Saturday 12 October 2013

தலிபான் தலைவரைக் கைப்பற்றிய அமெரிக்கப்படைகள்

ஆப்கானிஸ்த்தான் அரசுடன் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சு வார்த்தை செய்து விட்டுச் சென்று கொண்டிருந்த தலிபான் தலைவர்களுள் ஒருவரான லத்திஃப் மேஹ்சுட்டை அமெரிக்கப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இவரது கைது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருப்பதுடன். ஆப்கானிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகலையும் உருவாக்கியுள்ளது.

லத்திஃப் மேசுட் ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பின் முன்னணித் தலைவர் ஆவார்.  இந்த அமைப்பின் தலைவரான ஹக்கிமுல்லா மெஹ்சுட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமானாவர் ஆகும். 2010 அமெரிக்க ரைம்ஸ் சதுக்கத்தில் நடந்த குண்டுத்தாக்குதல் முயற்ச்சிக்கு இவர்களே சூத்திர தாரிகள் எனப்படுகிறது.

ஆப்கானிஸ்த்தான் படையினரின் பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகஒரு தகவல் தெரிவிக்கிறது.  இன்னொரு தகவல் ஆப்கான் படையினர் கைது செய்து கொண்டு செல்கையில் அவர்களிடமிருந்து அமெரிக்கப்  படையினர் லத்திஃப் மேஹ்சுட்டை பிடுங்கிக் கொண்டதாகத் தெரிவிக்கின்றது. மேலும் ஒரு தகவல் அவரி அமெரிக்கப்படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கின்றது. இவர் கைது செய்ததை ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.லத்திஃபின் கைது பற்றி அமெரிக்கா விபரமாக எதையும் கூறவில்லை ஆனால் அவரைப் பிடித்து வைத்திருந்து விசாரிப்பதை உறுதி செய்துள்ளது. இவர் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது கூடத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்த்தானில் பக்ரம் என்னும் இடத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதே இடத்தில் லத்திஃப்பையும் அமெரிக்க தடுத்து வைத்திருக்கலாம் என நம்பப் படுகிறது.

முப்பதிற்கு மேற்பட்ட படைக்கலன் ஏந்திய குழுக்களைத் தன் கீழ் வைத்திருக்கும் ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பின் தலைவரான ஹக்கிமுல்லா மெஹ்சுட்டின் வண்டி செலுத்துனராக தனது பணியை ஆரம்பித்த லத்திஃப் மெஹ்சுட் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும்  அமைப்பின் பேச்சாளராகவும் பேரம் பேசுபவராகவும் உயர்ந்தவர். தலிபானுக்கும் ஆப்கானிஸ்த்தான் அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் லத்திஃப்பின் தலைமையிலே நடந்தது.

2014-ம் ஆண்டு ஆப்கானில் இருந்து வெளியேற எண்ணியுள்ள நேட்டோப் படையினர் ஒரு தொகைப் படையினரை ஆப்கானிஸ்த்தானில் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றனர். அந்தப் படையினரை எந்த அடிப்படையில் வைத்திருப்பது என்பது தொடர்பாக ஆப்கானிஸ்த்தான் அரசுடன் இன்னும் ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாமல் பெரும் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.

Friday 11 October 2013

அல் லிபி கைது: அமெரிக்கா நிலத்தில் அத்து மீறல் கடலில் மனித உரிமை மீறல்

லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் அத்து மீறிப் புகுந்த அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணியினர் கெய்தா உறுப்பினராகக் கருதப்படும் அபு அனஸ் அல்-லிபி எனப் பிரபலமாக அறியப்பட்ட நஜிஹ் அல்-ரகாயைக் கடத்திச் சென்றனர். ஒக்டோபர் ஐந்தாம் திகதி சனிக்கிழமை அதிகாலை தனது தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த அல் லிபியை மூன்று திசைகளில் இருந்து வந்த முகமூடியணிந்த டெல்டாப் படையணியினர் தனது வீட்டின் முன் தனது வண்டியை நிறுத்த முயன்று கொண்டிருதவரின் வண்டியின் கண்ணாடிகளை உடைத்து அவர் துப்பாக்கியைப் பிடுங்கி விட்டு அவரைக் கடத்தி கொண்டு போய் மத்திய தரைக்கடலில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் சன் அண்டோனியோ என்னும் கப்பலில் வைத்திருக்கின்றனர்.

