Monday 31 March 2014

உக்ரேனின் கிரிமியாவிற்குள் இன்னும் ஒரு பிரிவினை?

உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம் இரசியாவுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை என்றும் ஒரு கருத்துக் கணிப்பின் மூலம் பிரிந்து தனியாகச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிறிமியாவை துருக்கி தேசத்தவர்களின் ஒட்டோமன் பேரரசு ஆண்டு வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்த்து கிறிமியாவை 1774-ம் ஆண்டு போரின் மூலம் பறித்துக் கொண்டனர்.     1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப் பறிக்க ஒட்டோமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது. 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது. 1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது.  1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது. 1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர்.  1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது.  . 1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் திகதி கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன்படி கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புச் செல்லாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு 100நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 11நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கிறிமியாவில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது டாட்டார் இனத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. டாட்டார் இனக் குழுமத்தினரில் பெரும்பான்மையானவர்கள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. டாட்டார் இனத்தவர்களை மேற்கு நாடுகள் தூண்டிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கிறிமியாவில் இருக்கும் டாட்டார்கள் மீண்டும் 1944இல் செய்தது போல நாடுகடத்தப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர்.

கிறிமியாவின் பூர்வீக குடிகளில் டாட்டார் இனத்தினரும் அடங்குவர். இவர்கள் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் ஹிடலரின் நாஜிப் படைகள் கிறிமியாவிற் படை எடுத்த போது அவர்களுடன் ஒத்துழைத்த குற்றத்திற்காக கிறிமியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் நடு ஆசியப் பிராந்தியங்களில் ஒன்றான உஸ்பெக்கிஸ்த்தானிற்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பல இரசியர்கள் சோவித் ஒன்றிய அரசால் கிறிமியாவில் குடியேற்றப்பட்டு கிறிமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக்கப்பட்டனர்.

இப்போது கிறிமியாவில் வாழும் மூன்று இலட்சம் டாட்டார் இனத்தினர் இரசியாவிற்கு சவாலாகப் புதிய பிரச்சனையைக் கிளப்புகின்றனர். தம்மத்தியிலும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தாம் விதியைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என கிறிமிய நகரான Bakhchisarayவில் கூடி முடிவெடுத்துள்ளனர். இவர்களின் தலைவர்களில் ஒருவரான ருபாட் சுபரோவ் கிறிமிய டாட்டார்கள் கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்படுவதை விரும்பவில்லை என்கின்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...