Saturday 16 March 2013

கருணாநிதியின் அடுத்த நாடகம் தயார்

2009 நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் உண்ணாவிரத நாடகமாடி கருணாநிதி வெற்றியீட்டினார். தமிழ்நாடு சட்ட சபையில் எதிர்கட்சித் தலைவர் பதவி கூடக் கிடைக்காத அளவிற்கு தோல்விகண்ட கருணாநிதிக்கு தனது குடும்பத்தின் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

2009ஐப் போலவே நன்கு திட்டமிட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதை தன் குடும்ப ஊடகங்களின் உதவியுடன் உண்மைகளை மறைத்து தனது வாக்கு வங்கியின் வாக்காளர்களையாவது திருப்திப்படுத்தி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கருணாநிதி இனிவரும் நாட்களில் காங்கிரசுக் கட்சியின் நடுவண் அரசை கடுமையாகத் திட்டி தன்னை 2009 ஏமாற்றி இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரசு அரசு துரோகம் செய்துவிட்டது என்று அழுது தீர்க்கப் போகிறார். பின்னர் தான் தனது ஈழ உடன் பிறப்புக்களிற்கு துரோகம் செய்த காங்கிரசுக் கட்சியுடன் உறவை முறித்து கொண்டு நடுவண் அரசில் இருந்து வெளியேறி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவார். இவையாவும் காங்கிரசுக் கட்சியின் ஆசியுடன் நடைபெறும்.

கருணாநிதியின் நாடகத்தின் உச்சக் கட்டம் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியினரும் தமது கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் தமிழ்நாடு மாநில காங்கிரசு கட்சியை ஆரம்பித்து கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். விஜயகாந்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களுடன் கருணாநிதி இணைந்து தனது குடும்பத்தினருக்கு அமைச்சுப் பதவியைத் தேடிக்கொள்வார்.

ஆனால் கருணாநிதியின் நாடகம் இம்முறை பலிக்காமல் இருக்க ஜெயலலிதா கடும் முயற்ச்சி எடுப்பார். ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல் காட்டிக் கொள்வார்.

இவை எதனாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவால் நன்மை ஏற்படுவதாயின் இந்திய நடுவண் அரசில் நெடுமாறன் ஐயாவைப் போல் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், சீமானைப் போல் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வைக்கோவைப் போல் ஒருவர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் வரவேண்டும். அவர்கள் இந்தியாவின் தென்மண்டலத்தில் இருக்கும் தமிழின விரோதப் பூனூல்களை அகற்ற வேண்டும்.

13-03-2013-ம் திகதி வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரசில் Competitive caring about Sri Lanka என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிய சுசிலா ரவீந்திரநாத் மீளமைக்கப்பட்ட டெசோவோ பாலச்சத்திரனின் குண்டு துளைத்த உடலைப் பார்த்து எழுந்த உணர்வலையோ ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்கிறார். தமிழ்நாட்டுக் அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்களை உயர்த்துகின்றன என்கிறார். ஆனால் அவர் கட்டுரையை முடித்த விதம் கூர்ந்து கவனிக்கத் தக்கது. தமிழ்நாடு என்னதான் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் உணர்ச்சி வசப்பட்டாலும் அது தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளைப் பாதிக்காது என்பதுதான் கடந்த கால அனுபவம் கூறும் உண்மை என்கிறார். ஆனால் இந்த முறை இது நிலைமையை மாற்றுமா என்ற கேள்விதான் அவரது இறுதி வரி.

இப்போது தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தும் போராட்டம் இனி எத்திசையில் பயணிக்கும் என்பது தான் சுசீலாவின் கேள்விக்கான பதிலைக் கூறும்.

இங்கு இன்னும் ஒன்று கவனிக்க வேண்டும். சுசிலாவின் கட்டுரைக்குப் பின்னூட்டமிட்ட பேராசிரியர் கோபன் மகாதேவா தனது பின்னூட்டத்திற்கு பாச உணர்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் பயன் ஏதுமில்லை எனத் தலைப்பிட்டுள்ளார்.

SENTIMENTS APPRECIATED, BUT NETT RESULTS ZERO

The above article by Sushila Ravindranath clearly summarises the current sentiments in Tamil Nadu about the undue delay by the Sri Lanka government in solving the differential problems of the Tamil-speaking minorities in Sri Lanka. Her simplicity is excellent. In my view, as seen over the last 3-4 decades, the linguistic brotherhood and sentiments expressed by the Tamil Nadu Tamils to the Tamil-speaking population of Sri Lanka are greatly appreciated, but the nett results as far as the solution of their internal political problems are concerned have been, on the whole, ZERO. This is unfortunately so because, they have to make their final contributions through India's Central Government as a part of trying to solve their own problems in India, and hence their contributions are diluted, distorted, and sometimes turn negative.

