Saturday 27 July 2013

விஞ்ஞானி: உங்கள் தேர்வு வெற்றி பெற்றோரில் தங்கியிருக்கிறது.

பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் என்னும் அமெரிக்க விஞ்ஞானி இலண்டன் Kings College இல் தேர்வு முடிவுகளைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

11, 100 இரட்டைப் பிள்ளைகளின் GCSE தேர்வு முடிவுகளை வைத்து அந்த மாணார்களின் திறமையையும் அவர்களின் பாடசாலை வசதிகளையும் ஆசிரியர்களின் திறமைகளையும் மாணவர்களின் பெற்றோர்களின் திறமையையும் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் ஆய்வு செய்தார். இதில் எந்தக் காரணி மாணவர்களின் தேர்வு முடிவுகளுக்குப் பங்களித்தது என ஆய்வு செய்யப்பட்டது.

Kings Collegeஇன்  Institute of Psychiatryஇல் அமெரிக்கப் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் தனது ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இவர் மரபியல் தொடர்பான ஒரு நிபுணராவார்.

ஆய்வின் முடிவுல் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் மாணவர்களின் தேர்வு வெற்றிகளில் பெற்றோரின் விவேகம் பெரிய பங்காற்றுகிறது என அறியப்பட்டுள்ளது. பெற்றோரின் மரபணு பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்கிறது என பேராசிரியர் ரொபேர்ட் புலோமினின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வருங்காலத்தில் பிள்ளைகளின் மரபணுக்களை ஆய்வு (genetic scanning) செய்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை இனம் காணக்கூடியதாக இருக்கும் என்கிறார்.அத்துடன் வீட்டுச் சூழல் மாணவர் கல்வியில் சிறிய பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்கிறார்.

இளமையாக இருக்கும்போது பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்யும் அவர்களது மரபணு வளர்ந்த பின்னர் 80% பங்களிப்பைச் செய்கிறது என்றார்.

பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் வண்டிகளில் செல்லும் மாணவர்களிலும் பார்க்க சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணி நடக்கும் போது கிடைக்கும் உடற்பயிற்ச்சியே.




Friday 26 July 2013

விஞ்ஞான ஆய்வு: எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம், நின்றால் போதும்

பிரித்தானிய Loughborough பல்கலைக்கழகத்தில் உடல் நடவடிக்கைகளுக்கும் ஆரோக்கியத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.

கலாநிதி Stuart Biddleஇன் புதிய சுலோகம்:அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும் "move more and sit less" என்பதாகும். நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர். நாளொன்றிற்கு அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.

நல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.

நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle.




Wednesday 24 July 2013

புதிய ஜப்பானும் பழைய இந்தியாவும் சீனாவிற்கு எதிராக கைகோர்க்குமா?

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் தாராண்மைக் குடியரசுக் கட்சி மூதவைத் தேர்தலில் வெற்றி பெற்றமை அவர் ஜப்பானை புதிய திசையில் இட்டுச் செல்லும் பணிக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது. பிரதமர் ஷின்சோ அபே உள் நாட்டில் பெரும் பொருளாதாரச் சவாலையும் வெளியில்சீனாவின் அச்சுறுத்தலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் இந்த இரண்டு சவால்களையும் சமாளிக்க இந்தியாவின் உறவை வேண்டி நிற்கிறார்.

ஜப்பானிய அரசியல் யாப்பின் 9வது பிரிவின்படி ஜப்பான் தனது மற்ற நாடுகளுடனான பிணக்குகளைப் போர் மூலம் தீர்க்க முடியாது. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சீனா கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளை தனது என சீனா சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது ஜப்பானுக்கு  அதனது படைத்துறையை மேம்படுத்தும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

கிழக்குக் கரை
கிழக்குச் சீனக் கடலில் உள்ள் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின. அது மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகள் ஏற்பட்டுள்ளது. கிழக்குச் சீன கடலில் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விரட்டிய பின்னர் சன் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி அமெரிக்கா கிழக்குச் சீனக் கடல் தீவுகளைத் தனதாக்கிக் கொண்டது. பின்னர் 1972இல் இத் தீவுகளை அமெரிக்கா ஜப்பானிடம் கையளித்தது. கிழக்குச் சீனக் கடற்படுக்கையில் அறுபது முதல் நூறு பில்லியன் பீப்பாய் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

1895இல் நடந்த சீன ஜப்பானியப் போர்
1894-95இல் நடந்த போரில் சீனா ஜப்பானிடம் படு தோல்வியடைந்தது. இதன் போது சீனாவிடமிருந்து கொரியாவையும் தாய்வானையும் ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் தாய்வானை சீனாவிடம் திருப்பிக் கொடுத்தது. சீனப் புரட்சியின் பின்னர் தாய்வான் தனி நாடாக இருக்கிறது. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு தனித்தனி நாடுகளானது. 

