Saturday 6 July 2013

நாசமாகும் எகிப்தும் மோசமான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

முன்பு ஒரு நாட்டைத் தமது ஆதிக்கத்திக்குள் கொண்டுவர அந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தன வல்லாதிக்க நாடுகள். பின்னர் தமது கைப்பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. எகிப்தில் அமெரிக்கா செய்வது சற்று வித்தியாசமானது. எகிப்தியப் படைத் துறைய தனது சுண்டுவிரலின் கீழ் வைத்துக் கொண்டு எகிப்தைத் தனது ஆதிக்கத்துக்குள் அமெரிக்கா வைத்திருக்கிறது.

அமெரிக்கா மற்ற நாடுகளில் மக்களாட்சி முறைமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அங்கு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும். தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மக்களாட்சி முறைமையைக் குறை கூறிக் கொண்டு அமெரிக்கா அவற்றிற்கான நிதி உதவியை நிறுத்தும். ஆனால் எகிப்தில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்சியை எகிப்தியப் படைத் துறை பதவியில் இருந்து அகற்றிய போதிலும் எகிப்தியப் படைத்துறைக்கான உதவியை அமெரிக்கா இடை நிறுத்தப் போவதாகச் சொல்லவில்லை. அமெரிக்கா ஆண்டு தோறும் எகிப்தியப் படைத்துறைக்கு சராசரியாக 1.3பில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்கி வருகிறது. எகிப்தியப் படைத்துறையின் உயர் அதிகாரிகள் யாவரும் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்று அமெரிக்காவிற்கு சாதகமாக நடக்கும்படி மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

மோர்சியின் பதவிக் கவிழ்ப்பைக் கொண்டாடும் மக்கள்:


மோசமான மொஹமட் மேர்சி
2011இல்  எகிப்திய மத்தியதர வர்க்கத்தினர் அப்போதைய ஆட்சியாளர் புரட்சி செய்தபோது அமெரிக்கா தனக்கு வேண்டப்பட்டவரான ஹஸ்னி முபாரக்கை பதவியில் தொடர விரும்பாமல் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியது. அமெரிக்கா தனது கைப்பொம்மையான எகிப்தியப் படைத்துறை புரட்சியாளர்களுடன் ஒத்துப் போவதை விரும்பியது. இதனால் புரட்சி இரத்தக் களரியின்றி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கை ஆட்சியில் இருந்து விலக்கியது. ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி வெற்றி பெற்று மொஹமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். ஒரு இசுலாமிய மதவாத ஆட்சி எகிப்த்தில் உருவானது. இது அமெரிக்கா விரும்பாத ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் புவிசார் கேந்திரோபாய நலன்களுக்குப் பாதகமில்லாமல் மொஹமட் மேர்சி தன்னை மாற்றிக் கொண்டார். கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் மோர்சி ஈரான் நீட்டிய நட்புக்கரத்தை ஏற்க மறுத்தார். இஸ்ரேலுடனான எகிப்திய வர்த்தகத்தை அதிகரித்தார். மோர்சி ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஆதரவுடன் எகிப்து இஸ்ரேலுடன் செய்யப்பட்ட காம்ப் டேவி ஒப்பந்தம் இரத்துச் செய்யபடுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மோர்சி அப்படிச் செய்யவில்லை. சிரியக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கு ஏற்றபடி நடந்து கொண்டார். இப்படி மோர்சி அமெரிக்கவின் விருப்பங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டபடியால் அவர் உள்நாட்டில் செய்யப்படவேண்டிய சீர் திருத்தங்களைச் செய்யாமல் இசுலாமியச் சட்டங்களை அமூல் படுத்தத் தொடங்கினார். அத்துடன் தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எகிப்தில் புரட்சி செய்தவர்கள் ஹஸ்னி முபாரக் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலையில்லாப் பிரச்சனை, பொருளாதார மேம்பாடு, உல்லாசப்பயணத் துறை அபிவிருத்தி போன்றவற்றில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மோர்சி தன்னைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். அவசர அவசரமாக ஒரு அசமைப்பு யாப்பை உருவாக்கினார். படைத்துறைக்கும் அதில் அதிக அதிகாரங்களை வழங்கினார். தன்னை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக்கினார். அவரது அரசமைப்பிற்கு தாராண்மைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அரசமைப்பு யாப்பிற்கான வாக்கெடுப்பில் 32விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே பங்கு பற்றினர். அதில் 67 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்திருந்தது. மோர்சி இசுலாமிய அடிப்படைவாதிகளுடன் தனது உறவைப் பலப்படுத்தினார். அரச உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தினார். பெணகளுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தார். இவற்றை எல்லாம அமெரிக்கா கண்டுகொள்ளாத மாதிரி இருந்தது. மோர்சியை எப்படித் தன்வழிக்குக் கொண்டுவருவது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது. மோர்சி பதவியேற்றதில் இருந்து பெண் உரிமைவாதிகள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். வேறும் பல அதிருப்தியாளர்கள் மோர்சிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடந்த படியே இருந்தன. மோர்சி பதவி ஏற்று ஓராண்டு நிறைவில் மோர்சியின் ஆட்சி தமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிலுமே கவனம் செலுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பல இலட்சக கணக்கான மக்கள் 2011இல் செய்தது போல் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைக் காரணமாக வைத்து எகிப்திய படைத்துறையினர் மொஹமட் மோர்சியின் ஆட்சிக்கு 48 மணித்தியால நேர அவகாசம் கொடுத்தனர். மோர்சி பதவி விலக மறுத்ததால் அவரை வீட்டுக்காவலில் தடுத்து வைத்து அவரது ஆட்சியைக் கலைத்து எகிப்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்களைக் கொண்ட ஒரு ஆட்சியை நிறுவினர்.

மோர்சியைச் சந்தேகித்த படைத்துறையினர்.
எகிப்தையப் பொருளாதாரத்தில் 30விழுக்காட்டை ஏப்பமிடும் படைத்துறையினர் மோர்சி தனது நிலையைப் பலப்படுத்தி அமெரிக்காவுடனான தனது உறவையும் மேம்படுத்திக் கொண்டால் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற நிலையைத் தாம் இழந்து விடுவோமோ என்ற அச்சம் கொண்டதன் விளைவே மோர்சியின் ஆட்சிக் கலைப்பு எனக் கூறலாம்.

