Monday 3 November 2014

மும்பாயில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்.

2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான(லோக் சபா) தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின்(பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும், 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில்  பா.ஜ.கவிற்கு 43 உறுப்பினர் மட்டுமே இருப்பது, 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.

பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி தடையின்றிச் செய்வதாயின் அது பல சட்ட மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியும் அத்துடன் மாநிலங்களவையில்  பெரும்பான்மை வலுவைப் பெறமுடியும். 2014-ம் ஆண்டு இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் 11 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

மோடிக்குத் தேவையான மஹராஸ்ட்ரா

நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும்ம் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும். அதற்கான  திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். நரேந்திர மோடி இந்தச் சட்ட சபைத் தேர்தலிற்குச் செய்த பரப்புரை போல் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்தியத் தலைமை அமைச்சரும் செய்ததில்லை. இந்த முக்கியத்துவம் மிக்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியமை மோடிக்கும் அவரது தளபதியான அமித் ஷாவிற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும். இருவரும் தமது "கட்சி அரசியல் முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மையை" மீண்டும் நிரூபித்துள்ளனர். பல வேறுபட்ட தரப்பினரைக் கொண்ட பா.ஜ.கவில் இவர்களது பிடி மேலும் இறுகியுள்ளது. அதே நாளில் நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத்திற்கான தேர்தலில்  பா.ஜ.கவினர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.கவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்த 48 தொகுதிகளில் பா.ஜ.க 23 இலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதே கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் "மண்ணின் மைந்தர்களுக்கே" என்ற கொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும் வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்து சிவசேனா அமைப்பு 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புகழ் பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியின் படையினர் என்பதே சிவசேனை என்பதன் பொருளாகும். மராத்தியர்களைத் தவிர மற்றவர்கள் மும்பாயில் இருந்து விரட்டப்பட வேண்டும் என சிவ சேனாவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால் மும்பாயில் கலவரங்களும் வெடிப்பதுண்டு. சிவ சேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசிய வாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச் சொல்லலாம். இந்துத் தேசியவாதக் கொள்கை சிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால் 2014 ஒக்டோபர் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன. இதே போல் காங்கிரசுக் கட்சிக்கும் அதில் இருந்து இத்தாலிப் பெண் காங்கிரசுக் கட்சிக்குத் தலைமை தாங்குவதை ஏற்காத சரத் பவார் பிரிந்து சென்ற உருவாக்கிய தேசியவாதக் காங்கிரசுக் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு காண முடியாமல் தனித்துப் போட்டியிட்டன. இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான  நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனைக்கு 130 தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது. சிவசேனா அதிலும் மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றிராத நிலையில் சிவசேனா ஒரு பேரம் பேசக் கூடிய வலுவைப் பெற்றுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்க தான் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கப் போவதாக அவர் அறிவித்தார். இது சிவ சேனாவை வலுவிழக்கச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கையாகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இப்போது ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மதவாதமும் இனவாதமும்

பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இந்து மத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்திப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை. இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு அதிலும் முக்கியமாக இசுலாமிய மதத்தையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள். பால் தக்கரேயால் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அவரது மறைவின் பின்னர் அவரது மகனுக்கும்(உதவ் தக்கரே) அவரது தம்பியின் மகனுக்கும் (ராஜ் தக்கரே) இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டாகப் பிளவு பட்டது. ராஜ் தக்கரே மஹராஸ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006-ம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ் தக்ரே சிவசேனாவிற்குள் இருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குல் செல்வவக்கு இருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக சிவசேனாத் தலைவர் உதவ் தக்கரே கருதுகின்றார். 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மைய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது

விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மஹாராஸ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மஹராஸ்ட்ராவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிவசேனா ஒன்று பட்ட மஹராஸ்ட்ரா என்பதில் உறுதியாக இருக்கின்றது. சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச் செய்ய பேரினவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி விதர்ப்ப தேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது. இது இரு கட்சிகளிடையே பேதத்தை 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.

குஜராத்திடம் மண்டியிட்ட மராத்த்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். 1960-ம் ஆண்டு மஹாராஸ்ட்ராவில் இருந்து குஜராத்தைப் பிரித்து தனி மாநிலமாக்கப்பட்டது. மும்பாயில் பல குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை. மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம் மேலும் மோசமடைந்துள்ளது. ஒன்றுபட்டுப் போட்டியிட்ட பாராளமன்றத் தேர்தலின் போதே தேர்தலிற்கு முதல் நாள் சிவசேனாவின் பத்திரிகைஓன்றில் குஜராத்தியர்கள் மும்பாயை ஆக்கிரமித்துக் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்களாக மும்பாயின் வாழ்வதாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது.