நாற்பத்தி ஐந்து வயதான அபு அனஸ் அல் லிபி எந்த ஒரு நாட்டின் நியாய ஆதிக்கத்திற்கும் உட்படுத்தப்பட முடியாதவராக்கப்படுவதற்காக அவர் கடலில் வைத்திருக்கப்படுகின்றார். அவர் ஒரு குற்றவாளிக்குரிய எந்த ஒரு உரிமையும் இல்லாதவராக இருக்கிறார். அவர் ஜெனிவா உடன்படிக்கைக்கு அமைய விசாரிக்கப்படுகிறார் என அமெரிக்க அரசு சொல்கிறது. அவருக்கு அமெரிக்காவில் குற்றம் இழைத்தவராக கருதப்பட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் மிரண்டா உரிமை வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் பெண்டகன், சிஐஏ,  எஃப்பிஐ போன்ற துறையைச் சேர்ந்தவர்களின் நிபுணர்குழுவால் கடுமையாக விசாரிக்கபப்டுகின்றார். இவரை விசாரிக்கும் குழுவை High Value Detainee Interrogation Group என அழைப்பர். இந்த விசாரணையின் போது பெறப்படும் தகவல்கள் முறை சட்ட விரோதமானது என்பதால் அவர் நீதிமன்றின் முன் நிறுத்தப்படும் போது நீதிமன்றில் இத் தகவல்களை அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்க முடியாது. கியூபாவில் உள்ள அமெரிக்காவின் சித்திரவதைக் கூடமான குவான்டனாமோ குடாவிற்கு ஒருவரையும் அனுப்பக் கூடாது என்ற கொள்கையுடன் ஒபாமா இருக்கிறார்.

தற்போது அபு அல் லிபி ஒரு எதிரி நாட்டுப் படைவீரனைப் போல் நடத்தப்படுகிறார் என்கிறது அமெரிக்க அரசு. அபு அல் லிபி மீது உடலில் காயம் ஏதும் ஏற்படாத முறையில் நவீன முறையில் சித்திரவதை பிரயோகிக்கப்பட்டு அல் கெய்தாபற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வார்கள். பின்னர் அவர் அமெரிக்காவின் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அப்போது அவருக்கு அமைதியாக இருக்கும் உரிமை, வழக்கறிஞர் வைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன வழங்கப்படும் என்கிறது அமெரிக்க அரசு. அல் லிபி பல அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசு சோமாலியாவிற்கும் யேமனுக்கும் இடையில் ஏடன் வளைகுடாவில் ஒரு படகில் சென்று கொண்டிருக்கையில் கைப்பற்றிய சோமாலியப் போராளியான அஹமட் அதுல் கதீர் வர்சேம் (Ahmed Abdul kadir Warsame) அறுபது நாட்கள் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு அரசு தரப்புச் சாட்சியாக மாறினார்.

2001 செப்டம்பர் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ உலகெங்கும் பல நாடுகளில் பல இசுலாமியத் தீவிரவாதிகளைக் கைது செய்து கடத்திச் சென்று தனது இரகசிய நிலையங்களில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்து விசாரணை செய்தது.

அல் லிபியை அமெரிக்கா கடத்திச் சென்றமைக்கு லிபிய அரசு உதவி செய்ததாக இசுலாமியத் தீவிரவாதிகள் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1373இன் படி ஒரு நாடு பயங்கரவாதிகள் தொடர்பாகத் தனக்கு கிடைத்த தகவல்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள  வேண்டும்.

அல் லிபியை அமெரிக்க டெல்டாப் படையணியினர் கடத்திச் சென்றதைத் தொடர்ந்து லிபியத் தலைமை அமைச்சர் அலி சிடான் கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பு லிபியத் தீவிரவாதிகளுக்கு கடும் மிரட்டல்களை திரைமறைவில் விடுத்தனர்.  இதைத் தொடர்ந்து தலமை அமைச்சர் அல் சிடான் விடுவிக்கப்பட்டார்.

லிபியத் தலைமை அமைச்சர் கடத்தப்பட்டமை லிபியாவில் மும்மர் கடாஃபிக்குப் பின்னர் பல ஒன்றிற்கு ஒன்று முரணான படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்கின்றது. இக்குழுக்கள் தமக்கென சில பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இவைகளுக்கு இடையிலான முறுகல்கல் மோதல்களாக மாறினால் அது பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்தும். அல் கெய்தா ஆதரவுக் குழுக்கள், ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் போன்றவற்றை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. 2013 ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் திரிப்போலியில் உள்ள இரசிய தூதுவரகம் தாக்கப்பட்டது.

