Monday 6 October 2014

ஹொங் கொங்கில் குடைப்புரட்சி குடைசாய்ந்துவிட்டதா?

ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு. சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு  2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது  எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ  ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.

ஹொங் கொங்கின் வரலாற்றுப் பின்னணி
ஹொங் கொங் சீனாவை ஒட்டிய 1104 சதுர கி.மீ நிலப்பரப்புக் கொண்ட ஒரு தீவாகும். இதன் வர்த்தக முக்கியத்துவம் 1557-ம் ஆண்டு போர்த்துக்கேயரால் அறியபப்ட்டது. அன்றில் இருந்து பல ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் அங்கு செல்லத் தொடங்கின. பின்னர் போர்த்துக் கேயர் அங்கு ஒரு சிறு குடியேற்றத்தையும் வர்த்தக நிலையத்தையும் உருவாக்கினர். பின்னர் 17-ம் நூற்றாண்டில்  பிரித்தானியாவின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி அங்கு வர்த்தகத்தை ஆரம்பித்தது. இதன் ஆபத்தை உணர்ந்த சீனப் பேரரசு பல கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது. அந்தக் கட்டுப்பாடுகள் “கண்டோன் முறைமை” என அழைக்கப்பட்டது. அம்முறைமையின் படி கண்டோன் துறை முகத்தில் மட்டும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய முடியும். வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன மொழியைக் கற்கக் கூடாது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சீனச் சில்லறை வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்ய முடியாது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன அரசினால் அங்கீகரிக்கப் பட்ட பெரு வர்த்தகர்களுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கண்டோன் பகுதியில் ஒரு களஞ்சியசாலையையும் கைத்தொழிற்ச்சாலையையும் அமைத்துக் கொண்டது. ஐரோப்பியரை சீனர்கள் செம்மயிர்க் காட்டுமிராண்டிகள் என அழைத்தனர். சீனாவின் பட்டு, மட்பாண்டங்கள்(பீங்கான்) தேயிலை ஆகியவை ஐரோப்பியரை மிகவும் கவர்ந்தது. அவற்றைப் பெருமளவில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி வாங்கியது. இதற்காக பெருமளவு வெள்ளிகளை சீனர்களுக்கு கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வர்த்தகச் சமநிலை இன்மையைச் சமாளிக்க பிரித்தானியாவில் பயிரிட்ட அபின் போன்ற போதைப் பொருட்களை கிழக்கிந்திய வர்த்கக் கம்பனி சீனர்களுக்கு விற்கத் தொடங்கியது. இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை சீனப் பேரரசு தடை செய்த போதிலும் இரகசியமாக அந்த விற்பனை தொடர்ந்தது. சீனர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் பெருமளவு வெள்ளிகள் சீனாவில் இருந்து வெளியேறின. இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட ஹொங் கொங் தூர கிழக்கு நாடுகளுக்கும்  மற்றும் அவுஸ்த்திரேலியா, நியூசீலாந்து ஆகிய நாடுகளுக்குமான கடற்போக்குவரத்திற்கும் வாணிபத்திற்கும் அவசியமான ஒன்றாகியது.

அபின் போர்கள்
சீனர்களின் போதைப் பழக்கத்தால் பொருளாதாரரீதியில் சீனா பாதிக்கப்பட்டிருந்தது. போதைப் பொருள் விற்பனையை சீன அரசு தடை செய்த போதிலும் அந்த வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டது. இது அபின் போர் என அழைக்கப்படுகின்றது. இந்தப் போர் இரண்டு தடவை நடைபெற்றது. இந்தப் போர்களைத் தொடர்ந்து சீனா ஹொங் கொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்கு வழங்கியது. இதற்காக நான்கு ஒப்பந்தங்கள் 1841, 1842, 1860,1898 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டன. பாரிய விக்டோரியாத் துறைமுகத்தை பிரித்தானியா ஹொங் கொங்கில் நிர்மானித்தது. சீனாவில் பொதுவுடமை ஆட்சி ஏற்பட்ட போது ஹொங் கொங்கிலும் எழுச்சிகள் உருவாகி அது பிரித்தானியாவால் அடக்கப்பட்டது. பின்னர் சீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் பல அங்கு நடந்தன. 1960இற்கும்  1990இற்கும் இடையில் ஹொங் கொங் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.  ஹொங் கொங், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆசியாவின் சிறு புலிகள் என அழைக்கப்பட்டன. ஹொங் கொங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு அது சீனாவுடன் செய்த வர்த்தகமும் காரணமாக இருந்தது.

