Saturday 26 January 2013

இரண்டு ஆண்டுகளாகியும் முற்றுப் பெறாத எகிப்தியப் புரட்சி

ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது.

எகிப்தில் புரட்சியை ஆரம்பித்து வைத்த அஸ்மா மஹ்புஸ்

துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல்  18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள்.

இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் மோர்சியும்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புரட்சிக்குப் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு வெற்றி பெற்று மொகமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். மற்றக் கட்சிகள் ஒரு ஒழுங்கான கட்டமைபுடன் இருக்காதமையால் மோர்சி இலகுவாக ஆட்சிக்கு வரக்கூடியதாக இருந்தது. மோர்சியின் கட்சி இசுலாமியவாதக் கட்சியாக இருந்தமையும் இலகுவான் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் ஹஸ்னி முபாராக்கிற்கு எதிராகப் புரட்சி செய்த இளைஞர்கள் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியையும் எகிப்தை முற்போக்குப் பாதையில் புதுமைப்படுத்த விரும்பியிருந்தனர். புரட்சியை முன்னெடுத்தவரகளின் கொள்கைகளுக்கு ஏற்ப எகிப்தின் புதிய அரசமைப்புச் சட்டமும் உருவாக்கப்படவில்லை.

பெண்ணிய விரோத இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெண்களைப்பற்றிப் போதிப்பது என்ன? இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக எகிப்திய மக்களுக்குப் போதிப்பது என்ன? :

  • பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள்.  
ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு பெண்களின் விவாகரத்து உரிமையைப் பறிக்க முயன்றது. பெண்களுக்கான தேசிய சபை என்னும் பெண்ணுரிமை அமைப்பு இதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பெண்களின் திருமண வயதை 12ஆகக் குறைக்க முயன்றது ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு. மீண்டும் பெண்களுக்கான தேசிய சபை கொதித்தெழுந்தது. மிக இளம் பெண்களின் பிறப்புறுப்பின் குறித்த ஒரு பகுதியைத் சிதைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நீக்க இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு முயன்றது.பல இடங்களில் இந்தச் சிதைப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்களை சகோதரத்து அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் திருமணமாகாத பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனக்குள்ளாக்கப்படுகிறது. 

 எகிப்த்தியத் தேர்தலின்போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு வாக்காளிக்காத தனது கர்ப்பிணி மனைவியை ஒருவர் அடித்துக் கொன்றார்.  இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் விருப்பத்துக்குரிய ஷரியா சட்டப்படி ஒரு கணவன் தனக்குக் கீழ்ப்படியாத மனைவியை அடிக்கு உரிமை பெற்றிருக்கிறான். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதைப்பற்றி முறையிடும் பெண்கள் ஆண்களைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எகிப்தில் பெரும்பாலான பெண்கள் இசுலாமிய முறைப்படி தலையை மூடித்தான் ஆடை அணிவாரக்ள்.

முன்பிலும் மோசமான நிலை
புரட்சியை முன்னெடுத்த இளைஞர்கள் எகிப்த்தின் தற்போதைய நிலையில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஹஸ்னி முப்பாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட காவற்துறை வன்முறையிலும் பார்க்க மோசமான வன்முறை இப்போது அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. பொருளாதாரம் சீர் கெட்டுக் கொண்டு போகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 36பில்லியன் டாலர்களாக இருந்த எகிப்திய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு இப்போது 15 ஆகக் குறைந்துள்ளது. சுற்றுலாத் துறை வருமானம் ஹஸ்னி முபாரக் காலத்தில் இருந்தது போல் இன்று இல்லை. 45 மில்லியன் மக்கள் வறியவர்களாக இருக்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனை அதிகரிக்கிறது. அரச கடன் கட்டுக்கு அடங்காமல் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியின் 80% ஆக இருக்கிறது. எகிப்திய நாணயம் பலவீனமடைவதால் வெளியார் முதலீடு குறைந்து செல்கிறது. பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கிறது.

