Wednesday 13 May 2015

ஹிஸ்புல்லாமீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக நின்று அங்குள்ள கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதால் களமுனை அனுபவத்தையும் படைக்கலன்கள் கையாளும் திறனையும் பெருக்கிக் கொண்டுள்ளது. தெற்கு லெபனானில் கிராமங்கள் தோறும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பல படைக்கல களஞ்சியங்களையும் ஏவுகணை வீசும் நிலைகளையும் கலாடபடைப்பிரிவுகளையும் தாங்கி எதிர்ப்பு நிலைகளையும் அமைத்துள்ளனர்.

1983-ம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கக் கடற்படையினர் மீது ஹிஸ்புல்லா தற்கொடைத் தாக்குதல் நடாத்தி 241 படையினரைக் கொன்றது. இது அமெரிக்கப் படையைப் பொறுத்தவரை ஒரு நாளில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இதில் இருந்து ஹிஸ்புல்லா உலகப் புகழ் பெற்றதுடன் அமெரிக்கப் படைகளையும் 1984இல் லெபனானில் இருந்து வெளியேற்றியது

2006-ம் ஆண்டு நடந்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் போருக்குப் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானின் ஆதரவுடன் தமது படைக்கலன்களைப் பெரிதும் அதிகரித்துள்ளனர். அத்துடன் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலான் குன்றுகளில் தமது ஏவுகணைகளையும் மற்றும் பல படைக்கலன்களையும் நிறுத்தியுள்ளனர். இஸ்ரேலியர்கள் மேற்குக் கரையிலோ, காசா நிலப்பரப்பிலோ , லெபனானிலோ தமக்கு எதிரான தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தால அளவுக்கு வலுப்பெறும் போதெல்லாம் முன் கூட்டியே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களின் ஆளணிகளையும் படைக்கலன்களையும் அழிப்பது வழக்கம். இஸ்ரேலின் கணிப்பின் படி ஹிஸ்புல்லாவிடம் இப்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட எறிகணைகளும் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை ஈரானில் தயாரிக்கப்பட்ட கற்றியூஷா என்னும் குறுந்தூர ஏவுகணைகளாகும்.  ஹிஸ்புல்லாவிடம் நிதிவலு, படைக்கலவலு ஆகியவை நிறைய உண்டு. கட்டமைக்கப்படாத போராளி இயக்கமான (Asymmetric movement) ஹிஸ்புல்லாவிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வேவுபார்க்கவும் தாக்கவும் கூடிய ஆளில்லாப் போர்விமானங்கள் ஆகியவை இருப்பதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது

ஹிஸ்புல்லா தன் படைவலுவை 2006-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவும் தாம் தற்போது மிகவும் வலுவடைந்திருப்பதாகச் சொன்னார்.

2006-ம் ஆண்டின் பின்னர் சற்று அமைதியாக இருந்த லெபனானில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஹிஸ்புல்லா செயற்படத் தொடங்கியதில் இருந்து அமைதி இழந்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பல குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் 2013-ம் ஆண்டு டிசம்பரில் கொலை செய்யப்பட்டார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்தது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார் என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு தமது நாட்டுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்திருதது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில் ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலன் குன்றுகளில் இஸ்ரேல் நடாத்திய விமானத் தாக்குதலில் ஈரானிய ஜெனரலான மொஹமட் அலி அல்லா தாதியும் மொஹமட் இஸ்ஸா என்ற ஓர் ஈரானியத் தளபதியும் ஜிஹாட் முக்னியா என்ற ஹிஸ்புல்லாத் தளபதியின் மகனும் கொல்லப்பட்டனர். அப்போது இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய படையினர் காவு வண்டி ஒன்றின் மீது ஹிஸ்புல்லாப் போராளிகள் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசி இரு படையினரைக் கொன்றனர்.இது ஒரு பெரும் போராக மாறாமல் இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையூடாக ஹிஸ்புல்லா வேண்டுகோளையும் விடுத்தது.

இஸ்ரேல் தான் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தினால் அதில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்தவித சீருடைகளையும் அணிவதில்லை அவர்கள் பொதுமக்களைப் போல் ஆடையணித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து செயற்படுவதால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்கின்றது இஸ்ரேல்.

லெபனானின் அரச படைகளால் இஸ்ரேலிடம் இருந்து லெபனானைக் காப்பாற்றும் திறன் இல்லை என்கின்றது ஹிஸ்புல்லா. தெற்கு லெபனானில் மக்கள் ஆதரவு தமக்கு மட்டுமே எனச் சொல்கின்றது ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் வேண்டுதலின் பெயரில் போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அகலக் கால்களை வைத்துள்ளது எனச் சொல்லலாம்.ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தினால் அது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து  உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு இன்னும் ஒரு பரிசோதனைக் களமாக அமைவதுடன் லெபனானில் ஒரு பேரழிவையும் ஏற்படுத்தும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...