 மோட்டாரில் போட்டா போட்டி

ஜப்பானும் சீனாவும் இரு பெரும் பொருளாதார வல்லரசுகள். கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளின் உரிமை தொடர்பாக சீனாவும் ஜப்பானும் மோதிக்கொள்ளுமா எனற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் மோட்டார் உற்பத்தித் துறைக்கு ஜப்பானிய மோட்டார் உற்பத்தித் துறை பெரும் சவாலாக இருக்கிறது. சீனர்கள் தமது நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளிலும் பார்க்க ஜப்பானிய மோட்டார் வண்டிகளை அதிகம் விரும்புகின்றனர். மோட்டார் உற்பத்தித் துறையில் சீனா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் பல துறைகளில் சீனா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்களையும் கடும் போட்டிகளையும் உருவாக்கியுள்ளது. வேகமாக வளரும் சீனா தனக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையும் என ஜப்பான் கருதுகிறது. இதனால் சீன ஜப்பானிய முறுகல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜப்பான்
ஜப்பான் தனது வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தனது பாதுகாப்புச் செலவீனங்களை குறைத்துக் கொள்ளவிருக்கும் சூழலிலும் சீனா தனது படைத்துறை வலிமையை வேகமாக அதிகரித்து வரும் சூழலிலும் ஜப்பான் தனது பாதுகாப்பைப் பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இரு பெரும் உபாயங்களை வகுத்துள்ளார். ஒன்று ஜப்பான் இந்தியாவுடன் படைத்துறையில் ஒத்துழைப்பது. மற்றது தமது நாட்டின் படைத்துறையை பாதுகாப்புக்கு மட்டும் என்ற நிலையில் இருந்து மாற்றி தாக்குதல் படைத்துறையாக மாற்றுதல். இதற்கு ஜப்பான் தனது அரசமைப்பு யாப்பை மாற்றி ஒரு புதிய ஜப்பானாக தனது நாட்டை மாற்றுதல் அவசியமானதாகிறது. 

ஜப்பானின் படைத்துறை தற்போதே பலமிக்கது.
இன்னொரு நாட்டுடன் போர் புரிய முடியாதவாறு அரசமைப்பு யாப்பு தடைசெய்திருந்தாலும் கடந்த காலங்களில் ஜப்பான் தனது படைத்துறையை வலிமை மிக்கதாகவே உருவாக்கி இருக்கிறது. தற்போது ஜப்பானின் படைத்துறைச் செலவு உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த படைக்கலன்களைக் கொண்டதும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதுமான 250,000 படையினரை ஜப்பான் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பல சமாதானப் பணிகளில் ஜப்பான் பெரும் பாங்காற்றிவருகிறது. ஜப்பானால் நினைத்த மாத்திரத்தில் அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பமும் மூல வளமும் அதனிடம் இருக்கிறது.கடைசியாக ஜப்பான் flat-top destroyer என்னும் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய போர்க்கப்பலை தனது கடற்படைக்கு இணைத்துள்ளது. Izumo என்னும் பெயருடைய இந்தப் நாசகாரிக் கப்பல் 820 அடி நிளமுடையதும் ஒன்பதிற்கு மேற்பட்ட உழங்கு வானூர்திகளைத் தாங்கிச் செல்லக் கூடியதுமாகும். இதில் இன்னொரு ஆச்சரியம் இந்த Izumo என்னும் பெயருடைய கப்பற்படைத் தொகுதி 1937இல் சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பெயரும் இந்தக் கப்பலில் பாரிய தன்மையும் சீனப் படைத்துறை ஊடகங்களில் பெரிதாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நாசகாரிக் கப்பல் தேவையேற்படும் போது முழுமையான ஒரு விமானம் தாங்கிக் கப்பலாக மாற்றப்படக் கூடியது என ஒரு சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