இசுலாமின் எதிரிகள்
மோர்சியின் ஆட்சிக் கவிழ்ப்பை இசுலாமிய மதத்தின் எதிரிகள் அரசியலுக்குள் மதத்தைக் கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால் அது தோல்வியில் முடிவடையும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மோர்சிக்கு மோசமாக இருந்த எகிப்தியப் பொருளாதாரத்தையோ அதன் ஊழல் நிறைந்திருந்த நிர்வாகக் கட்டமைப்பைச் சீர் செய்யவோ ஓர் ஆண்டு போதாது என்கின்றனர் அவரது ஆதர்வாளர்கள். மொஹமட் மோர்சியை வீட்டுக் காவலில் வைத்தமையை ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் நவி பிள்ளையும் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்துள்ளன. பல இசுலாமியத் தீவிரவாதிகளும் எகிப்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆபிரிக்க ஒன்றியம் எகிப்தைத் தமது அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது. 1991இல் அல்ஜீரியாவில் இசுலாமிய விடுதலை முன்னணி என்னும் இசுலாமிய மதவாதிகள் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த போதும் படத்துறையினர் அவர்களுக்கு எதிராக அடைக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இரண்டு இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர். மோர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மோர்சியின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எசாம் எல் ஹதாத் தனது முகநூல் நிலைத்தகவலில் எழுதியது: "The message will resonate throughout the Muslim World loud and clear: democracy is not for Muslims."

புதிய ஆட்சியின் ஆரம்பம்
மோர்சிக்குப் பின்னர் பதவிக்கு வந்த அரசு முதல் செய்யும் பணி மோர்சிக்கு ஆதரவான ஊடகங்களைத் தடை செய்வதே. மோர்சிக்கு எதிரான தாராண்மைவாதிகள் மோர்சிக்கு எதிராக கிளர்ந்து எழும்படி தமது ஆதரவாளர்களைக் கேட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகள் மோர்சியின் ஆட்சிக் கலைப்பை தமக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றனர். மோர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டதில் இருந்து 06/07/2013 GMT காலை 10.00 மணிவரை எகிப்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2011இல் நடந்த புரட்சியின் போது சிறையில் இருந்து தப்பியமை குற்றம் என மோர்சியின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மோர்சிக்குப்பின்னர் வலுக்கும் மோதல்கள்
மோர்சி பதவி விலக்க்கப்பட்டதை இசுலாமிய மதவாதிகள் விரும்பவில்லை. 84 ஆண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மோர்சியின் இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு சமூக ரீதியாகவும் மத ரீத்ரியாகவும் எகிப்தில் பல நல்ல செயற்பாடுகளைச் செய்து வந்துகொண்டிருப்பதால் அதற்கு என்று ஒரு பெரும் ஆதரவுத் தளம் இருக்கிறது. மோர்சியின் ஆதரவாளர்களுடன் படைத்துறை ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதை விரும்பாதவர்களும் எகிப்தில் அமெரிக்க ஆதிக்கத்தை விரும்பாதவர்களும் மோர்சியின் ஆதரவாளர்களுடன் இணைகிறார்கள். இதனால் மோர்சியின் ஆட்சிக்கலைப்பிற்கு எதிரான கிளர்ச்சி நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது. எகிப்தில் 1991இல் அல்ஜீரியாவில் உருவாகியது போல் ஒரு நிலைமையோ அல்லது தற்போது சிரியாவில் உள்ளது போல் ஒரு நிலைமையோ உருவாக வாய்ப்பு உள்ளது. புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாட்டில் இப்படி ஒரு நிலைமை உருவாகுவதை வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் விருப்பப் போவதில்லை. படைத்துறையினருக்கு உள்ள ஒரே ஒரு வழி மீண்டும் எகிப்தில் தேர்தல் நடத்துவதுதான். அதற்கு உரிய அரசமைப்பு யாப்பை முதலில் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் காலத்தை இழுத்தடித்தால் எகிப்தில் பெரும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நாடே நாசமடையும்.

Thursday 4 July 2013

மோர்சிக்குப் பின் மோசமாகுமா எகிப்து?

அரபு வசந்தத்தின் ஓர் அம்சமான 2011இல் நடந்த எகிப்தியப் புரட்சி மத சார்பற்ற ஒரு குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்களிடை வலிமை மிக்க தலைமையின்மையாலும் பிளவு பட்ட பல அமைப்புக்கள் இருந்தமையினாலும் எகிப்தியப் புரட்சிக்குப்பின்னர் நடந்த தேர்தலில் மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெற்றது.

உண்மையில் அரபு வசந்தம் ஒரு மத்தியதர வர்க்கத்தின் புரட்சியாகும். அதில் பங்கு பற்றியவர்கள் சராசரி மக்களிலும் அதிகமாகக் கல்வி கற்றவர்கள். பலர் நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். இவர்களால் பாட்டாளி வர்க்கத்தினரிடை தமது கொள்கைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு அரசியல் கட்டமைப்பை அமைத்துக் கொள்ளும் அனுபவமோ திறமையோ இருக்கவில்லை. இவர்களது இந்த பலவீனத்தை மதவாதக் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. படிக்காத பாமர மக்களிடை மதவாதிகளுக்கு மதிப்பு இருக்கிறது. இதனால் துனிசியாவில் புரட்சிக்குப் பின்னர் வந்த தேர்தலில் மதவாதக் கட்சியான என்னக்தாவும் எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் வெற்றி பெற்றன.

ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகள் போன்றவை எதுவுமின்றி படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கை சமூகவலைத்தளங்கள், கைபேசித் தகவல்கள், செய்மதித் தொலைக்காட்சிகள் போன்றவற்றால் பதவியில் இருந்து விரட்டினர் ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 86 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள் என்பதே இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் கொள்கையாகும்.

