Tuesday 25 November 2014

உலகக் கடற்பரப்பு அனைத்தையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானங்கள்


அமெரிக்கக் கடற்படையினர்   என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.  அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை.

40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.

2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும்.

50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும்.

2014 ஒக்டோபர் மாதம் செய்யப்பட்ட இரண்டாவது பரீட்சார்த்த பறப்புக்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Sunday 23 November 2014

உலக எரிபொருள் விநியோகமும் புவிசார் அரசியலும்



புவிசார் அரசியல் என்பது அடிக்கடி எமது கண்களிலும் காதுகளிலும் அடைக்கடி விழும் சொற்பதமாகும்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். 
முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. 
இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. 
மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
நான்காவது: ஆதிக்கம் தொடர்பான போட்டியை படை வலிமை (பல சமயங்களில்) முடிவு செய்யும்

இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான பல் வேறு நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம், படைவலு எனப் பலவற்றை இந்த உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது. 

மதப் பரப்பலில் புவிசார் அரசியல்
கிறிஸ்த்தவ மதம் உருவாகிப் பரவத் தொடங்கியதில் இருந்து மதம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்த்தது. பின்னர் உருவான இசுலாமிய மதத்தைப் பரப்புவது தொடர்பாக புவிசார் அரசியல் மோசமான போட்டியாக உருவானது. கிருஸ்துவ மதத்தை முன்னெடுத்த ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்து இசுலாமிய மதத்தைப் பரப்பிய உதுமானியப் பேரரசு எழுச்சியடைந்தது.

1760-ம் ஆண்டில் இருந்து 1840-ம் ஆண்டு வரை நடந்த கைத்தொழிற்புரட்சிக்குப் பின்னர் எரிபொருளே பல வலுமிக்க நாடுகளின் முக்கிய தேவையாக அமைந்தது

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து உலகப் புவிசார் அரசியலில் பெரும் பங்கு வகித்தது எரிபொருள் பிரச்சனையே. மத்திய கிழக்கில் நடந்த பல போர்கள் எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பானவையாகவே இருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளாக ஆசிய நாடுகள் பல பொருளாதார வளர்ச்சியடைந்த படியால் தற்போது உலக ஹைதரோக் காபன் எரிபொருளில் காற்பங்கை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பாவனை செய்கின்றன. இனி வரும் இருபது ஆண்டுகளில் உலக எரிபொருள் பாவனை அதிகரிப்பின் 85 விழுக்காடு இந்த நாடுகளாலேயே ஏற்படும். அடுத்த இருபது ஆண்டுகளில் அதிக எரிபொருள் பாவனையை சீனா செய்யும். அதன் பின்னர் இந்தியா அந்த முதலாம் இடத்தைப் பெறும். இனிவரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா தனது ஷேல் எரிபொருள் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்கும். அத்துடன் உலகில் அதிக அளவு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். அமெரிக்காவுடன் கனடாவும் பிரேசிலும் தமது ஷெல் எரிபொருள் உற்பத்தியை இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவிருக்கின்றன. இதனால் மத்திய கிழக்கை அமெரிக்கக் கண்டம் எரிபொருள் உற்பத்தியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளவிருக்கின்றது. இதுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு தனது எரிபொருளை ஏற்றுமதி செய்து வந்த இரசியா தனது ஏற்றுமதியை கிழக்கு நோக்கி நகர்த்தி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் தனது ஏற்றுமதியை அதிகரிக்கவிருக்கின்றது. சீனா தனது நாட்டிற்கான எரிபொருள் விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்ய பட்டுப் பாதைத் திட்டத்தையும் முத்து மாலைத்திட்டத்தையும் இணைத்து தனது உபாயங்களை வகுக்கின்றது.