Wednesday 9 October 2013

அமெரிக்காவின் கடன் நெருக்கடியும் அஞ்சும் சீனாவும்


கடன்பட்டு கலங்குவதுண்டு. ஆனால் ஐக்கிய அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த நாடுகள் இப்போது கலங்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க பாராளமன்றமான காங்கிரஸின் இரு சபைகளில் ஒன்றான மக்களவைக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கும் இடையில் நடந்த இழுபறியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரச பணிமனைகளில் அத்தியாவசிய மற்றவற்றை தற்காலிகமாக மூடப்பட்டன. இழுபறியின் அடுத்த அம்சமாக அமெரிக்காவில் கடன் நெருக்கடி தோன்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு அரசு தான் கடன் வாங்கும் போது கொடுக்கும் பத்திரம் கடன் முறி எனப்படும். அமெரிக்காவில் கடன் நெருக்கடி தோன்றினால் அது உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அரசின் கடன் முறிகளில் பல நாடுகள் முதலிட்டுள்ளன. இவை வரவிற்கு மிஞ்சி செலவு செய்யும் அமெரிக்க அரசுக்கு இந்த நாடுகள் கொடுத்த  கடன்களாகும். அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடாக சீனாவும் ஜப்பானும் இருக்கின்றன. இரு நாடுகளும் அமெரிக்க அரசை கடன் நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கக் கடன் உச்ச வரம்பு
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 1980 இற்குப் பின் கடன் உச்சவரம்பு 40 தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன. அமெரிக்காவின் மக்களவி ஒக்டோபர் 17-ம் திகதிக்கு முன்னர் அமெரிக்க அரசின் கடனை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அமெரிக்க அரசின் தற்போதைய நாளாந்த நிதிக் கையிருப்பு  முப்பது பில்லியன் டொலர்கள் மட்டுமே. ஆனால் அமெரிக்க அரசுக்கு நாளாந்தம் அறுபது பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது. 17-ம் திகதிஓக்டோபர் அமெரிக்க அரசு பதின்மூன்று பில்லியன் டொலர்களை தான் பட்ட வட்டிகளுக்காக செலுத்த வேண்டும். பின்னர் நவம்பர் மாதம் இடு இருபத்தைந்து பில்லியன் டொலர்களாக உயரும். அமெரிக்க அரசு தற்போது 16.94ரில்லியன் டொலர்கள் கடன் படலாம் என உச்சவரம்பு ஒன்றை அமெரிக்கப் பாராளமன்றம் நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு வரவிற்கு மிஞ்சி செலவு செய்வதால் இந்தக் கடன் உச்ச வரம்பை அடிக்கடி உயர்த்த வேண்டி இருக்கிறது.

அமெரிக்க அரசின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் படி குடியரசுக் கட்சியினர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமை நிர்ப்பந்திக்கின்றனர்.அதிலும் முக்கியமாக குடியரசுக் கட்சியினரை ஆத்திரப்படுத்துவது பராக் ஒபாமாவால் கொண்டுவரப்பட்ட ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டமாகும். ஒபாமாகெயாருக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் வரை எந்த ஒரு விட்டுக் கொடுப்பனவும் செய்யப்ப் போவதில்லை என குடியரசுக் கட்சியின் மக்களவைத் தலைவர் ஜோன் ஏ பொஹ்னர் சூளுரைத்துள்ளார்.

கடன் நெருக்கடியும் அதன் விளைவுகளும்
ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவன்ங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும். அமெரிக்காவில் 2013-10-17-ம் திகதி நிகழவிருப்பதாக பலரும் அஞ்சி நிற்கும் கடன் நெருக்கடிக்கு அங்கு தற்போது நிலவும் கட்சிகளுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாகும் Obacare உட்பட எல்லா அரச செலவீனங்களையும் குறை அல்லது உன்னைக் அதிக கடன் பெற அனுமதிக்க மாட்டோம் என மக்களவையில் பெரும்பான்மையாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவை மிரட்டுகின்றனர். கடன் பட்டுக் கடன் அடைக்க வேண்டிய நிலையில் இருக்கும் அமெரிக்க அரசுக்கு இதனால் கடன் நெருக்கடி ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கடன் நெருக்கடி ஏற்பட்டால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வட்டி வீதம் இரும்டங்காகும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதுவரை காலமும் தனது கொடுப்பனவுகளை எந்த வித தாமதமோ குறையோ இல்லாமல் செலுத்து வந்த அமெரிக்க அரசுக்கு பெரும் சோதனையாகவும் வரலாற்றுக் கறையாகவும் கடன் நெருக்கடி அமையலாம்.

