Saturday 4 May 2013

சிரியாமீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்

02-05-2013 வியாழன் இரவு இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தின. லெபனானில் இருந்து வரும் தகவல்களின் படி இஸ்ரேலிய விமானங்கள் லெபனானிற்கு ஊடாக நான்கு மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபட்டிருந்தன.சிரியப் படைக்கலன் கிடங்குகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடாத்தின.

2013ஜனவரி மாதம் இஸ்ரேலியப் விமாங்கள் சிரியாவின் தரையில் இருந்து விண்ணுக்கு ஏவும் விமான எதிர்ப்பு SA-17 ஏவுகணைகள் கொண்ட படைக்கலன் கிடங்குகள் மீது தாக்குதல் நடாத்தி அழித்தன.2007-ம் ஆண்டு இஸ்ரேலிய விமானங்கள் சிரிய அணு ஆராய்ச்சி நிலையத்தின் மீது தாக்குதல்கல் நடாத்தின.

02-05-2013 நடந்த தாக்குதல்கல் பற்றி இஸ்ரேலோ சிரியாவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை. தாக்குதல்கள் பற்றி சிரியக் கிளர்ச்சிக்கார இயக்கங்களில் ஒன்றான சிரிய விடுதலைப்படையே இத்தாக்குதல் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியக் கிளர்ச்சி தொடங்கியவுடன் நேட்டோப் படையினரின் தாக்குதலில் இருந்து சிரியாவைப் பாதுகாக்க இரசியா தனது சிறந்த விமான எதிர்ப்பு முறைமையை சிரியாவில் இரசியா நிறுவியதுடன் தனது படை நிபுணர்களையும் அங்கு சேவையில் ஈடுபடுத்தி இருந்தது. இவற்றின் மத்தியில் இஸ்ரேலிய விமானப் படையினர் தமது தாக்குதலை எந்த வித இழப்பும் இன்றிச் செய்து முடித்துள்ளனர்.

லெபனானில் ஈரானின் ஆதரவுடன் செயற்படும் விடுதலை இயக்கமான  ஹிஸ்புல்லா சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுடன் இணைந்து அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட்டுகின்றனர். சிரியப் படையினர் வசம் அமெரிக்கா, இரசியா போன்ற நாடுகளிடம் வாங்கிய புதிய ரக படைக்கலன்கள் பல இருக்கின்றன. அத்துடன் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் படைக்கலங்களும் இருக்கின்றன. இவை எந்த ஓர் இசுலாமியப் போராளி இயக்கத்தின் கைகளுக்கும் போய் விடக் கூடாது என்பதில் இஸ்ரேலும், வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. லெபனானை இஸ்ரேல் அடக்கி வைத்திருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது அதன் விமானப்படையின் மேலாதிக்கமே. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா போராளி இயக்கத்தினரிடம் சிரியாவின் புதிய ரக விமான எதிர்ப்புப் ஏவுகணைகள் போனால் அது இஸ்ரேலுக்குப் பெரும் பாதகமாக அமையும். எந்த ஒரு இசுலாமியப் போராளி இயக்கத்தினரின் கைகளில் வேதியியல் படைக்கலன்கள் போனால் அது இஸ்ரேலுக்கும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் நீண்ட நாள் உறவு உண்டு. சிரியாவின் ஊடாகவே ஈரான் ஹிஸ்புல்லா இயக்கதிற்கு படைக்கலங்களை அனுப்புகிறது. 2011 பெப்ரவரி அசாத்திற்கு எதிராக சிரிய மக்கள் கிளர்ந்து எழுந்த போது ஹிஸ்புல்லா நடுநிலை வகித்தது. பின்னர் இரானின் வற்புறுத்தலின் பேரில் அசாத்துடன் இணைந்து கொண்டது.

இனிவரும் நாட்களில் 70,000 மேல் பட்ட மக்களைப் பலிகொண்ட சிரிய உள்நாட்டுப் போரில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலங்கள் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்கிறது. சிரியா வேதியியல் படைக்கலங்கள் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெல் பிரித்தானியப் பாதுகாப்புத் துறையினருடன் சிரியா தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார். ஆனால் நேட்டோ கூட்டமைப்பு நாட்டு மக்கள் மத்தியில் சிரியப் போரில் நேரடியான ஈடுபாட்டிற்கு எதிர்ப்பு நிலவுகிறது.

Friday 3 May 2013

குவாண்டனாமோ: முடப்படுமா அமெரிக்க சித்திரவதைக் கூடம்?


இலங்கையின்  "நான்காம் மாடி"யிலும் பார்க்க பல மடங்கு கொடூரமான சித்திரவதைக் கூடம் ஐக்கிய அமெரிக்க அரசு கியூபாவின் குவாண்டனாமோவில் வைத்திருக்கும் சிறைக்கூடம். இது அமெரிக்க மனித உரிமைச் சட்டங்களுக்கு அப்பால் வைத்து சித்திரவதை செய்ய ஜோர் புஷ் ஆட்சி செய்த சதி.

உலகிலேயே அதிகமாகச் செலவழித்துப் பராமரிக்கப்படும் குவாண்டனாமோ சிறையில் செய்த நீர்ப்பலகைச் (water boarding) சித்திரவதை மூலமாகவே பின் லாடனின் மிக இரகசியமான தகவற் தொடர்பாளர் பற்றிய சிறு துப்பு அமெரிக்க அரசுக்குக் கிடைத்தது. அதை வைத்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் பின் லாடன் இருப்பிடம் அறியப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்ற இரண்டாம் நாள் சொல்லியது:  "Guantanamo is not necessary to keep America safe. It is expensive. It is inefficient.... It needs to be closed.". அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு குவாண்டனாமோ தேவையற்றது. இது செலவுமிக்கது. இது திறனற்றது. இது மூடப்பட வேண்டியது. ஒபாமா ஒரு ஆண்டுக்குள் இதை மூடுவதாகச் சொல்லி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.

