Saturday 9 November 2013

லிபியத் தலைநகர் திரிப்போலியில் கடும் சண்டை

நவம்பர் 7-ம் திகதி இரவு லிபியத் தலைநகர் திரிப்போலியில் இரு படைக்கலன் ஏந்திய குழுக்களுக்கிடையில் பெரும் மோதல் வெடித்தது. மும்மர் கடாஃபிக்குப் பின்ன்ர் லிபியாவில் பல படைக்கலன் ஏந்திய ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் செயற்படுகின்றன. லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை சென்ற மாதம் அல் கெய்தா ஆதரவுக் குழு ஒன்று இலகுவாகக் கடத்திச் சென்றமை லிபியாவின் திடமற்ற நிலையை எடுத்துக் காட்டியது.அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தலைமை அமைச்சர்கள் லிபியாவில் பதவியில் இருந்தனர்.

நவம்பர் 7-ம் திகதி இரவு மிஸ்ரட்டா பிராந்தியத்தில் செயற்படும் குழு ஒன்று திரிப்போலிக்குள் புகுந்து அங்கு செயற்படும் குழு மீது தாக்குதல் நடாத்தியது.
 தமது தளபதி நூரி ஃபிரிவான் கொன்றமைக்குப் பழி தீர்ப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் வலிமைமிக்க படைக்கலன்கள் பாவிக்கப்பட்டன. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

லிபிய அரசு ஒரு தேசிய படையமைப்பை கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறது. லிபியாவின் எரி பொருள் வளம் நிறைந்த கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் லிபியாவில் Federal system என்னும் இணைப்பாட்சி முறைமையில் கீழ் தமக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமது பிராந்தியத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யப் படுவதையும் அவர்கள் தடுத்துள்ளனர்.

லிபிய மக்கள் சிலர் திரிப்பொலியில் இந்த மோதலுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். “Tripoli without weaponry” படைக்கலன்களில்லா திரிப்போலி என்ற சுலோக அட்டையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மோதும் குழுக்களுக்கு மூன்று நாள் அவகாசம் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.  படைக்கலன்கள் ஏந்திய சிறு குழுக்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதை லிபிய மக்கள் பெரிதும் வெறுக்கின்றனர்.

கடாஃபிக்கு எதிராக போராடிய குழுக்களுக்கு லிபிய அரசு சம்பளம் வழங்கி வருகின்றது. இக்குழுக்கள் தமக்கென பிராந்தியங்க்களை வைத்துக் கொண்டு ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இவர்களை படைக்கலன்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு அரச படையில் இணையுமாறு லிபிய அரசு கேட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அவர்களுக்கான சம்பளங்கள் நிறுத்தப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.

 கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

லிபியா ஒரு கட்டுபாட்டில் இல்லாத நாடாகிவிட்டது என்றார் இத்தாலிய வெளிநாட்டமைச்சர் எமா பொனினோ. ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் லிபியாவிற்கான தூதுவர்கள் மோதலை நிறுத்தும் படி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நாடுகள் லிபியாவில் அல் கெய்தாவின் கை ஓங்குமா என அஞ்சுகின்றன.

Friday 8 November 2013

ஈரான் பேச்சு வார்த்தையும் கேள்விக் குறியாகிய இந்தியாவின் வல்லரசுக் கனவும்.



தற்போது ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த வரை   ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்   பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையுடனும்   வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்துடனும்   வல்லரசு நாடுகளாக இருக்கின்றன.   ஐநாவை சீர்திருத்தம் செய்யும் நோக்கில்    இதில் மேலும் ஒரு நாட்டை அல்லது   ஒரு சில நாடுகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் பரவலான கருத்துக்களும் இருக்கின்றன.

இந்தியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் தாமும் வல்லரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றன. இவற்றில் மக்கள் தொகை அடிப்படையிலும் படைவலு அடிப்படையிலும் இந்தியா முன்னுரிமை பெறுகின்றது. ஐநாவிற்கான நிதிப் பங்களிப்பு அடிப்படையிலும் பொருளாதார வலு அடிப்படையிலும் ஜப்பானும் ஜேர்மனியும் முன்னுரிமை பெறுகின்றன.   பிராந்திய அடிப்படையில் வட அமெரிக்க நாடான ஐக்கிய அமெரிக்காவும்,   கிழக்கு ஐரோப்பிய நாடான இரசியாவும்,   மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஐக்கிய இராச்சியமும், பிரான்ஸும், ஆசிய நாடான சீனாவும் தற்போது வல்லரசாக இருப்பதால்  ஆபிரிக்க நாடான தென் ஆபிரிக்கா முன்னுரிமை பெறுகின்றது. மைய அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் தான் பிரதிநிதுத்துவப் படுத்துவதாக பிரேசில் சொல்கின்றது.