ஷின்சோ அபேயின் புது ஜப்பான்
பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானை ஒரு புதிதாக மாற்றுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய ஒரு நாடாக அவர் ஜப்பானை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 டிசம்பரில் நடந்த கிழவைத் தேர்தலிலும் சரி, 2013 ஜூலையில் நடந்த மேலவைத் தேர்தலிலும் சரி ஜப்பானின் அண்மைக்கால வரலாற்றில் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு முதல் தடவையாக ஒரு பிரச்சனையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிபட்டது. இரண்டிலும் வெற்றியீட்டிய ஷின்சோ அபே கடந்த 15 ஆண்டுகளில் முதல் தடவையாக ஜப்பானின் பாதுகாப்புச் செலவை அதிகரித்துள்ளார். ஷின்சோ அபே தற்போது மக்கள் முன் வைப்பது: ஜப்பான் மீது தாக்குதல் நடக்கும் என்று அறிந்தவுடன் ஜப்பான் எதிரியை முந்திக் கொண்டு எதிரி மீது தாக்குதல் நடத்தும் திறனையும் சட்ட அனுமதியும் உருவாக்க வேண்டும். 2013 ஜூலை 9-ம் திகதி ஜப்பான் வெளிவிட்ட ஜப்பானின் பாதுகாப்புத் தொடர்பான வெள்ளை அறிக்கையில் சீனாவின் ஆகிரமிப்புப்பற்றியே அதிகப் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ஷின்சோ அபேயின் திட்டத்திற்கு இரு தடைகள் இருக்கின்றன. ஒன்று நலிவடைந்துள்ள ஜப்பானியப் பொருளாதாரம். மற்றது ஜப்பானிய மக்களில் மூன்றில் ஒரு பங்கினரே ஜப்பானை படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாற்றுவதில் அக்கறை கொண்டுள்ளனர். இது ஜப்பானிய இந்திய உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

நட்புத் தேடும் ஜப்பானும் நட்பைப்பற்றிக் கவலைப்படாத சீனாவும்.
தென் கொரியாவும் ஜப்பானைப் போலவே சீன படைத்துறை விரிவாக்கத்தையும் கிழக்குச் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்க முனைப்பையும் மிகுந்த கரிசனையுடன் பார்க்கிறது. ஆனால் ஜப்பான் அதன் அயல் நாடாகிய தென் கொரியாவுடன் தனது நட்பை மேம்படுத்த முடியாமல் இரண்டாம் உலகப் போரின் போது கொரியர்களை ஜப்பான் செய்த கொடுமைகள் தடுக்கின்றது. ஜப்பான் செய்த கொடுமைகளுக்கு போதிய பரிகாரம் செய்யவில்லை என கொரியர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதனால் ஜப்பான் சீனாவுடனான படைத்துறைச் சமநிலையைப் பேண இந்தியாவை நாடி நிற்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா மற்ற நாடுகளுடனான நட்பைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சிலர் சீனாவை உலகிலேயே தனிமையான வல்லரசு என்கின்றனர். அமெரிக்கா, பிர்த்தானியா, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகள் தமக்கிடையே நட்பாக் இருப்பதுடன் கனடா, மற்றும் ஜேர்மனி உட்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமான நட்பைப் பேணி வருகின்றன. அத்துடன் ஹங்கேரி, போலாந்து, குரோசியா உட்படப் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த நட்பு வட்டத்துக்குள் அடங்குகின்றன. ஜப்பானும் இந்த நட்புக் கூட்டணியுடன் பல பன்னாட்டு விவகாரங்களில் ஒத்துழைத்து வருகிரது.

