Monday 24 March 2014

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா?

உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை நம்பாமல் தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்கூடாது என்ற கூச்சல் சிலரால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூச்சலிடுபவர்கள் தங்கள் "வாதத்திற்கு" ஜோர்ஜியா மீது இரசியா 2008-ம் ஆண்டு செய்த ஆக்கிரமிப்பையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இரசியா உக்ரேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனக்கொலைகளைத் தெரிந்து கொண்டும் இவர்கள் இப்படிக் கூச்சலிடுவது "கொடுத்த காசுக்கு மேலாலை கூவுதல்" என்ற பதத்தைத்தான் நினைவிற்கு கொண்டு வருகின்றது.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா?
முதலில் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா என்பது பற்றிப் பார்ப்போம். இந்தியாவைச் சிலர் பிராந்திய வல்லரசு என்கின்றனர். பிராந்திய வல்லரசுக்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் உண்டு:
States which wield unrivaled power and influence within a region of the world possess regional hegemony.
இதன் பொருள்:  ஈடற்ற  வலிமையும் செல்வாக்கும் உலகின் ஒருபிரதேசத்திற்குள் செயலாட்சி புரியக் கூடிய ஒரு அரசு பிராந்திய ஆதிக்கமுள்ளது. சீக்கிம் நாட்டை தனது ஒரு மாநிலமாக இணைத்த போதும் பங்களா தேசத்தைப் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரித்த போதும் இந்தியாவிடம் ஒரு பிராந்திய ஆதிக்கம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவைச் சூழவுள்ள எந்த நாட்டிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தியாவிடம் வலிமை இருந்தாலும் அது  ஈடற்ற வலிமை அல்ல. இந்தியாவிற்கு மிஞ்சிய வலிமை சீனாவிடம் இருக்கிறது. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடக்கூடிய வலிமை பாக்கிஸ்த்தானிடம் இருக்கிறது. நேப்பாளம், மியன்மார்(பர்மா), இலங்கை ஆகிய நாடுகளின் மேல் இந்தியாவின் ஆதிக்கம் இல்லை. பிரேமதாசாவின் அரசைக் கவிழ்க்க முற்பட்டு இந்தியா பல்லுடை பட்டதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா மூக்குடைபட்டதும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தியாவின் உயர் இராசதந்திரிகளான விஜய் நம்பியார், கமலேஷ் ஷர்மா போன்றவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் போல் செயற்படுவதும், இந்திய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை அதிபர் முன் பணிவுடன் நிற்பதும், நிருபாமா ராவ் போன்றவர்கள் இலங்கை அமைச்சர்கள் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்பதும் இந்தியாவிற்கும் பிராந்திய வல்லரசு என்ற சொல்லிற்கும் வெகு தூரம் என்பதைக் காட்டுகிறது.

உக்ரேனியர்களும்-இரசியாவும் தமிழர்களும்-இந்தியாவும்
இரசியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இரசியா உலகிலேயே அதிக நிலப்பரப்புக் கொண்ட நாடு. இந்தியாவிற்கும் கணிசமான நிலப்பரப்பு உண்டு. இரசியா தனது நிதி வளத்திற்கு மிஞ்சிய அளவிற்கு படை வலுவைக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் அப்படியே. இரசியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு நாடு. இந்தியா அப்படியல்ல.  இரசியா தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. இந்தியாவும் தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை.  ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர அனுமதிக்காது. இரசியா உக்ரேனை அதனது அணுப் படைக்கலன்களை ஒப்படை உனது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு தான் உத்தரவாதம் என்று பொய் சொல்லிவிட்டு இப்போது உக்ரேனைப் பிய்த்து உதறுகிறது. இந்தியா தமிழர்களை அவர்களின் படைக்கலன்களை ஒப்படை உங்கள் பாதுகாப்பிற்கு தான உத்தரவாதம் என்று பொய் கூறி அவர்களைக் கொன்று குவித்தது.  1932-ஆம் 1933-ம் ஆண்டுகளில் இரசிய அரசு தனது விவசாயத் திட்டத்திற்கு ஒத்து வராத எழுபத்து ஐந்து இலட்சம் உக்ரேனியர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது. உக்ரேனின் பல பிராந்தியங்களில் இரசியர்களைக் குடியேற்றியது. இதற்குப் பின்னரும் இரசியாவைச் சார்ந்து நில்லுங்கள் என்றோ அல்லது இரசியாவைக் "கையாளுங்கள்" என்றோ யாராவது உக்ரேனியர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் நிச்சயம் இரசியாவின் சில்லறைக் கைக்கூலிகளே.  இந்தியா தனது நாட்டிலுள்ள போலி அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிக அளவு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. சில இந்திய அதிகார மையமான தென் மண்டலத்தில் இருக்கும் பிற்போக்குப் பூனூல் கும்பல்கள் தமிழன் என்பவன் சூத்திரன் அவள் ஆளப்பட வேண்டியவன், அவன் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றன. நேரு எஸ் தொண்டமானையும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையும் இணையவிடாமல் தடுத்தமை, நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்சதீவுத் தாரைவார்ப்பு, தமிழ் இளைஞர்களுக்கு படைக்கலப் பயிற்ச்சி கொடுத்து தனது காரியத்தை இந்தியா சாதிக்க முயன்றமை, ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம், அமைதிப்படையின் போர்க் குற்றம், ரணில் விக்கிரமசிங்க உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முன்வந்த போது இந்தியா அதைக்கடுமையாக எதிர்த்து நிறுத்தியமை,  இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வழங்க வந்த ரணிலின் ஆட்சியை இந்தியா  சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் ஜேவிபியையும் இணைத்துக் கலைத்தமை, முள்ளிவாய்க்காலில் முடிந்த இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு, 2008-ம் ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியமை இப்படியாக இந்தியத் துரோகப் பட்டியல் மிகவும் நீண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிராந்திய வல்லரசு அல்லாத இந்தியாவைப் பிராந்திய வல்லரசு எனப் பொய் சொல்லி அதை கையாளுங்கள். அதை விட்டு தூரத்தில் உள்ள அமெரிக்கப் பேரரசை நம்பாதீர்கள் எனச் சொல்பவர்களின் நோக்கம் தான் என்ன?

