறுக்கும் புட்டீன்

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளை என்றுமே இல்லாத பெரும் படை அணிவகுப்புடன் இரசியா நினைவு கூர்ந்துள்ளது. மே மாதம் 9-ம் திகதி நடந்த அணிவகுப்பில் 16,000படையினரும், 200 தரை ஊர்திகளும், எவுகணை எதிர்ப்பு முறைமைகளும், கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணைகளும், 150 வானூர்திகளும் பங்கு பற்றின. உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகளுடன் பெருமளவு முரண்பட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் இந்த அணிவகுப்பு மேற்கு நாடுகளுக்கு சவால் விட்டதுடன் இரசியர்களுக்கு நம்பிக்கையும் தேசப்பற்றையும் ஊட்ட முயன்றது.

புறக்கணித்த மேற்கும் பங்குபற்றிய கிழக்கும்
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது.

அசைய மறுக்கும் புட்டீன்
உக்ரேன் விவகாரத்தின் பின்னர் உருவான நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க 2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இரசியா இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்திருந்தார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்தது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்தது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார். இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும். ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15,550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.

இரசியாவின் பொருளாதாரம்

சரிந்த எரிபொருள் விலையும் பொருளாதாரத் தடைகளும் இரசியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. 2015 ஏப்ரல் மாதம் இரசியாவில் ஊழியர்களுக்கான ஊதியக் கொடுப்பனவு நிலுவை 2.9பில்லியன் ரூபிள் (அதாவது 56பில்லியன் டொலர்கள்) ஆக இருந்தது. இரசியாவின் பல பாகங்களில் இதனால் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்றும் உலகின் முன்னணிப் படைக்கலன் ஏற்றுமதி நாடுகளாக இருக்கின்ற போதும் இரசியா படைக்கலன் ஏற்றுமதித் திறனை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படைக்கல ஏற்றுமதியில் சீனா, ஜேர்மனி, உக்ரேன் ஆகிய நாடுகளிடமிருந்து இரசியா கடும் போட்டியை எதிர் நோக்குகின்றது. இரசியாமீது மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது. இரசியாவின் பொருளாதாரம் படைக்கல ஏற்றுமதியிலும் தங்கியிருக்கின்றது. கடந்த 11 ஆண்டுகளில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்திருந்தது. 2014-ம் ஆண்டிற்கான இரசியப் படைக்கல ஏற்றுமதி 15.5பில்லியன் டொலர்களாக இருந்தது. தற்போது இரசியாவிடம் 48 பில்லியன் படைக்கல ஏற்றுமதிக்கான உத்தரவு உள்ளது. சரிந்த எரிபொருள் விலை தற்போது ஓரளவிற்கு உறுதியான நிலையை அடைந்தமை இரசியாவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 5 விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 விழுக்காடு மட்டும் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலைவாசி 17 விழுக்காடாக இருக்கின்ற போதும் அதன் அதிகரிப்பு விகிதம் குறைவடைகின்றது. இரசிய ரூபிளின் பெறுமதி டொலருக்கும் யூரோவிற்கும் எதிராக அதிகரிக்கின்றது. இரசியாவின் மைய வங்கி சிறப்பாகச் செயற்பட்டு பொருளாதாரத்தை உறுதிப் படுத்துகின்றது என்பதை மேற்கத்திய பொருளியல் வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சீனாவை நெருங்கும் இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு அருகில் சீன அதிபன் சி ஜின்பிங் அமர்ந்திருந்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்து விட்டது என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் இரசியாவுடன் 32 இருதரப்பு உடன்படிக்கைகளிள் கையொப்பமிட்டார். ஒரு நாட்டின் இணையவெளிமீது மற்ற நாடு ஊடுருவல் செய்வதில்லை என்பதும் இந்த உடன்படிக்கைகளில் ஒன்றாகும். அத்துடன் இரு நாடுகளும் இணைந்து மத்திய தரைக்கடலில் ஒரு போர் ஒத்திகையையும் நடாத்தின. நாம் ஒன்றுபட்டால் வலுவடைவோம் பிளவு பட்டால் வலுவிழப்போம் என்றார் சீன அதிபர். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை நெருக்கமடையச் செய்வது அமெரிக்காவின் உலக ஆதிக்கம் என்றாலும். சீனாவிற்கு இரசியாவைத் தேவைப்படுவதிலும் பார்க்க அதிக அளவு இரசியாவிற்கு சீனாவைத் தேவைப்படுகின்றது. சீன மக்களிடை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி சீன மக்கள் பொதுவாக இரசியாவையும் அதன் அதிபரையும் பார்த்து வியக்கிறார்கள். புட்டீன் இரசியாவிற்காகப் பிறந்தவர் என்ற தலைப்பிலான புட்டீனின் வாழ்கை வரலாற்று நூல் சீனாவில் அதிகம் விற்பனையாகின்றது.ஆனால் அவர்கள் அமெரிக்க வாழ்கை முறையை விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள வர்த்கர்களும் தொழில்கள் புரிவோரும் அமெரிக்காவுடன் வியாபாரம் செய்வதை அதிகம் விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவு அன்று பொதுவுடமைச் சித்தாந்த ரீதியாக அமைந்திருந்தது. சீனாவிற்கு தனது பொதுவுடமை ஆட்சியை நிலை நிறுத்த சோவியத் ஒன்றிய ஆதரவு அப்போது தேவைப்பட்டது. சோவியத் ஒன்றியத்திற்கு சீனாவின் உறவு பெரும் புவிசார் அரசியல் வலுவைக் கொடுத்தது. தற்போது அந்த உறவு பொது நலன் சார்ந்ததல்ல. பொது எதிரிக்கானது. இரசியா கிறிமியாவை விழுங்கியது பற்றியோ உக்ரேனைப் பிய்த்துப் பிடுங்குவது பற்றியோ சீனா கவலைப்படப் போவதில்லை. சீனாவின் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் ஆதிக்கம் செலுத்துவது இரசியாவைப் பாதிக்கப் போவதுமில்லை. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டம் இரசியாவிற்கு பெரும் பாதகமாக அமையப் போவதுமில்லை. சீனாவிற்குத் தேவையான எரிபொருள் இரசியாவிடமிருக்கின்றது.