சொத்துக்கொரு மும்பாய்.
காங்கிரசுக் கட்சியினர், சிவசேனாக் கட்சியினர் தேசியவாதக் கட்சியினர் ஆகியோர் அதிக அளவு சொத்துக்களை மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் வைத்துள்ளனர். இதுவரை நடந்த காங்கிரசுக் கட்சியின் ஆட்சி மோசமான ஊழல்கள் நிறைந்த ஒரு ஆட்சியாகவே இருந்தது. இந்திய வரலாற்றில் மஹ்ராஸ்ட்ரா மாநிலத்தில் முதன் முறையாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஒரு ஊழலற்ற ஆட்சியை நிறுவ மோடி முயல்கின்றார்.

விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சர்
இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்யும் பிரதேசமமக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பணி புரிகின்றார். இது போதாது என்று மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிவசேனையைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். இவரால் ஓர் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. ஆட்சியில் இணையாவிடினும் முதலமைச்சர் பதவி ஏற்பின் தாம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.கவிடம் சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிந்திச் சென்ற பதவியேற்பு வைபவம்
2014-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி அதாவது நேற்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேவேந்திரப் பட்னவீஸ் மிகவும் ஆடம்பரமாக மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தாமும் பங்கேற்கப் போவதாக சிவசேனா அறிவித்தது. இது ஒரு உடன்படு நிலையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி ஏற்ற பின்னரே சிவசேனாவின் தலைவர் உதவ் தக்கரே நிகழ்விற்குச் சென்றார். புதிய முதல்வருக்கு சிவசேனாவின் பத்திரிகை ஆலோசனையும் வழங்கியுள்ளது. பஜகாவின் முதல்வரும் மஹாராஸ்ட்ரா மக்களும் மருமகளும் மாமியும் போன்றவர்கள். திருமணத்தில் அன்று அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் பின்பு மருமகள் தவறு செய்தால் மாமியார் மருமகளின் காதைப் பிடித்து முறுக்குவார் என்கின்றது சிவசேனனவின் ஊடகம். சிவசேனா மஹாராஸ்ட்ராவைப் பொறுத்தவரை ஒரு சண்டியர் கும்பல் எனச் சொல்லலாம். மும்பை நகரின் பெருந்தெருக்களில் வாகனங்களுக்கு Toll charge என்னும் பாதைவரி அறவிடும் முறை அறிமுகப்படுத்திய போது சிவசேனாவினர் ஆத்திரமடைந்து அந்த வரி அறவிடும் நிலலயங்களைப் பிடுங்கி எறிந்தனர். சிவசேனாவை ஆட்சியில் இணைக்காமல் வெளியில் எதிர்க் கட்சியாக விடுவது ஆபத்து என்பதை பாரதிய ஜனதாக் கட்சியினர் நன்கு அறிவர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஒரு தேசியக் கட்சி என்றும் சிவசேனா ஒரு பிராந்தியக் கட்சி என்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு சிவசேனா உடன்பட்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் சிவசேனா மஹராஸ்ட்ரா நம்ம ஏரியா இதனுள் எம்முடன் மோதவேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்தியாவின் பேரினவாதிகளுக்கும் பிராந்தியவாதிகளுக்கும் இடையில் உள்ள முறுகல் நிலையாகும். இதே மாதிரியான முறுகல் நிலை தமிழ்நாட்டிலும் உண்டு. மஹாராஸ்ட்ரா அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால் சிவசேனா உடன்பட்டு வரும் எனத் தெரியவருகின்றது. பிரதி முதலவர், உள்துறை, வலுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை  ஆகிய அமைச்சுப் பதவிகளை சிவசேனா தமது கட்சியினருக்குத் தரும்படி கேட்கின்றது..

மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் பல மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. காங்கிரசு ஆட்சியில் பெரும் தொல்லையாக இருந்த உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியில் ஆட்சிக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் தற்போது மஹாராஸ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ்த்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும். இதை வைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால் தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடியும்.