தமிழ்நாட்டு மக்கள் என்னதான் கொதித்தாலும் அதன் செயற்பாடு நடுவண் அரசின் மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். நடுவண் அரசினூடாக ஈழப் பிரச்சனை அணுகப்படும் போது அது குறைக்கப்படுகிறது, திரிபு படுத்தப் படுகிறது, சில வேளைகளில் எதிர்மறையாக்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் மகாதேவன்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

Thursday 14 March 2013

கனவில் அணைத்தது நினைவில் வதைத்தது

காண்கையில் தவிர்த்து
காணாத போது தேடி
நெருக்கத்தில் தீமூட்டி
வாடும் வாழ்கை

உனக்கெனப் பிறந்தவன்
உன் முகம் பார்த்து ஆளானவன்
உன் நினைவில் உருகியவன்
உன் பிரிவால் கருகுகிறான்

கனவில் அணைத்து
நினைவில் வதைத்து
கற்பனையில் கலந்து
ஓடும் நாட்கள்

பயணிக்கும் பாதை
இரண்டாய்ப் பிரிவதும் - அங்கு
பணிப்பவன் தடுமாறுவதும்
பயணத்தில் நடப்பதுண்டு
வாழ்க்கையில் வேண்டாமடி

கனவு என்பது
தூக்கத்தில் காண்பதல்ல
தூக்கவிடாமல் உழைக்க வைப்பது
அதனால் அவளும் கனவு போலே



கண் மூடினாலும் தெரியும்
தூக்கத்திலும் நினைவிருக்கும்
மூடிய வாயிலும் முணுமுணுப்பிருக்கும்
கணத்தில் உருவாகி பிறவிகள் தோறும் தொடரும்

உண்மைக் காதல்
உதட்டோர உரசலில்
கலக்கும் உயிர்கள்
காதல்

How to decode the
Signals of your eyes
How to translate
Your body language

ஜெனிவா: இலங்கையை ஆத்திரப்படுத்தும் திருத்தங்கள்

ஜெனிவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித  உரிமைக்கழக 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தில் செய்த சில திருத்தங்கள் இலங்கையை ஆத்திரப் படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித  உரிமைக்கழகத்தில் தான் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா அடுத்தடுத்து அதிகார பூர்வமற்ற கூட்டங்களை நடாத்தியுள்ளது. கடைசியாக மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை ஒரு கூட்டம் நடந்தது. அவற்றில் தனது இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைபைச் சமர்ப்பித்துள்ளது.  தீர்மானம் மூன்று தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவை திருத்தியமைக்கப்பட்ட வரைபில் செய்யப் பட்ட சில மாற்றங்கள் இலங்கையை அதிருப்தியடைய வைத்துள்ளது. மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இலங்கை கலந்து கொள்ளவில்லை

 அயோக்கிய இந்தியாவின் கள்ள மௌனம்
அமெரிக்கா ஏற்பாடு செய்த கூட்டங்களில் சீனா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்க வாதிட்டன. கனடாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தீர்மானத்தைக் கடுமையாக்க வாதிட்டன. ஆரம்பத்தில் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. ஆனால் கடைசியாக நடந்த கூட்டத்தில் ஜப்பான் பெரும் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரிவில்லை. இக் கூட்டங்களில் இந்தியா மௌனமாக இருப்பது பலரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது. தீர்மானம் எப்படியும் நிறைவேறத்தான் போகிறது அதை எதிர்க்காமல் விடுங்கள் என்று இலங்கைக்கு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்து விட்டது. இதன் மூலம் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் செய்ய இந்தியா நினைத்தது. வாக்கெடுப்புக்கு வந்து இந்தியா ஆதரித்து வாக்களித்தால் இந்தியா இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளிடம் முறையாக வாங்கிக் கட்டும். ஆதரித்து வாக்களிக்காவிட்டால் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பும். கலைஞர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்புவார்.

வரைபு தீர்மானத்தில் ஆறாவது பத்தியில்:
"Requests the OHCHR, with input from relevant special procedures mandate holders, as appropriate, to present an oral report at the twenty-fourth session and a comprehensive report followed by a dedicated general debate at the twenty-fifth session of the HRC, on implementation of this resolution".

