Friday 18 September 2015

அமெரிக்கா ஏன் வட்டி விழுக்காட்டைக் கூட்டவில்லை?

அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தின் பின்னர் வட்டி விழுக்காட்டை உயர்த்துவதில்லை என 2015 செப்டம்பர் 17-ம் திகதி முடிவெடுத்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட இந்த முடிவு உலகெங்கும் உள்ள நிதி நிறுவனங்களையும் பல வளர்முக நாடுகளின் மைய வங்கிகளையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்காவின் செயற்படு வட்டி விழுக்காடு (effective interest rate) சுழியத்திற்கும் 0.25 இற்கும் இடையில் தொடர்ந்து பேணப்படும்.

சீன நிலைமைகள்
2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்காமல் இருக்கின்றது. அமெரிக்காவின் அடுத்த நகர்வு வட்டி விழுக்காடு அதிகரிப்பே என எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் பலர். வட்டி விழுக்காடு அதிகரிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பே இருந்தது. சீனாவில் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்குச் சந்தையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டதுடன்  சீனாவின் நாணயும் தனது மதிப்பை இழந்தது. அதற்கு முன்னர் அமெரிக்கா 2015 செப்டம்பரில் தனது வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஓகஸ்ட்டில் சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பின்னர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும் என்பதில் ஐயம் ஏற்பட்டது.

அமெரிக்க மைய வங்கியின் முடிவு சீன உட்படப் பல உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

அமெரிக்கா செய்த அள்வுசார் தளர்ச்சியால் (QE) அமெரிக்க வங்களிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு உள்ளது. அவற்றைக்கடனாக நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் வழங்குவதன் மூலம் பொருளாதார  வளர்ச்சி தூண்டப்படும். அதற்கு குறைந்த நிலையில் இருக்கும் வட்டி விழுக்காடு ஓர் உந்து வலுவாக அமையும். வட்டி விழுக்காடு குறையும் போது மக்களினதும் நிறுவனங்களினதும் கடன் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் அவர்கள் கைக்களில் அதிக பணம் புழக்கம் ஏற்படும். இதனால் நாட்டில் கொள்வனவும் முதலீடும் அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் பொருதாளர வளர்ச்சி எதிர்பார்ப்பை அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve 1.9%இல் இருந்து 2.1%ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் அது ஒரு சீரான வளர்ச்சிப்பாதையாக இல்லை.



வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டு மிகையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது சில பாதகமன விளைவுகள் ஏற்படும் அதில் ஒன்று விலைவாசி அதிகரிப்பு அல்லது பணவீக்கம். அதை தவிர்க்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும்.  அமெரிக்காவின் பணவிக்கம் பிரச்சனைக்கு உரிவ வகையில் குறைவானதாக இருக்கின்றது. இது முதலீட்டுக்கு உகந்தது அல்ல.

2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஏற்றுமதி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் போது அதன் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். இது உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். இது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு  உகந்தது அல்ல.

வட்டி விழுக்காட்டைக் கூட்டினால் வளர்ச்சிப் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒரு வேகத் தடை போட்டது போலாகும்.

பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்திக்கும் போது மைய வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைப்பதுண்டு.  அமெரிக்காவின் பங்குச் சந்தைச் சுட்டி
 2012-ம் ஆண்டில் இருந்து ஒரு சீரான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. ஆனாலும் 2015 ஓகஸ்ட் மாதம் சீனாவில் ஏற்பட்ட பங்குச் சந்தை விலை வீழ்ச்சி அமெரிக்க மைய வங்கியை வட்டி விழுக்காடு அதிகரிப்பை தாமதிக்க வைத்துள்ளது. வட்டி விழுக்காடு குறைக்கப் பட்டவுடன் உலகப் பொருளாதாரம் பற்றிய அச்சம் எல்லா முதலீட்டாளர்களின் மனதையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. அதனால் உலகெங்கும் பங்கு விலைகள் சரிவடைந்தன


அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.
US Unemployment
ஆனால் இந்த வேலை செய்வோர் தொகை அதிகரிப்பு அமெரிக்காவில் சம்பள உயர்வைக் கொண்டு வரவில்லை. அமெரிக்காவில் இன்னும் வேலையில்லாதவர்களின் தொகையை குறைக்க வேண்டும் என அமெரிக்க மைய வங்கி நினைக்கின்றது.

அமெரிக்காவின் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படமாட்டாது என்ற முடிவால் டொலாரின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது. சேமிப்புக்களின் நிதிவைப்பு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

2015-ம் ஆண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கியான Federal Reserve வட்டி விழுக்காட்டை அதிகரிக்கலாம் என  ஒரு புறம் எதிர்பார்க்கப் படுகின்றது மறுபுறம் அது 2017வரை நடக்காது எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...