கை மாறிய ஹொங் கொங் ஆட்சி முறைமை மாற்றத்தை வேண்டி நின்றது.
1997-ம் ஆண்டு பிரித்தானியா ஹொங் கொங்கை சீனாவிடம் கையளித்தது. 155 ஆண்டுகள் ஹொங் கொங்கை மக்களாட்சி இன்றி ஆளுநர் மூலம் ஆண்டு வந்த பிரித்தானியா சீனாவிடம் கையளிக்க முன்னர் ஹொங் கொங்கில் மக்களாட்சி வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியது. சீனா ஹொங் கொங்கை ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற அடிப்படையில் தன்னுடன் இணைத்தது. பிரித்தானியா ஹொங் கொங்கை ஆளுநர் மூலம் ஆண்டு வந்தது. சீனா ஹொங் கொங்கை தலைமைச் செயலர் மூலம் ஆள்கின்றது. பெயர் மட்டும்தான் வித்தியாசம் எனச் சொல்லலாம்.. இந்தத் தலைமைச் செயலரை தேர்தல் குழு தெரிவு செய்கின்றது. ஹொங் கொங்கின் அரசியலமைப்பு அடிபடைச் சட்டம் என அழைக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டு ஹொங் கொங்கில் முழுமையான மக்களாட்சிப்படி தேர்தல் நடாத்த முடியாது எனச் சொல்லிவிட்டது. அத்துடன் ஹொங் கொங்கில் தேர்தல் விதிகளை மாற்றுவதாயின் அது சீன அரசின் அனுமதியுடனேயே செய்யப்பட்ட வேண்டும் என அறிவித்தது. ஹொங் கொங்கின் சட்ட சபை உறுப்பினர்கள் பல கட்சிகள் கொண்ட அரசியல் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றனர். தலைமைச் செயலர் எண்ணூறு பேர்களைக் கொண்ட ஒரு சபையால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருதடவை தெரிவு செய்யப்படுகின்றனர். 2017-ம்  ஆண்டிலிருந்து ஹொங் கொங்கின் தலைமைச் செயலரை பொது வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்யலாம் என்றும் 2020-ம் ஆண்டில் இருந்து ஹொங் கொங்கின் பாராளமன்றம் பொதுத் தேர்தல் மூலம்  தெரிவு செய்யப்படும் என்றும் சீனா ஹொங் கொங் மக்களுக்கு 2007-இல் உறுதியளித்திருந்தது. 2013 ஜனவரி மாதம் "அமைதியுடனும் அன்புடனும் மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் இயக்கத்தை பேராசிரியர் பெனி தாய் ஆரம்பித்தார்.

வெள்ளை அறிக்கையும் கருத்துக் கணிப்பும்
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ஹொங் கொங்கின் ஆட்சி முறைமை மாற்றம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையைச் சமரிப்பித்தது. அது மீண்டும் ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற தத்துவத்தை வலியுறுத்தியது. தலைமைச் செயலரை 2017-ம் ஆண்டு எப்படித் தெரிவு செய்வது என்பது தொடர்பாகப் பிரச்சனை எழுந்தது. தேர்தலில் நியமனக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பது சீன அரசின் நிலைப்பாடாகியது. இந்த நியமனக் குழுவை சீன அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என அஞ்சப்பட்டது. 1997-ம்  ஆண்டிலிருந்து தலைமை அமைச்சரை நியமிக்கும் குழு சீன அரசு சார்பானதாகவே இருக்கின்றது. இதனால் இந்த நிலைப்பாட்டிற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. "மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் அமைப்பு தலைமைச் செயலர் வேட்பாளர் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இந்த உத்தியோகப்பற்றற்ற தேர்தலில் முழுமையான மக்களாட்சி முறைமைப் படியான தேர்தலுக்கும் மக்கள் பேராதரவு வழங்கினர். "UNIVERSAL SUFFRAGE" என்ற பதம் எல்லோரும் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே குறிப்பிடுகின்றது. யார் வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதையல்ல என்பது சீன ஆட்சியாளர்களின் வியாக்கியானமாக இருக்கின்றது. அது யாரும் வேட்பாளராக நிற்கலாம் என்பதையும் உள்ளடக்கியது என்பது கிளர்ச்சிக்காரர்களின் நிலைப்பாடாகும்.