இந்தியாவை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் சீனா
காஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.எஞ்சியிருக்கும் அருணாசலம் பிரதேசம் தன்னுடையது என அடிக்கடி சீனா மறை முகமாகச் சொல்லி வருகிறது. இமய மலையை ஒட்டிய இந்திய சீன எல்லையில்  4800 கிலோ மீட்டர் தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. 2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர்  காஷ்மீர்  மாநிலம் லடாக் பகுதியில்  டேப்சாங் பள்ளத்தாக்கில்   19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர்.  ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சீனப் படைகள் விலகிச் சென்றன. சீனா அடிக்கடி இந்திய எல்லைகளில் செய்யும் சீண்டல் வேலைகள் இந்தியாவை மேலும் அதிக படையினரை சீன எல்லையில் குவிக்க வைத்தது. இந்தியாவும் சீனாவைப் படைத்துறை ரீதியில் சமநிலைப்படுத்த ஜப்பானின் உதவி தேவை என உணர்ந்துள்ளது. அமெரிக்காவும் சீனாவை படைத்துறை ரீதியில் சமப்படுத்த இந்தியாவுடன் கை கோர்த்துக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் ஜப்பானும் நீட்டும் நட்புக் கரங்களை அரை மனதுடனே பற்றியுள்ளது. சீனாவுடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இதைச் சில இந்தியப் பெரு முதலாளிகள் விரும்புகின்றனர்.  புது டில்லியைச் சேர்ந்த கேந்திரோபயக் கற்கைகளுக்கான பேராசிரியர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research) இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தைப் பெருக்கினால் அதனால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சீனாவுடனான முறுகல்களை தவிர்ப்பதற்கு அது உதவும் என்றும் இந்திய ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த நம்பிக்கை சரிவரவில்லை. இப்போது அரசியலும் பொருளாதாரமும் எதிர் எதிர்த் திசையில் செல்கின்றன  என்கிறார்.  ஆனால் பன்னாட்டு உறவு நிபுணரான கரெத் பிரைஸ் (Gareth Price, a senior research fellow at Chatham House, a London-based foreign-affairs think tank) ஒரு படி மேலே போய் இந்திய வர்த்தகர்களைக் குற்றம் சாட்டுகிறார். இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகம் பெருகும் போது ஒரு வியாபார் பெரும் இலாபம் ஈட்டுவான். அவனுக்கு எல்லையில் நடக்கும் மோதலைப் பற்றிக் கவலையில்லை. "If you are a businessman doing big business with China, then you don't care about an incursion somewhere up in Ladakh," .

இந்திய ஜப்பானிய படைத்துறை ஒத்துழைப்பு
2001இல் இருந்தே இந்தியாவும் ஜப்பானும் பல முனைகளில் தமது உறவை மேம்படுத்தி வருகின்றன. 2013ஜுலை மாத முதல் வாரம் ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் மன்ன் மோகன் சிங் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். இரு நாடுகளும் இணைந்து படைக்கல உற்பத்தி செய்வதாக ஒத்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்து போர் ஒத்திகை செய்தல், கடற்படை ஒத்துழைப்பு போன்றவை பற்றி ஒத்துக்கொள்ளப்பட்டன. இந்தியா ஜாப்பானை நெருங்கிச் செல்வதால் ஆதிரமடைந்த சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா ஆபத்தைத் தேடிச் செல்கிறது என்றது. ஆனால் மன் மோகன் சிங் இந்தியாவின் திடத்தன்மைக்கான தேடலில் ஜப்பானிய உறவு தவிர்க்க முடியாததும் முக்கியத்துவமானதும் என்றார்.

சீனாவே தன் எதிரிகளை ஒன்றிணைக்கிறது. 
இந்தியாவுடனான எல்லையிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா செய்யும் அத்து மீறல்களும் சீண்டல்களுமே இந்தியாவையும் ஜப்பானையும் இணைக்கின்றன. இந்த இணைப்பு வலுப்பெறுமானால் தென் சீனக் கடலில் சீனாவுடன் முறுகல் நிலையில் உள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தோனேசியா போன்ற ஆசியான் கூட்டமைப்பு நாடுகளும் இந்த இணைப்பில் இணைந்து கொள்ளும். மேலும் தென் கொரியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஒன்றிணைந்தால் சீனா அடக்கப்படலாம். 

ஆபத்து தமிழர்களுக்கே
ஜப்பானும் இந்தியாவும் சிங்களவர்களுடன் நெருங்கிய நட்புறவை பேணும் நாடுகள். 1951-ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் அப்போதைய இலங்கை நிதியமைச்சர் ஜே ஆர் ஜயவர்த்தன ஜப்பானுக்கு ஆதரவாகப் பெரும் குரலெழுப்பினார். அப்போது உலக அரங்கில் தனிமைப்படுத்தப் பட்ட ஜப்பானுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது. அதற்கு நன்றிக் கடனாக ஜப்பான் சிங்களவர்களுக்கு என்றும் சாதகமாக நடந்துகொள்கிறது. இந்தியா பன்னாட்டரங்கில் சிங்களவர்களின் கைக்கூலி போல் செயற்படுகிறது. இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணையும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிறது. 

