Sunday 25 May 2014

சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க புதியவகை நீதிமன்றம்.


சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டை பன்னாட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லும் வரைபுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 15 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 13 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் இரசியாவும் சீனாவு அதை தமது வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தால் இரத்துச் செய்துவிட்டன.  ஆனால் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றுடன் சில அரபு நாடுகளும் இணைந்து புதிய ஒரு வகையில் சிரியப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க ஆலோசித்துவருகின்றன. இதை உலகெங்கும் வாழ் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மேற்படி நாடுகள் புதிய வகையான் ஒரு திட்டத்தை உருவாக்கவுள்ளன. அது தமிழர்களுக்குத் தேவையான ஒன்றாக அமையலாம்.

சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் காட்டார் நாட்டின் நிதி உதவியுடன் பெருமளவில் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிரியாவின் காவற்துறையில் பணிபுரிபவர்கள் மூலம் எடுக்கப்பட்ட 55,000 ஒளிப்படங்கள் சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களாக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வழக்குத் தொடுநர்களின் ஆலோசனையுடன் சிரியப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை தயாரிக்கப்பட்டது.

மேற்படி குற்றச் சாட்டுகளை  Hybrid Court எனப்படும் கலப்பு நீதி மன்றம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் தீர்மானம் ஒன்றின் மூலம் உருவாக்கி அதில் வைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருப்பது போல் பொதுச் சபையில் வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரம் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. இரசியா கிறிமியவைத் தன்னுடன் இணைத்ததைச் செல்லாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.  இரசியாவிற்கு எதிராக 100 வாக்குகளும் ஆதரவாக 11வாக்குகளும் அளிக்கப்பட்டன, 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது இரசியாவிற்கான ஆதரவுத் தளம் பலவீனமானது என்பதை எடுத்துக் காட்டிவிட்டது. இதனால் ஐநா பொதுச்சபையில் சிரிய ஆட்சியாளர்களை விசாரிக்க ஒரு நீதி மன்றம் அமைக்கும் ஒரு தீர்மானத்தை அரபு நாடுகளும் மேற்கு நாடுகளும் இணைந்து கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். இவர்கள் அமைக்கும் கலப்பு நீதி மன்றம் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட கலப்பு நீதி மன்றங்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கம்போடியாவில் கம ரூஜ் அமைப்பின் போர்க்குற்றங்களை அமைக்க ஒரு கலப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. கலப்பு நீதிமன்றம் என்பது ஐநா பொதுச் சபையின் மேற்பார்வையில் பல நாட்டு நீதியாளர்களைக் கொண்டு உருவாக்கப்படும். இது பன்னாட்டுச் சட்டங்களையும் உள்நாட்டுச் சட்டங்களையும் கருத்தில் கொண்டு விசாரித்துத் தீர்ப்பளிக்கும்.

1993-ம் ஆண்டு முன்னாள் செக்கொஸ்லாவியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக் உருவாக்கப்பட்டது.

1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கம ரூஜ்ஜிற்கு எதிரான நீதி மன்றத்திற்கு ஜப்பான், இலங்கை, போலாந்து, கம்போடியா, சாம்பியா, ஆகிய நாட்டு நீதியரசர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

2002-ம் ஆண்டு இன்னும் ஒரு கலப்பு நீதிமன்றம் சியாரா லியோனில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நியமிக்கப்பட்டது.

சிரியப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் கலப்பு நீதிமன்றம் நான்காவது தலைமுறை நீதிமன்றமாக அமையவிருக்கின்றது இது முந்தைய மூன்றுவகையான நீதிமன்றங்களை விட அதிக நியாயாதிக்கம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்ட அறிஞர்களும் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...