மாணவர் எழுச்சி மக்கள் எழுச்சியானது.
2011-ம் ஆண்டு சீனாவின் கல்வி முறைமையை ஹொங் கொங் தீவிலும் அறிமுகம் செய்ய சீன அரசு முயன்றபோது ஜொஷுவா வொங் என்னும் ஒரு பதினைந்து வயது மாணவன் அதற்கு எதிராகக் கிளர்ந்த் எழுந்தான். "அறிஞரியல்" என்னும் அமைப்பையும் அவன் ஆரம்பித்தான். இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை அவன் தெருவில் இறக்கிப் போராடினான். இப்போது ஹொங் கொங்கில் முழுமையான சுதந்திரத் தேர்தல் வேண்டும் எனப் போராடுபவர்களில் அவன் முக்கியமானவனாக இருக்கின்றான். இவனுடன் மாணவர் பேரவை என்னும் அமைப்பு 24 வயதான அலெக்ஸ் சோ என்பவன் தலைமையில் இணைந்து செயற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் முன்னணியில் நின்று போராடுகின்றார்கள்."மையத்தை ஆக்கிரமித்தல்" என்னும் அமைப்பு 50வயதான சட்டத் துறைப் பேராசிரியர் பெனி தாய் யூ ரிங்கின் தலைமையில் இவர்களுடன் இணைந்து போராடுகின்றது. இவரகளுடன 70 வயதான சான் கின் மான் என்னும் மதகுருவும் இணைந்து செயற்படுகின்றார். இவர்களின் முதல் கோரிக்கையாக ஹொங் கொங்கின் தலைமைச் செயலர் சி வை லியூங் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

குடைப் புரட்சிக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட அடக்கு முறை
மையத்தை ஆக்கிரமித்தல் என்னும் பெயரில் ஹொங் கொங் வீதிகளை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது ஹொங் கொங் அரசு ஒரு மட்டுப்படுத்தப் பட்ட அடக்கு முறையையே பிரயோக்கித்தது. கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் மிளகுப் பொடி வீசுதல் போன்றவற்றையே காவற் துறையினர் செய்தனர். இவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளை கையில் வைத்திருந்தனர். இதனால் இவர்களது எழுச்சி குடைப்புரட்சி என அழைக்கப்படுகின்றது.

மௌனமான சீன ஆட்சியாளர்கள்
சீன அரசு ஹொங் கொங் தீவில் நடக்கும் கிளர்ச்சியை ஒரு சட்ட விரோத தீவிரவாதம் எனக் குற்றம் சாட்டுகின்றது. சீன அரச ஊடகங்கள் இந்தக் கிளர்ச்சியைப் பற்றி காட்டமான கண்டனத்துடன் விமர்சிக்கின்றன. சீன அதிபரோ அரச உயர் மட்டத்தினரோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. ஒரு சிறு இளைஞர் குழுபற்றி பல கோடி மக்களின் தலைவர் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் சீனாவின் அதிகார எல்லைக்குள் ஒரு மேற்கத்தைய பாணித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதில் சீன அதிபர் உறுதியாக இருக்கின்றார். சீன அரசு கடுமையான வன்முறைகளை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. ஹொங் கொங்கில் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெற்றால் இதே மாதிரிக் கிளர்ச்சி சீனா எங்கும் பரவலாம் என சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஹொங் கொங்கில் நடக்கும் கிளர்ச்சியைப் பற்றி பல இருட்டடிப்புக்கள் சீனாவில் செய்யப்பட்டுள்ளது. கிளர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான தொடர்பாடல்களையும் சீன அரசு துண்டித்துள்ளது. அவர்கள் வை-ஃபை இன்றிச் செயற்படக்கூடிய ஒரு கைப்பேசிச் செயலியை உருவாக்கி அதன மூலம் தொடர்பாடலகளைச் செய்கின்றனர்.

