Sunday 8 November 2015

சீனாவும் தாய்வானும்: ஈர் அரசுகள் ஒரு நாடு!

1949-ம் ஆண்டு சீனக் குடியரசு என்றும் சீன மக்கள் குடியரசு என்றும் சீனா பிளவு பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதற் தடவையாக 2015 நவம்பர் மாதம் 7-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து உரையாடியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என இருவரும் தெரிவித்துள்ளனர்.  இரு நாடுகளுக்கும் இடையில் தவறுதலாக மோதல்கள் ஏற்படாமல் இருக்க இரு நாடுகளுக்கும் இடையில் அவசரத் தொடர்பாடல் வசதிகள் செய்வதாக இருவரும் ஒத்துக் கொண்டனர்.

தாய்வானில் எதிர்ப்பு
தாய்வான் ஒரு முழுமையான சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தாய்வான் தலைநகர் தாய்ப்பேயில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சீனாவின் ஒரு பகுதியே தாய்வான் என சீனப் பொதுவுடமைக் கட்சியினரும் ஆட்சியாளர்களும் கருதுவதற்கு தாய்வானில் பலத்த எதிர்ப்பு உண்டு. சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதற்கு அதனுடன் இணைய வேண்டும் எனக் கருதுவோரும் சீனாவில் உண்டு. சீனாவின் பொதுவுடமை ஆட்சியில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. அங்கு எத்தனை பிள்ளைகள் பெறுவது ஒருவர் எந்த நகரத்தில் வேலை செய்வது போன்றவற்றிற்கு அரச கட்டுப்பாடுகள் உண்டு. இதனால் சீனாவுடன் இணைவதை எதிர்ப்பவர்கள் தொகை தற்போது தாய்வானில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. 

சீனாவின் ஒரு பகுதியே தாய்வான என சீனத் தலைவர் ஜி ஜின்பிங் தாய்வான் தலைவர் மா யின் ஜியோ (Ma Ying-jeou) அவர்களிடம் தெரிவித்ததாக செய்திகள் கசிந்துள்ளன. இருவரும் சந்தித்த போது ஒருவரை ஒருவர் Mister அதாவது திருவாளர் என்று சொல்லியே அழைத்தனர். ஒருவரை ஒருவர் Mr president என அழைத்திருக்க வேண்டும். சீனா தாய்வானை ஒரு தனிநாடாக ஏற்றுக் கொள்ளாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சீனாவை மாவோ சேதுங் பொதுவுடமைப் புரட்சியின் மூலம் 1949-ம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் அவரால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட சியாங் கே ஷேக் தாய்வான் தீவிற்குத் தப்பிச் சென்று அங்கு ஒரு அரசை அமைத்தார். இருவரும் முழுச் சீனாவும் தம்முடையதே என உரிமை கொண்டாடினர். புரட்சிக்குப் பின்னரும் தாய்வானையே உண்மையான சீனா என ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் அங்கீகரித்திருந்தன. தாய்வான் சீனக் குடியரசு என்றும் பொதுவுடமை ஆட்சி நிலவிய பிரதான சீனா சீன மக்கள் குடியரசு என்றும் அழைக்கப்பட்டன. மேற்கத்தைய ஊடகங்கள் மாவோ சே துங்கின் பொதுவுடமைச் சீனாவை செஞ்சீனா எனவும் அழைத்தன.

1971-ம் ஆண்டு சீனா ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டு தாய்வான் வெளியேற்றப்பட்டது. தற்போது தாய்வானை ஒரு நாடாகப் பெரும்பாலான நாடுகள் அங்கிகரிக்கவில்லை. ஆனால் 23 நாடுகள் தாய்வானுடன் சிறப்பு அரசுறவியல் தொடர்புகளைப் பேணுகின்றன.

1979-ம் ஆண்டு சீனா ஐக்கிய அமெரிக்காவிடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் சிறந்த உறவை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் சீனாவைத் தாக்கலாம் என்ற ஒரு நிலைமை அப்போது நிலவியதால் அமெரிக்காவும் செஞ் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. அப்போது சீனாவுடன் அமெரிக்க தனது உறவுக்கான பரிசாக தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒத்துக் கொள்ளவிருந்தது. ஆனால் தாய்வான் அரசு அமெரிக்கப் பாராளமன்றமான கொங்கிரசின் இரு அவைகளான மக்களவையிலும் மூதவையிலும் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தாய்வான் தனித்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. சீனாவிடமிருந்து தாய்வானை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கப் பாராளமன்றம் 1979இல் தாய்வான் உறவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கியது. தாய்வான் உறவுச் சட்டத்தில் சீனக் குடியரசு என்ற பதம் பாவிக்காமல் தாய்வானை ஆளும் அதிகாரம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் படி தாய்வான் ஒரு நாடாக கருதப்பட்டு ஒரு நாட்டுடன் வைத்துக் கொள்ளக் கூடிய இராசதந்திர உறவுகள் யாவும் மேற்கொள்ளலாம்.  வெளி அச்சுறுத்தல்களில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்கிறது அமெரிக்காவின் இந்த தாய்வான் உறவுச் சட்டம். அதனால் இன்று வரை அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கின்றது.  1984-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா தாய்வான் மீதான சீனாவின் இறைமையை ஏற்க மறுத்து வருகிறது. அமெரிக்கப் பாராளமன்றம் 2007-ம் ஆண்டு வெளிவிட்ட ஆய்வறிக்கை தாய்வான் மீதான சீனாவின் இறைமையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீள் உறுதி செய்தது. அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம் சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எனச் சீனா கருதுகிறது.