முதல் சமர்பிக்கப்பட்ட வரைபில் general debate என இருந்த சொற்தொடர் பின்னர் dedicated general debateஎன மாற்றப்பட்டது. இந்தத் திருத்ததை னா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள்கடுமையாக எதிர்த்தன. 24வது கூட்டத்த் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தமிழர் தரப்பு எதிர்த்தது. அது இரண்டரை ஆண்டு கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுக்கிறது. அதற்குள் இலங்கை இந்தியாவின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள மயமாக்கி விடும். இந்தியா சிங்களக் குடியேற்றத்திற்கு வசதியாக யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இரண்டரை ஆண்டுகள் இழுத்தடிப்பு இந்தியாவின் கைங்கரியமாக இருக்கலாம்.

வரைபு தீர்மானத்தின் 5வ்து பத்தியில்:
"Taking Note of the Government of Sri Lanka's National Plan of Action to implement the Recommendations of the LLRC and its commitments as set forth in response to the findings and recommendations of the LLRC".

இந்த to implement என்ற சொற்தொடரை அமெரிக்கா புதிதாகச் சேர்த்துள்ளது.

தீர்மானத்தின் 8வது பத்தியில் ;
"Noting with concern that the National Action Plan and the LLRC's report do not adequately address serious allegations of violation of international human rights law and international humanitarian law".

இந்த international human rights law and international humanitarian law" என்ற சொற்தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வரைபில் "discrimination on the basis of religion or belief" என்ற பதமும் சேர்க்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரைபுதான் இறுதி வரைபாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இனி அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து மேலும் மாற்றங்களை மார்ச் 19-ம் திகதிவரை கொண்டு வரலாம். இலங்கைக்குச் சாதகமாக ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டால அது நிச்சயம் இதியாவின் கைவரிசையாகத்தான் இருக்கும் என உறுதியாகக் கூறலாம்.

உளவியல் போர்க்கலனாக சுப்பிரமணிய சுவாமி
ஜெனிவாவில் செயற்படும் தமிழர் தரப்பினர் அமெரிக்க அரசதந்திரிகளிடம் சுப்பியமணிய சுவாமி பற்றிக் கதைத்த போது அவரால் தமது நிலைப்பாடு மாறாது எனத் தெரிவித்தன்ர். அமெரிக்க அதிபர் பராக ஒபாமாவை சுவாமி சந்தித்தார் என்பது படு பொய் என அவர்கள் தெரிவித்தனர். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தொடர்  உளவியல் போரின் ஒரு அம்சமாகவும் சுவாமி பயன்படுத்தப் படுகிறாரா?

தமிழர்கள் இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்
தாங்க முடியாத துயரில் அல்லல்படும் தமிழர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பொறுத்திருக்க வேண்டும் தமக்கு ஏதாவது நீதி கிடைக்குமா என்ற நம்பிக்கை ஏற்பட. ஐக்கிய அமெரிக்கா பல காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் 24வது கூட்டத் தொடரில் அறிக்கை சமர்பிக்கக் காத்திருக்கிறது. அப்போது காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்காது. 2015இல் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையில் பதவிக் காலம் முடிந்து வெள்யேறி விடுவார். அமெரிக்க சார்புடைய ஒரு ஆபிரிக்கர் அல்லது கிழக்கு ஐரோப்பியர் ஐநா பொதுச் செயலராக வர வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கான உண்மையான விடிவு வெளிக்காரணிகளில் இல்லை. உலகெங்கும் வாழும் மக்கள் ஒன்றுமையாக ஒன்று கூடும் போது மட்டுமே எமது விடிவு சாத்தியமாகும். ஜெனிவாத் தீர்மானம் மற்ற நாடுகளை எதிர்காலத்தில் எமது பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பளிக்கும்.

Tuesday 12 March 2013

திசைமாறிய பறவையான இந்தியாவின் வழிகாட்டி ஏவுகணை

Cruise missile எனப்படும் வழிகாட்டி ஏவுகணையை 12/03/2013 செவ்வாய்க்கிழமை இந்தியா பரிசோதித்துப் பார்த்தது. வழிகாட்டி ஏவுகணைகள் நிலத்தில் உள்ள தளத்தில் இருந்தும் விண்ணில் பறக்கும் விமானத்தில் இருந்தும் கடலுக்கடியில் இருக்கும் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் செலுத்தி செலுத்தும் இடத்தில் இருந்து கணனி மூலம் வழிகாட்டப்பட்டு குறித்த இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடியது.