ஹொங் கொங்கும் சீனர்களும் சீனச் சீனர்களும்
ஹொங் கொங் வாழ் சீனர்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருக்கும் போது தாம் மேலைத் தேசத்தவர்கள் போல் கனவான்கள் என்றும் சீனாவில் வாழும் சீனர்கள் படிக்காத பாமரர்கள் என்றும் கருதி இருந்தனர். அவர்கள் சீனாவில் வாழும் சராசரிச் சீனர்களிலும் பார்க்க பொருளாதாரச் செழிப்பு மிக்கவர்களாக இருந்தார்கள். ஆனால் பொருளாதார ரீதியில் பெரிது முன்னேறிய சீனாவைன் பெரும் செல்வந்தர்கள் இப்போது ஹொங் கொங் செல்வந்தர்களிலும் பார்க்க பல மடங்கு செல்வம் படைத்தவர்களாகவும் விடுமுறைக்கு அவர்கள் ஹொங் கொங் செல்லும்போது அங்குள்ள சீனர்களைக் கீழ்த்தரமாகப் பார்ப்பதும் உண்டு. சீனாவில் வாழும் சீனர்களில் பெரும்பான்மையானவர்கள்  மக்களாட்சி வயிற்றுக்குச் சாப்பாடு போடாது என நம்புகின்றார்கள். இதற்கு அவர்கள் தம்மைச் சூழவுள்ள நாடுகளில் உள்ள வறுமையை ஆதாரமாகக் கருதுகின்றனர். சீனாவில் நடக்கும் வேலை நிறுத்தங்களில் 60 விழுக்காடு ஹொங் கொங் தீவிற்கு அண்மையான சீன நகரங்களில்தான் நடக்கின்றது.

சீனத் தேசிய தினம்: நம்ம ஏரியா உள்ளே வராதே!
ஒக்டோபர் முதலாம் திகதி சீனத் தேசிய தினத்தன்று என்றுமில்லாத அளவு பெரும் தொகைக் கிளர்ச்சிக்காரர்கள் ஹொங் கொங் தெருக்களில் திரண்டனர். பெருமளவில் திரண்டாலும் எந்த வித வன்முறையும் இன்றி கிளர்ச்சிக்காரர்கள் கட்டுக் கோப்புடன் இருக்கின்றனர். ஹொங் கொங்கை தனக்கு எதிரான களமாகப் பாவிக்க வேண்டாம் என சீன அரசு மேற்குலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவின் தலைவர் பொப் மெனெண்டஸ் ஹொங் கொங்கின் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் ஹொங் கொங் மக்களின் மக்களாட்சி உரிமையை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள சீனா பதிலளித்துள்ளது.  மையத்தை ஆக்கிரமித்தல் என்பது ஒரு சட்ட விரோத நடவடிக்கை. ஹொங் கொங் விவகாரம் சீனாவின் உள்விவகாரம். இதில் யாரும் தலையிட்டு இந்த சட்டவிரோதச் செயல் புரிபவர்களுக்கு தவறான சமிக்ஞைகளைக் கொடுக்க வேண்டாம் என்றது சீனா.  சீன ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அமெரிக்க உளவுத் துறையின் கைக்கூலிகள் என்று பரப்புரை செய்கின்றன

ஹொங் கொங்கில் வாழும் சீன அரசு சார்புடையவர்கள் நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் தமது நாளாந்த நிகழ்வுகள் வருமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் ஒக்டோபர் 3-ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலும் நடாத்தினார்கள். சீனா இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மிளகுத் தூள் போன்றவற்றை வீசியது பின்னர் தனக்குச் சார்பானவரகளால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங் கொங் அரசுடன் நடாத்து வந்த பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. இனி சீனா ஒன்றில் இதை இப்படியே தொடரவிட்டு பொது மக்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சலிப்பு உருவாகச் செய்யலாம். பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மேலும் மோதலைத் தூண்டலாம். தனது படையினரையே பொதுமக்கள் போல் ஆடையணியச் செய்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தலாம். இவற்றிலும் மோசமாக படையினர் பார படைத்துறை ஊர்திகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கலாம்

