Tuesday 15 April 2014

லிபியாவின் அரபு இலையுதிர்காலம்

அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளுடன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப்போது பிளவு படும் நிலையை அடைந்துள்ளது. பல இனக் குழுமங்கள் பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.

பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.  கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி. 
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.   .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.

பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.


கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

லிபியாவின் பொதுத் தேசிய சபை

லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது.  அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.

Sunday 13 April 2014

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை  உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன. இந்த லேசர் படைக்கலன் முறைமையை ஆங்கிலத்தில் Laser Weapon System எனவும் சுருக்கமாக (LaWS) எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப் லேசர் படைக்கலன்கள் விரைவாக அசையும் சிறு படகுகளையும் ஆளில்லா வேவு விமானங்களையும் இலகுவாக தொலைவில் வைத்தே அழிக்கக் கூடியன. இந்த லேசர் படைக்கலன்கள் பொருத்திய Arleigh Burke-class வகையைச் சேர்ந்த USS Dewe நாசகாரிக் கப்பல்கள் மத்திய கிழக்கின் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து  நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.

ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான  சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது

குரங்காக மாறிய காங்கிரசின் பிள்ளையர்

ஊழல் எதிர்ப்புக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிற்கு எதிரான வாக்குக்களைப் பிரித்து காங்கிரசின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் திரைமறைவு ஆதரவு இருந்ததாகவும் வதந்திகள் அடிபட்டன.

 இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.

நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.

காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள்  காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான  பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...