எகிப்தியப் புரட்சியை முன்னெடுத்த தாராண்மைவாதிகளும் மத சார்பற்றவர்களும் மக்களைத் தமது கொள்கைகளுக்கு ஏற்ப வாக்களிக்கச் செய்வதில் தோல்விகண்டுள்ளனர். நடந்த ஐந்து தேர்தலிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு சாதகமாகவே முடிவுகள் அமைந்தன. அவர்கள் தங்கள் நியாயமான கொள்கைகளையும் கோரிக்கைகளையும் ஒரு அரசியற் செயற்திட்டமாக மாற்றுவதில் தோல்வி கண்டுள்ளனர். தனக்குச் சாதகமான ஒரு அரசமைப்பை உருவாக்குவதிலும் படைத்துறையினரின் உச்ச சபையிடமிருந்த (Supreme Council of the Armed Forces) அதிகாரத்தைப் பெறுவதிலும் மொஹமட் மோர்சி வெற்றி கண்டுள்ளார். புதிய அரசியலமைப்பு பேச்சுரிமைக்கு உகந்ததாக இல்லை.

மீண்டும் தஹ்ரீர் சதுக்கத்தில் புரட்சியாளர்கள்
எகிப்தியப்  புரட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவில் மீண்டும் புரட்சியாளர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடி வெளியேறு வெளியேறு என்று குரல் கொடுத்தனர். பேச்சுரிமையும் தன்னிச்சைப்படி செயற்படக்கூடிய நீதித் துறையும் தேவை என்பது அவர்களின் கோரிக்கைகளில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமை எகிப்தில் வெற்றியடைந்தால் அது மற்ற ஆபிரிக்க நாடுகளிலும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் சமூக நீதி பொருளாதார மேம்பாடு இல்லாத மக்களாட்சி வெற்றியளிக்காது. எகிப்தியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளில் மீண்டும் இளைஞர்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தமையும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் எகிப்தியப் புரட்சி முற்றுப் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.

Friday 25 January 2013

Microsoft இன் அதிரடிப் பட்டிகைக் கணனி (Tablet computer)

Microsoft நிறுவனம் அதிரடியாக் ஒரு புதிய  பட்டிகைக் கணனியை (Tablet computer) அறிமுகம் செய்துள்ளது. இது   ஆப்பிளின் பட்டிகைக் கணனிகளுக்கு  (Tablet computer) சவால் விடுமுகமாக பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் தனது பட்டிகைக் கணனிகள் மூலமும் கைப்பேசிகள் மூலமும் தனது விற்பனையையும் இலாபத்தையும் பெருக்கிக் கொண்டு வந்தது. இப்போது ஆப்பிளின் விற்பனை வளர்ச்சி குறையத் தொடங்கி விட்டது.

 $999 விலை மதிப்பிடப்பட்டுள்ள Microsoft நிறுவனத்தின் Surface Pro என அழைக்கப்படும் பட்டிகைக் கணனி உலகிலேயே விலை கூடிய  பட்டிகைக் கணனியாக இருக்கும். 64GB பட்டிகைக் கணனி $899ஆகவும் 128GB பட்டிகைக் கணனி $999 ஆகவும் விற்கப்படும். RAM ஆனது 4GB அளவைக் கொண்டுள்ளது.

Microsoftஇன் பட்டிகைக் கணனி விண்டோஸில் முழுமையாக இயங்கும். சகல செயலிகள்(Applications) இயக்கக்கூடியதாகவும் Office மற்றும் Adobe Photoshop போன்ற மென்பொருள்களையும் இயக்கக் கூடியதாக இருக்கும். Office இயக்க முடியாமை ஆப்பிளின் ஐ-பாட் பட்டிகைக்களின் பெரும் பின்னடைவு எனப் பல பயனர்கள் கருதுகின்றனர். இந்த இடைவெளியை Microsoftஇன் பட்டிகைக் கணனி நிரப்ப முயல்கிறது. அத்துடன் மடிக்கணனி போல் நல்ல விசைப்பலகையையும் கொண்டுள்ளது. இவற்றால் இப்பட்டிகைக் office on the road எனக் கருதப்படுகிறது.

Surface Pro வையும் ஐ-பாட்-4ஐயும் ஒரு ஒப்பீடு:
நன்றி: டெய்லி மெயில்


Thursday 24 January 2013

Life of Pi திரைப்படம் எதிர்பார்ப்புக்களையும் மீறி சக்கைப்போடு போடுகிறது

பொம்பே ஜெயஸ்ரீயின் தமிழ்த் தாலாட்டுப் பாடலுடன் ஆரம்பமாகும் ஆங்கிலத் திரைப்படம் Life of Pi எதிர்பார்ப்புக்களையும் மீறி வசூலில் சாதனை படைத்து வருகிறது. Ang Lee இயக்கிய இப்படம் சிறந்த படம் சிறந்த இயக்குனர் உட்ப்ட 11 ஆஸ்கார் நியமனங்களையும் பெற்றுள்ளது.