விலகி நிற்பது போல் சீன் போடும் சீனா
சீனாவின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவது. அதற்கு நன்கு வளர்ச்சியடைந்த நிதிச் சந்தையும் முன்னேற்றமடைந்த வங்கிகளும் அவசியம். சீனாவில் அப்படி இன்னும் உருவாகவில்லை. ஹொங் கொங்கில் அவை உள்ளது. சீனாவிலேயே உலக மயப்படுத்தப்பட்ட ஒரே நகரம் ஹொங் கொங் ஆகும். சீனாவின் எதிர்காலத் திட்டங்களுக்கு அமைதியான ஹொங் கொங் அவசியம். அமைதியற்ற ஹொங் கொங் சீனாவிற்கு மட்டும் பின்னடைவை ஏற்படுத்தாது சீனாவில் முதலீடு செய்ய  ஹொங் கொங்கை ஒரு வாயிலாகப் பயன்படுத்தும் மேற்கு நாடுகளுக்கும் தடையானதாக அமையும்.  இதானால் சீனா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வன்முறை பாவிக்காமல் இருந்தது. சீனா ஹொங் கொங்கில் நடப்பவற்றை ஹொங் கொங்கின் தலைமைச் செயலரே கையாள்கின்றார் போல வெளியில் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

எல்லாப் புரட்சியும் ஒரே பாணிதான்
எல்லாப் புரட்சிகளிலும் முதலில் உள்ளக வேறுபாடு உருவாகும். அது உள்ளக முறுகலைத் தோற்றுவிக்கும். பின்னர் பிளவு உண்டாகும். பிளவு பெரும் உள்ளக மோதல்களைத் தோற்றுவிக்கும். குடைப் புரட்சிக்குள் இப்போது ஒரு உள்ளக வேறுபாடு உருவாகியுள்ளது. இந்தச் சந்த்ரப்பத்தைப் பாவித்து 2014-ம ஆண்டு ஒக்டோபர் 6-ம் திகதி திங்கள் காலை ஹொங்கொங்கில் எல்லாப் பணிமனைகளுக் திறக்கப்படவேண்டும் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை தலைமைச் செயலர் விடுத்தார். சில பிரிவினர் இதற்கு உடன்பட்டனர். சிலர் நாம் இதை ஏற்க மாட்டோம் இனி அரச பணிமனைக் கட்டிடகளுக்குள் நுழைந்து கட்டிடங்களையே ஆக்கிரமிப்போம் என எச்சரித்தனர். இது முதல் முரண்பாடாகியது. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் தாம் ஆக்கிரமித்திருந்த தெருக்களில் இருந்து விலகி விட்டனர்.எஞ்சியவர்கள் சில நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே. தம்மால் பணிமனைகளுக்கு ஊழியர்கள் செல்வதைத் தடுக்க முடியாது என உணர்ந்த  எஞ்சிய கிளர்ச்சிக்காரர்கள் பணிமனைக்குச் செல்லும் வழிகளை அடைக்காமல் வழி விட்டனர். இதனால் ஹொங் கொங் அரசின் முதற் தலையிடி நீங்கியது.  ஆனால் கிளர்ச்சிக்காரர்களின் இரு பெரும் கோரிக்கைகளான எவரும் தலைமைச் செயலர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற கோரிக்கையும் தற்போது பதவியில் உள்ள தலைவமைச் செய்லர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குடைப் புரட்சியில் மேலும் தொய்வுகள் ஏற்பட்டு அது குடைசாயும் என்ற அச்சம் இப்போது அதிகரித்துள்ளது.

Sunday 5 October 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டமைப்பும் ஐ.எஸ்.ஐ.எஸின் தோற்றமும் வளர்ச்சியும்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர்  யஸிதியப் பெண்களைக் கடத்திக் கற்பழித்துவிட்டு பாலியல் அடிமைகளாக பொதுச் சந்தையில் விற்பனை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்ப்பினர் தம்மிடம் உள்ள கைதிகளைக் கொடூரமாகக் கொன்ற காணொளிகளை வெளிவிட்டதனால் உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் மட்டும்  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தினால் போதாது சிரியாவிலும் அவர்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா உறுதியாக நம்பியது. ஆனால் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை விரும்பாத சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் அசாத்திற்கு எதிராகப் போராடும்  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடாத்தத் தயக்கம் காட்டியிருந்தன.  ஐக்கிய அமெரிக்கா     ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்த பல நாடுகளையும் இணைத்த ஒரு பரந்த கூட்டணி அமைக்கத் தீவிர முயற்ச்சி எடுத்தது. இதில் ஈரானையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்ச்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஈரான் மறுத்து விட்டது.