செல்வாக்கிழக்கும் குடியரசுக் கட்சியினர்
அமெரிக்க அரச பணிமனைகள் மூடப்பட்டதையும் அமெரிக்காவின் கடன்வரம்பை உயர்த்த மறுப்பதையும் பல அமெரிக்க மக்கள் வெறுக்கின்றனர். குடியரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யும் பண முதலைகளும் இவற்றை விரும்பவில்லை. சிலர் குடியரசுக் கட்சிக்கு தாம் செய்யும் வழமையான நிதி உதவிகளை இடை நிறுத்தியுள்ளனர்.இதனால் சில குடியரசுக் கட்சியினர் தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியினருடன் இணைந்து நிதி ஒதுக்கீடு சம்பந்தமான வாக்கெடுப்பில் வாக்களிக்கும் சாத்தியம் உண்டு. பராம் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிறைவேற்றிய நிதி ஒதுக்கீடு சம்பந்தமான சட்டத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடாமல் குடியரசுக் கட்சியினர் இழுத்தடித்து வருகின்றனர். ரீ பார்ட்டியினர் குடியரசுக் கட்சித் தலைவர் ஜோன் ஏ பொஹ்னருக்குக் கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம். பராக் ஒபாமா ஜேன் ஏ பொஹ்னருக்கு முடியுமானால் மூதவை நிறைவேற்றிய நிதி ஒதுக்கிட்டுச் சட்டத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடும்படி சவால் விடுத்துள்ளார். 2011இலும் இதே போன்ற ஒரு கடன் நெருக்கடி அபாயம் உருவாகி அதி இறுதிக் கணத்தில் தவிர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகைக்கும் மக்களவைக்கும் இடையிலான இழுபறிக்கு காரணமாக அமைந்தது ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டமாகும். இது பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: ஒபாமாகெயார்

a

Monday 7 October 2013

"பயங்கரவாதிகளுக்கு" எதிராக அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தில் தாக்கியதில் சம்பந்தவட்டவராகக் கருதப்படும் அல் கெய்தா உறுப்பினரான அபு அனஸ் அல்-லிபி எனப் பிரபலமாக அறியப்பட்ட நஜிஹ் அல்-ரகாய் என்பவரை அமெரிக்கப் படையினர் லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் அத்து மீறிப்புகுந்து கைப்பற்றிக் கடத்திச் சென்றுவிட்டனர். சோமாலியக் கடற்கரையிலும் அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தினர்.

 முகமூடி அணிந்த அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படையணியான நீரிலும் நிலத்திலும் வானிலும் தாக்குதல் நடத்தக் கூடிய சீல் பிரிவினர் லிபியத் தலைநகர் திரிப்போலி வீதியில் நடமாடிய அபு அனஸ் அல்-லிபியைக்  கடத்திச் சென்றனர்.

லிபியாவிற்குள் அரசுக்குத் தெரியாமல் அமெரிக்கப் படையினர் அத்துமீறிப் புகுந்து செய்த படை நடவடிக்கை லிபிய அரசை ஆத்திரப்படுத்தியுள்ளது. லிபியப் பிரதமர் அமெரிக்கா தனது நாட்டுக்குக் குடிமகனைக் கடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. அரபு வசந்தம் முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபியை கொன்ற பின்னர் லிபியாவில் பல படைக்கலன் ஏந்திய ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் லிபிவை பிரதேச ரீதியாகப் பிரித்து தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அங்கு அல் கெய்தா தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடத்தப்பட்ட அபு அனஸ் அல்-லிபியின் மகன் லிபிய அரசின் ஆதரவுடனேயே அமெரிக்கப்படையினர் தனது தந்தையைக் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அபு அனஸ் அல்-லிபி காலை 6-15அளவில் தனது வீட்டின் முன்னர் தனது Hyundai sports வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திக் கொண்டிருக்கும் போது அவரது வண்டியை  முன்று திசைகளில் இருந்து வந்தஇலக்கத்தகடு இல்லாத நான்கு வண்டிகள் சூழ்ந்து கொண்டன. அவற்றில் இருந்து இறங்கிய பத்துப் பேர் அவரது வண்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவரது துப்பாக்கியை முதலில் பறித்த முக மூடி அணிந்த கடத்தல்காரர்கள் பின்னர் அவரை இழுத்து தமது வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓடிவிட்டனர். அவர் இப்போது மத்திய தரைக்கடலில் உள்ள் அமெரிக்கக கடற்படைக் கப்பலான USS Antonioஇல் வைத்து விசாரிக்கப்படுகின்றார். இவர் நியூயோர் நகர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

லிபியாவில் கைது செய்யப்பட்டுக் கடத்தப்பட்ட அபு அனஸ் அல்-லிபியைப் பிடிக்க உதவுபவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அல் லிபி மெய்ப்பாதுகாவலர்களின்றி சுதந்திரமாக லிபியத் தலைநகர் திரிப்போலியில் நடமாடிக்கொண்டிருதது ஆச்சரியப்படவைக்கும் விடயமாகும்.