Yann Martel என்னும் பிரபல நாவலாசிரியர் 2001இல் எழுதிய விருது பெற்ற Life of Pi நாவலை David Magee என்னும் இன்னும் ஒரு எழுத்தாளர் திரைக்கதையாக்கி உருவாக்கப்பட்ட படம் தோல்வியில் முடியும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

குடியேற்ற ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் பிறந்த Piscine Patel என்னும் தமிழ்க்குடும்பத்தில் பிறந்த சிறுவனின் கதை இது. இவனது தந்தையார் ஓரு மிருகக் காட்சிச் சாலையை சொந்தமாக வைத்திருக்கிறார். Piscine  என்பது பிரான்ஸில் இருந்த ஒரு நீச்சல் தாடாகத்தின் பெயர். இது Pissing  என்ற ஒலியுடன் உச்சரிக்கப்படும். இதனால் மற்றவர்களால் கேலி செய்யப்படும் சிறுவன் பெய்ரைத் தானே Pi என்று மாற்றி விடுகிறான்.



Piஇன் குடும்பம் மிருகங்களுடன் கண்டாவிற்குப் பயணமாகும் போது கப்பல் கவிழ்ந்து Piயும் ஒரு வங்கப் புலியும், ஒரு வரிக்குதிரையும், ஒரு குரங்கும், ஒரு ஹையீனாவும் படகொன்றில் தப்புகின்றனர். திக்குத் தெரியாத நடுக்க்கடலில் நீண்ட நாட்களாக இவர்களுக்கிடையிலான போராட்டம் படத்தின் முக்கிய அம்சம். பலத்த ஆபத்தான கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர்கிறது.

தன் காதலியை பிரிந்து சென்ற கடலில் நீண்ட நாட்கள் இருக்கும் போது அவளை ஒருதடவை கூட நினைத்துப் பார்க்கவில்லை. இதையே தமிழ்ப்படமாக எடுத்தால் flash backஇல் காதலியுடன் குறைந்தது இரண்டு பாடல்களாவது இடம்பெற்றிருக்கும்.



சிறுவனின் தாயாக வரும் தபுவைத் தவிர மற்ற நடிகர்கள் பிரபலமற்ரவர்கள். $120மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட Life of Pi திரைப்படம் வசூலில் $500மில்லியன்களைத் தாண்டியுள்ளது. சீனாவிலும் Life of Pi திரைப்படம் சக்கைக்ப் போடு போடுகிறது. அங்கு மட்டும் வசூல் $90.8மில்லியனகள்.

Tuesday 22 January 2013

இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சமடையும் போது ஈழம் உருவாகுமா?

ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர்  James Holmes என்பவர்.  James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs.

James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளார்.

உலக வல்லரசுகளின் சீனா மட்டுமே எந்த வித கடற்போரிலும் ஈடுபடாத கடற்படையைக் கொண்டுள்ளது. சீனா இப்போதுதான் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகிறது. அண்மையில்தான் சீனா விமானம் தாங்கிக் கப்பல்களை தனது கடற்படையில் இணைந்துள்ளது.
சீனாவின் கிழக்கிலும் தெற்கிலும் மட்டுமே கடல் இருக்கிறது. இவை ஆழமான கடல் அல்ல.

சீனாவிற்கு ஒரு கடற்பாதை முக்கியம்
சீனாவின் மூலப் பொருள் கொள்வனவிலும் (அதிலும் முக்கியமாக எரிபொருள் கொள்வனவனவில்) அதன் எற்றுமதித் துறைக்கும் ஒரு நீண்ட கடற்பாதை தேவைப்படுகிறது. புராதான காலத்தில் சீனா ஒரு பட்டுப் பாதையை ரோமாபுரிவரை வைத்திருந்தது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்துமாக் கடலூடாக நடக்கிறது. சீன எரிபொருள் கொள்வனவின் 85% இந்துமாக்கடலூடாக நடக்கிறது. இந்தப்பாதையில் இலங்கையும் பர்மா எனப்படும் மியன்மாரும் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்து மாக்கடலின் முத்து என ஒரு காலத்தில் விபரிக்கப்பட்ட இலங்கை சீனாவின் முத்துமாலையிலும் இடம்பெற்றிருக்கிறது. இலங்கையில் ஒரு நீண்டகால அடிப்படையில் சீனா தனது பிடியை மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது.