குவாண்டனாமோ சிறைச்சாலைக் கைதிகள் வேறு வேறு நாடுகளில் இருந்து அந்த நாட்டு நீதித் துறைக்குத் தெரியாமல் கடத்தி வரப்பட்டவர்கள். மத்திய கிழக்கில் அமெரிக்க உளவுத் துறையால் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானமூலம் குவாண்டனோமிற்கு கடத்தப்பட்டார்கள். தற்போது அங்கு இருக்கும் நூறு கைதிகள் இறக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடாத்துகிறார்கள். இது கடந்த மூன்று மாதங்களாக நடைபெறுகிறாது. அவர்களில் 21 பேர் கதிரைகளில் கட்டி வைக்கப்பட்டு மூக்கினூடாகத் திணிக்கப்பட்ட குழாய்கள் மூலம் திரவ உணவு ஊட்டப்படுகிறார்கள். இக்கதிரைகளில் உணவு சமிபாடு அடைவதற்காக இரண்டு மணித்தியாலங்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பர். இவை மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்.

குவாண்டானாமோ சிறைகளை தான் மூடுவதற்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு சபைகளில் ஒன்றான மக்களவை  (காங்கிரசு) தடையாக இருப்பதாக பராக் ஒபாமா குற்றம் சாட்டுகிறார். பராக் ஒபாமா மக்களாட்சி கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்க மக்களவை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 2011இலும் 2012இலும் அமெரிக்க மக்களவை குவாண்டமானோ சிறையை மூடுவதற்கு எதிராக பல சட்டங்களை இயற்றியது. விடுவிக்கப்படும் கைதிகள் செல்லும் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என அந்த நாட்டு அரசின் உறுதிமொழி வாங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மக்களவை உருவாக்கியது. ஏற்கனவே குவாண்டனாமோவில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர் என்கிறது அமெரிக்க மக்களவை. அமெரிக்க உளவுத் தகவல்களின் படி ஏற்கனவே விடுவித்த 600 பேரில் 12 விழுக்காட்டினர் மீண்டும் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 விழுக்காட்டினர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த விழுக்காடு அமெரிக்காவில் குற்றச் செயலில் ஈடுபடுவோரின் விழுக்காடான 60இலும் பார்க்கக் குறைவானது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

யேமன் நாடு குவாண்டமானோ சிறையில் இருக்கும் கைதிகளை தம்மிடம் ஒப்படைத்தால் தான் அவர்களை புனர்வாழ்வு முகாமில் வைத்து பாராமரிப்பதாக அமெரிக்காவிற்கு உறுதி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் கைதிகள் காலவரையின்றி சிறைவைக்கப்பட வேண்டியவர்கள் என அமெரிக்க அரசு கருதுகிறது. அவர்களை ஓரு நீதிமன்றில் நிறுத்தி தண்டனை கொடுக்க போதிய ஆதாரம் இல்லை. ஆனால் அவர்கள் வெளியில் விடப்பட்டால் அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தீவிரவாத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவாரகள் என அமெரிக்க அரசு அஞ்சுகிறது.

சிறைக்கைதிகளை உணவு உண்ண நிர்ப்பந்திப்பது அவர்களை மனிதாபிமான முறையில் நடாத்துவதாகும் என உலக மருத்துவர்கள் சபை ஏற்கனவே தீர்மானித்துள்ளது. சுயமாகச் சிந்திக்கும் தகமையுள்ள ஒரு சிறைக்கைதிக்கு உணவை மறுக்கும் உரிமை இருக்கிறது. குவாண்டமானோக் கைதிகளுக்கான சட்டவாளர் ஒருவர் கைதிகளின் மூக்கினூடாக தேவையற்ற அளவு பெரிய குழாய்கள் (BigMac உள்ளுக்குள் தள்ளியிருப்பாங்களோ?அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டுள்ளது என்கிறார். சில சிறைக் கைதிகள் தங்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் என்றுமே அனுபவித்திராத வலியை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

பராக் ஒபாமா குவாண்டமானோச் சிறைசாலையை மூடப் போவதாக மீண்டும் அறிவித்துள்ளார். அது முழுமையாகச் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. நவநீதம் பிள்ளை உட்படப் பல ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் இந்தச் சிறைச்சாலையை மூடும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவிற்கு எதிரான போராளிகளைக் கைது செய்து கொண்டுவந்து குவாண்டமானோவில் அடைப்பதை ஒபாமா நிறுத்தி விட்டார். நல்ல எண்ணத்துடன் அல்ல. அது மனித உரிமைப்பிரச்சனையை கொண்டு வரும் என்பதால் ஆளில்லா விமானங்களை அனுப்பி அகப்பட்டவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுகிறார். இதுவரை 4700பேர் போட்டுத் தள்ளப்பட்டு விட்டனர்.