தாய்வானைக் கைப்பற்ற முயன்ற சீனா
1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாய்வான் அதனது மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல். அமெரிக்காவிடமிருந்து தாய்வான் பல போர் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளது.

தாய்வானின் சரித்திரம்
தாய்வானை 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சிய் செய்தனர். பின்னர் 1662-ம் ஆண்டு சீனா டச்சுக்காரர்களை விரட்டி தனது ஆட்சியின் கீழ் தாய்வானைக் கொண்டு வந்தது. 1894-ம் 1895-ம் ஆண்டு நடந்த போரில் ஜப்பான் தாய்வானையும் கொரியாவையும் சீனாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பானிடம் இருந்து 1952இல் செய்த சான் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி தாய்வானை ஜப்பானிடம் இருந்து விடுவித்தன. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

உறவை வளர்த்த இரு சீனாக்கள்
தாய்வான் தன்னை சீனக் குடியரசு என்றும் தாய்வானை சீனா தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் சொல்லி வந்தன. 1992இல் இரு நாடுகளும் உறவுகளை உருவாக்கி வளர்க்க முயன்றன. இதற்காக தாய்வானும் சீனாவும் ஒரு நாடுகள் ஆனால் இரு அரசுகள் என்ற நிலைப்பாட்டை தாய்வான் எடுத்தது. ஆனாலும் இன்று வரை ஒன்றை ஒன்று சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றன.காலப் போக்கில் தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம் என சீனா உறுதியாக நம்புகிறது. வளம் குறைந்த தாய்வானிய மக்களிக்கு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனா இணைய வேண்டிய ஒரு நாடாக மாறலாம் என சீனா நம்புகின்றது.

தாய்வானை நோக்கிய சீனாவின் வியூகம்

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சீன ஏவுகணைகள் தாய்வானைக் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீனா புதிதாக உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய DF-21D ஏவுகணைகள் முக்கியமானவை. இவற்றை Anti-Ship Ballistic Missile (ASBM) என அழைப்பர். 35 அடி உயரமும் 15 தொன் எடையும் கொண்ட DF-21D ஏவுகணைகள் 1200மைல்கள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குகள் வேகத்தில் பாயக் கூடியவை. இவை அமெரிக்கக் கடற்படைக்குப் பெரும் சவாலாகும். அமெரிக்கா 2013 மே மாதம் உருவாக்கிய  RIM-162 ESSM "Evolved Sea Sparrow," ஏவுகணைகள் சீனாவின் DF-21D ஏவுகணைகளை அவற்றின் பறப்பின் போது இடை மறித்து அழிக்கக் கூடியவை. 

2013-ம் ஆண்டு சீனா 2013A, 2013B, 2013C என்னும் பெயரில் தனத் பெருமளவு படையினரைக் கொண்ட தாய்வான் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சிகளைச் செய்துள்ளது. சீனாவின் முப்படைகளும் இதில் ஈடுபடுத்தப் பட்டு உண்மையான சூடுகளுடன் பயிற்ச்சிகள் செய்யப்பட்டன. பெருமளவு படைக்கலன்கள் நகர்வும் இதன் போது பரீட்சிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்ட சீனாவினதும் தாய்வானினதும் தலைவர்கள் எந்த வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை எந்த கூட்டறிக்கையையும் வெளிவிடவில்லை. தற்போது தாய்வானில் ஆட்சியில் இருக்கும் கட்சி சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சியாகும். எதிர்க் கட்சி தாய்வான் முழுமையான சுதந்திரம் உள்ள நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையது. அதன் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. 2016-ம் ஆண்டு ஜனவரியில் நடக்க விருக்கும் தேர்தலில் அது வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தாய்வானிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டை தாய்வானியப் பாராளமன்றம் நிறைவேற்ற முயன்றபோது சூரியகாந்தி இயக்கம் என்னும் இளைஞர்களின் அமைப்பு கடும் எதிர்ப்புக் காட்டியது. அது ஒரு மாதமாக பாராளமன்றத்தை ஆக்கிரமித்திருந்தது.

இரு நாடுகளிற்கும் இடையிலான இடைவெளி நூறு மைல் அகலமான கடலிலும் அகலமனானது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...