Saturday 24 August 2013

உடைந்த இதயத்தின் மொழிகள்

அதிஷ்டம் கதவைத் தட்டினால் வெற்றி
எனக் காத்திருப்பவன் முட்டாள்
உழைப்பின் வழி தேடி
நம்பிக்கைப் பயணம் செய்து
வெற்றியின் வீட்டுக் கதவைத் தட்டுபவன்
புத்திசாலி

நான் அழவில்லை என்பதால்
வலியில்ல
என்றில்லை
நான் பேசவில்லை என்பதால்
தெரியாது என்றில்லை
நான் பார்க்கவில்லை என்பதால்
தெரியவில்லை என்றில்லை
நான் கேட்கவில்லை என்பதால்
புரியவில்லை என்றில்லை

கண்ணுக்குத் தெரியாத
கண்ணீர்த் துளிகளின் வலிகள்
எல்லா வலிகளிலும் வலிமையானது

தனிமை என்பது
புரியாதவர்கள்
உடனிருப்பது

உடைந்த
இதயத்தின் மொழிகளாய்
கண்ணீர்த் துளிகள்

Friday 23 August 2013

செங்கோட்டைத் தாண்டிய சிரியாவும் தன் கோட்டிற்குள் நிற்கும் அமெரிக்காவும்


சிரிய உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் படைக் கலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அதன் பின்னர் அமெரிக்கா சும்மா இருக்க மாட்டாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியாக ஓராண்டுக்கு முன்னரே தெரிவித்திருந்தார்.



ஆனால் பல தடவை சிரியா செங்கோட்டைத் தாண்டிவிட்டது. 

2013 ஜூனில்  சிரிய உள்நாட்டுப் போர் ஆட்சியாளர் அசாத்த்திற்கு சாதகமாக மாறி தற்போது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது.

சிரியாவில் சரின் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அங்கிருந்து கடத்தி வந்ததாக பிரான்ஸும் பிரித்தானியாவும் ஏற்கனவே தெரிவித்திருந்தன. அசாத்தின் படைகள் வேதியியல் படைக்கலன்களைப் பாவித்ததாக 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அசாத் வேதியியல் படைக்கலன்கள் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியதாக அமையும் என்று பலதடவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார். ஒரு துளி சரின் ஒரு ஆளைக் கொல்லக் கூடியது. ஆனால் அமெரிக்கா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தி எக்கோனொமிஸ்ற்  சஞ்சிகை ஆகஸ்ட் 21-ம் திகதி சிரியாவில் நடந்த வேதியியல் குண்டுத்தாக்குதல் செங்கோடு தாண்டுதல் இல்லை என்றால் எது செங்க்கோடு என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கையை  பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்கா ஒரு படை நடவடிக்கை பற்றி எதுவுமே தெரிவிக்காமல் இருப்பதற்குப் பல காராணங்கள் இருக்கின்றன:

1. சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை அல் கெய்தா ஆதரவு ஜபத் அல் நஸ்ரா  இயக்கத்தினரின் இருப்பது அமெரிக்காவின் தயக்கத்திற்குக் காரணம் எனச் சொல்லபடுகிறது. தனது தலையீடு இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

2. சிரியாவாலோ அதன் அதிபர் அசாத்தாலோ அமெரிக்காவிற்கு எந்த ஆபததோ எதிர்ப்போ இல்லை.

3. அசாத் ஆட்சியில்  இருப்பதை இஸ்ரேல் விரும்புகிறது.

4. சிரியாவில் இருதரப்பல்ல பல தரப்புக்கள் இருக்கின்றன. சிரியக் கிளர்ச்சிக் காரர்களிடையே பல தரப்புக்கள் இருப்பது மட்டுமல்ல அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, கட்டார், ஜோர்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து வேறு வேறுபட்ட அணுகு முறைகளை எதிர்பார்க்கின்றன.

5. லிபியாவில் விமானத் தாக்குதல் செய்தது போல் சிரியாவில் இலகுவாகச் செய்ய முடியாது. சிரியாவிடம் இரசியாவிடமிருந்து வாங்கிய வலிமை மிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கின்றன. தொலை தூர எவுகணைகள் பாவித்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவர்.

6. ஐநா பாதுகாப்புச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சீனாவோ அல்லது இரசியாவோ அனுமதிக்காது.

7. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் அதிக இரத்தக் களரி ஏற்படும்.

அசாத் நீ அதிஷ்ட சாலியடா!!!!!

Thursday 22 August 2013

இந்திய ரூபாவின் மதிப்பை விழுத்தியது சோனியாவே.

சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பு மிகவும் இளமையானது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்தியக் கிராமங்களும் தொழில் நுட்பமும் வளர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில் ரூபா ஏன் இப்படித் தலைகீழாக விழுகிறது. இந்திய ரூபாவின் மதிப்புச் சரிந்தமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது:

1. அமெரிக்க டாலரின் மதிப்புக் கூடியது
இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்தமைக்கு ஐக்கிய அமெரிக்க டாலர் மதிப்புக் கூடியதால் எனக் காரணம் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு 1.9 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது. ஆனால் இந்திய ரூபாவின் மதிப்பு அமெரிக்கப் பொருளாதாரம் 2013 இல் 1.7விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் அதிலும் பார்க்க மூன்று மடங்கிற்கு மேல் 5.6 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து முதலீட்டை விற்ற வெளி நாட்டு நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவில் முதலிடாமல் லத்தின் அமெரிக்க நாடுகள்ல் முதலிடுகின்றனர். 

2. தங்க இறக்குமதி அதிகரித்தமை.
தங்க இறக்குமதி அதிகரித்தமைக்குக் காரணம் அரசு மக்கள் மத்தியில் புழங்கிய பணத்திற்கு சரியான முதலீட்டு வாய்ப்புக்களை கிராமங்கள் தோறும் வங்கிகளைத் திறந்து வங்கிப் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்காமல் விட்டதே. 

3. இந்தியாவின் இறக்குமதி அதிகரித்தமை
இந்தியாவின் இறக்குமதி சடுதியாக அதிகரிக்கவில்லை. படிப்படியாகத்தான் அதிகரித்துக் கொண்டு போகிறது. ஆனால் ரூபாவின் மதிப்பு மூக்குடைபட விழுகிறது.

உண்மையான காரணம் - இந்தியா நாணயப் போர் செய்யவில்லை.
2010இல் இருந்து பல நாடுகள் தமது நாணயங்களின் மதிப்பை போட்டி போட்டுக் கொண்டு குறைத்தன. இதை நாணயப் போர் என பொருளியலாளர்கள் குறிப்பிட்டனர்.  ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணயப் போர் உருவாகிறது. இந்த நாணயப் போரை ஆரம்பித்ததும் சீனாதான் அதில் வெற்றி பெற்றதும் சீனாதான். ஆனால் இந்தியா தனது நாணயத்தின் மதிப்பை உண்மை மதிப்பிலும் பார்க்க அதிகமாக வைத்திருந்தது. 

இந்தியாவில் இரு அதிகார மையங்கள்
இந்தியா ஏன் தன் ரூபாவின் மதிப்பை உண்மை நிலையிலும் அதிகமாக வைத்திருந்தது?
இந்த கேள்விக்கு விடையை அறிய இந்தியாவின் அதிகார மையங்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இரு அதிகார மையங்கள் இருக்கின்றன. ஒன்று மன்மோஹன் சிங் தலைமையிலான மந்திரி சபை. மற்ற அதிகார மையம் சோனியாவின் வீட்டில் இருக்கிறது. இதில் அவரது மலையாளி ஆலோசகர்கள் காங்கிரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெரும் பணக்காரர்கள் அதிகரித்த ரூபாவின் மதிப்பால் இரு வகையில் நன்மை அடைகிறார்கள். ஒன்று இந்தப் பெரும் பணக்காரர்களின் உற்பத்தித் துறைக்கு வெளிநாட்டில் இருந்து மலிவான விலையில் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்திய ருபாவின் மதிப்பு அதிகரித்து இருத்தல் அவசியம். இரண்டாவது அந்தப் பெரு முதலாளிகள் ஈட்டும் இலாபத்தை கொண்டு போய் வெளிநாட்டு வங்கிகளில் போடுவதற்கு இந்திய ரூபாவின் மதிப்பு அதிகமாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டு நாணயங்களை மலிவாக வாங்கலாம். இந்த இரு காரணங்களுக்காக இந்திய ரூபாவின் மதிப்பை உண்மை மதிப்பிலும் பார்க்க அதிகமாக வைத்திருந்தார்கள். இது இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு வளர்ச்சியடையும் போது தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் வளர்ச்சி 6விழுக்காட்டிலும் குறையும் போது தாக்குப் பிடிக்க முடியாத ஒரு நிலை வந்துவிட்டது.  இதனால் இந்திய ரூபாவின் மதிப்பை நிதிச் சந்தை தானாகத் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டது. 