மனித உரிமைகளைப் பொறுத்த வரை அமெரிக்கா உலகிற்கு சொல்வது இதுதான்:
  • நாம் சொல்பவற்றைச் செய்யுங்கள். நாம் செய்வதைப்பற்றி கருத்துத் தெரிவிக்காதீர்கள்
இரசிய ஊடகம் ஒன்றில் குவாண்டமானோ சித்திரவதை பற்றிய செய்திக்குப் பின்னூட்டமிட்ட பெயர் குறிப்பிடாத ஒருவர். இன்று அமெரிக்கா எப்படி நடத்துகிறது என்பது நாளை நாம் அமெரிக்காவை எப்படி நடத்துவோம் என்பதைத் தீர்மானிக்கும் என்றார்.

Thursday 2 May 2013

விஞ்ஞான ஆய்வு: பிகரைக் கரெக்ட் பண்ண சிறந்த தகமை

பிரித்தானியாவில் உள்ள University of Stirling ஐச் சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர்Mary Cowanஉம் இன்னொரு ஆய்வாளர் Anthony Littleஉம் இணைந்து பெண்களைக் கவர்வதற்கு சிறந்த வழி என்பது பற்றி ஒரு ஆய்வு செய்து தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் ஆய்வு pick up & drop, ஓரிரவு மட்டுமான உறவு போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருந்தது.

மனோதத்துவ மாணவர்களான இருபது பெண்களும் இருபது ஆண்களும் கொண்ட குழுவினரிடம் ஒரு தனியான ஒரு தீவிற்கு காதலருடன் செல்லும் போது எடுத்து செல்ல வேண்டிய இரு பொருட்களைப் பற்றித் தனித்தனியாக வினவப்பட்டது. பின்னர் இந்தப் பதில்களில் நகைச்சுவையாகப் பதிலளித்தவர்களின் ஒலிப்பதிவுகளை மற்றவர்களைக் கேட்க வைக்கபப்ட்டது. அதில் உள்ளவர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் என்பது பற்றி விருப்பத் தெரிவு அடிப்படையில் தரப்படுத்தும்படி கேட்கப்பட்டது. பின்னர் அவர்களின் படமும் அவர்களிடம் காட்டப்பட்டது.

இது தொடர்பாக மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு சிறந்த நகைச்சுவையாளர்கள் குறுகிய கால உறவுக்கும் நீண்ட கால உறவுக்கும் அதிக கவர்ச்சிகரமானவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

Tuesday 30 April 2013

படைத்துறைச் செலவுக் குறைப்பும் ஆளில்லாப் போர் விமானங்களும்

உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன.  தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்லப் பிள்ளைகளாக ஆளில்லாப் போர் விமானங்கள் திகழ்கின்றன. ஆளில்லாப் போர்விமானங்கள் சிறு பூச்சியின் அளவில் இருந்து பெரிய விமானத்தின் அளவு வரை பல தரப்படும். பிரித்தானியவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை பெருமளவு அதிகரிக்கின்றது.


பெரிய ஆளில்லா விமானங்கள்
Global Hawk எனப்படும் ஆளில்லா விமானங்கள் அளவின் பெரியவனவையாகும். அமெரிக்காவின் Grumman RQ-4 விமானங்கள் Global Hawk வகையைச் சேர்ந்தவை. இவை 65,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியவை. அத்துடன் தொடர்ந்து 35 மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபடக் கூடியவை. இவற்றின் வேகம் 340 நொட் வரை இருக்கும்.  மிக உயர்ந்த தர உணரிகளை இந்த விமானங்கள் கொண்டுள்ளன. மிகச்சிறிய ஆளில்லா விமானங்கள் காகம் (Raven) எனப்படும். இலங்கை அரசு பாவித்த சிறிய ஆளில்லா விமானத்தை தமிழர்கள் சில் வண்டு என அழைத்தனர்.  லிபியப் போராளிகளுக்கு கடாஃபிக்கு எதிரான போரின் போது Aeryon Scout என்னும் மூன்று இறாத்தல் எடையுள்ள விமானங்களை நேட்டோப் படையினர் வழங்கியிருந்தனர். இவை மூலைகளில் ஒழிந்திருக்கும் எதிரிப்படைகளை கண்டறியப் பாவிக்கப்பட்டன. பல புதிய ஆளில்லா விமானங்கள் எதிரியின் நிலப்பரப்பில் விழுந்தால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடியவை.



பிரித்தானியா வேறு பெயர் சொல்கிறது.
பிரித்தானியா தாக்குதல் ஆளில்லாப் போர் விமானத்தை பாவிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் 27-04-2013-ம் திகதி வரிங்டனில் இடம்பெற்றது. அமெரிக்கா கண்டனத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலகளை ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் மேற் கொண்டது. இதில் அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். முக்கிய இசுலாமியப் போராளித் தலைவர்களை அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களினூடாக தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு பெருமளவு கட்டுப்படுத்தியது. Drone என்று பொதுவாக அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS) என்று பெயர் சூட்ட விரும்புகிறது. இது முதல் தடவை அல்ல பிரித்தானியாவில் பிஸ்கட் என்றால் அமெரிக்காவில் குக்கீஸ் என்பார்கள். பிரித்தானியாவில் சுவீட்ஸ் என்றால் அமெரிக்காவில் கண்டி என்பார்கள். இப்படிப் பல நூற்றுக்கணக்கான சொற்பேதம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் இருக்கின்றன.

பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்கள்
பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance (புலங்காணல்),  நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat) தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப் புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது.



