Thursday 15 October 2015

இஸ்லாமியத் திவிரவாதிகள் இரசியாவிற்கு எதிராகத் திரும்புவார்களா?

இஸ்லாமிய அரசு அமைப்பு இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் புனிதப் போர் தொடுக்கும்படி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு ஒலிப்பதிவின் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப் போர் தொடுத்துள்ள இரு நாடுகளுக்கும் எதிராக இஸ்லமிய இளைஞர்களைக் கிளர்ந்து எழும் படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை சிரியக் கிறிஸ்த்தவப் பேராயர் Jean-Clément Jeanbart மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சிரியாவில் இரசியத் தலையீட்டையும் வரவேற்றுள்ளார்.

மக்களாட்சி வேண்டி அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக உருவான அரபு வசந்தப் புரட்சி சுனி - சியா முஸ்லிம்களிடையேயான மோதலாக மாறி பிராந்திய நாடுகளின் போட்டிக்களமாகி இப்போது வல்லரசு நாடுகளின் நிகராளி மோதல் (Proxy war) களமாகவும் உருவெடுத்ததுடன் இஸ்லாமிற்கும் கிறிஸ்த்தவத்திற்கும் இடையிலான முறுகல் களமாகவும் திரிவு பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்தே அங்கு வாழும் கிறிஸ்த்தவர்கள் அசாத்தின் ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். அசாத் சிரியாவில் ஒரு மதவாத ஆட்சியை நடத்தவில்லை. 

இரசியத் தலைநகர் மஸ்கோவில் ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதலாளிகளைக் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2015 ஒக்டோபர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மஸ்கோவில் உள்ள ஒரு தொடர் வீட்டுத் தொகுதியில் FSB எனப்படும் இரசிய உளவுத் துறையினர் திடீரெனப் புகுந்து சோதனை நடத்திய போது பதினொரு இறாத்தல் எடையுள்ள வெடி பொருட்களைக் கைப்பற்றினர். இவை கைப்பேசிகளில் வைத்து வெடிக்கச் செய்யத் தயாரான நினையில் இருந்தது. இது தொடர்பாக பத்து முதல் பதினைந்து வரையிலானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மூவர் சிரியர்கள் ஆகும் என்கின்றது FSB எனப்படும் இரசிய உளவுத் துறை. மஸ்க்கோவின் தொடரூந்துப் போக்குவரத்தை இலக்கு வைத்து இவர்கள் தாக்குதல் செய்யவிருந்தனர் என்றது FSB. இரசியா சிரியாவில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்க முன்னரே இத் தாக்குதலாளிகள் இரசியாவிற்கு சிரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரசியாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.

இரசியாவின் North Caucasus பிராந்தியத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள். இவர்களை சிரியாவில் வைத்து அழிப்பதும் இரசியப் படைகள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதின் ஒரு நோக்கமாகவும் கருதப்படுகின்றது.


இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியப் போராளியான Abu Omar al-Shishani இறப்பதற்கு முன்னர் தனது தந்தையிடம் ஐ எஸ் போராளிகள் இரசியாவிற்குப் படையெடுப்பார்கள் எனச் சூழுரைத்திருந்தார்.                                                                                                                             

சிரியப் படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் இரசியப் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் சதியைக் குழப்பி விட்டது. இரசியப் படையினர் சிரியாவில் சென்று இறங்கியதுடன் முதல் வேலையாக இந்த ஏவுகணைகளும் அவற்றின் செலுத்திகளும் நிலை கொண்ட இடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தின. அதனால் மேற்கத்தைய ஊடகங்கள் இரசியா ஐ எஸ் "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தாமல் மிதவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று குற்றம் சாட்டின. அமெரிக்க ஆதரவு பெற்ற் Tajamu al-Ezzah அமைப்பினரின் மீது இரசிய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது பல சிரியர்களை ஆத்திரப்படுத்தியது. வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள Talbiseh நகரில் இரசிய விமானங்கள் நடாத்திய குண்டு வீச்சில் பதினேழு அப்பாவிக கொல்லப்பட்டனர். முதலில் எம்மை சிரிய அரச படைகள் கொன்றன. பின்னர் எம்மை ஹிஸ்புல்லா கொன்றது, அதைத்தொடர்ந்து ஈரானியப் படைகள் கொன்றன, இப்போது இரசியர்கள் எம்மைக் கொல்கின்றார்கள். அடுத்து எம்மைக் கொல்ல யார் வருவார்கள். இப்படி ஆத்திர்படுகின்றனர் சிரியர்கள்.

அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல் நஸ்ரா அமைப்பினர் இரசியாவின் சிரியத் தலையீட்டை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான போராகப் பார்க்கின்றார்கள். இரசியாவின் மரபுவழித் திருச்சபை இரசியப் படைகளின் சிரியத் தலையீட்டை ஒரு புனிதப் போர் எனக்கருதுவதையும் அவர்கள் ஆத்திரத்துடன் கருத்தில் கொண்டுள்ளார்கள். மேலும் ஆப்கானிஸ்த்தானிலும் செஸ்னியாவிலும் இரசியப் படைகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல் செய்தமையையும் அவர்கள் ஆத்திரத்துடன் நினைவு கூர்கின்றனர். ஐ எஸ் அமைப்பு மட்டுமல்ல அல் கெய்தா அமைப்பும் இரசியாவிற்கு எதிராகத் திரும்புகின்றது, சிரியாவில் செயற்படுக் ஜபத் அல் நஸ்ராவின் தலைவர் Abu Mohammed al-Jolani இரசியர்களைக் கொல்லும் படி த போராளிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். சிரிய அல் நஸ்ரா அமைப்பில் உள்ள இரசியரான Abu Ubaid al-Madan இரசியர்களுக்கான தனது காணொளிச் செய்தியில் சிரியாவில் இருக்கும் உங்கள் மைந்தர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ராவைத் தொடர்ந்து. நைஜீரியாவில் செயற்படும் பொக்கொ ஹரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் இணை அமைப்புக்களும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...