முதலில் இணைந்த பிரான்ஸ்
ஈராக்கிலும் சிரியாவிலும் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பிரான்ஸும் விமானக் குண்டுத் தாக்குதல்களை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் திகதியில் இருந்து ஆரம்பித்தது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலக்குகள் மீது கடுமையான விமானக் குண்டுத்தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. பிரேஞ்சு விமானங்கள் ஈராக்கின் ஜுமார் நகரில் உள்ள ஐ,எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நாடாத்தி அதன் உறுப்பினர்களைக் கொன்றன. சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர்.

பிரான்ஸைத் தொடர்ந்தன அரபு நாடுகள்
பிரான்ஸைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக விமானத் தாக்குதலை செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஆரம்பித்தன. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த நாடுகளை இணைய வைத்தது பெரும் வெற்றியாகும். ஒரு இசுலாமிய அமைப்பிற்கு எதிராகப் போர் புரிவது சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த ஐந்து அரபு நாடுகளில் ஐக்கிய அமீரகம் எனப்படும் UNITED ARAB EMIRATES ஒரு சிறந்த விமானப்படையைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பெண் போர்விமான ஓட்டுனராகச் செயற்படுகின்றார். அரபு நாடுகளில் முதல் பெண் விமானி எனப் புகழ் பெற்ற Mariam Al Mansouri ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானங்களை ஓட்டுவதில் திறமைசாலியாகும்

டச்சு விமானப் படையினரும் பின்னர் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டனர். இறுதியாக அவுஸ்த்ரேலியாவும் களத்தில் குதித்தது.


பிந்தி இணைந்த பிரித்தானியா
சைப்பிரஸில் உள்ள பிரித்தானியப் படைத்தளத்தில் இருந்து அதன் விமானங்கள் ஈராக்கில் வேவு பார்க்கும் பறப்பில் முதலில் ஈடுபட்டன. பின்னர் பிரித்தானிய விமானப்படைகள் நேரடித் தாக்குதலில் ஈடுபட பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டி இருந்தது. செப்டம்பர் 26-ம் திகதி ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதல் நடாத்த பிரித்தானியப் பாராளமன்றம் ஒத்துக் கொண்டது. பிரித்தானிய தற்போது சிரியாவிற்குள் தாக்குதல் நடாத்த மாட்டாது. அப்படி நடாத்துவதாயின் மீண்டும் அதற்குரிய அனுமதியை பாராளமன்றத்திடமிருந்து பெற வேண்டும். பிரித்தானியப் படையினர் ஒரு மாதத்திற்கு முன்னரே ஈராக்கில் தாக்குதல் நடாத்தத் தயார் நிலையில் இருந்தனர். பிரித்தானியாவின் ஆறு Tornado jets விமானங்கள் சைப்பிரஸ் தீவில் இருந்து சென்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தும். பிரித்தானியாவின் Brimstone ஏவுகணைகள் விரைவாக அசையும் இலக்குகளைக் கூடத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய Brimstone ஏவுகணைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிரான போரில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றன. பிரித்தானிய விமானப்படையினர் ஏற்கனவே ஈராக்கிலும் லிபியாவிலும் ஆபத்து மிக்க தாழப்பறப்புக்களை மேற்கொண்டு இலக்குகள் மீது தக்கக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பிரித்தானியா அமெரிக்காவிடமிருந்து 20 Tomahawk ஏவுகணைகளையும் வாங்கவிருக்கின்றது. இந்த Tomahawk ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடியவை. அத்துடன் தேவை ஏற்படும்போது பாதையை மாற்றி இலக்கை நோக்கிப் பாயவல்லன . பிரித்தானியாவைத் தொடர்ந்து டென்மார்க்கும் பெல்ஜியமும் ஐ.எஸ்.ஐ.எஸ்இற்கு எதிரான தக்குதல்களில் இணைந்து கொண்டன. மொத்தம் பத்து நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராக தாக்குதல் தொடுக்க மேலும் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு வழங்க ஒத்துக் கொண்டுள்ளன