அமெரிக்காவின் புதுப்புது குடியேற்றவாதம்.
2011இல் நடந்த எகிப்தியப் புரட்சியில் இரத்தக் களரியின்றி மிகக் குறுகிய காலமான 18 நாட்களில் ஹஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டமைக்கு எகிப்தியப் படைத்துறையினரும் முக்கிய பங்கு வகித்தனர். புரட்சியின் போது அவர்கள் நடுநிலைமை வகித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கிளர்ச்சி செய்பவர்களைக் காவற்துறையால் அடக்காத போது அவர்கள் மேல் படைத்துறையினரை ஏவிவிடுவது எகிப்தில் நடக்கவில்லை. எகிப்தியப் படைத்துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். எகிப்தும் இஸ்ரேலும் அமெரிக்காவில் 1979இல் செய்து கொண்ட காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் அமெரிக்கா எகிப்திற்கு ஆண்டு ஒன்றிற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு அதிமான உதவிகளைச் செய்து வருகிறது. அமெரிக்க உதவியைப் பெறும் இரண்டாவது பெரிய நாடாக எகிப்து இருக்கிறது. இதில் பெரும்பகுதியான 1.3பில்லியன்கள் எகிப்தியப் படைத்துறைக்கே செல்கிறது. இது எகிப்தை தனக்குச் சார்பாக வைத்திருக்க அமெரிக்கா செய்யும் உத்தியாகும். ஹஸ்னி முபராக்கிற்குப் பின்னர் எகிப்தியப் படைத்துறையின் படையினரின் உச்ச சபைக்கு{Supreme Council of the Armed Forces (SCAF)}அதிக அதிகாரங்கள் இருக்கின்றது. எகிப்திய தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி படைத்துறைக்கே செலவிடப்படுகிறது.

அமெரிக்க மக்களாட்சித் தத்துவம்
மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட மோர்சி தலைமையிலான அரசை அமெரிக்க சார்புடைய படைத்துறையினர் எப்படி பதவியில் இருந்து அகற்றலாம் என்பதே இன்று பெரும் கேள்வியாக இருக்கிறது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை எகிப்தில் வளர விடுவதை அமெரிக்கா விரும்பவில்லையா? சிரியக் கிளர்ச்சியிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கில் அதன் பரம்பலும் அமெரிக்காவிற்கு உகந்ததில்லையா?

பிழையாகிப் போன மதவாத அரசியல்
மத்திய கிழக்கில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றில் முதலாளித்து நாடுகளின் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் அல்லது மதவாதிகளாக இருக்க வேண்டும். இதனால் அங்கு ஒரு நல்லாட்சி நடைபெறுவது காணக் கிடைக்காத ஒன்றாக இருக்கிறது. மோர்சியின் வீழ்ச்சி அரசியலுக்குள் மதம் இருப்பது பிழையானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 

மோசமான மோர்சி
எகிப்தியப் புரட்சிக்கு வழிவகுத்தவர்களின் எதிர்பார்ப்பான சிறந்த பொருளாதார நிர்வாகம், சமூக நீதி போன்றவற்றை வழங்க மோர்சி தவறிவிட்டார். அதே போல் எகிப்தியப் படைத்துறையினரின் வேண்டுதலான எதிர்க்கட்சிகளையும் அணைத்துக் கொண்டு அவர்களையும் ஆட்சியில் இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்பதையும் மோர்சி நிறைவேற்றவில்லை.ஆட்சிக்கு வந்த மோசியிடமோ அவரது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிடமோ இசுலாமிய மதச் சட்டங்களை அமூல் படுத்துவதைத் தவிர நாட்டின் பொருளாதரத்தையோ மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான குப்பை அகற்றுதலில் இருந்து வேலை வாய்ப்புவரை எந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்திட்டமும் இருக்கவில்லை. "எல்லாப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வு" என்ற மதவாதச் சுலோகம் எகிப்திய மக்களைப் பொறுத்தவரை புளித்துப் போன ஒன்றாகி விட்டது. மோர்சி ஆட்சியை நடத்துவதிலும் பார்க்க தனது கட்சியை மக்கள் மத்தியில் பலப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். 40%இற்கு அதிகமான மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் கொண்ட நாட்டிற்கு சிறந்த ஆட்சியும் சிறந்த பொருளாதார நிர்வாகமும் தேவைப்பட்டது. இது மோர்சியிடம் இருக்கவில்லை. மோர்சியின் ஆட்சியில் அதிருப்தி கொண்டவர்கள் தமரவுட் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தனர். தமரவுட் என்ப்து பெரும் கிளர்ச்சி எனப் பொருள்படும். இதன் முன்னோடி அமைப்பு மாற்றத்திற்கான மக்கள் இயக்கமாகும். மோர்சி பதவியேற்ற ஓராண்டு நிறைவு நாளில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. கெய்ரோவில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைமைச் செயலகம் தீக்கிரையாககப்பட்டது.

தமரவுட் அமைப்பும் தஜரவுட் அமைப்பும்
எகிப்ப்தின் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு முபாரக் ஆட்சியின் போது அவரைப் பதவியில் இருந்து அகற்ற ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு 2013 ஏப்ரல் மாதம் மோர்சிக்கு எதிராக தமரவுட் இயக்கத்தை ஆரம்பித்தது. தமரவுட் இயக்கம் மோர்சி பதவியில் இருந்து விலக வேண்டும் என 22 மில்லியன் கையோப்பங்களைத் திரட்டியது. மோர்சியின் ஆதரவாளர்கள் தஜரவுட் என்னும் இயக்கத்தை ஆரம்பித்து மோர்சிக்கு ஆதரவு தெரிவித்து 10 மில்லியன் கையொப்பங்களைத் திரட்டினர். தமரவுட் இயக்கத்தினர் கெய்ரோ நகரவீதிகளில் யாரும் தஜரவுட் இயக்கத்தினரின் கையொப்பப்பத்திரத்தை கண்டதில்லை என்கின்றனர்.