சோவியத் ஒன்றியத்தை வீழ்த்திய எரிபொருள் 
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தை வீழ்ச்சியடையச் செய்ததில் சவுதி அரேபியாவிற்கும் பெரும் பங்கு உண்டு. எரிபொருள் ஏற்றுமதில் அப்போது சோவியத் ஒன்றியம் பெரிதும் தங்கி இருந்தது. தனது உற்பத்தியை அதிகரித்து உலக எரிபொருள் விலையை சவுதி அரேபியா வீழ்ச்சியடையச் செய்தது. இதனால் சோவியத் ஒன்றியத்தின் ஏற்றுமதி வருமானம் பெரிதும் பாதிப்படைந்தது. ஆப்கானிஸ்த்தானில் செய்த ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பாதிப்படைந்திருந்த சோவியத் பொருளாதாரம் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு சோவியத் ஒன்றியம் விழ்ச்சியடைந்தது

சவுதியின் அடுத்த அதிரடி
தற்போது சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை விழ்ச்சியடையச் செய்ய சவுதி அரேபியா பெரிதும் முயல்கின்றது. அங்கு பெரும்பான்மையாக வாழும் சுனி இசுலாமியரின் ஆட்சியைக் கொண்டு வந்து சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை அடக்க சவுதி அரேபியா விரும்புகின்றது. சிரியாவில் அசாத்தின் ஆட்சி தொடர இரசியா பலவகைகளில் உதவுகின்றது. அசாத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானங்களை இரசியய இரத்துச் செய்தது. ஐக்கிய அமெரிக்கா சிரியாவில் அசத்தின் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தினால் இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு உதவும் சவுதி அரேபியாவின் எர்பொருள் உற்பத்தி நிலையங்கள் மீது தான் தாக்குதல் நடாத்தப் போவதாக இரசியா அமெரிக்காவையும் சவுதி அரேபியாவையும் எச்சரித்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் சவுதி அரேபியா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தும் அமெரிக்கா தனது ஷேல் எரிவாயும் உற்பத்தியை அதிகரித்தும் உலக எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்தன. இரசியாவின் 2015, 2016, 2017 ஆண்டுகளுக்கான அரச வரவு செலவுத் திட்டம உலக எரிபொருள் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப் பட்டவை. தற்போது ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 85 டொலர்களிலும் குறைந்து விட்டது. இரசியா இந்த எரிபொருள் விலை வீழ்ச்சியை தனது நாணயமான ரூபிளின் மதிப்பிறக்கத்தால் சமாளிக்கின்றது. வீழ்ச்சியடைந்த நாணய மதிப்பு ஒரு தற்காலிக நிவாரணியே. வீழ்ச்சியடையும் ரூபிளும் எரிபொருள் விலையும் இரசியப் பொருளாதாரத்தில் நீண்ட கால அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. இன்னும் ஒரு புவிசார் அரசியல் பிரச்சனையான உக்ரேன் விவகாரத்தால் இரசியாமீது வட அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கொண்டு வந்த பொருளாதாரத் தடையும் இரசியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 

அமெரிக்காவின் நிலையில் மாற்றம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் அதன் எரிபொருள் தேவை பல பிராந்தியங்களின் புவிசார் அரசியலில் தாக்கம் செலுத்தி வந்தது. இப்போது அதன் எரிபொருள் ஏற்றுமதி பல பிராந்தியங்களின் புவிசார் அரசியலில் தாக்கம் செலுத்தப் போகின்றது. இரசியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு தனது எரிபொருள் விநியோகத்தை மாற்றுவதன் மூலம் அமெரிக்கா சவால் விடுக்கின்றது. வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கக் கனவை அடக்க ஈரானின் பல் பிடுங்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா தனது மசகு எண்ணெய் மற்றும் வாயு (Crude oil and lease condensate production) உற்பத்தியை நாளொன்றிற்கு 8.6பில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் ஏற்றுமதி மீது இருந்த கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படலாம். 2015-ம் அமெரிக்கா ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடக்கப்படுவாரா புட்டீன்?
மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையால் இரசியாவிற்கு ஆண்டொன்றிற்கு 40பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பும் எரிபொருள் விலைவீழ்ச்சியால் ஆண்டு ஒன்றிற்கு 100பில்லியன் டொலர்கள் இழப்பும் ஏற்படுகின்றது. 2014-ம் ஆண்டில் இரசியாவில் இருந்து 130பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது 2014-ம் ஆண்டின் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்களில் இரசிய நாணயமான ரூபிள் 30விழுக்காடு பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.  இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில் நடந்த மோசமான விபத்து என்று கருதுகின்றார். மீண்டும் இரசியாவின் தலைமையில் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை ஒன்று படுத்தும் கனவுடன் இருக்கின்றார். அவரது இந்த கிழக்கு ஐரோப்பிய மத்திய ஆசிய புவிசார் அரசியல் கனவை எரிபொருள் விலை உடைக்குமா என்பதைப் பற்றி அறிய இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...