நேர்மையான முதலாளித்துவப் பொருளாதாரமே நன்மை தரும்
முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளங்கள் திறமையாக பயன்படுத்தப்படும் எனப்படுகிறது. வளங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படுவதற்கு நேர்மையான ஆட்சி அவசியம். ஊழல் நிறைந்த ஆட்சியின் கீழ் வளங்கள் பயன்படுத்தப்படுவதை இலஞ்சமே தீர்மானிக்கும். இதுதான் இந்தியாவில் நடக்கிறது. இந்தியப் பெரு முதலாளிகளின் அடுத்த தலைமுறையினர் இலண்டனிலோ லொஸ் ஏஞ்சல்ஸிலோ தான் குடியேறி வாழப்போகிறார்கள் அவர்களுக்கு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லை. 

இந்திய ரூபாவின் மதிப்பிறக்கம் நன்மை பயக்கும்
இந்திய ரூபாவின் மதிப்பு உரிய நிலையை அடையும் போது இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல வாய்ப்புண்டு. அதற்கு ஒரு நல்ல ஆட்சி அவசியம். இந்திய ஏற்றுமதிகள் அதிகரிக்கும். இந்தியா தொழில் நுட்பத் துறையில் முன்னேற வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பங்காளி அடிப்படையில் இணைந்து முதலீடுகள் செய்ய வேண்டும். 
இந்திய இளைய தலைமுறையாவது விழித்து எழுமா?

Wednesday 21 August 2013

எகிப்து: சகோதரத்துவத்தை தொலைத்த மேர்சியின் சகோதரத்துவ அமைப்பு

2011இல் மதசார்பற்ற இளைஞர்கள் அப்போதைய எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்த போது  மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பி ஓடினார். இப்போது அதிபர் பதவியில் இருந்து படையினரால் தூக்கி எறியப்பட்ட மேர்சியின் ஆதரவாளர்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் போது ஹஸ்னி முபராக் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.  இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பல முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமது பிராந்திய நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க அடக்கப்பட வேண்டியது எனவும், தமது பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பில்லாமல் அடக்கப்படக் கூடியது என்றும் நம்புகின்றன. இந்த நாடுகளுக்கு சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்ற பெயரைப் பாவிப்பதைக் குறைத்து இசுலாமியவாதிகள் என்ற பதத்தை அதிகம் பாவிக்கின்றன.  ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாம் எகிப்தியப் படைத்துறையின் நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் போல் வெற்றீகரமாகப் பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.

2011இல் நடந்த இளைஞர் புரட்சியைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் புரட்சி செய்த இளைஞர்களால் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்றாலே எல்லோரும் சொல்வது அது ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு என்றே. புரட்சி செய்த இளைஞர்கள் அல் பாரடியை தமது வேட்பாளராக நிறுத்த விரும்பினர். பல தாராண்மைவாதிகளும் அதையே விரும்பினர். ஆனால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்து அமைப்பு நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட எல் பராடி போட்டியிட மறுத்தார். இதனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு நிறுத்திய வேட்பாளர் மொஹமட் மேர்சி எளிதாக வெற்றி பெற்றார். ஆனால் அவர் கொண்டு வந்த அரசமைப்பு யாப்பும் அதை ஒட்டி நடந்த ஊழல் நிறைந்த வாக்கெடுப்பும் பலரை மேர்சிக்கு எதிராகத் திருப்பின. அது மட்டுமல்ல மேர்சி எகிப்தியப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் ஆட்சியில் தனது பிடியை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை எகிப்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அமெரிக்காவை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதற்காக ஈரான் நீட்டிய நட்புக்கரத்தைப் பற்ற மறுத்தார். அமெரிக்காவைத் திருப்திப் படுத்துவதற்காக இஸ்ரேலுடன் 1979இல் செய்யப் பட்ட காம்ப் டேவிட் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாமல் விட்டார். இவருடன் வியாபாரம் செய்யலாம் என நம்பி இருந்த அமெரிக்காவிற்கு மொஹமட் மேர்சி பல உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தியது பலத்தை ஐயத்தை அவர் மீது ஏற்படுத்தியது. இறுதிக் வைக்கோலாக அவர் 1997இல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 62பேரைக் கொன்ற ஒரு இசுலாமியத் தீவிரவாதியை லக்சர் மாகாண ஆளுநராக்கியது அமைந்தது.