Sunday 2 November 2014

அமெரிக்காவின் அளவுசார் தளர்ச்சியும்(Quantitative Easing) பொருளாதார வளர்ச்சியும்

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தில் அளவுசார் தளர்ச்சியைச் செய்து வந்த ஐக்கிய அமெரிக்கா 29-10-2014இல் இருந்து அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி(Federal Reserve) எண்ணூறு பில்லியன் டொலர்களுக்குக் குறைவான ஆவணங்களை (Bonds)மட்டும் வைத்திருந்தது. 2008இல் இருந்து அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) செய்யவதற்காக தொடர்ந்து ஆவணங்களை வாங்கிக் குவித்ததால் அமெரிக்க மைய வங்கியிடம் இப்போது நான்கரை ரில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்கா தனது பொருளாதாரத்தை தூண்டி வளரச்செய்ய எடுத்த இந்த முயற்ச்சியான அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியவுடன் உலகின் முன்ன்ணி நாணயங்களான யூரோ, பவுண்ஸ், யென் ஆகியவற்றிற்கு எதிராக டொலர் பெறுமதி ஏற்றம் அடைந்தது. 600 பில்லியன் டொலர்களுக்கு ஆவணங்கள் வாங்கப்பட்டால் அது நீண்டகாலக் கடன்களுக்கான வட்டிவிழுக்காட்டை 0.15 முதல் 0.25 வரை குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மையவங்கியானது தனது வட்டி விழுக்காட்டை (federal funds rate) 0.75 முதல் ஒரு விழுக்காடுவரை குறைப்பதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு நாணய நிதியம்(IMF) செய்த மதிப்பீடு இப்படிக் கூறுகின்றது: 

“In the US, the cumulative effects of bond purchase programs are estimated to be between 90 and 200 basis points
(0.9 and 2 percentage points) . . . In the UK, cumulative effects range from 45 basis points to 160 basis points.”

என்ன இந்த அளவுசார் தளர்ச்சி?
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்ட நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாட்டில் வட்டி விழுக்காடு குறைக்கப் பட வேண்டும். வட்டி விழுக்காட்டைக் குறைக்க மைய வங்கி குறுங்காலக் கடன் பத்திரங்களை(ஆவணங்கள்) வர்த்தக வங்கிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) என அழைப்பர். இதைத் தொடர்ந்து செய்ய பொருளாதாரம் வளர்ச்சியடையலாம். இப்படி நாட்டின் வட்டி விழுக்காடு குறைந்து சென்று பூச்சியத்தை அண்மித்தும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாவிடில் மைய வங்கி நீண்டகாலக் கடன் பத்திரங்களை வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை அளவுசார் தளர்ச்சி என்பர். இதனால் நீண்டகால வட்டி விழுக்காடு வீழ்ச்சியடையும்.

அளவுசார் தளர்ச்சி எப்படி வேலை செய்கின்றது?விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) நாட்டில் பணத்தின் விலையை (அதாவது வட்டி விழுக்காட்டைக்) குறைக்கும். அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மைய வங்கி நாட்டில் ஆவணங்களை(அரசக் கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கும்போது ஆவணங்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் உறுதிறன் (வருமான விழுக்காடு yield) குறையும். இதனால் முதலீட்டாளர்கள் 9முக்கியமாக வர்த்தக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள்) இந்த ஆவணங்களை வாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். மைய வங்கியிடம் ஆவணங்களை விற்றுப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலக் கடனாக உற்பத்தி நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் நிறுவனங்கள், பொதுமக்கள் இப்படிப் பலதரப்பினருக்கு கொடுக்க முடியும். மைய வங்கிக்கு ஆவணங்களை விற்ற தனியார் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை பொருளாதாரத்தில் முதலீடு செய்வர். இதனால் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி வேலை வாய்ப்பு என்பன அதிகரிக்கும். இது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனால் அவர்கள் செலவு செய்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் மேலும் அதிகரிக்கும்.