பிரமிக்க வைக்கும் பிரபஞ்சம்.

கோடானு கோடி சூரியன்களும் அதிலும் பன்மடங்கான கிரகங்களையும் இன்னும் பல அதிசயங்களும் உள்ளடக்கியது இந்தப் பிரபஞ்சம். வானத்தைப் பார்த்து எதிர்காலத்தை சொல்வதாக சோதிடர்கள் சொல்லுவர். ஆனால் நாம் வானத்தைப் பார்க்கும் போது கடந்த காலத்தைத்தான் பார்க்கிறோம்.

வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கும் போது அது சில ஆண்டுகளுக்கு முன்னர் அது இருந்ததைத்தான் நாம் பார்க்கிறோம். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என்பது அது இருக்கும் தூரத்தப் பொறுத்தது. நாம் பார்க்கும் நட்சத்திரத்தில் இருந்து எம்மை ஒளி வந்து சேர பல ஆண்டுகள் எடுக்கும். எமது சூரியன் நாம் பார்க்கும் போது இருக்கும் இடம் உண்மையில் அது நான்கு நிமிடங்களுக்கு முன்னர் இருந்த இடமாகும். ஏனெனில் சூரியனில் இருந்து ஒளி எமக்கு வர நான்கு நிமிடங்கள் எடுக்கும். நட்சத்திரங்கள் இருக்கும் தூரம் ஒளி ஆண்டுகளால் அளவிடப்படும். ஒரு ஒளி ஆண்டு என்பது (ஒளி ஒரு செக்கண்டில் 180,000மைல்கள் பய்ணிக்கும்) ஒளியான ஒரு ஆண்டில் செல்லும் தூரமாகும்.

தொலைக்காட்சிக்குள் பிரபஞ்சம்
எமது தொலைக்காட்சிக்குள் தெரியும் பிரபஞ்சத்தின் ஆரம்பம்
எமது தொலைக்காட்சியில் ரியூன் பண்ணப்படாத ஒரு சனலைப் பார்க்கும் போது கறுப்பும் வெள்ளையும் கலந்த புள்ளிகள் தெரியும் அல்லவா. அது எமது பிரபஞ்சம் Big Bang என்னும் பாரிய வெடிப்புடன் ஆரம்பித்த போது உருவான சூடு இப்போதும் இருக்கிறது. அந்த ஒலி இப்போதும் இருக்கிறது இதை Cosmic background radiation என்பர்.

நட்சத்திரங்களெல்லாம் நட்சத்திரங்களல்ல
நாம் வானில் பார்க்கும் போது தெரிபவை எல்லாம் நட்சத்திரங்களல்ல. பல நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கின்றன. பல கோடி நட்சத்திரங்க்ளைக் கொண்ட தொகுதி வெகு தொலைவில் இருப்பதால் அதுவும் ஒரு நட்சத்திரம் போலத் தோற்றமளிக்கிறது. சில இரட்டை நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும். அதனால் அவை மின்னும் நட்சத்திரம் போலத் தோற்ற மளிக்கும்.

சுற்றும் சூரியன்
முதலில் சூரியன் பூமையைச் சுற்றி வருவதாக மக்கள் நம்பினார்கள். பின்னர் சூரியன் ஒரு இடத்தில் இருக்க ஒன்பது கிரகங்களும் அதைச் சுற்றிவருவதாக கண்டறிந்தனர். பின்னர் சூரியனும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது என்று கண்டறிந்தனர். சூரிய ஒரு சுற்று சுற்றிவர இருபத்தி இரண்டரைக் கோடி ஆண்டுகள் எடுக்கும். சூரியன் Milky Way எனப்படும் பால்வீதியில் உள்ளது அதில் பல கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வீதியில் நானூறு பில்லியன்(நாற்பதாயிரம் கோடி) நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்தப் பால்வீதி ஒரு நட்சத்திரக் கூட்டமாகும் இது போல் 170பில்லியன் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. எமது பால்வீதியில் 50 கோடி கிரகங்களில் உயிரினம் இருக்கும் சாத்தியம் உண்டு. பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் நாள் எனப்படும். பூமி சூரியனைச் சுற்றிவர எடுக்கும் நேரம் ஆண்டு எனப்படும். இப்படிப் பார்க்கையில் சுக்கிரனின் நாள் ஆனது அதன் ஆண்டிலும் பார்க்க நீளமானது. ஆம் சுக்கிரன் தன்னைத் தானே சுற்ற முன்னர் சூரியனைச் சுற்றி வந்துவிடும். சூரிய மண்டலத்திலேயே மிகவும் மெதுவாக தன்னைத் தானே சுற்றும் கிரகம் சுக்கிரனாகும்.