இந்தியா உருவாக்கிய வழிகாட்டி ஏவுகணை ஒலியிலும் பார்க்கக் குறைந்த வேகத்திலேயே இயங்கும். இதனால் இதை subsonic என்று அழைக்கப்படும். இவை முதலில் 1944-ம் ஆண்டு ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. பின்னர்  transistorஇன் கண்டு பிடிப்பும் கணனிகளின் உருவாக்கமும் வழிகாட்டி ஏவுகணைகளில் பல மாற்றங்களை உருவாக்கின. அமெரிக்காவின்  Tomahawk  வழிகாட்டி ஏவுகணைகள் US$1,410,000 பெறுமதியானவை.

Hypersonic வழிகாட்டி ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 5 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியவை. ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடியவற்றின் வேகம் Mach number ஆல் கணிக்கப்படும். Mach number என்பது ஒரு பொருளின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வரும் எண்ணாகும். இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய BrahMos வழிகாட்டி ஏவுகணைகள் Mach number 3 ஐ உடையவை. BrahMos என்னும் பெயர் இந்திய Brahmaputra நதியின் பெயரையும் இரசியாவின் Moskva நதியின் பெயரையும் இணைத்துச் சுருக்கி உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவின் வழிகாட்டி ஏவுகணைகள் சதாம் ஹுசேயினின் ஆக்கிரமிப்பில் இருந்து குவைத் நாட்டை மீட்கவும் பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சியைக் கவிழ்க்கவும் வெற்றீகரமாக பாவிக்கப்பட்டன. லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போரிலும் அமெரிக்கா வழிகாட்டி ஏவுகணைகளை தனது கப்பலகளில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் ஏவியது.

இந்தியா முழுக்க முழுக்க தானாகவே உற்பத்தியாக்கிய நடுத்தர தூரம் செல்லக்கூடிய வழிகாட்டி ஏவுகணைக்கு நிர்பய (பயம் இல்லாதது) என்னும் பெயரிடப்பட்டு 12-03-2013 செவ்வாய்க் கிழமை முதல் தடவையாக ஏவப்பட்டது. 2007-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. ஒடிசாவில் புவனேஸ்வரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள் சண்டிப்பூரில் இருந்து காலை 11 மணியளவில் ஏவப்பட்டது. அது 20 நிமிடங்களில் திசைமாறி தான் போன போக்கிற்கு பறக்கத் தொடங்கி விட்டது. பிரச்சனைக்குரிய இடங்களில் விழுந்து வெடித்து பெரும் சேதம் விளைவிக்கலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் சேதம் ஏற்படாத இடத்தில் விண்ணில் வைத்து வெடித்தது.முன் கூட்டியே ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தனர். நிர்பய விழுந்து வெடிக்கும் போது  சிதறிய துண்டுகளால் பலர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் உயிரிழப்போ சொத்தழிவோ ஏற்படவில்லை.



வெற்றி என்றார் இயக்குனர்.
நிர்பய ஏவுகணைத் திட்டத்தின் இயக்குனர் ரவிக்குமார் குப்தா இந்தப் பரீட்ச்சார்த்த ஏவுகணை அடிப்படையில் வெற்றி எனத் தெரிவித்துள்ளார். ஆனால் வழிகாட்டி ஏவுகணையின் இரு முக்கிய அம்சங்கள் ஏவுகணை வழிக்காட்டுதலுக்கு இணங்கப் பயணித்தலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்குதலுமாகும். இந்த இரண்டு அடிப்படைத் தேவைகளிலும் நிர்பய வழிகாட்டி ஏவுகணை பிழைத்து விட்டது.


தொடரும் கலைஞர் தொலைக்காட்சியின் கயமைத்தனம்

தமிழ்நாட்டில் இப்போது என்றும் இல்லாத அளவு ஈழத்தமிழர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது புது டில்லிக்கும் தமிழர்களை ஆள நினைக்கும் வந்தேறு குடிகளுக்கும் ஏற்பான ஒன்றல்ல. தமிழன் என்று விழித்து எழுந்து வந்தாரை வாழ வைப்பது பெருந்தன்மை; வந்தாரை ஆள வைப்பது மடைமை என்று உணர்கிறானோ அன்று புது டில்லிக்கும் தமிழ்நாட்டை ஆளும் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு சங்கு ஊதப்படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை கலைஞர் தொலைக் காட்சியும் சன் தொலைக்காட்சியும் எப்போதும் இருட்டடிப்புச் செய்தே வருகின்றன. 11/03/2013 இரவு கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனச் சொல்லப்பட்டது ஆனால் போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோரிக்கைகளில் முதல் வசனமே அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தாம் கண்டிப்பதாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