ஜோன் ஜெரியின் இரசியப் பயணம்
ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி இரசியாவின் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாள் அணிவகுப்பு நடந்து மூன்றாம் நாள் அதாவது மே மாதம் 9-ம் திகதி இரசியாவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். இதற்கு முதல் நாள் உலக அரங்கில் இரசியாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முயல்வதாக இரசிய வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. கெரியின் பயணம் உக்ரேனில் போர் நிறுத்தம், சிரியாவில் அப்பாவி மக்கள் மீது போடுவதாக நம்பப்படும் குளோரின் குண்டுகள், ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தை ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்தது. ஜோன் கெரி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்திக்க முன்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவுடன் நான்கு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினார். இரசியா தனது பத்துப் படையணிகளை உக்ரேன் எல்லைக்கு நகர்த்தி வைத்திருக்கின்றது. அத்துடன் SA-22 மற்றும் SA-15 ஆகிய விமான எதிர்ப்பு முறைமைகளை உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தினுள் நகர்த்தியுள்ளது. தொடர்ந்தும் உக்ரேன் கிளர்சிக்காரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகின்றது. இரசியாவின் இந்த நகர்வுகள் உக்ரேனின் பிராந்தியங்களை மேலும் அபகரித்துக் கொள்ளவா அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் அழுத்தத்தை உக்ரேனிய அரசுக்குக் கொடுக்கவா என்பது பற்றி அமெரிக்கா குழம்பிப் போயுள்ளது. ஆனால் இரசியாவின் இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவதாகும் என்கின்றது அமெரிக்கா. இருதரப்புப் பேச்சு வார்த்தைகளின் போது காத்திரமான எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரேன் விவகாரத்தில் இருதரப்பினரும் தொடர்ந்து முரண்படுவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஈரானுக்கு இரசியா ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பது தொடர்பாக ஜோன் கெரி அமெரிக்காவின் ஆட்சேபனையைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கெரி அதுபற்றி ஏதும் பேசவில்லை. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை இரசியா விரும்பாத போதிலும் அது அமெரிக்காவிற்கு ஒரு தலையிடியாகத் தொடர்வதை இரசியா விரும்புகின்றது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடாது என சவுதி அரேபியா உட்பட்ட பல அமெரிகாவின் அரபு நட்பு நாடுகள் என அமெரிக்காவை வலியுறுத்துவதுடன் இஸ்ரேலும் அமெரிக்கா ஈரானை அணுக்குண்டு உற்பத்தி செய்யாமல் தடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றது. ஜோன் கெரியின் இரசியப் பயணம் இரசியா மீண்டும் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை சோவியத் ஒன்றியக் காலத்திற்கு இணையாக உயர்த்தி வருகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவும் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியமும் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிராக ஒரு தரப்பில் நின்று போர் செய்தன. அதில் பெற்ற வெற்றியின் பின்னர் இரு நாடுகளும் இரு துருவங்களாகின. இரு நாடுகளும் பெரும் படைக்கல உற்பத்திப் போட்டியில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும் முயற்ச்சி கூட நடந்தது. ஆனால் புட்டீனின் கொள்கை வேறு பட்டது. அவர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியா உலக அரங்கில் இருந்த நிலைக்கு மீண்டும் இட்டுச் செல்லும் முயற்ச்சியை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளைப் பயன் படுத்தியுள்ளார்.