 குர்திஷ் பெஷ்மேர்கா படையினர்
லிபியாவில் உள்ளூர்ப் போராளிகள் அதிபர் மும்மர் கடாஃபியின் படையினருக்கு எதிராக தாக்குதல் நடாத்த நேட்டோப் படையினர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடாத்தினர். இதில் கடாஃபியின் படையினர் அழிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டனர்.  இதே போல் தரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெஷ்மேர்கா படையினர் தாக்குதல் நடாத்த  விமானத் தாக்குதலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் நடாத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளைத் தோற்கடிப்பதே அமெரிக்க வெள்ளை மாளிகையின் திட்டம். ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அமெரிக்கப்படைகள் ஒரு தரைவழிப் படையெடுப்பின் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிக்க முடியும் எனக் கருதுகின்றது. ஆனால் பராக் ஒபாமா அமெரிக்கப்படையினரின் காலடிகள் ஈராக்கில் பதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றம்.
2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன.  அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவி (Abu Musab al-Zarqawi) இனால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது.  இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது. ஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது.

 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சி
சிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு  பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது. பின்னர் சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது பல ஐயங்களை ஏற்படுத்தியது. இதன் தலைவர் அபூபக்கலர் அல் பக்தாடி  ஒரு யூதர் என்றும் அவர் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் உளவாளி என்றும் செய்திகள் வந்தன. சிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரபபைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தரனர்.  ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள பெரு நிலப்பரப்பில் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதை தமது இலக்காகக் கொண்டுள்ளனர். முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பத்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என அமேரிக்கா மதிப்பிட்டிருந்தது. தற்போது இருபதினாயிரம் முதல் முப்பத்தோராயிரம் வரை இருக்கலாம் என அமெரிக்கா சொல்கின்றது. இசுலாமிய அரசு உருவாக்குவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரகடனம் செய்த பின்பு அதில் இணைவதில் பல இளைஞர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். இசுலாமிய அரசு என ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பினர் தம் பெயரையும் மாற்றிக் கொண்டனர். இதனால் இப்போது அவர்கள் ஐ.எஸ் என அழைக்கப்படுகின்றனர்.  மேற்கு நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையிட்டு அதிகம் கரிசனை காட்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் அதில் இணைந்திருப்பதுதான். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தம்மிடம் அகப்பட்டவர்களை கொலை செய்யும் காணொளியில் உரையாற்றுபவர்கள் பிரித்தானிய ஆங்கிலமும் வட அமெரிக்க ஆங்கிலமும் கதைப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்களால் இலகுவாக அமெரிக்காவிற்கோ அல்லது பிரித்தானியாவிற்கோ சென்று தாக்குதல்களை நடத்த முடியும். இதனால் மத்திய கிழக்கில் இருந்து தமது நாட்டுக்கு வரும் பயணிகளையிட்டு இவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

கொரசன் அமைப்பு
அமெரிக்காவிற்குத் தலையிடி கொடுக்கும் ஒரு போராளி அமைப்பின் பெயர் இப்போது பிரபலமாக அடிபடுகின்றது. கொரசன் என்பது அதன் பெயராகும். அதன் தலைவர் குவைத் நாட்டைச் சேர்ந்த 33 வயதான முஹ்சின் அல் ஃபத்லி. இவர் அல் கெய்தாவின் முன்னிலைத் தளபதியாக இருந்தவர். இவருக்கு மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். வட ஆப்கானிஸ்த்தானிலும் இரசியாவின் செஸ்னியாவிலும் திறன் மிக்க போராளியாகச் செயற்பட்டதனால் அல் கெய்தாவில் பிரபலமானவர் இவர். விமான எதிர்ப்புத் துறையில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் எனச் சொல்லப்படுகின்றது. 2012-ம் ஆண்டுவரை ஈரானில் இருந்து செயற்பட்ட முஹ்சின் அல் ஃபத்லி சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன் அங்கு சென்றவராவார். இவர் முதலில் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ராவுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகிச் சென்றார். இவரது மெய்ப்பாதுகாவலர் சிரியப் படைகளிடம் அகப்பட்ட பின்னர் இவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்தன.  முஹ்சின் அல் ஃபத்லியின் தலைமையில் கொரசன் அமைப்பு  சிரியாவின் பெரு நகரங்களில் ஒன்றான அலேப்பேயில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் கொரசன் அமைப்புக்கும் எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன.

