Friday 29 August 2014

இரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள்

 ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களாக பெரும் கிளர்ச்சியை இரசியா தூண்டி விட்டுள்ளது. இந்த உக்ரேனிய உள்நாட்டு விவகாரத்தில் இரசியாவின் தலையீட்டை சிலர் "கம்யூனிசியத்திற்கு எதிரான போர்" என விமர்சிப்பதுண்டு. ஆனால் இரசியாவிற்கோ அல்லது உக்ரேனிற்கோ கம்யூனிசியத்துடன் எந்தத் தொடர்பும் கிடையாது. உக்ரேனில் நடப்பது இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியாகும்.

1991-ம் ஆண்டு    சோவியத் ஒன்றியம்   வீழ்ச்சி அடைந்த பின்னர்   அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன்   தனி நாடாகியது.   அப்போது  சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது.   இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய   அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.  இதை மீறும் விதமாக இரசியா கிறிமியாவைத் தன்னுடை இணைத்துள்ளது. உக்ரேன்  தன்னிடம்  இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது.  உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்    தனது ஆதிக்க நிலப்பரப்பை    இரசியா விரிவாக்கவே விரும்பியது.   அதன் முதல் முயற்ச்சியாக     இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து     சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.    பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான்    ஆகிய நாடுகள் இணைந்தன.   1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது.     பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில்   நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின.    சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட    இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன.    2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. 

ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள்  ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில்    தமது நிலப்பரப்பையும்  பொருளாதார வலயத்தையும்   விரிவாக்கிக் கொண்டு    முன்னாள் சோவியத் நாடுகளையும்    இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க      இரசியாவிற்கு    தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது.     அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில்    இணைந்திருந்த நாடுகளான     போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும்    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும்    இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை    இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது.   ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி   இதை ஒட்டி ஆரம்பமானது.    உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும்  என இரசியா  உக்ரேனை நிர்ப்பந்தித்தது. 

கடந்த ஓர் ஆண்டாக உக்ரேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கின்றனர். இரசியா உக்ரேனின் ஒரு பகுதியான கிறிமியாவை தன்னுடன் இணைத்து ஒரு நில அபகரிப்பைச் செய்து கொண்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பல இரசியப் பிடியில் இருந்து விலகி மேற்கு ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து கொண்டன. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறைக் கூட்டமைப்பாக இருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளில் இருந்து அவை விலகி இரசியாவின் எதிரி அமைப்பான நேட்டோவில் இணைந்து கொண்டன. மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தனது எல்லை வரை வருவதாக அஞ்சிய இரசியா எதிர் நடவடிக்கைக்களை எடுக்கத் தொடங்கியது. 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும் 
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசிய்ர்கள் பலர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை வைத்து இரசியா இப்போது அந்த நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர் முயல்கின்றது. இதை நொவோஇரசியா (Novorussiya) ஆனால் பெரும்பாலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவுடன் இணைந்து செயற்படுவதிலும் பார்க்க அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதை விரும்புகின்றன. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஊடகங்களும் இதற்கு ஏற்ப்ப பரப்புரைகளை மேற்கொள்கின்றன. எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது. 

இரசியாவின் ஒபரேசன் பூமாலை
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் தமக்குத் தனிநாடு வேண்டும் எனக் கிளர்ச்சி செய்கின்றனர். இவர்களின் முதல் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப் போகும் உக்ரேனிற்கு பெரும் பிரச்சனை கொடுத்துத் தடுத்தல். இரண்டாவது நோக்கம் இரசிய ஆதிக்க நிலப்பரப்பை அதிகரித்தல். இரசியா இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட தனது படைகளை உக்ரேனுடனான தனது எல்லையில் குவித்து வைத்திருக்கின்றது. மலேசிய விமானம் உக்ரேனின் இரசியக் கிளர்ச்சிக்காரர்களின் பிராந்தியத்த்தில் சுட்டு விழ்த்தப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசிய சார்ப்புக்  கிளர்ச்சிக்காரர்கள்மீது உக்ரேனிய அரசு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்கள் வசமிருந்து நிலப்பரப்புக்களை மீட்டது. தனக்கு சார்பான கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிச் செல்வதைப் பொறுக்காத இரசியா முதலில் உக்ரேனில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள் என்ற போர்வையில் தனது படையினரையும் படைக்கலன்களையும் அனுப்ப முயன்றது. அது கை கூடாமல் போனதால் இரசியா இப்போது களவாக ஆயிரம் படையினரை கனரகப் படைக்கலன்களுடன் உக்ரேனிற்குள் அனுப்பி வைத்துள்ளது. 