நட்சத்திரங்களுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உண்டு.

வண்ணத்துப் பூச்சி முட்டையிட்டு அது புழுவாகி பின்னர் இறக்கை முளைத்து வண்ணத்துப் பூச்சியாவதை அதன் வாழ்க்கை வட்டம் என்பர். இது போல நட்சத்திரத்திரங்களும் வாழ்க்கை வட்டம் உண்டு. முதலில் தூசாக இருந்து அவை ஒன்று திரண்டு ஒரு பெரு முகில் போல் ஆகி பின்னர் மேலும் திரண்டு ஈர்ப்பு விசையும் வெப்பமும் கூடி எரியத் தொடங்கும். அப்போது அது நட்சத்திரமாகும். எரியும் நட்சத்திரம் எரிந்து முடிந்தவுடன் அது செங்கோள் ஆகும். நட்சத்திரத்தின் அளவு எமது சூரியனிலும் பார்க்க மூன்று மடங்கானால் அவை எரிந்து முடிந்த பின்னர் வரும் செங்கோள் பின்னர் கருங்குழியாகும் (black hole). கருங்குழிகள் தோன்றுவதற்கு எமது சூரியனிலும் பார்க்க மூன்று மடங்கு பெரிதாக நட்சத்திரம் இருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சந்திரசேகர். ஒரு பெரிய நட்சத்திரம் எரிந்து முடிந்த பின்னர் அதன் ஈர்ப்பு விசை அதிகரித்துக் கொண்டே போகும். அந்த அதிகரிப்பு ஒளியின் வேகத்தை விட அதிகமாகும் போது அது கருங்குழியாகிறது. அது ஒளியை உறிஞ்சும் ஆனால் வெளியில் விடாது. தெறிகவும் மாட்டாது. அதன் ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் தன்னுள் இழுக்கும். அதனால் அது கருங்குழி எனப்படும்.

 மிகப் பெரிய டஸ்மார்க் கடை விண்ணில் உண்டு
பால்வீதியின் நடுவிலே Sagittarius B எனப்படும் ஒரு தூசி மண்டலம் உண்டு அதில் பத்து பில்லியன் பில்லியன் பில்லியன் லீட்டர் மதுபானம் இருக்கிறதாம். இதே மாதிரி இன்னும் ஒரு மண்டலத்தில் பெரிய கிரகத்தின் அளவு வைரம் இருக்கிறது.

பிரபஞ்சம் பல என்கின்றனர்
சில் விஞ்ஞானிகள் பிரபஞ்சங்கள் பல இருக்கலாம் என வாதிடுகின்றனர். முடிவிலாதது பிரபஞ்சம் என்கின்றனர் அவர்கள்.

Tuesday 23 July 2013

போர் முனையில் கால நிலை மாற்றப்படலாம்


இரு நாடுகளிடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நாடு தனக்கு சாதகமாக கால நிலையை மாற்றி மழையோ அல்லது பனிமழையோ பொழியச் செய்யும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ இந்த ஆராய்ச்சியில் பெருமளவு முதலிட்டுள்ளது.