2012இல் மொஹமட் மேர்சி பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தன்னை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்களை அடக்கினார். மேர்சிக்கு எதிராக அவரது பணிமனைமுன் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் படி மேர்சிக்கு எகிப்தின் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவர் அதற்குச் செவி சாய்க்க வில்லை. 2011 புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும்  தாராண்மைவாத அரசியல்வாதிகளையும் அவர் தனது எதிரிகளாகவே கருதினார். இதனால் அவர்கள் மேர்சிக்கு எதிராகத் திரும்பினர். மேர்சிக்கு எதிரானவர்கள் தமரவுட் என்னும் குடை அமைப்பின்கீழ் ஒன்றாகினார்கள். மேர்சி பதவி விலக வேண்டும் என 22 மில்லியன் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மேர்சி பதைவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி இருபது இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 1-ம் திகதி எகிப்தியப் படைத்துறையினர் மொஹமட் மேர்சிக்கு நாட்டில் அமைதியை நிலை நாட்டுமாறு 48 மணித்தியால அவகாசம் கொடுத்தனர். தான் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர் என்று சொல்லி படைத்துறையினரின் எச்சரிக்கையை மேர்சி உதாசீனம் செய்தார். மேரிசியும் தனது ஆதரவாளர்களைத் தெருவில் இறக்கினார். ஜூலை 3-ம் திகதி படைத்துறையினர் மேர்சியைப் பதவியில் இருந்து விலக்கினர். இ.ச.அமைப்பு ஒரு நாட்டை ஆள தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பைப் போட்டடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சில தீவிரவாத இசுலாமிய அமைப்புக்கள் கூட இ.ச.அ இற்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. ஈரான் உட்பட எந்த ஒரு நாடும் பகிரங்க ஆதரவை இ.ச.அ இற்கு வழங்கவில்லை.

மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்ததும் ஹஸ்னி முபாரக்கின் கைப்பாவைகளான எகிப்தியக் காவற்துறையினர் வீதிகளில் ரோந்துகள் செய்வதில் இருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டனர். இதனால் மேர்சியின் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போய்விட்டது என மக்கள் கருதினார்கள். 

1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன.

2012 ஜூனில் ஆட்சிக்கு வந்த மொஹமட் மேர்சி எகிப்த்தின் எல்லாத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தாமல் விட்டதால் அவருக்கு எதிரான மதசார்பற்றவர்களைத் தனது பக்கம் இழுத்து பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர்கள் மீண்டும் எகிப்தின் அதிகாரத்தைத் தமது வசமாக்கி விட்டனர். இப்போது அவர்கள் இ.ச.அமைப்பைத் தடைசெய்ய ஆலோசித்து வருகின்றனர்.