மொஹமட் எல் பராடி
முபராக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் முன்னாள் உலக அணுசக்தி முகவரக அதிபராக இருத மொஹமட் எல் பராடியை ஆட்சிக்கு கொண்டுவர எகிப்தியத் தாராண்மைவாதிகள் விரும்பினர். ஆனால் அவர்களது விருப்பம் நிறைவேறவில்லை. தேச விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் படைத்துறையினருடன் மொஹமட் எல் பராடியை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மோர்சிக்குப் பின்னால்
மோர்சியை பதவியில் இருந்து தூக்கிய எகிபதியப் படைத்துறையினர் எகிப்திய அரசமைப்புச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய எகிப்திய அதிபராக உச்ச நீதிமன்ற நீதியாளர் அட்லி மன்சூரை நியமித்தனர். நிபுணர்களைக் கொண்ட ஒரு அவை இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உரிய நேரத்தில் தேர்தல் நடக்கும் என்றும் படைத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இதற்கான கால வரையறை எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தமரவுட் இயக்கத்தினர் எகிப்தியப் படைத்துறையினர் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற உறுதி மொழியை எகிப்தியர்களுக்கு வழங்கியுள்ளனர். மோர்சியும் அவரது முக்கிய ஆதரவாளர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். படைத்துறையினர் 300இற்கு மேற்பட்ட இசுலாமைய சகோதரத்துவ அமைப்பினருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளனர். மக்களின் விருப்பத்தை ஒட்டி ஓர் ஆட்சியாளரை அகற்றிவிட்டு மக்களுக்கு நனமை செய்யக் கூடிய் ஒருவரைப் பதவியில் அமர்த்திய படியால் இது படைத்துறைப் புரட்சி அல்ல என்கிறது எகிப்தியப் படைத்துறை. ஆட்சியில் இருப்பவரை அகற்றி நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் மட்டுமே அது படைத்துறைப் புரட்சி ஆகும் என வாதாடுகிரது எகிப்தியப் படைத் துறை. அல் நூர் என்ற மததீவிரவாத அமைப்பும் எகிப்தில் பலமானதாக இருக்கிறது. இது எகிப்தில் இசுலாமிய சட்டங்களைக் கடுமையாக அமூல் படுத்த வேண்டும் என்ற கொள்கையுடையது. சுனி இசுலாமியர்களின் உயர் மத பீட அமைப்பும் எகிப்தில் இருக்கிறது. மோர்சியை ஆட்சியில் இருந்து விரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய விடுதலை முன்னணியாகும். இது பல கட்சிகளை ஒன்றிணைத்த அமைப்பாகும். ஆனால் ஒன்றுபட்ட அமைப்பா என்பது கேள்விக்குறி. இந்த பல வேறுபட்ட அமைப்புக்கள் மத்தியில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் ஒரு பலமிக்க அமைப்பாகும். இவர்களுக்கிடையிலான மோதல் இனி வலுத்து மோர்சிக்குப் பின்னர் ஒரு மேலும் மோசமான நிலைஎகிப்தில் உருவாகுமா  அல்லது நாட்டின் முன்னேற்றதைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவார்களா? மத்திய கிழக்கிற்கும் மக்களாட்சித் தத்துவத்திற்கும் வெகுதூரம் என்ற கூற்றை பொய்யாக்குவார்களா?

Wednesday 3 July 2013

தமிழர்களுக்கு எதிராக நஞ்சு கக்கும் மலையாளி

Prokerala News என்னும் இணையத் தளத்தில் M. R Narayan Swamy என்பவர் "It is time India corrects its Sri Lanka policy" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை தவறு என்பதை எல்லோரும் அறிவர். அது திருத்தப்பட வேண்டும் என்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் எம் ஆர் நாராயண் சுவாமி சொல்லுவது சுப்பிரமணிய சுவாமி சொல்லுவதிலும் கேவலமாக இருக்கிறது. இந்த நாராயண் சுவாமியும் நிச்சயம் ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும் என எவராலும் உறுதியாகச் சொல்ல முடியும்.

"தமிழ்நாடு வெலிங்டனில் பயிற்ச்சிக்கு வந்த இலங்கைப்படை வீரர்களை நிர்பந்தத்தின் பேரில் இலங்கை அரசு திருப்பப் பெற்றமை இலங்கை இந்திய உறவைப் பாதிக்காது என்பது நம்ப முடியாமல் இருக்கிறது" என்று  தனது கட்டுரையை ஆரம்பித்த எம் ஆர் நாராயண் சுவாமி புது டில்லி "இலங்கைப் படையினரை அழைத்திருந்திருக்கக் கூடாது; அழைத்த பின்னர் இறுதிவரை பயிற்ச்சியை முடித்திருந்திருக்க வேண்டும்" என்கிறார். அவரது தத்துவம் தொடர்கிறது: "ஒரு கூட்டாட்சி அமைப்பின் கீழ் ஒரு மாநிலம் சொல்வதை மைய அரசு செவி மடுக்க வேண்டும் ஆனால் தொடர்ச்சியாக மிரட்டி அலுவல் பார்ப்பதை (blackmail) அனுமதிக்கக் கூடாது. விடுதலைப் புலிகள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்குப் புத்திமதி சொல்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவர்கள் தோற்கடிக்கப்பட்டபின்னர் அதற்கு பழிவாங்கும் முகமாக 'நான் இலங்கையை வெறுக்கிறேன்' என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்"

எம் ஆர் நாராயண் சுவாமி மேலும் இப்படி நஞ்சைக் கக்குகிறார்: "இலங்கை அரசின் படைத்துறைக் கொள்கைக்கோ அல்லது வெளியுறவுக் கொள்கைக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லாத இலங்கையர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள்"  முல்லைப் பெரியாறு அணையோடு எந்த விதத் தொடர்புமில்லாத அப்பவித் தமிழர்களை கொடூரமாகத் தாக்கிய போதும் தமிழ்ப்பெண் தொழிலாளிகளை மேலாடை களைந்து அவமானப் படுத்தியபோதும் இந்த நாராயண் சுவாமி எங்கிருந்தார்? 1983-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பில் 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் சிங்கள அரச ஆதரவுடன் தமிழர்கள் மீதும் இலங்கை வாழ் வட இந்தியர்கள்மீதும் தாக்குதல் நடாத்தி அவர்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அழித்த போது இந்த நாராயண சுவாமி எங்கிருந்தார்? கொழும்பில் மருத்துவ மனைக்குச் சென்ற கற்பிணிப்பெண்ணின் வயிற்றை உள்ளே புலிக்குட்டி இருக்கிறது என்று சொல்லி வெட்டிக் கிழித்த போது இந்த நாராயண் சுவாமி சஹஸ்ரநாமம் ஓதிக் கொண்டிருந்தாரா?

போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு புலிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படத் தொடங்கியமை புலிகள் அமைப்புத் தொடங்க முன்னர் என்பதையோ; 1956இல் கொதிதாரில் தமிழ் குழந்தையைப் போட்டுக் கொன்ற கொடூரத்தையோ; அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதன் விளைவுதான் விடுதலைப்புலிகளின் உருவாக்கம் என்பதையோ, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மாமாங்கத்துக்கு ஒருமுறை (சில சமயம் அதிலும் குறைவான காலப்பகுதிகளிலோ இலங்கையில் இனக்கலவரம் என்னும் போர்வையில் தமிழர்கள் கொல்லப்பட்டமையையோ சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டமையையோ இந்த நாராயணனுக்குத் தெரியாதா?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் 2008 தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வியடைந்துவிடும் நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் என்று சொல்லி விடுதலைப் புலிகளை தவறாக நடாத்தினர் என நாராயண் சுவாமி போதிக்கிறார். 2008 ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு முடிக்க இருந்த போரை வேண்டாம் 2008 மேமாதம் நடக்க விருக்கும் எமது தேர்தலுக்கு முன்னர் முடியுங்கள் என இலங்கை அரசை நிர்பந்தித்தது யார் என்பதை இந்தக் கேடு கெட்ட மலையாளச் சுவாமி அறிய மாட்டார். அதற்காக பேரழிவு விளைவிக்கும் சரின் குண்டுகளை இலங்கைக்கு யார் கொடுத்தார் என்பதை நாராயண் சுவாமி எழுத மாட்டார்.

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க இலங்கை விடுத்த வேண்டுகோளை இந்தியா தமிழர்களுக்காக் நிராகரித்தது என்கிறார் நாராயண் சுவாமி. துறைமுக அமைப்பில் இந்திய ஆட்சியாளர்களுக்கு போதிய வெட்டுக் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் அம்பாந்தோட்டையில் என்ன கண்டியிலேயே துறைமுகம் கட்டுவார்கள்.

 நாராயண் சுவாமி இந்தியா தனது இலங்கை தொடர்பான பார்வையை தமிழ்நாட்டினூடாகப் பார்க்கக் கூடாது என்கிறார் நாராயண். இலங்கை-இந்திய உறவில் ஏற்படும் ஒவ்வொரு வளர்ச்சியும் பாக்கு நீரிணைக்கு இருபுறமும் வாழும் தமிழர்களின் கழுத்துக்களில் வைக்கப்படும் கத்தி என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

நாராயண் சுவாமி கட்டுரையை முடிக்கும் விதம் மிக மிக முட்டாள்த் தனமானது.
If attacking innocent Sri Lankans or asking their military officers to go home is right because of what happened in the war, then India should be ready to face similar music when its military officers go abroad. After all, have there been no rights violations in places like Kashmir? இலங்கைப்ப் போரில் நடந்தமைக்காக இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்புவதும் தமிழ்நாட்டில் அப்பாவி இலங்கையரைத்(சிங்களவரைத்) தாக்குவதும் சரி என்றால் இந்தியா இதே மாதிரியான நடவடிக்கைகளை தனக்கு எதிராக தனது படையினர் வெளிநாடுகளிற்கு செல்லும் போது அவர்கள் கஷ்மீரில் செய்பவற்றிற்காக எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இங்கு நாராயண் சொல்வது:
1. இலங்கையில் சிங்களவர் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளையும் மனித உரிமை மீறல்களையும் இந்தியா கஷ்மீரில் புரிகிறது,
2. கேடு கெட்ட சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் செயற்படுகிறது.
3. இலங்கைப் படையினரும் சிங்களப்படையினரும் ஒரே இனக்கொலையைச் செய்கிறார்கள்.

கஷ்மீரில் உரிமைகள் மீறப்படவில்லையா? என்ற கேள்வியே நாராயண் சுவாமியின் இறுதி வரி. ஹலோ சீனா... ஹலோ பாக்கிஸ்த்தான்...... அடுத்த ஜெனிவா மனித உரிமைக்கழகத் தொடரில் இந்தியாவிற்கு எதிராக ஒரு முன்மொழிவைச் செய்யுங்களய்யா

Tuesday 2 July 2013

சிரியா சவுதி அரேபியாவும் ஈரானும் மோதும் களமாக மாறுமா?

இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் ஆப்கானில் தலிபான் போராளிகளுக்கும் அவசியம் தேவைப்பட்டதும் இன்று  சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதும் தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles) ஆகும். இவை அவர்களின் கைகளுக்குக் கிடைக்காமல் இருக்க ஐக்கிய அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

என்ன இந்த சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள்?
இவற்றை Man-portable air-defense systems (MANPADS or MPADS) என அழைப்பர். இவை நிலத்தில் இருந்து வானை நோக்கி ஏவப்பவும் ஏவுகணைகள் surface-to-air missiles (SAMs) ஆகும். 25இற்கு மேற்பட்ட நாடுகள் இவற்றை உற்பத்தி செய்கின்றன. இவற்றின் விற்பனையும் விநியோகமும் கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இவை பிழையானவர்களின் கைகளிற்குப் போனால் பொதுமக்கள் போக்கு வரத்துச் செய்யும் விமானங்களுக்கு ஆபத்து என்பதால் இந்தக் கட்டுப்பாடு எனச் சொல்லப்படுகிறது. இவை பொதுவாக 180 செண்டி மீட்டர் நீளமும் 18கிலோ எடையும் கொண்டவை. அகச்சிவப்பு (Infra red) தொழில் நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் ஏவப்பட்டவுடன் சூடு இருக்கும் இடத்தை தேடிச் செல்லும். விண்ணில் பறக்கும் போர் விமானங்களின் பொறிகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை இவை நாடிச்சென்று தாக்கி வெடிக்கும். இதனால் விமானம் விழுத்தப்படும். இதைத் தவிர்க்க போர் விமானங்கள் பெருமளவு தீச் சுவாலையைக் கக்கிய படி பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இந்த MANPADS ஏவுகணைகள் விமானத்தை நாடிச் செல்வதை தவிர்க்கலாம். ஆரம்பத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை  Redeye என்றும் சோவியத்தில் தாயரிக்கப்பட்டவை SA-7 என்றும் சீனாவில் தயாரிக்கப்படவை HN-5 என்றும் அழைக்கப்பட்டன. இவை முதலாவது தலைமுறை ஏவுகணைகளாகும். மூன்றாவது தலைமுறை பாவனைக்கு வந்துவிட்டது. அமெரிக்கா இப்போது நான்காவது தலைமுறை MANPADS ஏவுகனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க MANPADS ஏவுகணைகள் இப்போது Stingers எனப் பெயரிடப்பட்டுள்ளது:




 ஏற்கனவே துருக்கி சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு இரகசியமாக சில
Stinger ரக MANPADS ஏவுகணைகளை வழங்கியிருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.


சியா சுனி மோதல்
 சவுதி அரேபியா, காட்டார்,  போன்ற சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கு என்ன விதமான படைக்கலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகிறது. வலிமை மிக்க படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளில் போவதையோ அவர்கள் அவற்றை இயக்கும் வல்லமை பெறுவதையோ ஐக்கிய அமெரிக்கா விரும்பவில்லை.  60 விழுக்காட்டிற்கு அதிகம் சுனி இசுலாமியர்களைக் கொண்ட சிரியாவில் சிறுபான்மையினரான அலவைற் இனக்குழுமத்தினர் பஷார் அல் அசாத் தலைமையில் ஆட்சி புரிகின்றனர். அலவைற் இனக்குழுமம் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினராகும். சியா முசுலிம் நாடான ஈரான் அல் அசாத் தலைமையிலான ஆட்சிக்கு படைக்கல உதவிகளையும் ஆளணி உதவிகளையும் செய்து வருகின்றது. ஈரானின் ஆதரவின் கீழ் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா சியா இசுலாமியப் போராளிகள் சிரியாவில் அசாத்திற்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்.

பேரிழப்பு
பிரித்தானியாவில் இருந்து செயற்படும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு சிரியப்போரில் இதுவரை 100,000இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்கின்றது. இதில் பெரும்பான்மையினர் களமுனையில் போராடுபவர்கள். இதில் 43,000பேர் அரசுக்காகப் போராடியவர்கள். 169 ஹிஸ்புல்லாப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 36,000பேர் பொதுமக்கள்,18,000பேர் அரசுக்கு எதிரான போராளிகள். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

சவுதி காட்டார் முரண்பாடு
சவுதி அரேபியாவிலும் காட்டாரிலும் சுனி முசுலிம் மன்னர்கள் ஆட்சியில் இருந்தாலும் சவுதி மன்னர் குடும்பம் கட்டார் மன்னர் குடும்பம் தம்மிலும் பார்க்க தாழ்ந்த நிலையைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகிறது. இதனால் அந்த இருதரப்பினர்களிடையும் ஒற்றுமை இல்லை. இதுவரைகாலமும் காட்டார் நாடே சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு அதிக உதவிகளைச் செய்து வந்தது. ஆனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை நேரடியாகச் சந்திக்க சவுதி ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர். மே மாதம் முற்பகுதியில் சவுதி வெளிநாட்டமைச்சர் அவுத் அல் ஃபைசல் சிரியாவில் அல் அசாத்திற்கு எதிராகப் போராடிவரும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பிரதித் தலைவர் மஹ்மூட்ஃபரூக் டேரூக்கை (Mahmoud Farouq Tayfour) நேரடியாகச் சந்தித்தார். இச்சந்திப்பில் சிரிய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்திய சகோதரத்துவ அமைப்பைப் போல் அல்ல என சவுதி ஆட்சியாளர்களுக்கு உறுதி வழங்கப்பட்டது. அத்துடன் காட்டாரின் செயற்பாடுகள் குறித்து இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அதிருப்தியும் சவுதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை காட்டாரிலும் பார்க்க சவுதி அரேபியா கையாள்வதையே விரும்புகிறது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பின்னடைவைச் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் நிலைப்பாடு சற்று மாற்றம் அடைந்தது. இதனால் மே 2013இல் இருந்து சவுதி அரேபியா சிரியக் கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய ஆதரவாளராக உருவெடுத்தது. இப்போது சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்(anti-tank missiles) வழங்குவதை அமெரிக்கா ஆட்சேபிக்கவில்லை. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு கிடைக்கும் படைக்கலன்களை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ மேற்பார்வை செய்வதாகவும் ஐக்கிய அமெரிக்காவும் சவுதியும் இணங்கிக் கொண்டன. 


திசைமாறிய அரபு வசந்தம்
2011இல் தொடங்கிய அரபு வசந்தம் என்னும் மத்தியதர வர்க்க மக்களின் புரட்சி ஈரான்-சவுதி பிராந்திய ஆதிக்கப்போட்டியாலும் மதவாதத்தாலும் திசை திருப்பப்பட்டுவிட்டது. 2011இல் சியா முசுலிம்கள் ஆளும் சுனி முசுலிம்களுக்கு எதிராக ஈரானின் உதவியுடன் செய்த கிளர்ச்சியை சவுதி அரேபியா தனது படைகளை அனுப்பி அடக்கியது.
 
