Friday 14 February 2014

காதலும் ஜெனீவாத் தீர்மானம் போலே!!!

அகமென்றும் புறமென்றும்
காதலும் வீரமும் தமிழர்
வாழ்வியலில் இரு கண்கள் அன்றோ
இந்திர விழா மன்மதன் விழா - எனக்
காதலுக்கு விழா எடுத்தவர் நாம் அன்றோ

அறம் பொருள் இன்பம் என
மூன்றில் ஒரு பகுதியைக்
காதலுக்குக் கொடுத்தவரும் தமிழர் அன்றோ
இரவுக்குறி பகற்குறி என
காதலர் சந்திப்புக்களுக்கு
கோட்பாடுகள் வகுத்தது தமிழ்ப்பண்பாடு அன்றோ
நகக்குறியென்றும் பற்குறியென்றும்
இணைந்த இன்பத்தை நினத்துப் பார்த்து மகிழ்ந்தவர்
எம் தமிழ்ப் பெண்கள் அன்றோ

ஏறு தழுவி மணம்முடித்தல்
கல் தூக்கி மணம்முடித்தல்
பரிசல் கொடுத்து மணம்முடித்தல்
மடலேறி மணம்முடித்தல்
போரில் வென்று மணம்முடித்தல்
என காதலரை இணைத்தவர் நாம் அன்றோ
ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கத்தை வலியுறுத்தி
மனம் விரும்பியவரை தடையின்றி அடைய
திணைக்கலப்பு மணமும் செய்தவர் நாம் அன்றோ

எந்தையும் நிந்தையும் அந்நியரானாலும்
யாயும் ஞாயும் அறியாதவரானாலும்
மண்ணோடு நீர்போல் மனங்களைக்
காதலில் இணைய அனுமதித்தோர் தமிழர் அன்றோ

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமாக
வந்திருந்து மணம் பேசி
முன்னறியாதவரை இணைத்தல்
ஆரியம் தந்த அறிவீனமன்றோ

ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும்
உள்ளத்தால் இணைவதைக் காதலென்கின்றனபழம்பெரும் தமிழிலக்கியங்கள்
இன்று எம் எல்லோரினதும் ஒத்த நிலையா
அன்பை நாம் பொழிய வேண்டியதும்
எம் தேசியத்தில் அன்றோ

மழைதரு மேகங்கள் கருங்குழலாய்
கடலலைகள் மல்லிகை மாலைகளாய்
வண்ண வானவில்லே நெற்றியாய்
நீர் நிலைகளில் கதிரும் நிலவும்
தரும் விம்பங்கள் கண்களாய்
புள்ளினங்கள் ஆங்கே காதோரக் குழலாய்
உப்பளங்கள் வதனமாய்
முக்கனிகளும் இதழ்களாய்
நீரோடைகள்தான் கழுத்து நகையாய்
பசுமையான வயல்கள்
மரகத மணி பதித்த ஆடையதாய்
வன்னி விருந்தோம்பல் மார்பதாய்
தேன் மலர்களும் மீன்வளங்களும் கரங்களாய்
வழிபாட்டிடங்கள் வளையல்களாய்
வற்றாக் குளங்களும்இடைகளாய்
கரும்பு வளமும் கனிம வளமும் கால்களாய்
இயற்கைத் துறைமுகங்கள் பாதங்களாய்
பாடும்புள்ளினங்கள் மேகலையாய்
ஆடும் மயில்கள் மெட்டிகளாய் - அழகிய எம்
தேசமகள் ஆங்கே துணையின்றி வாடுகின்றாள்
காதலிப்போம் காதலிப்போம் அவளை
மனதாரக் காதலிப்போம்

அழகிய எம் தேசிய மகளை
அலங்கரித்த தன்னாட்சி
என்னும் அணிகலன்கள் - அன்று
படைக்கலன்கள் எல்லாம்
மௌனித்துப் போனதால்
கலைந்து போனதன்றோ

ஜெனிவாக் கிலுகிலுப்பையை நம்பியிராமல்
தனியாய் ஓர் அரசு என்னும் திருமண பந்தத்தில்
எம் தேசமகளை கைப்பிடிப்பது எம் கடன் அன்றோ