அமெரிக்க அரசு எல்லை கடந்து அத்து மீறிச் சென்று கைது செய்வது இது முதல்தடவை அல்ல 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அஹமட் அப்துல்கதிர் வர்சமெ என்னும் அல் ஷபாப் என்ற சோமாலிய இசுலாமிய தீவிரவாத அமைப்பு உறுப்பினரை ஏடன் வளைகுடாவில் வைத்துக் கைது செய்தது. பில் லாடனை பாக்கிஸ்த்தானிற்குள் அத்து மீறிச் சென்று கொன்றது.

2001 செப்டம்பர் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப்பாராளமன்றமான காங்கிரசு  அமெரிக்கப்படைகள் தேவை ஏற்படின் மற்ற நாடுகளுக்குள் அத்து மீறிப்புகுந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்களைக் கைது செய்தல் கடத்துதல் கொல்லுதல் போன்றவற்றிற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அமெரிக்கப்படைகள் நைரோபி வெஸ்ற்கேட் கடைத்தொகுதியில் தாக்குதல் நடத்திய அல் ஷபாப்  எனப்படும் சோமாலியத் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஒரு ஈருடகத் தாக்குதல் தாக்குதல் நடாத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடிச்சென்ற அல் ஷபாப் தலைவர் அஹ்மட் கொடேன் அகப்படவில்லை எனத் தெரிவுக்கப்படுகிறது. இத்தாக்குதல் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த படியால் இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவுக்கப்ப்டுகிறது. கடல் மூலம் சோமாலியக் கடற்கரை நகர் பராவேயில் தரையிறங்கிய சீல் படைப்பிரிவினர் பின்னர் தரை நகர்வு செய்தனர். இது அதிகாலை 2.30இற்கு அல் ஷபாப்பினர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது செய்யப்பட்டது. முதலில் ஒரு இரு மாடிக்கட்டிடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தினர். முதலில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர் இரு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன என்கின்றனர் அந்த நகரவாசிகள். அமெரிக்கப் படையினர் சத்தமில்லாத துப்பாக்கிகள் பாவித்த படியால். அங்கு கடும் மோதல் நிகழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கப்படையினர் இதை எதிர்பாக்காததால் 15 நிமிடச் சண்டையின் பின்னர் அமெரிக்கத் தாக்குதல் அணி பின்வாங்கிச் சென்று விட்டது.அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ஈருடகத் தாக்குதல் அதாவது கடல்வழி சென்று தரை இறங்கிச் செய்யும் தாக்குதலைப் போன்று கடினமான தாக்குதல் வேறு இல்லை என்றார். அல் ஷபாப் அமைப்பினர் தமக்குத் அமெரிக்க சீல் படையினரின் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தெரியும் என்று தெரிவித்துள்ளனர். தமது பலத்த பதில் தாக்குதலால் அமெரிக்கர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர் என்கின்றனர். அமெரிக்க தரப்பில் எந்த வித் ஆளணி இழப்பும் ஏற்படவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

உபாய மாற்றம்
இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகம் ஆளில்லா விமானத் தாக்குதலை அண்மைக்காலங்களாக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயே செய்து வந்தது. இப்போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் நேரடித் தாக்குதலை 2011இன் பின்னர் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாகச் செய்துள்ளது.  அண்மைக்க் காலங்களாக சிஐஏயின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் கடுமையான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது..

அமெரிக்காவின் தாக்குதல் பற்றிக் கருத்துத் தெரிவித்த அதன் அரசத்துறைச் செயலர் பயங்கரவாதிகள் ஓடலாம் ஆனால் ஒளிக்க முடியாது என்றார்.


