Sunday 17 May 2015

அமெரிக்காவின் டெல்டாப் படையணி சிரியாவிற்குள் புகுந்து ஐ எஸ் மீது அதிரடித் தாக்குதல்



ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி அங்கு தங்கியிருந்த ஐ எஸ்இன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அபு சய்யஃப் என்பவரைக் கொன்று அவரது மனைவியைக் கைது செய்ததுடன் அவர்கள் அடிமையாக வைத்திருந்த 18 வயது யஷீதியப் பெண்ணை விடுவித்தனர். இந்தத் தாக்குதல் 15-05-2015 வெள்ளிக் கிழமை நள்ளிரவில் தொடங்கி மறுநாள் காலை வரை நடந்தது.

24 டெல்டாப் படையினர் Black Hawkஎன்ற ஒரு உழங்கு வானூர்தியிலும் V-22 Osprey என்ற ஒரு வானூர்தியிலும் சென்று அபு சய்யஃப் இருந்த கட்டிடத்தில் அதிரடித் தாக்குதல் நடாத்தினர். இவர்கள் போய் இறங்கியவுடன் அபு சய்யஃப்பிற்குப் பாதுகாவலராக இருந்த போராளிகள் டெல்டாப் படையினர் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடயில் நேரடிச் சண்டை மூண்டதால் அபு சய்யஃபை உயிருடன் கைது செய்யும் அமெரிக நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. ஐ எஸ் அமைப்பின் எரிபொருள் உற்பத்திப் பிரிவிற்கும் நிதித் துறைக்கும் பொறுப்பாய் இருந்த அபு சய்யஃபை தமது ஆளில்லா வேவு விமானங்கள் மூலமாகவும் இலத்திரனியல் தடயத் தேடல் மூலமாகவும் உளவாளிகள் மூலமாகவும் காட்டிக் கொடுப்போர் மூலமாகவும் தொடர்ந்து அவதானித்து வந்த அமெரிக்க உளவுத்துறையினர் அதிபர் பராக் ஒபாமாவின் அனுமதியுடன் தாக்குதல் நடாத்தினர்.அபு சய்யஃபும் அவரது மனைவியும் ஐ எஸ் அமைப்பின் போராளிகளுமாவார்.




அமெரிக்க டெல்டாப் படையின் தாம் தாக்குதல் தொடங்கியவுடன் ஐ எஸ் போராளிகள் பெண்களையும் சிறுவர்களையும் கவசங்களாகப் பாவித்ததாகச் சொல்கின்றனர். ஆனாலும் தாம் குறிதப்பாமல் சுட்டு பெண்களையும் சிறுவர்களையும் தாக்குதலில் இருந்து தவிர்த்ததாகச் சொல்கின்றனர். அபு சய்யஃபின் பணிமனையில் இருந்த தொடர்பாட கருவிகளையும்  மடிக் கணனிகளையும் வேறு பலவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ம் ஆண்டு ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போது பல யதீஷியர்களைக் கொன்றதுடன் பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர்.

1970களின் பிற்பகுதியில் உருவாக்கப் பட்ட டெல்டாப் படையணியினர்  Operation Eagle Claw என்னும் பெயரில் 1980-ம் ஆண்டு செய்த தாக்குதல் இடையில் உழங்கு வானூர்தி விபத்திற்கு உள்ளானதால் கைவிடப்பட்டது. ஐஸ் அமைப்பிற்கு எதிராக அண்மைக் காலங்களாகச் செய்தசில  தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் வெள்ளிக் கிழமை இரவு செய்த தாக்குதல் அமெரிக்கத் தரப்பில் எவரும் காயப்படமாலோ கொல்லப்படாமலோ செய்யப்பட்டுள்ளது.

சிரிய அரசுக்குத் தெரியாமல் இந்தத் தாக்குதல் செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் இது நம்பும்படியாக இல்லை. சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக தமது எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் சிரியா இடையூறு செய்யக் கூடாது என ஏற்கனவே சிரியாவிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல் விடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஐ எஸ் இன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்திற்கு வந்து இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்யும் படி அவர்களது வானொலி மூலம் அறை கூவல் விடுத்துள்ளார்.

உங்கள் இலக்கு எமது அபு சய்யஃப் என்றால் எமது இலக்கு பராக் ஒபாமாவும் மற்றும் சிலுவையைக் கும்பிடுபவர்களாக இருக்கும் என ஐ எஸ் அமைப்பினர் சூளுரைத்துள்ளனர். 


ஐ எஸ் ஐப் பொறுத்தவரை துனிசியக் குடிமகனான அபு சய்யஃப் கொல்லப் பட்டது ஓர் இழப்பு அவரது கணனிகளையும் உம் சய்யஃப் என்னும் பெயருடைய மனைவியையும் கைப்பற்றி சென்றது பேரிழப்பு. அபு சய்யஃபின் மனைவி பல பணயக் கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பற்றியவர்.. இதனால் ஐ எஸ் தொடர்பாகாப் பல தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிய முடியும். ஐ எஸ் எரிபொருள் விற்பனை மூலம் நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் டொலர்களை வருமானத்தைப் பெறுகின்றது.  இந்த நிதி மூலத்தை தற்போது அமெரிக்காவால் சிதைக்க முடியுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...