Sunday 17 May 2015

அமெரிக்காவின் டெல்டாப் படையணி சிரியாவிற்குள் புகுந்து ஐ எஸ் மீது அதிரடித் தாக்குதல்



ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி அங்கு தங்கியிருந்த ஐ எஸ்இன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அபு சய்யஃப் என்பவரைக் கொன்று அவரது மனைவியைக் கைது செய்ததுடன் அவர்கள் அடிமையாக வைத்திருந்த 18 வயது யஷீதியப் பெண்ணை விடுவித்தனர். இந்தத் தாக்குதல் 15-05-2015 வெள்ளிக் கிழமை நள்ளிரவில் தொடங்கி மறுநாள் காலை வரை நடந்தது.

24 டெல்டாப் படையினர் Black Hawkஎன்ற ஒரு உழங்கு வானூர்தியிலும் V-22 Osprey என்ற ஒரு வானூர்தியிலும் சென்று அபு சய்யஃப் இருந்த கட்டிடத்தில் அதிரடித் தாக்குதல் நடாத்தினர். இவர்கள் போய் இறங்கியவுடன் அபு சய்யஃப்பிற்குப் பாதுகாவலராக இருந்த போராளிகள் டெல்டாப் படையினர் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடயில் நேரடிச் சண்டை மூண்டதால் அபு சய்யஃபை உயிருடன் கைது செய்யும் அமெரிக நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. ஐ எஸ் அமைப்பின் எரிபொருள் உற்பத்திப் பிரிவிற்கும் நிதித் துறைக்கும் பொறுப்பாய் இருந்த அபு சய்யஃபை தமது ஆளில்லா வேவு விமானங்கள் மூலமாகவும் இலத்திரனியல் தடயத் தேடல் மூலமாகவும் உளவாளிகள் மூலமாகவும் காட்டிக் கொடுப்போர் மூலமாகவும் தொடர்ந்து அவதானித்து வந்த அமெரிக்க உளவுத்துறையினர் அதிபர் பராக் ஒபாமாவின் அனுமதியுடன் தாக்குதல் நடாத்தினர்.அபு சய்யஃபும் அவரது மனைவியும் ஐ எஸ் அமைப்பின் போராளிகளுமாவார்.




அமெரிக்க டெல்டாப் படையின் தாம் தாக்குதல் தொடங்கியவுடன் ஐ எஸ் போராளிகள் பெண்களையும் சிறுவர்களையும் கவசங்களாகப் பாவித்ததாகச் சொல்கின்றனர். ஆனாலும் தாம் குறிதப்பாமல் சுட்டு பெண்களையும் சிறுவர்களையும் தாக்குதலில் இருந்து தவிர்த்ததாகச் சொல்கின்றனர். அபு சய்யஃபின் பணிமனையில் இருந்த தொடர்பாட கருவிகளையும்  மடிக் கணனிகளையும் வேறு பலவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ம் ஆண்டு ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போது பல யதீஷியர்களைக் கொன்றதுடன் பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர்.

1970களின் பிற்பகுதியில் உருவாக்கப் பட்ட டெல்டாப் படையணியினர்  Operation Eagle Claw என்னும் பெயரில் 1980-ம் ஆண்டு செய்த தாக்குதல் இடையில் உழங்கு வானூர்தி விபத்திற்கு உள்ளானதால் கைவிடப்பட்டது. ஐஸ் அமைப்பிற்கு எதிராக அண்மைக் காலங்களாகச் செய்தசில  தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் வெள்ளிக் கிழமை இரவு செய்த தாக்குதல் அமெரிக்கத் தரப்பில் எவரும் காயப்படமாலோ கொல்லப்படாமலோ செய்யப்பட்டுள்ளது.

சிரிய அரசுக்குத் தெரியாமல் இந்தத் தாக்குதல் செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் இது நம்பும்படியாக இல்லை. சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக தமது எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் சிரியா இடையூறு செய்யக் கூடாது என ஏற்கனவே சிரியாவிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல் விடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஐ எஸ் இன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்திற்கு வந்து இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்யும் படி அவர்களது வானொலி மூலம் அறை கூவல் விடுத்துள்ளார்.

உங்கள் இலக்கு எமது அபு சய்யஃப் என்றால் எமது இலக்கு பராக் ஒபாமாவும் மற்றும் சிலுவையைக் கும்பிடுபவர்களாக இருக்கும் என ஐ எஸ் அமைப்பினர் சூளுரைத்துள்ளனர். 


ஐ எஸ் ஐப் பொறுத்தவரை துனிசியக் குடிமகனான அபு சய்யஃப் கொல்லப் பட்டது ஓர் இழப்பு அவரது கணனிகளையும் உம் சய்யஃப் என்னும் பெயருடைய மனைவியையும் கைப்பற்றி சென்றது பேரிழப்பு. அபு சய்யஃபின் மனைவி பல பணயக் கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பற்றியவர்.. இதனால் ஐ எஸ் தொடர்பாகாப் பல தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிய முடியும். ஐ எஸ் எரிபொருள் விற்பனை மூலம் நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் டொலர்களை வருமானத்தைப் பெறுகின்றது.  இந்த நிதி மூலத்தை தற்போது அமெரிக்காவால் சிதைக்க முடியுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...