இரசியப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது           
உக்ரேனில் இரசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகளும் ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இரசியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இரசியா இப்போது தனது படைகளை உக்ரேனிற்குள் அனுப்பிய படியால் மேலும் இறுக்கமான பொருளாதாரத் தடைகள் விதிக்கபப்டலாம். ஏற்கனவே இரசியா பொருளாதார விழ்ச்சிச் சுழலில் அகப்பட்டு விட்டதாக இரசிய பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரசியா உக்ரேனிற்குள் படையினரை அனுப்பிய செய்தி வந்தவுடன் இரசிய நாணயமான ரூபிள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பல பன்னாட்டு வர்த்தக் நிறுவனங்கள் இப்போது இரசியாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தி வருகின்றன. இரசியா தனது மூலதனத் தேவையில் பாதிக்கு மேற்பட்டவற்றை மேற்கு நாடுகளிடமிருந்தே பெற்று வந்தது. இப்போது மேற்கு நாடுகளின் மூலதனச் சந்தை இரசிவிற்கு மூடப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றீடாக இரசிய தனத்க்குத் தேவையான மூலதனத்தை சீனாவிடமிருந்து பெறவேண்டி ஏற்படலாம். ஆனால் இரசியாவின் முழுத் தேவையையும் சீனாவால் திருப்தி செய்ய முடியாது. அத்துடன் சீன மூலதனத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும். புளூம்பேர்க் இரசிய மூலதன நிலைமை பற்றி இப்படிச் சொல்கின்றது: 
  • Bloomberg report of August 3: “Not a single US dollar, Euro, or Swiss franc was lent to a Russian company in July ….(this is) the first time since the depths of the financial crisis that Russian companies have faced such a credit drought.”

Forbes இப்படிச் சொல்கின்றது.  :
  • The European market for Russian debt is shrinking from nearly $50 billion to $3 billion, despite the best efforts of European banks to keep their Russian business afloat. 
இரசியாவிடம் போதிய வெளிநாட்டுக் கையிருப்பு உண்டு அதை வைத்துச் சிலகாலம் சமாளிக்கலாம்.பின்னர் இரசியா "தனது மழைக்காலக் கையிருப்புக்களைப்" பாவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபப்ட்டுள்ளது. இரசியாவில் இருந்து பல பண முதலைகள் தமது பணத்துடன் தப்பி ஓடுகின்றனர். 2014 ஆண்டின் முதல் காலாண்டில் இரசியாவில் இருந்து 221பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணம் வெளியேறியுள்ளது. 2013‍ம் ஆன்டின் மூலதன நிலைய 2014‍ம் ஆண்டிற்கும் பேணுவதாயின் இரசியா வெளிநாடுகளில் இருந்து 360பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இதற்கு அதிக விலை கொடுக்க வேன்டிய நிலையில் இரசியா உள்ளது. இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கப்போவது உறுதி என சில பொருளாதார நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர். இரசியாவும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக தானும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இரசியாவின் எரிபொருளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கியுள்ளன. அமெரிக்காவால் இந்த இடைவெளியை நீண்டகால அடிப்படையில் நிரப்ப முடியும். இரசியாவில் இருக்கும் அமெரிக்க வர்த்த நிறுவனங்களுக்கு எதிராக புட்டீன் பல நடவடிக்கைகளை எடுக்கின்றார். மக் டொனால்டின் பல கிளைகளை சுகாதாரக் காரணங்களைக் காட்டி மூடியுள்ளார். சிலர் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் இரசியாவின் பொருளாதாரத் தடையால் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் வங்குரோத்து நிலையை அடையப் போகின்றன என்கின்றனர். சொல்பவர்கள்தான் அறிவில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...