சவுதியின் வித்தியாசமான அணுகு முறை
 

 சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சி தனக்கு சாதகமான நிலையை மத்தியகிழக்கில் தோற்றுவித்து விடும் என்பதை ஈரான் நன்குணர்ந்துள்ளது. சவுதி அரேபியா சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் குர்திஷ் மக்கள் உட்பட மற்ற சிறுபான்மை இனக் குழுமங்களையும் தம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது. அமெரிக்க அரசத்துறைச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்த சவுதி வெளிநாட்டமைச்சர் அவுத் அல் ஃபைசல் சிரியா தொடர்பாக அறிக்கை விடும் போது சிரியாவிற்கும் ஈரானிற்கும் எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். சிரிய ஆட்சியாளர்கள் இனக்கொலை புரிவதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தேவையான படைக்கலன்களை வழங்க வேண்டும் என சவுதி வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். ஈரான் தனது செல்வாக்கை மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் பெருக்க முயல்கிறது. தனது படைக்கலன்களை புதியதாக்கிக் கொண்டிருக்கும் ஈரான் பல இசுலாமியத்

சிஐஏயின் ஒருங்கிணைப்புடன் அனுப்பும் படைக்கலன்கள்

சிஐஏயின் ஒருங்கிணைப்புடன் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் சவுதி அரேபியா ஊடாகவும் ஜோர்தானுடாகவும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை வழங்கவுள்ளன. கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரியக் கிளர்ச்சிக்காரப் போராளிகளுக்கு தோளில் செலுத்தக் கூடிய சூடு தேடிச் செல்லும் ஏவுகணைகள் (heat-seeking shoulder-fired missiles) வழங்கப்படவிருக்கிறது. புதிதாகக் கிடைக்கப் பெறும் படைக்கலன்களுடன் உரிய பயிற்ச்சி பெற்று சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் களமுனையை தமக்கு சாதகமானதாக மாற்ற இன்னும் ஆறு மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நகர்வுகளை உணர்ந்து கொண்ட இரசியா சிரியாவில் இருந்து தனது கடற்படைத்தளத்தை திடீரென விலக்கிக் கொண்டது. இரசியாவின் இந்த முடிவு எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியதுடன் சிரியப் போரில் நிலைமை மாறப்போகிறது என்பதையும் எதிர்வு கூறுகிறது.
 

சவுதி அரேபியா தலைமையில் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெறுவதை ஈரான் எப்படி எதிர் கொள்ளப் போகிறது? ஈரான் ஹிஸ்புல்லாப் போராளிகளை சிரியாவில் இருந்து விலக்கப்போவதாக ஈரானிய வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார். சிரியாவில் ஒரு பேச்சு வார்த்தை மூலமான தீர்வு ஏற்படுத்துவதற்கு இது ஏதுவாகும் என்றார் அவர். ஜூன் மாத நடுப்பகுதியில் சிரிவாவிற்கு 4000படை வீரர்களை அனுப்புவதாகக் கூறிய ஈரான் ஜூன் மாத இறுதியில் ஏற்கனவே அங்குள்ள ஹிஸ்புல்லாவையும் விலக்குவதாகக் கூறியது சற்று ஆச்சரியம்தான. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து செயற்படும் அல் கெய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய இயக்கமான ஜபத் அல் நஸ்ராவின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகிறது?

Monday 1 July 2013

ஐரோப்பாவை ஜேர்மனி புதியவிதமகாக் கைப்பற்றுகிறதா?

ஐநூறு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பும் சந்தையுமான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முன்னணி நாடு ஜேர்மனியாகும். பெரும் பொருளாதாரச் சரிவை எதிர் கொண்ட இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கு ஜேர்மனி கைகொடுத்து உதவியது. யூரோ நாணயம் இல்லாமல் போவதில் இருந்து பாதுகாக்க ஜேர்மனி பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக ஜேர்மனி எதை எதிர்பார்க்கிறது?

உலகின் இரு பெரும் போரை ஆரம்பித்தது ஜேர்மனி. ஐரோப்பாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஜேர்மனி இரண்டு தடவை எடுத்த முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேர்மானிய சமூகவியலாளர் உல்ரிச் பெக் (Ulrich Beck) தனது புத்தகத்தில் ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்கம் இப்போது போரில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என வாதிடுகிறார்.

கடன் பளுவுக்குள் சிக்கிய தென் ஐரோப்பிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி அங்கு தனது நிபந்தனைகளைப் புகுத்தி வருகிறது ஜேர்மனி. தமது அரசுகளின் சிக்கன நடவடிக்கையால் பாதிப்பப்பட்ட பல மில்லியன் ஐரோப்பியர்கள் தமது வாழ்கை முறைமை பெர்லின் (ஜேர்மன் தலைநகர்) இருந்தும் பிரஸ்ஸல்ஸில் (ஐரோப்பிய ஒன்றியத் தலைநகர்) இருந்தும் எடுக்கப்படும் தீர்மானங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகின்றனர். தமது வாழ்வாதாரத்தை ஜேர்மனி பறித்து விட்டது என்கின்றனர்.ஜேர்மானிய இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் அதிபர் அஞ்சேலா மெர்க்கெல் ஜேர்மனியச் சிந்தனைகளை பொருளாதார வலுவிழந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகுத்தி வருவதாக சமுகவியலாளர் உல்ரிச் பெக் கருதுகிறார். மேலும் அவர் அஞ்செலா மெர்கெல்  ஐரோப்பாவின் ஒரு முடிசூடா ராணியாக மாறிவருகிறார் என்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியும் இணைந்த போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியது. கடுமையான சிக்கன நடவடிக்கையின் பின்னர் ஜேர்மனி முதல்தர ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது. ஜேர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளை உலகச் சந்தையில் போட்டியிடக்கூடிய நாடுகளாகவும் உற்பத்தித் துறையில் வளர்முக நாடுகளுக்கு ஈடானவையாகவும் மாற்ற உதவி செய்கின்றது என்கின்றனர் ஜேர்மன் ஆட்சியாளர்கள். ஜேர்மனியர்களைப் பொறுத்தவரை "கடின உழைப்புக்கு மாற்று வழி இல்லை; வரிசெலுத்துவது எம் கடமை". ஜேர்மனை தனது மக்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்கிறது. எமது பயிற்றுவிக்கும் முறைமை வேலைக்கு ஆட்களை அமர்த்துவோர்க்கு உகந்ததாக இருக்கிறது என ஜேர்மனியர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். சில ஜேர்மனியர்கள் கிரேக்கர்கள் போன்ற ஐரோப்பாவின் சோம்பேற்களுக்கு ஜேர்மனியப் பண்ம் வீணாகிறது என்கின்றனர். கிரேக்கம், சைப்பிரஸ் போன்ற நாடுகளுக்கு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க ஜேர்மனின் நிர்ப்பந்தித்தது. அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் சிரமத்தை ஜேர்மனியர்கள் "துயரம் அனுபவித்தல் தூய்மையாக்கிறது" என்கின்றனர்.