எல்லோரும் எகிப்தைக் கெடுத்த குற்றவாளிகள்.
2011 பெப்ரவரி மாதம் நடந்த புரட்சியில் தனிமனித சுதந்திரம் வெற்றியடைந்தது போல் இருந்தது. 2013 ஜூனில் நடந்த புரட்ச்சியில் எல்லாமே தோற்று விட்டது. இப்போது எல்லாத் தரப்பினரும் எகிப்தின் அமைதியைக் கெடுத்த குற்றவாளிகலாக நிற்கின்றனர். 2012 ஜூனில் நடந்த தேர்தல் வெற்றியின் பின்னர் இ.ச.அ தன்னை ஒரு குடியரசுவாதியாகக் காட்டிக் கொண்டு தாராண்மைவாதத்தை எதிர்த்தது. தாராண்மைவாதம் பேசிவந்தவர்கள் 2013 ஜூன் 30இன் பின்னர் குடியரசை எதிர்த்து படைத்துறையினரை ஆதரித்து நிற்கின்றனர். இதனால் சிந்திக்கத் தெரிந்தவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது எந்தத் திசையில் பயணிப்பது என்று தெரியாமல் எல்லோரும் தவிக்கின்றனர். உல்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கி இருக்கும் ஒரு நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது. வீதியேங்கும் இரத்தக்களரி, ஊரடங்கு உத்தரவு, காவற்துறையினர் காவல் நிலையத்தில் உயிரோடு கொழுத்தப்படுகின்றனர், கிருத்தவ தேவாலையங்கள் எரிக்கப்படுகின்றன. இ.ச.அ ஐச் சேர்ந்தவர்களே தமக்கு ஆதரவானவர்களைச் சுட்டுக் கொல்லும் காணொளிகளை படைத்துறையினர் ஒளிபர்ப்புகின்றனர். தமது தரப்பில் இழப்பு அதிகம் என்பதைக் காட்ட அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன. படைக்கலன்களில் நம்பிக்கை இல்லாத இ.ச.அமைப்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் துப்பாக்கி ஏந்தியவர்கள் எப்படி இணைந்து கொண்டார்கள் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஜூன் 30 புரட்சிக்குப் பின்னர் எல்லா ஊடகங்களும் தவறான் செய்திகளையே தருகின்றன. ஜுன் 30 எழுச்சியில் எத்தனை பேர் பங்கு பற்றினர் என்பது பற்றியே சரியான தகவல் இல்லை. ஜூலை -3-ம் திகதியின் பின்னர் பல இடங்களில் இ.ச.அமைப்பினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் செய்திகள் வந்தன. ஜூலை 9-ம் திகதி தம்து படப்பிடிப்பாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய ஒன்று கூடிய இ.ச.அமைப்பினரை பொதுமக்கள் ஒன்று கூடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். தமது நாளாந்த நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இ.ச.அமைப்பினர் கட்டுப்படுத்துவதையோ ஆலோசனை கூறுவதையோ பல எகிப்தியர்கள் விரும்பவில்லை. இ.ச.அமைப்பினர் எகிப்தை விரும்பவில்லை அவர்கள் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதற்கு எகிப்திய அதிகாரத்தின் மீதான பிடியைத்தான் விரும்புகிறார்கள் என பல எகிப்தியர்கள் கருதுகிறார்கள். பலர் இ.ச.அமைப்பின் கொள்கைகள் காலாவதியாகிவிட்டது என்றும் கருதுகிறார்கள். இதனால் நாட்டையே செயற்படாமல் செய்யக் கூடிய அல்லது படைத்துறையினரைப் பணிய வைக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய மக்கள் எழுச்சியை படைத்துறையினருக்கு எதிராக இ.ச.அமைப்பால் செய்ய முடியவில்லை. இதனால் இ.ச.அமைப்பு அடக்கப்படக் கூடியது என்றும் அடக்கப்பட வேண்டியது என்றும் படைத்துறையினர் நம்புகின்றனர்.

தாராண்மைவாதிகளும் வேறு பல அமைப்பினரும் இ.ச.அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கலைக்கபட வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துக்களுக்கும் மாற்றானின் கருத்துக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்காத இ.ச.அமைப்பினரின் கட்சியால் நாட்டில் எந்த ஒரு நல்லிணக்கமோ அல்லது பொருளாதார மேம்பாடோ கொண்டுவர முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர்.  மிதவாத மத அமைப்பான இ.ச. அமைப்பை அடக்கி ஒடுக்கினால் அது அரபு நாடுகளில் தீவிரவாத மத அமைப்புக்கள் வளர வழிவகுக்கும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்|றனர்.

தற்போது படைத்துறைத் அதிபராக இருப்பவர் மொஹமட் மேர்சியால் நியமிக்கப்பட்ட அப்துல் ஃப்ட்டா அல் சிசி. இவர் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். இசுலாமிய கலாச்சாரத்தை மதிப்பவர். இவரது மனைவி இசுலாமிய மதக் கோட்பாட்டின் படியே ஆடைகளை அணிவார். எகிப்தில் 2013 ஜூலை 3-ம் திகதிக்குப் பின்னர் நடந்த அனைத்து வன்முறைகளையும் இவரது தலையில் போட்டு இவரை இனிப் பதவியில் இருந்து விலக்க எகிப்தியப் படைத்துறை முயலாலாம். அமெரிக்க ரைம் சஞ்சிகை மேர்சியை சிறையிலடைத்ததும் முபராக்கை வெளியில் விடுவதும் இவர் செய்த இரு பெரும் தவறு என்கிறது.

அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி எகிப்தியப் படைத்துறையினர் எகிப்தில் மக்களாட்சியை நிலைநிறுத்துகின்றனர் எனக் கூறியது பலரையும் ஆத்திரத்திற்கும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது அமெரிக்கா இசுலாமியவாதிகளின் கைகளில் எந்த ஒரு நாடும் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேர்சிக்குப் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற படையினர் பல பதவிகளில் முன்னால் படைதுறையில் பணிபுரிந்தவர்களையே அமர்த்துகின்றன. சில அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இ.ச. அமைப்பும் அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் போன்றதே அவர்கள் தீவிரவாதத்தால் செய்ய நினைப்பதை இ.ச. அமைப்பு வேறுவிதமாகச் செய்கிறது என்கின்றனர். பல அமெரிக்க சார்பு ஊடகங்கள் எகிப்திற்கு இப்போது அவசியம் தேவைப்படுவது தேர்தல் அல்ல திடமான ஆட்சியே என்ற கருத்தை பரவலாக முன் வைப்பது இனி எகிப்தில் படைத் துறையினரின் ஆட்சியே நடக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

Monday 19 August 2013

வயிற்றுப் பருமனைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணை.

தேங்காய் எண்ணையில் இருக்கும் medium chain triglycerides(MCTs) என்னும் கொழுப்பு வயிற்றுப் பருமனைக் குறைக்கும் என பிரேசிலில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் செய்யப் பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

20இற்கும் 40இற்கும் இடைப்பட்ட வயதுடைய நாற்பது பெண்களை வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒரே அளவான கலோரிகளைக் கொண்ட உணவு வழங்கப்பட்டது. அவர்கள் நாளொன்றிற்கு 50 நிமிடங்கள் நடக்க வைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு தேங்காய் எண்ணையும் மறு பிரிவினருக்கு சோயா எண்ணையும் 12 வாரங்கள் கொடுக்கப்பட்டது. தேங்காய் எண்ணை உண்டவர்களின் உடலில் நல்ல கொழுப்பின்(HDL) அளவு கூடியும் கூடாத் கொழுப்பின்(LDL) அளவு குறைந்து இருக்கக் காணப்பட்டது. அவர்களின் வயிற்றின் சுற்றளவும் குறைந்திருக்கக் காணப்பட்டது.

வயிற்றுப் பருமனை தேங்காய் எண்ணை குறைப்பதுடன் அதில் இருக்கும் lauric acid உம் caprylic acid உம் எமது உடலின் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கிறது.
இந்த இரு அமிலங்களிலும் இருக்கும் anti-viral and anti-microbial properties நோய்களை எதிர்க்கக் கூடியது.

வயிற்றின் பருமனைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு மேசைக் கரண்டி தேங்காய் எண்ணையைத் தினம் தோறும் சாப்பிட வேண்டியதுதான். அத்துடன் உங்கள் வழமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

மற்ற நல்ல கொழுப்புக்களைக் கொண்ட ஒலிவ் எண்ணை சோயா எண்ணை ஆகியவற்றிலும் பார்க்க தேங்காய் எண்ணை சிறந்த பயனைத் தரும் என பிரேசில் பல்கலைக் கழகத்தின் செய்யப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

Sunday 18 August 2013

மெய்மறந்த பொய்

உன்னைப் பார்த்து
மூச்சடைத்துப் போனேன்
தேவை
வாயோடு வாய் வைத்த
முதலுதவி

போதிக்கும் போது தூக்கம்
நிறைவேறாத கனவு
கனவுகள் போதனைகளானால்
வெற்றிகள் விடியல்களாகும்

உதிர்ந்த இலைகளை
மரங்கள் உரங்களாக்கும்
செய்த தவறுகள்
சிறந்த போதனைகளாகும்

நேற்று என்பது போதனைக்கு
இன்று என்பது சாதனைக்கு
நாளை என்பது சந்தர்ப்பம்

நன்னடத்தை என்பது
தானே பரிமாறும்
பெரு விருந்தில்
ஆரோக்கிய உணவை
எடுப்பதைப் போன்றது.

என்னைப் பார்த்ததும்
மெய் மறக்கிறேன் என்றாள்
அதானால் பொய்யாய் பேசினாள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...