ஜப்பானும் ஜேர்மனியும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றன. பன்னாட்டு மட்டத்தில் இவை ஒத்த கருத்துக்களுடன் செயற்படுகின்றன. நேட்டோ நாடுகள் பிரேசில் வல்லரசாவதற்கு தம்முடன் பிரேசில் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டன. முக்கியமாக ஆபிரிக்கக் கண்டத்தில் பிரேசிலின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்கின்றன. அதற்கு இணங்க பிரேசில் பல ஆபிரிக்க நாடுகளுக்கு தான் வழங்கிய கடன்களை தனக்கு மீளச் செலுத்தத் தேவையில்லை என சொல்லி விட்டது.

இந்தியா இரசியாவுடன் நெருங்கிய நட்புடன் செயற்படுகின்றது. தனக்கு வேண்டிய நேரத்தில் இரசியா மூலம் ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா மூலம் தனக்கு வேண்டப்படாத தீர்மானங்கள் வரும்போது அதை இரத்துச் செய்யலாம் என்பதால் இந்தியா இந்த நட்பைப் பேணுகின்றது. இந்த மாதிரி ஒரு நிபந்தனையற்ற ஏற்பாட்டை இந்தியாவால் ஐக்கிய அமெரிக்காவுடனோ, பிரித்தானியாவுடனோ அல்லது பிரான்ஸுடனோ செய்து கொள்ள முடியாது. இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று வல்லரசாக சீனாவின் அனுமதி அவசியம். இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் தீர்மானத்தை சீனாவால் இரத்துச் செய்ய முடியும்.

தற்போது ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்  தடை தொடர்பாகவும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் P5+1 என்னும் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐநா நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளும் அத்துடன் ஜேர்மனியும் இருக்கின்றன.

ஈரானுடனான பேச்சு வார்த்தைகளில் ஏன் இந்தியா ஈடுபடுத்தப்படவில்லை? நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்த்தான், ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பது போன்றவற்றில் இந்தியாவின் பங்களிப்பை வேண்டின. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு அவை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆப்கானிஸ்த்தானில் சில பிரதேசங்களில் கனிம வளங்களைச் சுரண்டும் உரிமை சீனாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவைச் சுற்ற வர உள்ள நாடுகளில் இந்தியாவின் ஆதிக்கம் படு மோசமாகி விட்டது.

தற்போது உலக அரங்கில் காத்திரமான பங்கு வகிக்கக் கூடியவையாக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையே இருக்கின்றன. இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியா போகாவிட்டால் அது இந்தியாவின் பாது காப்புக்கு அச்சம் என்ற கருத்து இந்தியப் பாதுகாப்புத் துறையிடம் இருக்கின்றது. இந்தியா என்ன வல்லரசா அல்லது சந்தானம் சொல்லியது போல் "டல்" அரசா? வல்லரசாவதற்கு தீயாக வேலை செய்யணும் இந்தியாவே!

Thursday 7 November 2013

பொதுநலவாய(காமன்வெல்த்) மாநாட்டால் தமிழர்கள் நன்மை பெற முடியுமா?

தமிழர்கள் இனக்கொலையாளி எனக் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்ச இனி இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியில் இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் படைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின்படி போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைத்தமைக்கான காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரைப் பொதுநலவாய மாநட்டுக்குத் தலைவராக்கும் தவறு 2011-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவில் இழைக்கபப்ட்டது. பின்னர் இந்தத் தவறை கனடா பலதடவை சுட்டிக்காட்டியும் பயனற்றுப் போய் விட்டது. மனித உரிமை மீறியவர்களை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேற்றத் தொடங்கினால் கடைசில் ஒரு நாடும் அதில் எஞ்சமாட்டாது என்பதைப் பிரித்தானியா நன்கு அறியும்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதால் சில நன்மைகள் எமக்கு ஏற்பட்டு விட்டன.

தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் பின்னடைவாக இருந்தவை பல நாடுகளின் இலங்கை தொடர்பான அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை. முதன் முதலாக கனடா இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டது. இதை எமக்குச் சாதகமாக திருப்ப வேண்டிய பொறுப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களினுடையது.