சிரியாவின் குழுக்களும் குடை அமைப்புக்களும்
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட குழுக்கள் இருக்கின்றன சில குழுக்கள் ஒன்றிணைந்து குடை அமைப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன. இருபத்தி எட்டிற்கு மேற்பட்ட சுனி முசுலிம் போராளிக் குழுக்களும் எட்டிற்கு மேற்பட்ட குர்திஷ் மக்களின் போராளிக் குழுக்களும் இருக்கின்றன. சில குழுக்கள் லிபியாவில் செய்தது போல் அமெரிக்கா வந்து சிரிய அதிபரின் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி தமக்கு விடுதலை பெற்றுத் தரும் என நம்பியிருந்தன. ஆனால் அமெரிக்காவும் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளும் வந்து சிரிய அரச படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தாமல் தம்முடன் இணைந்து போராடியவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவது சிரியாவில் பலரை ஏமாற்றப் படுத்தியுள்ளது.

சிரியாவும் சிரியாவிற்குள் நடக்கும் தாக்குதல்களும்
சிரியாவிற்குள் வேறு நாட்டுப் படைகள் புகுந்து அங்குள்ள போராளிக் குழுக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்துவதாயின் அது சிரியாவுன் அனுமதியுடனும் ஒருங்கிணைப்புடனனும் மட்டுமே நடக்க வேண்டும் என்றது சிரிய அரசு. அப்படிச் செய்யாவிடில் அது சிரியாமீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என்றடு சிரிய அரசு. இதை இரசியாவும் ஆமோதித்திருந்தது. சிரியாவிற்குள் நடாத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து அல் அசாத்திற்கு எதிராகப் போராடிய முக்கிய குழுக்களில் ஒன்றான ஜபத் அல் நஸ்ரா என்னும் அல் கெய்தாவின் இணை அமைப்பு தன் படை நடவடிக்கைகளை நிறுத்தியதுடன் தமக்கிடையிலான இலத்திரனியல் தொடர்பாடல்களையும் நிறுத்திக் கொண்டது. அசாத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் எதிராகத் தீவிரமாகப்  போராடிய அஹ்ரர் அல் ஷாம் என்னும்  குழுவும் அமெரிக்காவின் தாக்குதல் தம்மீதும் நடாத்தப் படலாம் எனக் கருது களமுனைகளில் இருந்து வெளியேறி வருகின்றது. இப்படி அசாத்திற்கு எதிராகப் போராடும் குழுக்கள் விலகிச் செல்வதால் அசாத் வலுவடையலாம்.



ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணையும் மற்ற அமைப்புக்கள்
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீதும் மற்றும் அல் கெய்தா சார் அமைப்புக்கள் மீதும் தாக்குதல் செய்யத் தொடங்கிய பின்னர் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் மோதியும் கொண்டிருந்த பல் வேறு அமைப்புக்கள் இப்போது ஒன்றுபடத் தொடங்கிவிட்டன. அல் கெய்தாவின் தலைமக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் இப்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

 ஐ.எஸ்.ஐ.எஸின் பின்னர்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தால் அவர்கள் சிரியாவில் இருந்து துருக்கிக்குத் தப்பிச் சென்று பின்னர் ஈரான், ஆப்கானிஸ்த்தான், நைஜீரியா, சோமாலியா, ஈரான் போன்ற நாடுகளிற்குத் தப்பிச் செல்லலாம். ஈராக்கில் இருந்து நேரடியாக ஈரானிற்கும் தப்பிச் செல்லலாம். பின்னர் அவர்களால் மீளத் திரள முடியும். ஆனால் சிரியாவில் அசாத்தின் ஆட்சியை அகற்றுவது எப்படி? ஈராக்கில் ஒரு உறுதியான நல்லாட்சியை ஏற்படுத்துவது எப்படி? ஆகிய கேள்விகளுக்கான விடை காண்பது சிரமம். தமது படைநடவடிக்கைள் ஓராண்டுடன் முடியாமல் தொடரலாம் என அமெரிக்கா அறிவித்து விட்டது. ஈராக்கில் ஒரு நன்கு பயிற்ச்சி பெற்ற அரச படையும் சிரியாவில் அரசிற்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு நன்கு பயிற்ச்சியும் அவசியம். இரு பயிற்சிகலையும் அமெரிக்கா வழங்கும் போது அங்கு இசுலாமிய மதத் தீவிரவாதிகளும் ஊடுருவிப் பயிற்ச்சி பெறலாம். அது மீண்டும் முதலாம் அத்தியாயம் என்றாகிவிடும்.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...