Sunday 6 October 2013

அமெரிக்க அரச பணிமனைகளின் மூடலின் பின்னணியும் பின் விளைவுகளும்

அமெரிக்க அரசின்     அத்தியாவசியமற்ற சேவைகளில் பெரும்பாலானவற்றின்    பணிமனைகள்    ஒக்டோபர் முதலாம் திகதி மூடப்பட்டது.     அதன் ஊழியர்கள் எட்டு இலட்சம் பேர் சம்பளமற்ற விடுமுறையில்    அனுப்பப் பட்டனர்.    இது ஏன் நடந்தது என்பது பற்றிப்பார்க்க     அமெரிக்காவின் அதிகார மையங்கள்,    கட்சிகளின் உட்பிரிவுகள்,    ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக்காப்புறுதி      ஆகிய மூன்றையும் பற்றி    அறிந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவின் அதிகார மையங்கள்   என்று பார்க்கும் போது    அமெரிக்க அதிபர்,   கொங்கிரஸ் எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின்    இரு அவைகளான மக்களவை, மூதவை ஆகியவற்றுடன்    மாநில அரசுகள் ஆகியவை முக்கிய மானவை.   அதிபரை அவர் மாளிகையின் பெயரால் வெள்ளை மாளிகை என்றும் பாராளமன்றத்தை அது இருக்கும் இடத்தால் capital hill என்றும் சொல்வது வழக்கம்.   அமெரிக்க அதிபர் இலங்கை அதிபர் போலவே நிறைவேற்று அதிகாரமுடையவர். ஆனால் அமெரிக்க அதிபரால் அமெரிக்க பாராளமன்றம் இயற்றும் சட்டத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு.    அதாவது இரத்துச் செய்யும் அதிகாரம். இந்த இரத்து அதிகாரத்தை இருவகைப்படுத்துவர் ஒன்று pocket veto மற்றது Regular veto

தனக்கு அனுப்பிய சட்டத்தில் கையொப்பமிட்டு அங்கீகரிக்காமல் தனது பொக்கெற்றில் வைத்திருப்பதால் அது பொக்கெற் வீட்டோ எனப்படும். மற்றது தன்னிடம் அங்கீகாரத்திற்கு வந்த சட்டத்தை பத்து நாட்களுக்குள் தான் இரத்துச் செய்வதாக கடிததம் எழுதி திருப்பி பாராளம்ன்றத்தின் அவைகளுக்கு அதிபர் அனுப்பினால் அது Regular veto எனப்படும். அமெரிக்க அதிபரின் வீட்டோவை அமெரிக்கப் பாரளமன்றமான கொங்கிரஸின் இரு அவைகளும் மூன்றில் இரண்டு பெரும்பானமயுடன் வீட்டோ செய்யலாம். அதாவது வீட்டோவை வீட்டோ செய்வது. நடை முறையில் அமெரிக்க அதிபர் வீட்டோக்கள் செய்வது குறைந்து கொண்டே போகிறது.
ஜோர்ஜ் புஸ் நாற்பத்து நான்கு தடவைகள் வீடோ செய்தார். ஒபாம இருதடவைகள் மட்டுமே.

அமெரிக்காவின் பாரளமன்றமான கொன்கிரஸ் இயற்றும் சட்டப்படியே அமெரிக்க அதிபர் செயற்படவேண்டும். கொங்கிரஸின் இரு சபைகளில் மக்களவையில் 435 உறுப்பினர்களும் மூதவையில் நூறு உறுப்பினர்களும் இருக்கின்றனர். சட்டவாக்கல் அதிகாரம் இரு சபைகளுக்கும் சம்மாக இருக்கிறது. பன்னாட்டு மட்டத்தில் செய்யப்படும் உடனபடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மூதவையிடம் இருக்கிறது. வரிவிதிப்புச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மக்களவியிடம் இருக்கிறது.

அமெரிக்காவில் இரு கட்சிகள் முக்கியமானவை அவை டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியும்  ரிப்பப்ப்லிக் பார்ட்டி எனப்படும் குடியரசுக் கட்சியும் ஆகும். ஆனால் இந்தக் கட்சிகளுக்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அதிபர் பராக ஒபாமா டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியை சேர்தவர் ஆனால் அவரை டெமொக்கிறட்ஸ் என்று சொல்வதிலும் பார்க்க லிபரல் டெமோக்கிறட்ஸ் என்றே அதிகம் சொல்கிறார்கள். மக்களாட்சிக் கட்சிக்குள் முற்போக்கு மக்களாட்சியினர், தாராண்மை மக்களாட்சியினர், பழமைவாத மக்களாட்சியினர், தொழிற்சங்கவாதிகள், கிருத்தவவாதிகள், மதசார்ப்பற்றவர்கள் என பதினைந்திற்கு மேற்பட்ட பிரிவினர் உண்டு. குடியரசுக் கட்சியில் மரபுவாதிகள், பழமைவாதிகள், Neoconservative எனப்படும் புதிய பழமைவாதிகள், மிதவாதிகள், தாராண்மைவாதிகள் எனப்பத்திற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் ஒரு சட்டத்திற்கு வாக்களிக்கும் போது தமது கட்சிக் கொள்கையிலும் பார்க்க தமது உட்பிரிவின் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை விட ரீ பார்ட்டி என்னும் ஒரு முக்கிய குழு உள்ளது. இது குடியரசுக் கட்சியிலும் மக்களாட்சிக் கட்சியிலும் இருக்கும் வரி விதிப்பிற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களின் குழுவாகும். Taxed Enough Already என்ற சொற்தொடரின் முதலெழுத்துக்களான ரீ ஈ ஏ ஆகிய எழுத்துக்களை ஒன்று சேர்த்து இது ரீ பார்ட்டி எனப்படுகிறது.