மீண்டும் ஒரு முறை இலங்கை அரசின் போர் அத்து மீறல்கள் மீது உலகத்தின் கவனம் குவியப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் எந்த ஒரு நாடும் இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது அதற்குப் பாராட்டுத் தெரிவுக்கும் முகமாக இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கு பெற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் இந்தியா தலைமையில் பல நாடுகள் ஜெனிவாவில் கூறின. இப்போது அப்படி ஒரு வாசகத்தைச் சொல்லும் துணிவு யாருக்காவது இருக்கிறதா? இப்படி நிலைமை மாறி இருப்பது எமக்கு வெற்றி எனக் கருத முடியும்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒரு அரசியல் விமர்சகர் இலங்கையில் பொதுநலவாய மாநாடுகள் நடப்பது பொதுநலவாய மாநாடுகள் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரித்தானியாவின் கேவலமான முகம் எமக்குப் புரிகிறது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது வர்த்தக நலன்களை எப்போதும் முன்னிறுத்துவார்கள் என்பது எமக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதுபற்றி இந்த இணைப்பில் பார்க்கவும்: Car imports. சில "டீல்களின்" பின்னர் ஆளும் கட்சிக்கு வர்த்தகர்கள் நன்கொடையளிப்பார்கள்.  ஜேர்மன் வர்த்தகர்கள் கூட பிரித்தானிய அரசியல் கட்சிக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ நன்கொடைகள் வழங்கலாம்.

தமிழர்களைப்  பொறுத்தவரை "மறப்பது மக்களின் இயல்பு நினைவு படுத்துவது எம் கடமை" என்பது அவசியம் கடைப்பிடிக்கப்ப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பது எமது மக்களுக்கு தமது கடமைகளை நினைவு படுத்த உதவும். தமிழ்நாடு மீண்டும் உணர்வு மயமாகின்றது.

இந்துப் பத்திரிகையின் திருகு தாளத்தை நாம் மீண்டும் உணர்கின்றோம். கமலேஸ் ஷர்மா, சுப்பிரமணிய சுவாமி, சோ ராமசாமி போன்ற கேடு கெட்ட பூனூல் கும்பல்களின் தமிழின விரோதத்தை மீண்டும் உணர்கின்றோம். கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதா ஒரு புறம் தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் போட்டுவிட்டு மறுபுறம் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவரது இரட்டை வேடத்தை அறிகின்றோம். 

பொதுநலவாய மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் பங்குபற்றலாம் என இந்தியக் காங்கிரசுக் கட்சியின் மையக் குழு முடிவெடுத்ததும் அதற்கு எதிராக கருணாநிதி அறிக்கை விட்டார். உடனே நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஓடி வந்து கருணாநிதியைச் ச்ந்தித்தார். அவர்கள் இப்போதும் கூட்டணியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம். ஜி. கே வாசன் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கும் நாடகம் சோனியாவின் ஆசியுடன் இனி நடக்கலாம் என்பதையும் உண்ர்ந்து கொண்டோம். காங்கிரசுத் தலைமைப் பீடத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தோற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மன்மோஹன் சிங்க் போவதால் ஒன்றும் புதிதாக இழப்பு தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை இருக்கப் போவதில்லை. எப்படியிம் தமிழ்நாட்டில் வெல்லும் கட்சிகள் அமைச்சுப் பதவிக்காக காங்கிரசு ஆட்சியமைத்தால் அதில் சேர தேடிச் செல்வார்கள். 

இந்திய மைய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்ச்சிக்காக  மாற்றப்பட முடியாது என்று இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக வாதாடப்படுகின்றது. இதனால் சில தமிழர்களாவது தமக்கென ஒரு "வெளிநாட்டுக் கொள்கை" இருந்தால் இப்படி நடக்குமா எனச் சிந்திக்கின்றார்கள்.

வட இந்தியாவில் தோற்கின்றோம்
உலகெங்கும் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான பரப்புரையில் முன்னேற்றம் கண்டுக் கொண்டிருக்கும் நாம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரம் வட இந்திய ஊடகங்களில் வெற்றிகரமாக நடப்பதைத் தடுக்க முடியாமல் இருக்கின்றோம். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா பங்கு பெறாவிடில் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் என்ற  பொய்ப்பரப்புரை வட இந்திய ஊடகங்களில் நிறையச் செய்யப்படுகின்றது.  பொதுவாக விவாதம் என்றால் வெள்த்து வாங்கும் திராவிடக் கட்சியினர் வட இந்திய ஊடகங்களில் சோபிக்கவில்லை. செய்யப்படுகின்றது. சுப்பிரமணிய சுவாமி இவர்களை பல விவாதங்களில் முட்டாளாக்கி விருகின்றார். யாருக்கும் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் இரத்தத்தால்  தமிழர்கள் அல்லர் எனச் சொல்லும் திராணி இல்லை. ஜகத் கஸ்பர் மட்டும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சுப்பிர மணிய சுவாமியை பிய்த்து உதறினார். பொதுவாக தொலக்காட்சி விவாதங்களில் சுவாமியின் விவாதத்திற்கு மற்றவர்கள் பதில் சொல்லும் போது ஒரு வகை நையாண்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஜெகத் கஸ்பர் பதிலடி கொடுக்கும் போது திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். ஜெகத் கஸ்பர் திசைமாறிப்போனது இழப்புத்தான். சுப்பிரமணிய சுவாமிக்கு வடமாகாண முதலமைச்சர் போடும் மொக்கைகள் சிறந்த விவாதப் படைகலன்களாகின. அவற்றைப் பொய் என ஆணித்தரமாக மறுத்தார் கஸ்பர்.