இலங்கையை வளரவிட்ட இந்தியா.
1972இல் பாக்கிஸ்த்தானில் இருந்து பங்களாதேசத்தைப் பிரிக்கும் போர் நடக்கையில் இலங்கையூடாக பாக்கிஸ்த்தானியப் போர் விமானங்கள் பறந்து சென்றமை இந்தியவில் விவாதிக்கப்பட்டபோது நிலமை மோசமானால் இலங்கையை தம்மால் ஒன்பது நிமிடத்திற்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. ஆனால் இன்று இலங்கை பலமிக்க ஒரு படைத்துறையை இந்தியாவின் பணத்தின் மூலமும் பயிற்ச்சியின் மூலமும் கட்டி எழுப்பியுள்ளது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் தன் மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கட்டும் என்ற கொள்கையுடன் ஈழ விடுதலையை அடக்க தமது பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டனர். இலங்கையை இலங்கை திருமலையில் அமெரிக்கா எண்ணை நிரப்பு வசதிகளைப் பெற முயன்றபோது கொதித்தெழுந்தார். தமிழர்களை இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடச் செய்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவரால் சாதிக்க முடிந்தது. தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் சீனா அம்பாந்தோட்டையில் பெரும் துறைமுகம் அமைத்த போது ஏதும் செய்ய முடியாமல் இருக்கின்றனர். சீனா தெற்காசியாவிலேயே உயரமான Lotus Towerஐக் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கொழும்பில் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதனால் சீனாவால் இந்தியாவின் எந்தப் பிரதேசத்தையும் வேவு பார்க்க முடியும். இது இந்தியாவைப் பொறுத்தவரை முத்து மாலைத் திட்டத்திலும் ஆபத்தான ஒன்றாகும்.

மீண்டும் கோத்தபாயவின் Masterstroke
போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் இந்தியாவைப்பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்தினார். அதில் ஒன்று போர் முடிந்த பின் இந்தியா தன்னிடம் உள்ள இலங்கை இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக் காட்டி இலங்கையை இந்தியா மிரட்ட, கோத்தபாய ராஜபக்கச தன்னிடம் இலங்கையின் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஆதாரங்களைக் காட்டிப் பதிலுக்கு மிரட்டினார் என்கிறார். இந்த மிரட்டலை வீ எஸ் சுப்பிரமணியம் துடுப்பாட்டப் பாணியிலும்(கிரிக்கெட்) இராசதந்திரப்பாணியிலும் கோத்தபாயவின் MASTER STROKE என்று வர்ணித்தார். ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க இந்தியா வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர் என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். கோத்தபாய மீண்டும் ஒரு MASTER STROKE விளையாடியுள்ளார். அமெரிக்காவின், இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்காக செல்லவிருந்த மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவை அமெரிக்கா குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தது பற்றிக் கருத்துத் தெரிவித்த கோத்தபாய ராஜ்பக்ச:
  • அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்தினால், நாம் சீனாவிடமிருந்து தேவையானவற்றை பெற்றுக்கொள்வோம்.
இலங்கையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்கா.
இலங்கையின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா தனது கரிசனையை கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருவதை நாம் அறிவோம். அத்துடன் 2013 மார்ச் மாதம் நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து வெளிவந்துள்ளது. அமெரிக்காவால் பன்னாட்டு அரங்கில் இலங்கையை எதுவும் செய்ய முடியாது. மனித உரிமைக்கழகத்தில் கண்டிக்கலாம தண்டிக்க முடியாது. ஆகக் கூடியது அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தலாம்.  கடன்களை நிறுத்தலாம். பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கலாம். இவற்றை சீனாவால் ஈடு செய்ய முடியும். ஐநா பாது காப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை அமெரிக்காவால் நிறைவேற்ற முடியாது. இதனால் இலங்கையின் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்காவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ பயப்பட வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவாலோ அல்லது இந்தியாவாலோ அல்லது இரண்டும் இணைந்தோ ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. 2010இல் நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்கா இலங்கையில் தனக்கு இசைவான சரத் பொன்சேக்காவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்திய் அதிகார மையம்
1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுக்க அப்போதைய இந்திரா காந்தியின் அரசு இலங்கைத் தமிழர்களுக்கு படைக்கலன்களையும் பயிற்ச்சிகளையும் வழங்கியது. பலர் இந்திரா காந்தி இறந்தபடியால் பிறகு வந்த ராஜீவ் காந்தி தமிழர்களைக் கைவிட்டது என்று எண்ணுகின்றனர். ஆனால் இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தாலும் ராஜீவ் செய்ததையே செய்திருப்பார். சிங்களவர்களைத் தமது நண்பராக்கி தமிழர்களைக் கைவிட்டிருப்பார். ஆனால் இலங்கையின் ராசதந்திரக் கைக்கூலி போல் இந்தியா செயற்பட்டிருக்க மாட்டாது. தற்போதைய இந்திய அதிகார மையம் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று மன்மோகன் சிங் தலைமையிலான மந்திரிசபை. மற்றது சோனியா காந்தியின் வீடு. இரண்டாவதில் சிவ் சங்கர மேனன் போன்ற ஆலோசகர்களும் சில பணமுதலைகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆலோசகர்களுக்கு தமிழர்கள் அடக்கியாளப்பட வேண்டியவர்கள் என்ற மனுதர்ம மனோப்பாங்குடன் இருக்கின்றனர்.பண முதலைகள் இலங்கையை எப்படி பொருளாதார ரீதில் சுரண்டி தம் இலாபத்தைப் பெருக்கலாம் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர். 22-01-2013இல் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் புதுடில்லியில் செய்து கொண்ட பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும் இந்த இருதரப்ப்பினரையும் திருப்திப்படுத்துவதாகவே இருந்தன.