அமெரிக்கப் பாராளமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களில் lobbyist எனப்படும் தரகுப் பரப்புரையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு பாராளமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வார்கள். உதாரணத்திற்கு படைக்கலன்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவங்களுக்கு லொபி செய்பவர்கள் போரைத் தூண்டும் வகையில் பாராளமன்றத்தீர்மானத்தை திசை திருப்புவார்கள். துப்பாக்கி தாயாரிக்கும் தனியார் துறையினர் துப்பாக்கித் தடை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுப்பார்கள். யூதர்களில் லொபியும் அமெரிக்காவில் பலம் மிக்கது இவர்கள் அமெரிக்காவை இஸ்ரேலுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டம் பற்றிப்பார்ப்போம். ஒரு இலங்கையருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ ஒபாமாகெயார் என்பது ஆச்சரியமளிக்கும். இலங்கையிலும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவை உண்டு. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் மருத்துவ சேவைக்கு தாங்கள் வேலைசெய்யும் இடத்தில் செய்யப்படும் மருத்துவக் காப்புறுதியில் தங்கியிருக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் பல இலட்சம் மக்கள் போதிய மருத்துவ வசதியின்றி இருக்கின்றனர். இதைச் சரிசெய்ய அமெரிக்காவில் அதிபர் பராக் ஒபாமா வகுத்த திட்டப்படி The Patient Protection and Affordable Care Act 2010 இல் உருவாக்கப்பட்டது இதன் முதற் கட்டம் 2014இலும் இரண்டாம கட்டம் 2020இலும் அமூல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. இது அமெரிக்காவிலும் எல்லோருக்கும் மருத்துவ வசதி செய்யும் திட்டத்தின் முதற்படியாகும். இதன்படி வறியவர்களுக்கு இலவச மருத்துவக் காப்புறுதி செய்யும் மாநில அரசுகளுக்கு மைய அரசு நிதி உதவி செய்யும். வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் மருத்துவக் காப்புறுதி செய்யப்படும். இந்த The Patient Protection and Affordable Care Act திட்டத்தை குடியரசுக் கட்சியினர் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்தனர். இந்தத் திட்டடத்திற்கு Obamacare எனப்பட்டப் பெயர் சூட்டினர். அது நாளடைவில் பிரபலமடைந்து அதுவே அத்திட்டத்தின் செல்லப்பெயராகி விட்டது. அமெரிக்க அரசு ஏற்கனவே 2.7 ரில்லியன் அமெரிக்க டொலர்களை மருத்துவத்திற்காக செலவிடுகிறது. ஒரு ரில்லியன் என்பது ஒருஇலட்சம் கோடியாகும். அமெரிக்க மருத்துவச் செலவு பிரித்தானிய நோர்வே போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானது. ஆனால் பிரித்தானியர்களும் நோர்வே நாட்டவரும் ஆரோக்கியமானவர்கள். அமெரிக்காவில் சிசு இறப்பு விகிதம் இவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமானதாகும்.

1980இல் இருந்தே எல்லோர்க்கும் மருத்துவ வசதி என்னும் திட்டம் பற்றி அமெரிக்க அரசியல்வாதிகள் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். Obamacare திட்டம் அமெரிக்க அரச செலவீனங்களை அதிகரிக்கும் என்பதால் குடியரசுக் கட்சியின் பழமைவாதிகளும், புதிய பழமைவாதிகளும் அதைக் கடுமையாக எதிர்த்தனர். இவர்களுடன் ரீபார்ட்டியினரும் இணைந்து கொண்டனர். தாராண்மை மக்களாட்சியினர் மக்களுக்கான சமூக நலன்களில் அக்கறை காட்டுவது உண்டு. ஆனால் அது அரச செலவீனங்களை உயர்த்தும் அதனால் செல்வந்தர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் என்பதால் பழமைவாதிகளும் ரீபார்டியினரும் எதிர்க்கின்றார்கள். Obamacare சட்டத்தின் படி ஐம்பது பேருக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு இலகுவாகக் கட்டணம் செலுத்தக் கூடிய மருத்துவக் காப்புறுதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். Obamacareஇல தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களும் அக்கறை காட்டுவதில்லை. முதலாளிகளுக்கு நன்மை பயக்காததும் வரிச்சுமையை அதிகரிக்கக் கூடியதும்மான Obamacareஐ பழமைவாதிகளும் ரீ பார்ட்டியினரும் கடுமையாக எதிர்த்தனர். உச்ச நீதமன்றம் வரை Obamacare சட்டம் சென்றது. உச்ச நீதிமன்றம் Obamacareஐ ஏற்றுக் கொண்டது.