2009 இறுதிப் போரின் போதும் கொழும்பில் சதீஷ் நம்பியார், புது டில்லியில் சிவ் சங்கர மேனனுடன் எம் கே நாராயணன், கோபாலபுரத்தார், ப. சி அண்ணாச்சி, நியூயோர்க்கில் விஜய் நம்பியார் ஆகியோர் சேர்ந்து சிறப்பாக நாடகமாடினார்களா என்பது இதுவரை பதில் கிடைக்காத கேள்வி.

ஐக்கிய நாடுகளின் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்கள் தமிழர்களுக்காக அல்ல. அமெரிக்கா ஒரு நாளும் சிங்களவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காது. அமெரிக்காவிற்கு ராஜபக்சவைப் பிடிக்கவில்லை. அதே நேரம் அது சிங்களப்படைகளைப் பாது காக்க முனைகிறது. போர்க் குற்றம் என்று சொல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் அறிக்கையில் இருந்து சிங்களப் படைகளைத் தப்ப வைப்பது அமெரிக்காவின் நோக்கம். இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் போரின் பங்காளியாகும். இதனால் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து கவனத்தை திசை திருப்பி இலங்கை அரசின் கண்துடைப்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உலகின் கவனத்தை மையப்படுத்துவதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் வாசகங்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கப் போகிறதா இல்லையா என்பதில் முழுக்கவனத்தையும் புது டில்லியும் அமெரிக்காவும் வெற்றிகரமாகச் செய்கின்றன. இதில் கலைஞர் தொலைக்காட்சியும் தனது பங்கைச் செலுத்துகிறது. இதனால்தான் மாணவர்கள் போராட்டத்தின் உண்மைத் தன்மையை க்லைஞர் தொலைக்காட்சி திரித்துக் கூறுகிறது.

மொக்கை போட்ட வழக்கறிஞர்.
11-03-2013 இலண்டனில் ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஜீ ஆர் ராஜேந்திரன் என்னும் வழக்கறிஞரின் சிறு பேட்டி ஒன்றைத் தமிழகத்தில் இருந்து ஒரு செய்தியாளர் வழங்கி இருந்தார். அதில் ஜீ ஆர் ராஜேந்திரன் அமெரிக்கா ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரும் தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் வாக்கெடுப்புக்கு விடாமலேயே வீட்டோ செய்து விடும் என்றார். ஐநா மனித உரிமைக் கழகத்தில் எவருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வீட்டோ அதிகாரம் ஐநா பாதுகாப்புச் சபையில் மட்டுமே அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு உண்டு. தற்போது சீனாவிற்கு மனித உரிமைக் கழகத்தில் வாக்குரிமை கிடையாது. மனித உரிமைக் கழகத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 47 நாடுகள் பிராந்திய அடிப்படையில் சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்படும் இந்த நாடுகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு. அதன் படி 2012உடன் சீனா தனது வாக்களிக்கும் உரிமையை இழந்து விட்டது. வாக்குரிமை கூட இல்லாத ஒரு நாடு எப்படி இல்லாத வீட்டோ என்னும் இரத்து அதிகாரத்தைப் பாவிக்கும்? இந்த வழக்கறிஞருக்கு அறிவில்லையா அல்லது இதுவும் ஒரு திட்டமிட்ட திசை திருப்பும் பிரச்சாரமா? இந்த வழக்கறிஞரின் பின்னணி எனக்குத் தெரியாது. யாராவது தெரிந்தால் தயவு செய்து அறியத் தரவும்.

கலைஞர் தொலைக்காட்சி பற்றிய் முந்தைய பதிவு: கண் மூடி நின்ற தென்ன கலைஞர் தொலக்காட்சியே

Monday 11 March 2013

லயோலாக் கல்லூரி உண்ணா விரதமும் அடுத்த இந்தியப் பிரதமர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினரின் முகாம்களைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் தூங்கி வழியும் பின்னிரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பர். தமிழகக் காவற்துறையினரும் தமிழீழப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து இறக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டம நடத்திய எட்டு மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும் அள்ளிச் சென்றுவிட்டது.