வியட்னாம் போரின்போது அமெரிக்கப்படைகள் Weather warfare எனப்படும் கால நிலைப் போர் புரிந்தது. பனி மூட்டம் கூடிய இடங்களில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது சிரமம் என்பதால்  வானில் உப்புத்தூள் தூவி பனி மூட்டங்களைக் கலையச் செய்தது. சில சமயங்களில் மழை பனி மழை போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி  பின்னர் 1977இல் கால நிலைப் போர் தொடர்பாக ஒரு உடன்படிக்கையில் பல நாடுகள் கைச்சாத்திட்டன. இதன் படி சூழலுக்கு பாதகம் ஏற்படக்கூடிய வகையில் வானில் எந்த இரசாயனப் பதார்த்தங்களும் தூவக்கூடாது என ஒத்துக் கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பகல் நேரத் தாக்குதல்களுக்கு நாளைத் தெரிந்தெடுக்கும் போது முகில் கூட்டம் கூடிய நாட்களைத் தெரிந்து எடுப்பர். 2009-ம் ஆண்டின் பின்னர் சீனா இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் பல தெருக்களை அமைத்து வருகிறது. தெருக்களின் வலையமைப்பு சரியாக இருந்தால் மரபு வழி படையினருக்கு எதிராக கரந்தடி படையினர் செயற்படுவது சிரமமாக இருக்கும். மரபு வழிப்படையினர் தமது நகர்வுகளை வேறு வேறு பாதைகளில் பயணம் செயவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. சீனா தெருக்கள் அமைக்கும் போது வானில் வாணத்தை வெடிக்கச் செய்வதன் மூலம் வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை பெய்யாமல் செய்து விடும்.

இப்போது அமெரிக்கா solar radiation management  எனப்படும் சூரியக் கதிர் வீச்சு முகாமைத்துவ மூலம் போர் முனையில் கால நிலையை மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவும் காலநிலைப் போர் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. சீனா தனது வட மாநிலங்களில் வரட்சி நிலவிய போது வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை வரச் செய்தது.

Monday 22 July 2013

ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் அவலங்கள்

"2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும்" என்று சிலகாலமாகச் செய்திகள் அடிபடுகின்றன. இது உண்மையா? ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் "பணி" முடிவடைந்து விட்டதா? ஆப்கானிஸ்த்தானில் இனி அமைதி நிலவுமா? அல் கெய்தா அழிக்கப்பட்டு விட்டதா? 

கோபுரங்கள் சாய்வதுண்டு
1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத் ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது. சோவியத் ஒன்றியத்தை விரட்ட அமெரிக்கா தெரிவு செய்தவற்றில் ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம்.. சோவியத்தின் பொதுவுடமைவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று சோவியத் படைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்குப் போதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர். ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார். சோவியத் ஒன்றியப் படைகளிற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா ஈரான் ஆகிய நாடுகள் உதவி செய்தன. 1989இல் சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானிஸ்த்தானில் போர் தொடர்ந்தது. சோவியத் ஒன்றியம் பதவியில் அமர்த்திய நஜிபுல்லா 1992இல் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மோசமான உள்நாட்டுப் போர் உருவானது. 1996இல் தலிபான் அமைப்பு ஆப்கான் தலைநகர் காபுலைக் கைப்பற்றியது. இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மோசமாகியது. அமெரிக்கா ஆப்கான் ஒரு ஈரானின் செய்மதி நாடாக மாறுவதை கடுமையாக எதிர்த்தது. ஆப்கானிஸ்த்தானின் போராளிக் குழுக்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல்  வலுத்தது. ஆப்கானிஸ்த்தானில் இருந்து செயற்படும் பின் லாடன் தலைமையிலான அல் கெய்தா இயக்கம் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல்கல் தொடுத்தன. 1998இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் உள்ள அல் கெய்தால் நிலைகள் மீது குண்டுகள் வீசியது. 1999இல் அமெரிக்கா பின் லாடனைப் பிடித்துத் தன்னிடம் தரும்படி வேண்டி ஆப்கான் மீது பொருளாதாரத் தடையையும் விமானப் பறப்புத் தடையையும் விதித்தது. 2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்டோபர் அமெரிக்கா தலைமையில் நேட்டோப் படையினர் ஆப்கான் மீது படையெடுத்தனர். 2004இல் ஆப்கானில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு புதிய அதிபராக ஹமித் ஹர்ஜாய் தெரிவு செய்யப்பட்டார். 2006இல் ஆப்கான் முழுவதும் நேட்டோப்படைகளின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் பட இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2009இல் அமெரிக்கா தனது அணுகுமுறைகளை மாற்றியது. அமெரிக்கப்படைகள் அதிகரிக்கப்பட்டன. ஆப்கானியர்களுக்கு படைப்பயிற்ச்சி வழங்குவது அதிகரிக்கப்பட்டது. 2011இல் நேட்டோப்படைகளில் ஒன்றான டச்சுப்படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறினர். 2012இல் நேட்டோ நாடுகள் 2014இல் ஆப்கானில் இருந்து நேட்டோப்படைகள் வெளியேறும் என முடிவெடுத்தன. 2012 ஜனவரியில் தலிபான் அமைப்பினர் அமெரிக்காவுடனும் ஆப்கான் அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்த துபாயில் தனது பணிமனையைத் திறக்க ஒப்புக் கொண்டது. 2012ஜூலை ஆப்கானிற்கான டோக்கியோ நன்கொடை மாநாடு கூட்டப்பட்டது. அதில் ஆப்கானிற்கு 16பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்ற நிபந்தனியுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 2013ஜூனில் நேட்டோவிடமிருந்து ஆப்கான் படைகள் நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. பின்னர் தலிபானுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சு வார்த்தைகளை நடத்த முயல்வது ஆப்கான் அரசை அதிருப்திக்குள்ளாக்கியது. 