கவலைப்படாத பிரித்தானியாவும் ஆத்திரப்படும் இரசியாவும்
ஐரோப்பாவில் ஜேர்மனியன் ஆதிக்கம் வளர்ந்து வருவதையிட்டு பிரித்தானியா பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பாதி-இணைப்பு நிலையைப் பேணிக்கொண்டு தனது தனித்துவத்தையும் தனது நாணயமான ஸ்ரேலிங் பவுண்டையும் பாதுகாத்துக் கொண்டு இருக்க பிரித்தானியா விரும்புகிறது. ஜேர்மனி மீண்டும் படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாறி பிரித்தானியா போல் தன்னுடன் ஒரு பங்காளியாக இணைவதை ஐக்கிய அமெரிக்கா விரும்புகிறது. ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்க வளர்ச்சியால் அதிக ஆத்திரமடையும் நாடாக இரசியா இருக்கிறது. 1991இல் நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் முன்பு போல் ஒரு உலக ஆதிக்க நாடாக மாற இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கிறது. தனது சோவித் ஒன்றிய நாடுகளும் முன்னாள் நட்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருவது இரசியாவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது. ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான எல்லைக் கோடு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போல்ரிக் நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்த போது முந்தி விழுந்து அவற்றை அங்கீகரித்தது ஜேர்மனி. அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குரிய உகந்த பொருளாதார சூழ் நிலையை அந்த நாடுகளில் உருவாக்க ஜேர்மனி பெரிதும் உதவியது. 1994இல் இரசியப் படைகள் போல்ரிக் நாடுகளில் இருந்து வெளியேறுவதற்கும் ஜேர்மனி உதவியது. போல்ரிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தவுடன் இரசியா அந்த நாடுகளுக்கு தான் விற்பனை செய்யும் எரிவாயுக்களின் விலைகளைக் கண்டபடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாடுகளில் மாற்று எரிவள உபயோகங்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களைச் செய்தது.

இரண்டு பெரிய போர்களின் பின்னர் தமது எல்லைகளை தீர்மானித்துக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை ஜேர்மனி தனது பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒன்றுபட்ட இணைப்பாட்சி நாடாக்கி அழிக்க முயலாமல் பார்த்துக் கொள்ளும் அறிவும் அனுபவமும் மேற்கு ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது. ஜேர்மனிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பல நாடுகளைப் பொறுத்தவரை தற்காலிகமானதே. இதை நன்கு உணர்ந்து செயற்படும் நாடு பிரான்ஸ் ஆகும். போல்ரிக் நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஒன்றாகுவது இரசியாவை ஆத்திரப்படுத்தி இன்னும் ஒரு பெரும் போருக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கும் ஜேர்மனிக்கும் இருக்கிறது.

Sunday 30 June 2013

ராஜபக்சவிற்குப் பிரச்சனையான தன்னினச் சேர்க்கைத் தூதுவர்.

கொழும்பிற்கான நோர்வேத் தூதுவராக இருப்பவர் ஒரு பெண்மணி. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் தூதுவர் தனது வாழ்க்கைத் துணையைக் கொழும்புக்க அழைக்க இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது மஹிந்த ராஜபகசவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என lankanewsweb என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக் குடியரசுத் தலைவரின் உறைவிடமான அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த சிங்கள பௌத்த இனவாத அமைப்பான பொது பல சேனா நோர்வேத் தூதுவரின் திருமணத்தையும் அவர் தனது பெண் வாழ்க்கைத் துணையை இலங்கைக்கு அழைப்பது பற்றியும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

நோர்வேயில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இலங்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. 1964-ம் ஆண்டு 60 நாடுகள் வியன்னா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட போது தன்னினத் திருமணம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து முதல் முதலாக ஆண் ஆணையோ அல்லது பெண் பெண்ணையோ திருமணம் செய்ய அனுமதித்தது. கடைசியாக பிரன்ஸ் இதை அனுமதித்தது. கனடா, சுவீடன், ஐஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவில் சில மாநில அரசுகளும் தன்னினத் திருமணத்தை அனுமதித்துள்ளன. ஆனால் இது இரு நாடுகளுக்கிடையிலான அரசதந்திரப் பிரச்சனையாக இலங்கையில் உருவெடுத்துள்ளது. வியன்னா உடன்படிக்கையின் 9வது பந்தியின்படி ஒரு நாட்டு அரசு தனது நாட்டுக்கு இன்னும் ஒரு நாடு அனுப்பிய தூதுவரை வரவேற்கப்படாத ஆள் (persona non grata) என்று சொல்லி அவரைத் திருப்பி அழைக்கும் படி அந்தத் தூதுவரை அனுப்பிய நாட்டைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் வியன்னா உடன்படிக்கையில் 22 பந்தியின் படி ஒரு நாட்டுக்குள் இருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் இல்லத்திற்கும் அந்த வெளிநாட்டுச் சட்டம்தான் செல்லுபடியாகும். அதற்கும் நடக்கும் குற்றத்தை அந்த நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு அரசுதான் கையாள முடியும். நோர்வேத் தூதுவர் தனது துணைவியுடன் தூதுவர் இல்லத்திற்குள் வாழ்கை நடாத்தினால் அதை இலங்கை சட்டப்படி செல்லுபடியற்றது என்று சொல்ல முடியாது. நோர்வேத் தூதுவர் தனது வாழ்கைத் துணையை தனத் வேலைக்காரி எனக் கூறி இலங்கைக்கு அழைத்தால் இலங்கை அரசு அனுமதி வழங்கியே ஆக வேண்டும். நோர்வேத் தூதுவரை மஹிந்த ராஜபக்ச அரசு வெளியேற்றினால் உலகெங்கும் உள்ள தன்னினச் சேர்க்கையாளர்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டி வரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...