இயக்குனர் கௌதமன், இயக்குனர் களஞ்சியம், ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி, மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின், செந்தில், அருண்செளரி,திருமலை கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிந்திக் கிடைத்த செய்தி:
  • இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து விடுவித்தது காவல்துறை. 
  • நீங்கள் காவற்துறையினரால் மிரட்டப்பட்டீர்களா என்ற ஊடகர்களின் கேள்விக்கு உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.
அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் அரச பயங்கரவாதம்:
1) பாடசாலை நிர்வாகம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயற்படுகிறது.
2) கல்லூரி முதல்வர் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு பிள்ளைகளை கல்லூரியில் இருந்து நீக்கப்போவதாக மிரட்டி உள்ளனர்.
3) எங்களை மட்டுமல்ல எண்களின் சகோதர, சகோதரிகளையும் நீக்க போவதாக தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள்.
4) காங்கிரஸ் ஆதரவு பாடசாலை முதல்வரோடு திமுகவின் தீவிர ஆதரவு ஆசிரியர்களும் மிரட்டல் விடுக்கிறார்கள்.
5) போராட்டத்தை நிறுத்தாவிடில் கல்லூரியில் ஒருகாலமும் படிக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள்.
6) எது நடந்தாலும் அஞ்சோம், எம் கொள்கையில் இருந்து ஒரு படி கூட இறங்கி வருவதில்லை என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்.
7) இது எந்த அரசியல் சார்பற்ற மாணவர் போராட்டம்.
8)புலம்பெயர் தமிழர்களையும் அந்தந்த நாடுகளில் போராட சொல்லுங்கள்.
9) நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கமைப்பு குழு, பிற புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக புலம்பெயர் மக்களை திரட்டி அந்தந்த நாடுகளில் போராட்டத்தில் குதிக்க சொல்லுங்கள்.
10) மலேசிய தமிழர்களையும் இணைய சொல்லுங்கள்.
11) திமுக , காங்கிரஸ் தமிழர் எதிர்ப்பு அராஜகங்களை எல்லா செய்தி தளங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
12) தமிழக மக்கள் அனைவரையும் எம்மோடு இணைய சொல்லுங்கள்.
குறைந்த அளவு எதிர்ப்பு உள்ள நேரமானதால் அடுத்த தலைமை அமைச்சர் கனவுடன் இருக்கும் செல்வி ஜெயலலிதா பின்னிரவு நேரத்தைத் தெரிந்தெடுத்தார். பெரிய எதிர்ப்பும் காவற்துறையின் கடுமையான தாக்குதலும் ஜெயலலிதாவின் அடுத்த தலைமை அமைச்சர் கனவைப் பெரிதும் பாதித்திருக்கும். 

முன்னதாக இலயோலாக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு "ஆதரவு தெரிவிக்க" வந்த காங்கிரசுக் கட்சிப் பிரமுகர் தங்கபாலு விரட்டியடிக்கப்பட்டார். 

லயோலாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஈழப் போராட்டத்தின் உண்மைத் தன்மையும் அங்கு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளையும் தமிழ்நாட்டு மக்கள் பரவலாக உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதை உணர்த்துகிறது. அத்துடன் போராட்டம் தமிழகத்தில் பரவவும் தொடங்கிவிட்டது என்பதை: லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக:
*மதுரை, பெரம்பலூரில் கல்லூரி மாணவர்கள்
*காரைக்குடி அழகப்பாகல்லூரி,ஆனந்தா கல்லூரி மாணவர்கள்
*திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள்
*திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.
*சுமார் 2000 லயோலா கல்லூரி மாணவர்கள் லயோலா கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தை விரைவில் ஆரம்பிக்கிறார்கள்
*அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