சட்டத்திற்குப் புறம்பான கொலையாளியா? எல்லை தாண்டிய பயங்கரவாதமா?
யேமனில் ஒரு இசுலாமியத் தீவிரவாதியின் இருப்பிடம் அறிந்தவுடன் அந்த நாட்டுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி அமெரிக்காவினதோ அல்லது பிரித்தானியாவினதோ ஆளில்லா விமானங்கள் புகுந்து அவரைக் கொன்றுவிடும். ஆப்கானிஸ்தானில் ஒரு வீட்டில் ஒரு இசுலாமியப் போராளி தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது இருக்கும் இடத்தை கைக்கூலி உளவாளிகள் மூலம் அறிந்த அமெரிக்க படையினர் தமது தளத்தில் இருந்து சிறு பட்டம் போன்ற சில ஆளில்லாப் போர் விமானங்களை அந்த இடத்தை நோக்கி அனுப்புவர். அதில் ஒன்று அவர் இருக்கும் வீட்டின் யன்னலில் மோதி உடைக்க அந்த வழியூடாக அடுத்த விமானம் உள் சென்று அந்தப் போராளியின் மடியில் விழுந்து வெடித்து அவரைக் கொல்லும். இவ்வளவற்றையு ஒரு படைவீரன் கணனி விளையாட்டுப் போலச் செய்து முடிப்பார். இது சட்டபூர்வ விசாரணை இன்றிச் செய்யப்படும் ஒரு கொலை என்கின்றனர் சில மனித உரிமை ஆர்வலர்கள். இன்னும் சிலர் இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்கின்றனர். பாக்கிஸ்த்தானின் வாஜிரிஸ்த்தான் பகுதியில் இரு இனக் குழுமங்கள் தமக்கிடையே ஏற்பட்ட நிலப்பிணக்கை தீர்க்கக் கூட்டிய கூட்டத்தை உளவாளிகள் அல் கெய்தாவின் கூட்டம் எனத் தகவல் கொடுக்க அங்கு சென்று அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றன.



படைத்துறை செலவுக் குறைப்பும் ஆட் குறைப்பும்

பல மேற்கு நாடுகள் தமது படைத் துறைச் செலவுக் குறைப்பையும் ஆளணிக் குறைப்பையும் தமது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கு ஆளில்லாப் போர்விமானங்கள் பெரிதும் உதவுகின்றன. இனி வரும் ஆளில்லாப் போர் விமானங்கள் உருவத்தில் பல அளவுகள் உடையதாகவும் பல மோசமான தாக்குதல்களைச் செய்யக் கூடியவையாக இருக்கும்.  சீனாவும் பலதரப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கி வருகிறது.

பொதுநலவாய உச்சி மாநாடு: நழுவியது இலங்கை!! காப்பாற்றியது யார்???


பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் மாநாடு இலண்டனில் 26-04-2013இலன்று பங்களாதேச வெளிநாட்டமைச்சர் திபுமணி அம்மையார் தலைமையில் நடந்தது. இதில் கனடிய வெளிநாட்டமைச்சர் சேரா லியோன், திரிடாட் அண்ட் டொபகோ ஆகிய நாடுகளின் உதவியுடன் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனையை எழுப்பினார். மாநாடு முடிந்த பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலரும் ராஜீவ் காந்தி குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான  கமலேஸ் ஷர்மா இலங்கையில் உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் என்றார். மனித உரிமைகளைப்பற்றி வினவிய போது இந்த அமைப்பு மற்ற அமைப்புக்களைப் போலல்லாமல் இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பாக ஆலோசனையும் உதவியையும் மட்டுமே வழங்கும் என்றார். ஆனால் கனடிய வெளிநாட்டமைச்சர் இலங்கையில் உச்சி மாநாடு நடப்பதையிட்டு தான் அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இலங்கையில் இருந்து பொதுநலவாய நாடுகளின் அரசத் தலைவர்களின் உச்சி மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதை ஒரு பலமிக்க நாடு எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மானம் கெட்ட நாடு எது? பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கை பற்றிக் கதைக்கவில்லை என்றார் கமலேஸ் ஷர்மா. இலங்கை பற்றியும் உரையாடப்பட்டது என்றார் பங்களாதேசத்தின் திபுமணி. ஊடகவியலாளர் மாநாட்டில் சனல் - 4, கார்டியன் பத்திரிகை ஆகியவற்றில் ஊடகவியலாளர்கள் கமலேஸ் ஷர்மாவை வறுத்தெடுத்தனர். பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்த கனடிய வெளிநாட்டமைச்சர் ஜோன் பெயிர்ட் இலங்கையில் இருந்து மாநாடு வேறு இடத்திற்கு மாற்றப்படுவதைப் பற்றி கலந்துரையாடப்படவில்லையா என்று கேள்வி எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை பங்களாதேசத்தின் திபுமணி அம்மையார் எங்கு உச்சி மாநாடு நடக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்ய முட்யாது. அது அரசத் தலைவர்களின் மாநாட்டிலேயே முடிவு செய்யப்படவேண்டும் என்று சொல்லிச் சமாளித்தார்.