அமெரிக்கப்பாராளமன்றமான காங்கிரஸின் மக்களவையின் பராக் ஒபாமாவின் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக இருக்கிறது. மூதவையில் ஒபாமாவின் கட்சியான மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மையாக இருக்கிறது. அமெரிக்க அரசின் நிதி ஆண்டு ஓக்டோபர் முதலாம் திகதி தொடங்கி செப்டம்பர் முப்பதாம் திகதிவரையிலான காலப்பகுதியாகும். 2013 ஒக்டோபர் முதலாம் திகதி தொடங்கும் நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை கொன்கிரஸ் தீர்மானிக்கும் போது Obamacareஐக் கைவிடுங்கள் அல்லது அரச நிதி ஒதுக்கீட்டிற்கு முட்டுக் கட்டை போடுவோம் என குடியரசுக் கட்சியினர் மிரட்டினர். இதனால் வெள்ளை மாளிகை, மக்களவை மூதவை ஆகியவற்றிற்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது. மக்களவையும் மூதவையும் குருவின் காலை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பிடித்துவிட்ட மாணவர்கள் போல் ஒன்றின் தீர்மானத்தை மற்றது முட்டுக்கட்டை போடுவது தொடர்ந்தது. இதனால் புதிய நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற அரச சேவைகள் பல மூடப்பட்டு எட்டு இலட்சம் ஊழியர்கள் ஊதியமின்றி விடுமுறையில் அனுப்பப்பட்டனர். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பது போல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் செப்டம்பர் 30-ம் திகதி ஐந்து பில்லியன்களுக்கு மேல் செலவு செய்து கொண்டது.  ரீபார்ட்டியினர் ஒபாமாகெயரை எப்படியாவது தொலைத்துக் கட்டுவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
xxxxx

1976-ம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க அரசின் அத்தியாவசியமற்ற பணிமனைகள் மூடப்படுவது இது பதினெட்டாவது தடவையாகும் ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக இந்த மூடுவிழா நடக்காமலேயே இருந்தது. கடைசியாக 1996இல் நடந்த மூடுதல் இருபத்தியாறு நாட்கள் தொடர்ந்தன. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் மூடுதலும் நான்கு வாரங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க தேசிய உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தது தசம் எட்டு அல்லது தசம் ஒன்பது விழுக்காடு குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசிற்கு நாள் ஒன்றிற்கு முன்னூறி மில்லியன்கள் நட்டம் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான அடுத்த முறுகல் அமெரிக்க அரச கடன் உச்ச வரம்பைத் தீர்மானிப்பதில் நடக்க விருக்கிறது. அமெரிக்க அரசு வரவிற்கு மிஞ்சி செலவு செய்வதால் அதன் கடன் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பாராளமன்றம் தீர்மானிக்கும். அமெரிக்க மக்களவை கடன் உச்ச வரம்பைக் கூட்டாவிடில் அரசு புதிதாகக் கடன் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் அமெரிக்க அரசு தான் ஏற்கனவே பட்ட கடனிற்கான நிலுவைகளையும் வட்டிகளையும் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் விளைவுகள் எதிர்வு கூறமுடியாமல் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். உலக நிதிச் சந்தையில் படு பாதகமான விளைவுகள் ஏற்படும். பல உலக நிதிக் கட்டமைப்புக்கள் அமெரிக்காவிற்கு கொடுத்த கடனிலும் அதன் மூலமாகக் கிடைக்கும் வட்டியிலும் பெரிதும் தங்கியிருக்கின்றன. Obamacare ஆல் ஏற்பட்ட பிரச்ச்னை பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒரு பிரித்தானிய பொருளியியல் நிபுணர். அமெரிக்க வலதுசாரிப் பைத்தியங்கள் உலகப் பொருளாதாரத்தையே பணயக் கைதியாக்கி விட்டனர் என்றார்

மொத்தத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பனையால் விழுந்தவனை மாடு ஏறி மீதித்தது போலத்தான் Obamacareஆல் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட இழுபறி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...