 ஆகியோரும் போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

2014 தேர்தலை மையப் படுத்தி எல்லாம் நடக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் தீவிரமடைவதற்கு 2014 நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. 2009இல் கருணாநிதியின் அரசு மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்காமல் கடுமையாகவும் நரித்தனத்துடனும் தடுத்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் செல்வி ஜெயலலிதா தானும் அப்படிச் செய்தால் 2014இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை அறிவார். ஆனால் தமிழ்நாட்டில் இப்படிப் போராட்டங்கள் பரவலாக வெடித்தால் அதைச் சாக்காக வைத்து செல்வி ஜெயலலிதாவின் அரசை மைய இந்திய அரசு கலைத்து விடலாம். அது அவரின் 40 தொகுதிக் கனவைச் சிதைக்கும். இந்திய மைய அரசு தனது காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை 2014 தேர்தலுக்கு முன்னர் கலைத்து விட்டால் அந்த மாநிலங்களில் தமது வெற்றி வாய்ப்பை "ஊக்குவிக்கலாம்" என்று கருதுகிறது. அதில் முக்கியமான மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் தமிழ்நாடுமாகும். குஜராத்தில் ஆட்சியைக் கலைத்தால் அது காங்கிரசுக்கு மேலும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும். ஜெயலலிதாவிற்கு தான் 2014 தேர்தலில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மையத்தில் அமையவிருக்கும் கூட்டணி அரசில் தான் தலைமை அமைச்சராகலாம் என்ற கனவில் இருக்கிறார். அதற்கு அவருக்கு தமிழுணர்வாளர்களின் ஆதரவு மிக முக்கியம். இதனால் அவர் உண்ணாவிரதப் போராட்டங்களை அடக்கக் கூடாது. ஆனால் போராட்டம் தீவிர மடைந்தால் அதை சாட்டாக வைத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று ஜெயாவின் அரசை கலைத்தால் வாக்காளர்களை மகிழ்ச்சிப் படுத்தும் நோட்டு விநியோகங்கள் பாதிக்கப்படலாம். ஈழ ஆதரவுப் போராட்டத்திற்கும் அவரது தலைமை அமைச்சர் கனவிற்கும் பெரும் இழுபறி.


சும்மா விடுவாரா உண்ணாவிரத நாடகக் கலைஞர்
தனது அடுத்த தேர்தல் வெற்றிக்கு என்ன நாடகமாவது போட வேண்டும் என்று இருக்கும் கலைஞர் கருணாநிதி சும்மா விடவில்லை.  "உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் எங்களின் டெசொவை ஆதரித்துதான் உண்ணாவிரதம் இருக்கின்றனர்" என்று போட்டாரே ஒரு போடு. அத்துடன் உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கு தனது கழகக் கண்மணிகளையும் அனுப்பி வைத்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்த இளைஞர்கள் விரட்டி விட்டனர்.

சிதம்பர இரகசியம்
நிதியமைச்சர் ப. சிதம்பரம் 2009 மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு கருணாநிதி ஆட்சியில் இருந்தது எப்படி உதவியது என்பது சிதம்பர இரகசியமல்ல. இம்முறையும் அப்படி வெல்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருப்பது தடயாக இருக்கிறது. அவரது ஆட்சியைக் கலைத்தால் ப. சிதம்பரம் வெற்றி பெறும் வாய்ப்புக்களை அதிகரிக்கலாம். ப. சிதமபரத்திற்குத் தெரியும் அவரது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் எல்லாத் தொகுதிகளிலும் தோற்கடிக்கும் உறுதியுடன் தமிழின உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்று. சென்ற முறை "வென்றது" போல்தான் அவர் இந்த முறையும் வெல்ல வேண்டும். ராகுல் காந்தி தான் தலைமை அமைச்சர் ஆக மாட்டேன் என்று அடம் பிடித்தால் தான் தலைமை அமைச்சராகலாம என்ற கனவுடன் ப. சிதம்பரம் இருக்கிறார். ராகுல் காந்திக்கு திமுக்வை பிடிக்காது. அவரும் கருணாநிதியும் இதுவரை சந்தித்து  பேச்சு வார்த்தை நடத்தியதே இல்லை. அடுத்த தலைமை அமைச்சராக வேட்டி கட்டியவரே வரவேண்டும் என கருணாநிதி விரும்புகிறார். அதனால் விஸ்வரூபம் எடுத்தவருக்கு ஏற்கனவே பல கோடி இழப்பு. டெசோ அமைப்பினர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குலைக்கக்கூடிய போராட்டத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க வழி தேடலாம். டெசோவின் வேலை நிறுத்தமும் இதன் ஒரு அம்சமாக இருக்கலாம். டெசோவின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தமிழ்நாடு வருவாரா?
கடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பலத்த பாதுகாப்புக்களுடன் சோனியா காந்தி சென்னையில் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். கருணாநிதி ஆட்சியில் இருந்த படியால் சாவுவீட்டில் புரியாணி சாப்பிட வர விடமாட்டோம் என்று சீறிய "தமிழ்ச்சிங்கங்களின்" பணிமனைகள் தாக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இப்போது இலங்கை இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்பை தமிழ்நாட்டுத் தமிழர்கள் பரவலாக அறிந்த பின்னர் ராகுல் காந்தி 2014 நடக்க விருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா?

தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக ஈழத்தில் மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிக் கூறப்பட்டவை:

எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு...

இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது...
நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது.
எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்..

திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
எமக்கு இங்கு சாப்பிட மாத்திரமே வாய்திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது..

‘’நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு’’ என்பது போல் சர்வதேசமும் சிங்கள அரசுடன் மறைமுகமாக கைகோர்க்கிறது..
இங்கு தினம் தினம் இசைப்பிரியாக்களும் பாலச்சந்திரன்களும் புதைக்கப்படுகிறார்கள்..

இந்நிலையில் எம்மக்களுக்கு நீதி சொல்ல தமிழகத்தை விட்டால் யாருமில்லை..

போராட இடம் கூட மறுக்கப்பட்ட நிலையில் எமக்காய் போராடும் எம் இரத்தத் உறவுகளே...
லோயலா கல்லூரியில் எழுந்துள்ள இத்தீப்பொறியை தமிழக கல்லுரிகள் அனைத்துனுள்ளும் பரப்புங்கள்
அன்று மாவீரர் முத்துக்குமாரன் எழுப்பிய தீயை அரசியல் அணைத்தது போல் இன்று உங்களுடைய போராட்டத்தை அணையை விடாதீர்கள்.. சமரசங்கள் பல வடிவில் வரும் சோர்ந்து போய் விடாதீர்கள்,ஏமாந்து போய் விடாதீர்கள்.

Sunday 10 March 2013

ஜெனீவாத் தீர்மானத்தை இலங்கைக்குச் சாதகமாக்கியது இந்தியா

ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐநா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டு வர விருக்கும் தீர்மான முன் மொழிவை இந்தியா மீண்டும் இலங்கைக்குச் சாதகமாக மாற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பல தரப்பினரும் இந்தியாவை தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் படி வற்புறுத்திய போதிலும் இந்தியா இலங்கைத் தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்தியுள்ளது.

ஜெனிவாத் தீர்மானம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திய வசனத்துடன் அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானம் (US tables Sri Lankan resolution with India line.) என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • The resolution seeks to ensure that “special procedure mandate holders” tasked to look into human rights violations, work only in consultation with and with the concurrence of Colombo. The provision for taking the Lankan government into confidence was part of the US resolution of March 2012 as well. It had been included at India’s insistence as New Delhi refused an intrusive resolution which could put Sri Lanka’s sovereignty into question.
மனித உரிமைக் கழகத்தின் சிறப்பு நடைமுறை அதிகாரத்துடன் செயற்படுவோர் இலங்கை அரசின் சம்மதத்துடனும் கலந்தாலோசனையுடனும் மட்டுமே செயற்படலாம் என்பதே இந்தியா திணித்த வாசகமாகும்.

இலங்கை அரசின் மீதான விசாரணை எதுவும் இலங்கையில் தலயிடும் தன்மையையோ அல்லது இறைமையைக் கேள்விக்குரியதாக்கக் கூடாது என இந்தியா கருதுகிறது. இந்தியா ஏன் இப்படிச் செயற்படுகிறது என்பதற்கான விடையை 27-02-2012 Times of Indiaஇல் வெளிவந்த செய்தி தருகிறது:

India has more problems with the report of the UN High Commissioner for Human Rights Navi Pillay. Her report, which the US has said it will support, calls for an "independent, international inquiry" into the Lankan actions during the concluding phase of the war against the LTTE. The report also calls for investigations of "violations" of international law. In addition, India is uncomfortable with the idea of special rapporteurs being appointed to visit Sri Lanka, fearing that at some stage it could come back to bite New Delhi.  

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையின் படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது." என்கிறது  Times of India.

"இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் அது இந்தியாவையும் குற்றவாளியாகக் காணுமா?" இதற்கான பதில்:

இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்தியா இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர்.


இதில்  இன்னும் ஒரு செய்தியும் அடிபடுகிறது. அதன்படி புது டில்லியின் முடிக்குரிய இளவரசர் பிரபாகரனின் முழுக் குடும்பத்தையும் போட்டுத் தள்ளுங்கள் என கொழும்பை வேண்டியதை கொழும்பில் பதிவு செய்து வைத்திருந்து கொழும்பு மிரட்டுகிறதாம். அதைப் பகிரங்கப்படுத்தினால் இளவரசர் போர் குற்றத்திற்காக மின்சாரக் கதிரையை சந்திக்கலாம். அதுமட்டுமல்ல அவர் அரியணை ஏறவும் முடியாது.

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை இலங்கையில் தமிழர்களுக்கு விடிவில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...