 கமலேஸ் ஷர்மாவின் வட்ட மேசை மாநாடு
இலங்கையைப் பாதுகாப்பதற்காக இந்தியரான கமலேஸ் ஷர்மா 2013 ஜூன் மாதம் ஒரு வட்ட மேசை மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளார். அதில் இலங்கைப் பிரதிநிதி வந்து தமது நாட்டின் மனித உரிமைப் பிரச்சனை தொடர்பாக  விளக்கமளிப்பார்(பொய்களை அள்ளி விளாசுவார்)
 

 என்ன இந்த பொதுநலவாயநாடுகள்
பொதுநலவாய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்ற கருத்து 1884இல் உருவானது. அதற்கான சட்டபூர்வ அங்கீகாரம் 1921இல் செய்யப்பட்ட ஆங்கிலோ - ஐரிஸ் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா 15-08-1947இல் ஒரு குடியரசாக பிரகடனப் பட்ட போது காலனித்துவ ஆட்சியாளர்களை முற்றாக கைவிட ஜவகர்லால் நேரு தயாராக இருந்திருக்கவில்லை. இந்தியா 1950இல் குடியரசாக முன்னர் பிரித்தானியாவின் கீழ் ஒரு பொது அமைப்பாக இந்தியாவையும் இணைக்க விரும்பினார்.  இதனால் புதிய பொதுநலவாய நாடுகளிற்கான பிரகடனம் 1948இல் செய்யப்பட்டது. இலண்டன் பிரகடனம் எனப்படும் பிரகடனத்தை அப்போதைய ஒஸ்ரேலியத் தலைமை அமைச்சர் வரைந்தார். பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடுகள் பொதுநலவாய நாடுகளாக இணைந்தன. பின்னர் முன்னாள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குள் இருந்திருக்காத மொசாம்பிக்கும் ருவண்டாவும் இதில் இணைந்து கொண்டன. தற்போது ஐம்பத்தி நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒரு பன்னாட்டு அரசியல் கூட்டமைப்பு அல்ல. இதன் தற்போதைய தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் ராணி. இந்த அமைப்பிற்கு பதவியில் இருக்கும் தவிசாளர் (Commonwealth Chairperson-in-Office) என்னும் இன்னொரு பதவிவியும் உண்டு. கடந்த பொதுநலவாய அரசத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒஸ்ரேலியாவில் நடந்தது என்ற வகையில் அதன் தலைமை அமைச்சர் ஜுலிய ஜில்லார்ட் தற்போதைய தவிசாளராக இருக்கிறார். எந்த நாட்டில் உச்சி மாநாடு நடக்கிறதோ அந்த நாட்டுத் தலைவர் தவிசாளர் பதவிக்குத் தெரிவு செய்யப்படும் வழமை இருக்கிறது. இந்த உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். தலைமைப் பதவியுடன் 1965-ம் ஆண்டு இலண்டனில் நடந்த பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாட்டில் பொதுநலவாய நாடுகளிற்கு என ஒரு பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. தற்போதைய பொதுச் செயலாளராக கமலேஷ் சர்மா என்பவர் இருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தப் பெயரைப் படித்தவுடன் இவர் ஒரு தமிழின விரோதியாக இருக்க வேண்டும் எனச் சிந்திக்கலாம். போதாக் குறைக்கு இவர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்.  காலத்திற்கு ஏற்ப மாறுதல்கல் செய்து பொதுநலவாய நாடுகள் சபை 22-01-1971இல் செய்த சிங்கப்பூர் பிரகடனத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டுச் செயற்படுகின்றன.  அப்பிரகடனத்தில்:

These relationships we intend to foster and extend, for we believe that our multi-national association can expand human understanding and understanding among nations, assist in the elimination of discrimination based on differences of race, colour or creed, maintain and strengthen personal liberty, contribute to the enrichment of life for all, and provide a powerful influence for peace among nations.

இலங்கைக்குச் சேவை செய்யும் இந்தியா
பிரித்தானிய அரசி முடி சூடி 60வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கமலேஷ் சர்மா ஒரு பொருளாதார மாநாட்டை ஒழுங்கு செய்தார். அந்த மாநாட்டை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தொடக்கி வைக்க கமலேஷ் சர்மா ஏற்பாடு செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சே ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை தமிழர்களின் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் எங்காவது ஓர் இடத்தில் உரையாற்றியே தீருவேன் என்ற மஹிந்தவின் உறுதிமொழியை இந்தியரான கமலேஷ் சர்மா நிறைவேற்ற முயன்றதாகக் கருதப்பட்டது. தமிழர்கள் இதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் மஹிந்த ராஜபக்சே ஆரம்பித்து வைக்க இருந்த மாநாட்டில் "பங்குபற்றுவதற்கு" ஐம்பது தமிழர்கள் பெரும் தொகைப்பணம் செலுத்தி நுழைவுச் சீட்டும் பெற்றிருந்தனர். இவர் மாநாட்டில் எதைத் தூக்கி மஹிந்த மேல் வீசுவார்கள் என்று தெரியாமல் விழித்த கமலேஷ் சர்மா கடைசி நேரத்தில் மாநாட்டின் அரைப்பகுதியை இரத்துச் செய்துவிட்டார்.

பொதுநலவாய நாடுகள் சபை மனித உரிமை விவகாரத்தில் காட்டும் கரிசனை போதாது என்ற குற்றச் சாட்டு நெடுநாளாக இருந்து வருகிறது. மனித உரிமை மீறல்களைக் கையில் எடுத்தால் எல்லா நாடுகளுமே குற்றவாளிகள் தான். 2010 வெளியில் கசிந்த ஓர் இரகசிய அறிக்கையின் படி பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தனது அதிகாரிகளுக்கு மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது தெரிய வந்தது.  பொதுநலவாயா நாடுகளின் குடிமக்களான தமிழர்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதை பொதுநலவாய நாடுகள் கண்டு கொள்ளவில்லை.

உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கு பெறும் பொதுநலவாய மாநாட்டின் அடுத்த உச்சி மாநாடு இலங்கையில் 2013 நவெம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கையின் மனித உரிமை மீறலகளைக் காரணம் காட்டி கனடியப் பிரதமர்  ஸ் ரீபன் ஹார்ப்பர் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டை ஏற்படுத்தாவிடில் தான் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாயநாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து விட்டார்.

ஒஸ்ரேலிய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையில் டீலா நோ டீலா?
இலங்கையில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பி ஓடும் தமிழர்களைத் தனது நாட்டுக்கு வராமல் இலங்கை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஒஸ்ரேலியா கண்டுக்காமல் இருக்கும் என ஒஸ்ரேலியா இலங்கையுடன் ஒரு டீல் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.  ஒஸ்ரேலியாவிற்கு தப்பி ஓடுவதற்கு இலங்கையில் ஒரு தமிழ் குடும்பம் தனது வீட்டையும் காணியையும் விற்று வரும் பணத்தை ஒரு முகவரிடம் கொடுக்கும். ஆனால் அந்தத் தமிழ் குடும்பத்திற்கு தெரியாது தமது காணியை வாங்குவதே அந்த முகவர் கும்பல்தான் என்று. பின்னர் அந்த தமிழ் குடும்பத்தை மேலும் பல குடும்பங்களுடன் சேர்ந்து கப்பல் ஏற்றி ஒஸ்ரேலியாவிற்கு அனுப்பும். பின்னர் அதே முகவர் கொடுக்கும் தகவலை வைத்து இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்துவிடும். இப்படிச் செய்வதால் இலங்கையில் இருந்து ஒஸ்ரேலியாவிற்கு செல்பவர்களைத் தடுக்கலாம். இந்த கைங்கரியத்தைப் புரியும் முகவர்கள் இலங்கையில் மிக முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியப் பிரதமர் மீது அழுத்தங்கள் பலதரப்பில் இருந்தும் பிரயோகிக்கப்படுகின்றன. ஒஸ்ரேலியப் பிரதமரும் கனடியப் பிரதமரைப் பின்பற்றி ஒஸ்ரேலிய பிரதமரும் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என ஒஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் ஃபிரேசர், ஒஸ்ரேலிய தமிழ் காங்கிரசைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ ராஜேஸ்வரன், ஒஸ்ரேலிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த லீ ரியனன் உட்பட பல பாராளமன்ற உறுப்பினர்கள், மூதவை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா ஜில்லார்ட்டிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒஸ்ரேலியா இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளாவிடில் இலங்கையில் இருந்து பல அகதிகள் ஒஸ்ரேலியாவிற்கு செல்வார்கள் என்ற அச்சத்தில் ஒஸ்ரேலிய அரசு இருக்கிறது. இது ஒருவகையான கருப்பு மிரட்டல் எனச் சொல்லாம். ஒஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் பொப் கார் 2012 டிசம்பரில் இலங்கை சென்று இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்குப் பாதுகாப்பான நாடு என்றார். ஆனால் பல மனித உரிமை அமைப்புக்கள் இதனை மறுத்தன.

பிரித்தானியாவின் அதிருப்தியை விமான விற்பனை சமாளிக்குமா?
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடந்தால் அதில் பிரித்தானிய மகராணி இரண்டாம் எலிசபெத், பிரித்தானியப் பிரதமர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளன.  அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பங்கு பற்றுவார்களா என்பதுபற்றி சரியாகத் தெரியவில்லை. நியூசிலாந்தும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிலேயே உள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியா கடும் அதிருப்தியில் உள்ளது. கனடாவைப் போலவே பிரித்தானியாவும் தமது நாடுகளில் வாழும் தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பிரித்தானியா மௌனம் சாதிக்கத் தொடங்கி விட்டது.பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளான தொழிற்கட்சியினதும் பழமைவாதக் கட்சியினதும் முன்னாள் வெளிநாட்டமைச்சர்களான டேவிட் மில்லி பாண்டும் மல்கம் ரிஃப்கிண்டும் பிரித்தானிய மகாராணியார் இலங்கை செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.2012 நவம்பர் 14-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றத்தின் வெளிவிவகாரத் தெரிவுக் குழு பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்தது. ஆனால் பிரித்தானியவின் உயர் மட்டத்தினர் இலங்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய இலங்கை பிரித்தானியாவிடமிருந்து பல மில்லியன்களுக்கு விமான இயந்திரங்களை வாங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவை உச்சி குளிர வைத்துள்ளதாம்.

இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலியாக இந்தியா
அண்மைக்காலங்களாக இலங்கையின் ஒரு இராசதந்திரக் கைக்கூலி போல் இந்தியா செயற்பட்டு வருகிறது. இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மநாட்டைப்பற்றி இந்தியா பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்காத போதிலும் திரைமறைவில் அது இலங்கையில் மாநாடு நடப்பதைத் தீவிரமாக ஆதரிக்கிறது. சீனா பொதுநலவாய நாடுகள் சபையில் இல்லை. இந்தியா உதவாவிட்டால் சீனா உதவும் என்ற நொண்டிச் சாட்டை இங்கு இந்தியா முன்வைக்க முடியாது. இலங்கையின் மனித உரிமைகளைத் தூக்கிப்பிடித்தால் காஷ்மீரில் இந்தியா செய்யும் மனித உரிமை மீறல்களை பாக்கிஸ்த்தான் தூக்கிப் பிடிக்கும் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போன்றது.