புது டில்லிதானாம் ஜெனிவா
"ஜெனிவாவை நோக்கி தமிழர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் புது டில்லி அசையாமல் ஜெனிவா அசையாது. புது டில்லியை எப்படி அசைப்பது என்பதில்தான் தமிழர்கள் முழுக்கவனமும் செலுத்த வேண்டும்." இப்படி ஆலோசனை சொல்கிறார்கள் இந்திய ஆதரவுக் கூச்சலிடுபவர்கள். உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஜெனிவாத் தீர்மானங்களால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்று. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள  193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவு பாலாஸ்த்தீனியர்களின் விடுதலைக்கு உண்டு.  இதை வைத்துக் கொண்டு எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அவர்களிற்கு விடுதலை பெற்றுக்  கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு விமோசனம் எப்படியும் கிடைக்காது என்பதை பன்னாட்டு யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் இரத்து அதிகாரம் போல் தமிழர்களுக்கு சீனாவினதும் இரசியாவினதும் இரத்து அதிகாரங்கள் தடையாக இருக்கும். தமிழர்கள் ஜெனிவாவிற்குப் போனாலும் காரியம் ஆகப் போவதில்லை. புது டில்லிக்குக் காவடி எடுத்தாலும் காரியம் நடக்கப் போவதில்லை.

ஜோர்ஜிய உதாரணம்.
இரசியா 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவின் கீழிருந்த இரண்டு தன்னாட்சியுள்ள பிரதேசங்களில் படை எடுத்து அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த போரில் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு உதவவில்லை. இதற்காக நாம் இந்தியாவிற்கு வால் பிடிக்க முடியாது. ஆனால் 2008-ம் ஆண்டின் பின்னர் ஜோர்ஜியா எப்படி இரசியாவைக் கையாள்கிறது என்பதை கூச்சலிடும் இந்தியக் கைக்கூலிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 2011-ம் ஆண்டு ஜோர்ஜியப் பாராளமன்றம் 19-ம் நூற்றாண்டில் இரசியா சேர்க்காசியர்களைக் கொன்றதை ஓர் இனக்கொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இரசியாவின் தென் எல்லையில் உள்ள வட கௌக்கௌஸ் பிரதேசத்தில் தன்னாட்சி கோரிப் போராடும் மக்களுடன் தனது தொடர்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் ஜோர்ஜியாவிற்கு வருவதற்கு பயண அனுமதி(விசா) தேவையில்லை என அறிவித்தது.

அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகளா?
அமெரிக்காவிடம் போகாதே இந்தியாவிடம் போ எனக் கூச்சலிடுபவர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள் என்கின்றனர். ஆனால் உக்ரேன் விவகாரத்தில் இந்தியா இரசியாவிற்கு ஆதரவு தெரிவித்தமை அவர்களின் கூற்றைப் பொய்யாக்குகிறது. வேலிக்கு ஓணான் கதைதான். இந்தியாவில் அதிகமாக உள்ள இளையோர் தொகையும் அதிகமாக உள்ள நடுத்தர வர்க்க மக்கள் தொகையும் இருப்பதால் உலக நாடுகளிற்கு இந்தியா ஒரு கவர்ச்சி மிக்க சந்தையாகத் தெரிகிறது. இதனால்தான் சில பெரிய நாடுகள் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன.

தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டதா?
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டது இதனால் இனித்தமிழர்கள் இந்தியாவை அணுகலாம் என்கின்றனர் இந்தியாவிற்காக கூச்சலிடுபவர்கள். பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் இந்தியா பூட்டைத் திறக்கவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்தியக் கைக்கூலிகளான சம்பந்தனும் சுமந்திரனும் ஜெனிவாவில் நின்று செய்யும் பரப்புரைகள் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு அள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டில் தமிழர்களின் கொந்தளிப்பு இந்தியாவை மாற்றியதா?
தமிழ்நாட்டில் தமிழர்கள் கொந்தளித்தது இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றனர் இந்தியாவிற்காகக் கூச்சலிடுபவர்கள். அப்படியாயின் தமிழர்களின் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா இனி முன்னிறுதி இலங்கையுடனான தனது அணுகுமுறையை மாற்றுமா?

இந்தியாதான் தமிழர்கள் முதல் எதிரை என்பதை என்று பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள எல்லாத தமிழர்கள் உணர்கிறார்களோ அன்றுதான் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும்.

அடங்குங்கடா!!!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...