அமெரிக்கரும் பிரித்தானியரும் யாராகினரோ
இந்தியரும் சீனரும் எம்முறைக் கேளிர்
அவர்தம் ஆதரவும் எதிர்ப்பும்
எம் தேசமகளையும் தன்னாட்சியையும்
இணைக்கும் என நம்புதல் மடமையன்றோ

திங்கள் இல்லா மாலை கருங்குடையான்
பயங்கரவாதம் என அன்று ஓதி
எம் விடுதலையின் கால்வாரி
சிங்களம் தன்னைப் புணர்ந்தாலும்
அறிவாய் நன்றாய் ஆரிய நரித்தனம்

ஜெனிவா தன்னில் தீர்மானித்தாலும்
தீராது ஒழியாத் துயரென்பதாலும்
தேச மங்கை இடர் பெரும் தீயேன்பாய்
அறிந்தோம் என தோழா நீ முழங்கு

என்றும் மாறா அயோக்கியத்தனம்
இத்தாலி கொடுக்கோல் வெள்ளைச்சி
தேர்தலோடு தோற்று ஓடினாலும்
ஆரிய அயோக்கியத்தனம்
மாறாது தொடரும் வழக்கமென
அறிவாய் நீ என் தோழா

தமிழர்க்கு உதை மாறாத உதை
நிறுத்து அதை உன் கடன்
என உன் மனம் கொள்
ஈழவர் உதை இனித் தொடங்க
தேசமகளை நீ காதலி தோழா

அக நூலகத்தில் முகநூலாவாள்
இணைய முகவரி கொடுப்பாள்
இணைந்து முக வரி தொடுப்பாள்
மின்னஞ்சல் விடுத்து என்நெஞ்சில்
பொன்னூஞ்சல் ஆடிடுவாள்
ஆனாலும் அக்காதலிலும்
தேசிய மகளைக் காதலித்தல்
பெருங்கடன் என்றுணர்வாய் தோழா

சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடிப்பதால்
ஆசை காட்டி ஏமாற்றிச் சாகடிப்பதால்
இறுதியில் பொய்யாய் முடிவதால்
சிலர் காதலும் ஜெனிவாத் தீர்மானம்போலே
தேசியத்தின் மீது வைக்கும் காதல்
என்றும் இனிக்கும் சரித்திரத்தில் நிலைக்கும்
என்றுணர்வாய் என் தோழா

Monday 10 February 2014

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள நீர்மூழ்கிக் கப்பல் போட்டி

2014-ம் ஆண்டு சீனா தனது புதிய ரக நீர் மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் தாக்கும் திறனை அதிகரிக்கவுள்ளது. சீனாவின் JL-2 நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு ஏவுகணைகள் 14,000 கிலோமிட்டர் அதாவது 8,699 மைல்கள் வரை பாயக் கூடியவை. இவற்றால் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய், அலஸ்கா போன்ற மாநிலங்கள் மீது அணுக்குண்டுத் தாக்குதல்களை செய்யும் திறனை சீனா பெறுகின்றது.

உலகிலேயே படைத்துறைச் செலவு அதிகரிப்பு ஆசிய நாடுகளில்தான் நடந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஆசியப் படைத்துறைச் செலவு 2011இலும் பார்க்க 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் படைத்துறைச் செலவு மற்றா ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது.

சீனா உருவாக்கியுள்ள அதிவேகமாகச் செல்லும் ஏவுகணைகள் அமெரிக்கா பல பில்லியன்கள் செலவி உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செல்லுபடியற்றதாக்கியுள்ள வேளையில் சீனா தனது புதிய தர நீர்மூழ்கிக் கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ள. சீனாவிடம் மொத்தமாக 60 நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் ஆறு அணுவலுவில் இயங்கிக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசக் கூடியவை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைமுகங்களான அம்பாந்தோட்டை, சிட்வே, சிட்டகொங், குவாடர் ஆகிய துறை முகங்கள் ஆழ்கடல் துறைமுகங்களாக இருக்கின்றன. சீனா தனது எதிர்கால கடற்படை வலுவில் நீர் மூழ்கிக் கப்பல்களிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என இது சுட்டி நிற்கின்றது. சீனா தனது நீர் மூழ்கிகளில் இருந்து வீசக் கூடிய ஏவுகணைகளில் வலுவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது நீர் மூழ்கிக் கப்பல்கள் இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதன் மற்ற நொக்கம் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என்பதாகும்.

சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் வலுவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா 35 பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கிய P-8A Poseidon என்னும் ஏவுகணைகளை வேட்டையாடும் போர் விமானங்கள் பரீட்சித்துப் பார்த்த வேளையில் அவை வெற்றி அளிக்கவில்லை. இந்த P-8A Poseidon விமானங்கள் எட்டை இந்தியாவும் வாங்கியிருந்தது.



தாய்லாந்தின் கடற்படையினருக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான பயிற்ச்சிகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் தாய்லாந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவிருக்கின்றது.  வியட்னாம் ஏற்கனவே இரசியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிவிட்டது. பிலிப்பைன்ஸ்சும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. மியன்மார் இந்தியாவிடமிருந்து நீர் மூழ்கிக்கப்பல்களைக் கண்டறியும் உணரிகளை வாங்கியுள்ளது. ஜப்பான் தனது நாட்டில் உள்ள தளங்களில்  அமெரிக்க நீர்மூழ்கி வேட்டை விமானங்களை நிறுத்த அனுமதித்துள்ளது. சீனாவிற்கு கிழக்கேயும் தென் கிழக்கேயும் உள்ள இந்தச் சிறிய நாடுகளின் நிதிவளம் பெரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடமளிக்காத வேளையில் இவை தமது கடற்படைப்படகுகளின் திறனையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கின்றன. இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நீர்மூழ்கி போர் ஒத்திகையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் மேலும் பல படைத்துறைகளில் இணைந்து செயற்படலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாய்வான் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் ஒத்திகையைச் செய்துள்ளது. இதில் நீர்மூழ்கிகளை அழிக்கும் முறைமை பரீட்சிக்கப்பட்டது. மியன்மார் 2015-ம் ஆண்டில் இருந்து தனக்கு என ஒரு நீர்மூழ்கிப் படையை உருவாக்கவிருக்கின்றது. மலேசியாவிடமும் சிங்கப்பூரிடமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன அவை தமது நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் வலுவையும் அதிகரிக்கவிருக்கின்றன. சீனாவிற்கு சவால் விடும் வகையில் ஜப்பானிடம் பெரிய நீர்மூழ்கிப்படை இருக்கின்றது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல்
2015-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் புதிப்பிக்கப்பட்ட ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கிக் கப்பல் ஜப்பானில் நிலை கொள்ளவிருக்கின்றது. தற்போது ஜப்பானில் இருக்கும் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலுக்குப் பதிலால ரொனால்ட் ரீகன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்ஷா திட்டம்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டனத்தில் இருந்து 200 கிலொ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்தில் உயர் தொழில் நுட்ப கடற்படைத் தளம் ஒன்று சீன அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் கடற்படையின் கிழக்குக் கட்டளையகத்தின் கீழ் வரும் இந்தத் தளத்தில் நிலத்துக் கடியில் இந்தியாவின் அணுக்குண்டுகள் தாங்கிய அரிகாந்த் நீர்மூழ்கிக் கப்பலை மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இந்தியக் கடற்படையின் கிழக்குக்கட்டளையகத்தின் கீழ் அரிஹாந்த் நீர்மூழ்கிக்கப்பல், ஜலஷ்வா என்னும் ஈருடகக் கப்பல், சக்ரா என்னும் அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட ஐம்பது கடற்கலன்கள் இருக்கின்றன. இந்தத் துறைமுகத்தில் எதிரிப்படைகளின் தாக்குதல்களிலும் கண்காணிப்பிலும் இருந்து கடற்படைக்கலன்களை மறைத்து வைக்கக் கூடிய வசதிகள் உண்டு. இந்தியா தனது கடற்படை வலுவை நிதானமாகவும் உறுதியாகவும் வளர்த்து வருகின்றது.

ஜப்பானைச் சுற்றியுள்ள நாடுகள் தமது படைத்துறை வலுவை சீனாவிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடனேயே வளர்த்து வருகின்றன. இந்த நாடுகள் யாவும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சீனாவின் சவாலை சமாளிக்க முடியும்.

ஆசிய ஆட்சியாளர்களுக்கு படைத்துறைப் போட்டி அவசியமாக இருக்கலாம். ஆனால் ஆசிய மக்களுக்குத் தேவைப்படுவது அமைதியும் அபிவிருத்தியுமே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...