அமெரிக்கா என்ன செய்தது?
2008-ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி (Federal Reserve) ஈட்டுக்கடன் ஆவணங்களை வாங்கத் தொடங்கியது. இதனால் அதனது ஆவண இருப்பு800 பில்லியன் டொலர்களில் இருந்து  1.75 ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து செய்த ஆவணக் கொள்வனவால் 2010 ஜூனில் ஆவணக் கையிருப்பு 2.1 ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற படியால் ஆவணக் கொள்வனவு நிறுத்தப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என உணர்ந்ததால் பின்னர் மாதம் தோறும் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இரண்டாம் சுற்று ஆவணக் கொள்வனவு 2010 நவம்பரில் செய்யப்பட்டது. இதில் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திறைசேரிக் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதிலும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாததால் 2012 செப்டம்பரில் மூன்றாம் கட்ட அளவுசார் தளர்ச்சி செய்யப்பட்டது. இதில் மாதம் தோறும் 40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களை அமெரிக்க மைய வங்கி வாங்க முடிவு செய்தது.

 அமெரிக்க மைய வங்கியின் அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்காவில் 2008 அளவுசார் தளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமெரிக்க மைய வங்கியில் முன்னாள் பென் பேர்னார்க் "Quantitative Easing works in practice but does not work in theory" என்றார் நகைச்சுவையாக.

அமெரிக்காவில் செய்யப்பட்ட அளவுசார் தளர்ச்சிக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துக்கள்:


1. அளவுசார் தளர்ச்சி 2008இல் உருவான பொருளாதாரச் சரிவு (recession) பொருளாதாரம் மந்த (depression)நிலையை அடைவதைத் தடுத்தது.
2. அளவுசார் தளர்ச்சி நாட்டில் விலைவாசி அளவிற்கு அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுத்தது.
3. அளவுசார் தளர்ச்சி விலைவாசியை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
4. அளவுசார் தளர்ச்சி  நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தது.
5. அளவுசார் தளர்ச்சி மிகைப்பணவீக்கத்தைக்(hyper inflation) கொண்டு வரும் என்ற கூற்றுப் பொய்யாக்கப்பட்டுள்ளது.
6. அளவுசார் தளர்ச்சி அமெரிக்க டொலரின் பெறுமதியை உயர்த்தியது.

அமெரிக்க மைய வங்கி எப்போது ஆவணங்களை விற்கும்?

அமெரிக்க மையவங்கி வாங்கிக் குவித்துள்ள ஆவணங்களை விற்க வேண்டும். அதன் கால அவகாசம் வரும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யும் போது நாட்டில் மீண்டும் வட்டி விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்கா 2015-ம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குப் பின்னர்தான் ஆவணங்களை விற்பது பற்றி யோசிக்கும்.

ஜப்பானில் தொடரும் அளவுசார் தளர்ச்சி
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த மறுநாள் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சியைச் செய்யப் போவதாக அறிவித்தது. இதுவரை மாதம் தோறும் அறுபது முதல் எழுபது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கி வந்த ஜப்பானின் மைய வங்கி இனி மாதம் ஒன்றிற்கு எண்பது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜப்பானில் பணவிக்கம் இரண்டு விழுக்காடாக  இப்போதைக்கு அதிகரிக்கப் போவதில்லை என உணரப்பட்டதாலேயே இந்த அளவுசார் தளர்ச்சி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இது ஜப்பானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம். பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சி செய்யப் போவதாக அறிவித்ததால் அமெரிக்காவில் பங்கு விலைகள் உயர்ந்தன.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அளவுசார் தளர்ச்சி பொருளாதாரம் சரிவு நிலையிலும், பணவிக்க்கம் வலுவிழந்த நிலையிலும் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும் என அமெரிக்க மைய வங்கி நிரூபித்து விட்டது என இப்போது நம்பலாம். 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்திருந்த 3 விழுக்காட்டிலும் அதிகமானதாகும்.  அளவுசார் தளர்ச்சியின் செயற்படு திறனை சரியாக அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.

பிரித்தானியாவின் கசப்பான அனுபவம்
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானிய மைய வங்கி அளவுசார் தளர்ச்சியை மேற் கொண்டது. 375 பில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆவணங்களை அது வாங்கியது. இதனால் ஆவணங்களின் உறுதிறன் குறைந்தது. இது பல ஓய்வூதிய நிதியங்களைப் பாதித்தது. இந்த ஓய்வூதி நிறுவனங்களின் பற்றாக் குறை 312பில்லியன்களை எட்டியது.


செல்வந்தர்களுக்கு மட்டும் இலாபம்
ஆவணங்களை மைய வங்கி வாங்கும் போது அதன் விலை அதிகரிப்பால் செல்வந்தர்கள் இலாபம் அடைவார்கள். வட்டி விழுக்காடு குறைவதால் சிறு சேமிப்புக்களைச் செய்துள்ள வறியவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...