பொதுநலவாய நாடுகளின் பட்டயத்தை(charter) மீறும் செயல்
பொதுநலவாய நாடுகளுக்கு என்று ஒரு பட்டயத்தை பிரபலங்களின் குழுவினரின் (Eminent Persons Group - EPG) ஆலோசனையின் பேரில் அது அங்கீகரித்தது. அதன்படி உறுப்பு நாடுகள்:
 "We are committed to equality and respect for the protection and promotion of civil, political, economic, social and cultural rights including the right to development, for all without discrimination on any grounds as the foundations of peaceful, just and stable societies".

பொதுநலவாய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட பிரபலங்களின் குழுவைச் சேர்ந்தவர்களே இப்போது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அங்கு மாநாடு நடைபெறக் கூடாது எனச் சொல்கின்றனர்.  பிரபலங்கள் குழுவின் ஒரு உறுப்பினரான ரொனால்ட் சோண்டேர்ஸ் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் மதிப்புக்களை மதிக்காத பிஜி, பாக்கிஸ்த்தான், சிம்பாப்வே, நைஜீரியா போன்ற நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது போல் இலங்கையையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார். இலங்கை வரம்பு மீறியதுமன்றி ஒரு பிழையான பொதுநலவாய நாடுகளுக்கு முன்னுதாரணமாகப் போகிறது என்கிறார்.மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையில் உச்சி மாநாடு நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 தட்சணைக்கு ஆடும் குடுமியா?
ஆனால் இந்தியரான கமலேஷ் சர்மா இலங்கையில் இருந்து மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்கிறார். எல்லாம் தட்சணை செய்யும் வேலையா?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் பற்றி விசாரித்து ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் பான் கீ மூன் அமைத்த குழுவின் ஒரு உறுப்பினரான ஜஸ்மின் சூக்கா அம்மையார் ஆட்கடத்தல்களும் சித்திரவதைகளும் இப்போது நடந்து கொண்டிடுக்கும் நாடான இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடப்பதையிட்டுத் தான் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார்.
இலங்கையில் போர்குற்றம் நடந்தமைக்கான போதிய ஆதரங்கள் இருப்பதாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டிய நிலையில் மஹிந்த ராஜபக்ச அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமப் பொறுப்பில் இருப்பதை இந்தியா போன்ற மானம் கெட்ட நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும். கனடாவும் பிரித்தானியாவும் தமது நட்டில் வாழும் மக்களின் கருத்துக் கொடுக்கும் மதிப்பை இந்தியா தனது நாட்டில் வாழும் மக்களின் கருத்துக்கு கொடுக்க மாட்டாது.

Monday 29 April 2013

ஆண் பெண் விவாதம் மோசமடைவதைத் தவிர்ப்பது எப்படி?

கணவன் மனைவி, காதலன் காதலி, இரு ஆண் பெண் நண்பர்களிடை சண்டை வருவது வழக்கம் அது முற்றி முறிவை நோக்கி இட்டுச் செல்லாமல் தவிர்ப்பதற்கான சில வழிகள்:

எதையும் பிளான் பண்னிச் செய்யணும்
எந்த விவாதத்தையும் தொடங்கு முன்னர் அதை எப்படி முன் வைப்பது மற்றவருக்கு ஆத்திரம் வராமல் இருக்க என்ன என்ன வார்த்தைகளைக் கையாள்வது போன்ற வற்றை முன் கூட்டியே திட்ட மிட்டுக் கொள்ளவும். விவாதம் சூடேறாமல் தவிர்ப்பதையும் சூடேறும் கட்டத்தில் அதை எப்படித் தவிர்ப்பது என்பதையும் முதலே சிந்தித்து வைக்கவும்.

ராங்கா தொடங்கினால் ரணகளமாகும்
எந்த விவாதத்தையும் தொடங்கும் போது பாவிக்கும் வார்த்தைகள் சரியானதாக இருக்க வேண்டும். தொடங்க முன்னர் எதாவது வகையில் மகிழ்ச்சியடைய வைத்து விட்டு விவாதத்தைத் தொடங்க வேண்டும்.


வேறு விடயத்திற்கு தாவுதல்.
விவாதித்துக் கொண்டிருக்கும் விடயத்தை விட்டு விட்டு வேறு விடயத்தைப் பற்றிக் கதைக்க முற்படுங்கள். அது இருவரையும் முரண்பட வைக்காத ஒரு விடயமாக இருத்தல் முக்கியம். அது இருவரையும் சாந்தப்படுத்தி ஒற்றுமையாக்கக் கூடியதாக இருந்தால் நல்லது. தியேட்டரில் புதிசா ஒரு படம் வந்திருக்குப் பார்க்கப் போகலாமா? அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உறவினரின் திருமணதிற்கு அணிய எப்ப சேலை வாங்கப்போகிறாய் போன்றவை நல்ல பலன் தரும்

எஸ்கேப்
இருவரிடையே விவாதம் முற்றி மோசமாகப் போகிறது என்ற தெரிந்தவுடன் விவாதம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறுதல். பின்னர் ஆற அமர இருந்து நன்கு சிந்தித்து விவாதத்தை எப்படி ஒருவரை ஒருவர் ஆத்திர மூட்டாலம் செய்ய முடியும் என்று அதன்படி பேசித் தீர்க்க முயலவேண்டும்.