No Extra Diplomatic Immunity  - மேலதிக இராச தந்திரப் பாதுகாப்பு இல்லை
மஹிந்த பொதுநலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பதால் அவருக்கு ஒரு இராசததிரப் பாதுகாப்புக் கவசம் கிடைக்கும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே ஒரு அரசுத்தலைவர் என்ற வகையில் அவருக்கு இருக்கும் இராசததிரப் பாதுகாப்புக் கவசத்தை விட மேலதிகமாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பன்னாட்டு அமைப்பின் தலைவர் என்றவகையில் இலங்கையில் அரது அரசும் படையினரும் செய்யும் அட்டூழியங்கள் அதிக கவனத்தை ஈர்க்கப் போகின்றது. அவர்து பொறுப்புக் கூறும் கடமை அதிகரிக்கப் போகின்றது. இனி வரும் காலங்களில் அவரது ஊடக மாநாடுகள் அவருக்கு மிகவும் சோதனை மிகுந்தாதாக அமையும். அவரின் நீண்ட காலக் கனவான இலண்டனில் ஒரு மாநாட்ட்டில் அல்லது கூட்டதில் உரையாற்றும் கனவை கமலேஸ் ஷர்மா மீண்டும் நிறைவேற்ற முயலலாம். ஐரோப்பியா வாழ் தமிழர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

எமது நீண்டி தூரப் பயணத்தில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பின் மாநாடும் மஹிந்த அதற்கு ஏற்கும் தலைமைப் பொறுப்பும் எமக்கு ஒரு சாதகமான நிகழ்வுகளாக எம்மால் மாற்ற முடியும்.

Tuesday 5 November 2013

எகிப்திய நீதிமன்றில் மொஹமட் மேர்சி

எகிப்தின் முன்னாள் அதிபர் மொஹமட் மேர்சியும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த 14பேரும் எகிப்தின் தற்போதைய படைத்துறை ஆட்சியாளர்களால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.  ஆனால் நீதி மன்றத்திற்கு வந்த மேர்சி தானே எகிப்தின் சட்டபூர்வ அதிபர் என்றார்.

எகிப்திய நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். ஆனால் மேர்சி அப்படிச் செய்ய மறுத்து நீல நிற சூட்டில் நிதிமன்றத்திற்கு வந்தார். காவற்துறையினர் மேர்சியைக் குற்றவாளிகளுக்குரிய வெள்ளை ஆடை அணிய வேண்டும் என்றார்.

நீதிபதி மேர்சியை அவரை அறிமுகப்படுத்தும் படி கேட்டபோது "நான் கலாநிதி மொஹமட் மேரி எகிப்தியக் குடியரசின் அதிபர். என்னை விசாரிக்க உங்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை." என்றார். பின்னர் நீதிபதியைப் பேச விடாமல் மேர்சி தானே எகிப்தின் அதிபர் என உரத்துக் கூறிக் கொண்டிருந்தார். நீதிமன்றம் இடைவேளை விட்டுப் பின்னர் கூடியது.மேர்சியுடன் இணைந்து மற்றப் 14 பேரும் நீதிமன்றத்தில் உரக்கச் சத்தமிட்டனர். இதனால் நிதிபதி விசாரணையை 2014 ஜனவரி 8-ம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது மேர்சியை தூக்கிலிட வேண்டும் என ஒரு பெண் ஊடகவியலாளர் உரத்துக் கத்தியதால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. மேர்சியின் ஆதரவாளரகளும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடாத்தினர். மேர்சியின் ஆட்சியின்போது அவர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களும் மேர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எகிப்தியப் படைத்துறையினர் ஆட்சியின் கீழ் மேர்சிக்கு ஆயுள் தண்டனையோ அல்லது இறப்புத் தண்டனையோ வழங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.



நான்கு மாதங்களாக சிறையில் இருக்கும் மேர்சி அவரது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இரண்டு தடவை மட்டும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டார்.




Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...