2014இல் அமெரிக்கப்படைகள் முற்றாக வெளியேற மாட்டாது

 ஆப்கானில் தற்போது நேட்டோப்படைகள் இரு பணிகளைச் செய்கின்றன. ஒன்று தாக்குதல் பணி மற்றது ஆதரவுப்பணி. தாக்குதல் பணி செய்யும் படையினர் 2014இல் ஆப்கானில் இருந்து வெளியேறுவர். ஆப்கான் படையினருக்கு பயிற்ச்சியும் தேவைப்படும்  போது அவர்களுடன் இணைந்து தாக்குதலும் செய்யும் ஆதரவுப் பணி செய்யும் அமெரிக்கப் படையினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்த்தானில் இருப்பார்கள். அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனின் கணிப்பின் படி 2024வரைக்கும் அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருக்கும்.

ஆப்கான் போர் முடியவில்லை
ஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் போர் இப்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. வேறு வடிவத்தில் போர் தொடரும். ஆப்கானித்தானில் எப்போது அமைதி நிலவும் என்பது பற்றி எந்த வித உறுதி மொழியும் இப்போது சொல்ல முடியாது. ஆப்கானில் இருக்கு 68,000படையினர் எப்போது முழுமையாக வெளியேறுவார்கள் என்பதற்கான கால அட்டவணை ஒன்றும் உருவாக்கபப்டவில்லை. ஆப்கானில் குறைந்தது 20,000படைகள் இருக்க வேண்டும் என பெண்டகன் நம்புகிறது. 

அமெரிக்கா நினைத்தது நடக்கவில்லை
அல் கெய்தாவில் இன்னும் 100 பேரே எஞ்சியுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பின் லாடன் கொல்லப்பட்டு விட்டார். இன்னும் ஆப்கானிஸ்த்தானில் நேட்டோப்படைகள் 68,000 ஏன் இருக்கின்றன? அல் கெய்தா அழிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஈரான் அடக்கப்படாதவரை ஆப்கானில் தீவிரவாதம் அடக்கப்பட மாட்டாது. அமெரிக்கா ஆப்கானில் கற்றுக் கொண்ட பாடங்களில் முக்கியமானது பாக்கிஸ்த்தான் அமெரிக்காவின் எதிரிநாடு என்பதே. ஆனால் அமெரிக்க இந்த வெட்கக் கேட்டை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அட்டூழயம் செய்தது போல் அமெரிக்கப்படைகளும் ஆப்கானிஸ்த்தானில் செயற்படுகின்றன. அமெரிக்கப்படைகளுக்கு தாம் ஆப்கானில் ஏன் இருக்கிறோம் ஏன் போராடுகிறோம் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற தெளிவான சிந்தனை இந்திய அமைதிப் படையைப் போலவே நேட்டோப்படைகளுக்கும் இல்லை. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் கார்ஜாயும் அவரது குடும்பமும் பல ஊழல்கள் புரிந்து வருகின்றனர். ஆப்கான் மக்கள் அவர்களையும் அமெரிக்கப்படைகளை வெறுப்பது போல் வெறுக்கின்றனர்.நேட்டோப்படையினர் ஆப்கானில் உருவாக்கிய ஆப்கான் தேசியப் படையும், ஆப்கான் தேசியக் காவற்துறையும் நேட்டோப்படைகள் ஆப்கானில் இருந்து வெள்யேறியவுடன் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் ஆப்கானில் நிலைமை மிக மோசமானதாக மாறும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...