Win - Win situatiion
விவாதத்தை மேலும் சூடாக்காமல் இருவருக்கும் வெற்றி கிடைக்கக் கூடிய வகையில் இருவருக்கும் திருப்தியழிக்கக் கூடிய வகையில் விவாதத்தை மாற்றும் வழிகளைத் தேடிப்பிடிக்க வேண்டும்.

நகைச்சுவை 
புன்னகையை முகத்தில் கொண்டு வரவும். விவாதத்தை நகைச்சுவையாக மாற்றி இருவரின் கோபத்தை தணிக்க முயலவும்.

கட்டிப்பிடி வைத்தியம்
விவாதத்தை தணிக்க கொஞ்சம் ரோமாண்டிக்கா மூட்டை கட்டிப்பிடித்தல் தடவுதல் சில்மிசம் செய்தல் போன்ற வழிகளை நாடவும்.

பொத்திக் கிட்டு போகவும்
திடீரென்று விவாதிப்பதை நிறுத்தி போய் ஒரு கரையில் இருந்து ஆழமாக உங்கள் மூச்சை இழுத்து வெளியில் விட்டு உங்கள் கோபத்தைத் தணிக்கவும். ஒன்று மே கதைக்காமல் விவாதத்தை இடையில் முறிப்பதும் ஒரு சரியான அடிதான். அது இருவரையும் சற்றுச் சிந்திக்க வைக்கும். 

மற்றான் கருத்துக்கு மதிப்பு
மற்றத் தரப்பு நியாயங்களையும் சிந்திக்கவும். அவரின் நிலையில் உங்களை வைத்துப் பார்க்கவும்.

சரண்டருக்கு சன்மானம்
விவாதத்தில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் அதை உங்கள் வெற்றியாகக் கருதாமல் அவரின் பெருந்தன்மையாகக் கருதி அதற்கு உரிய பாராட்டுதல் அதற்காகப் சிறிய பரிசுப் பொருள் வாங்கிக்கொடுத்தல் இனிமேல் வரும் விவாதங்களில் மேலும் விட்டுக் கொடுப்புக்கள் செய்ய ஊக்குவிக்கும்.

முரண்படுவதும் வாழ்க்கியின் ஒரு பகுதியே
இருவர் ஒன்றாக வாழும் போது நிறைய முரண்பாடுகள் வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் அதை நன்குணர்ந்து விவாதங்களை விரோதங்களாக எடுக்காமல் இருக்கப் பழக வேண்டும்.

நன்றாக கூவவிடுங்கள்
ஒரு தரப்பு உரத்துச் சத்தமிடத் தொடங்கினால் அதையிட்டுக் கோபப்படாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு பின்னர் உங்கள் கருத்தை அமைதியாகத் தெரிவியுங்கள். கூச்சலிடல் கோபத்தைக் குறைக்கும். கூச்சலிடுபவர் அதிக காற்றை வெளியேற்றி பின்னர் அதிக காற்றை உள் இழுப்பார். இது அவரைச் சாந்தப்படுத்தும்.

செவிகொடுப்பது விட்டுக் கொடுப்பதல்ல
ஒருவரின் விவாதத்தை நன்றாக செவிமடுக்கவும். இதுவே அவரை உங்களை விரும்பவைக்கும். பின்னர் நீ சொல்வதில் பிழையில்லைத்தான் ஆனால்....... என்று அமைதியாகத் தொடங்கி உங்கள் விவாதத்தை தர்க்க ரீதியாக முன்வைக்கவும்.

கேள்விகளை அமைதியாக்த் தொடுக்கவும்
மற்றவரின் விவாதத்தை மறுப்பதைத் தவிர்த்து அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் உங்கள் கருத்துக்களைக் கேள்வியாக நிதானத்துடன் உறுதியாக முன்வைக்கவும். மற்றவை முன்வைக்குக் கருத்துக்கள் எப்படிப் பிரச்சனையைத் தி

Sunday 28 April 2013

நகைச்சுவை: கடவுள் வரைந்த கார்ட்டூன்

பெண் நாய்: நீ என்னைத் கல்யாணம் செய்கிறாயா?
ஆண் நாய்: ஏற்கனவே ஒரு நாய் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதில் கல்யாணம் வேறயா????

பெண் பிள்ளைகளை காமூகர்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.
மீனவர்களை சிங்களவனிடமிருந்து காப்பாற்ற  முடியவில்லை.
எல்லையை சீனனிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.
உலகச் சந்தையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஆகக்கூடிய தொகை செலவளித்துப் படைக்கலன்கள் வாங்கும் நாடு இந்தியா!!!
காசெல்லாம் எங்கு போகிறது சுவிஸ் வங்கிக்கா?


கடவுள் வரைந்த கார்ட்டூன் இந்திய அரசியல்வாதிகள்
கடவுள் செய்த copy & paste சீன அரசியல்வாதிகள்
கடவுள் செய்த தவறு பாக்கிஸ்த்தான் அரசியல்வாதிகள்
கடவுள் செய்த பாவம் இலங்கை அரசியல்வாதிகள்.

முட்டாள்களின் கூட்டத்தை ஒரு நாளும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காங்கிரசுக் கட்சியின் ஆதரவாளர்களிடம் கவனமாக இருங்கள்.

காதலுக்கு கண் இல்லையாம். ஆனால் காதலித்தவர்களைக் கேட்டுப்பாருங்கள். காதலுக்கு காது மூக்கு மூளை எதுவுமே இல்லை என்பார்கள்.

 Three FASTEST means of Communication :
1. Tele-Phone
2. Tele-Vision
3. Tell to Woman
Need still FASTER - Tell her NOT to tell ANY ONE.




Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...