அமெரிக்க சீனப் பங்காளிகளின் போட்டி
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் தேவையை சீனா பூர்த்தி செய்கிறது. சீனா தனது நாட்டின் வேலையில்லாப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதியில் தங்கியிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை சீனா ஒரு வர்த்தகப் பங்காளி. அதே நேரம் சீனாவின் வளர்ச்சி தனது உலக முதன்மை ஆளுமை நிலைக்குச் சவாலாக அமையுமா என்ற பயம் இருக்கிறது. சீனா இணைய வெளி ஊடுருவல்கள் மூலம அமெரிக்காவின் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும்  மற்றும் வர்த்தகத் துறைத் தொழிநுட்பங்களையும் திருடிவருகிறது என்ற ஆத்திரமும் அமெரிக்காவிடம் இருக்கிறது. சீனா தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது ஆதிக்கத்தைப் பெருக்குவதையும் அங்குள்ள தீவுகளில் உள்ளதாகக் கருதப்படும் வளங்களைத் தனதாக்குவதையும் தனது முன்னுரிமைக்குரிய மூலோபாயமாகக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஜப்பான், தாய்வான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் கைகோர்த்து சீனாவை எதிர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா ஒஸ்ரேலியா, நியூசிலாந்து இந்தியா போன்ற நாடுகளையும் இந்த நாடுகளுடன் இணைந்து ஒரு பெரும் ஆசிய பசுபிக் கூட்டணியை அமைத்து சீனாவைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. அத்துடன் இந்த நாடுகளுக்கு தனது படைக்கலன்களை விற்பனை அதிகரிக்கிறது. ஜப்பானியப் புதிய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை வர்த்தக ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் அதிகரித்து இவ்விரு துறைகளிலும் சீனாவைச் சமாளிக்க முயல்கிறது.

இரசியாவின் கியூபாபோல் சீனாவிற்கு இலங்கை அமையுமா?
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசிய-அமெரிக்க ஆதிக்கப் போட்டியில் கியூபா பெரும் பங்கு வகித்தது. கியூபாவில் இரசியா அணுப் படைக்கலனகளைக் குவிக்க அதனால் தன் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என ஜோன் F கெனடி தலைமையிலான அமெரிக்கா கொதித்தெழ இரு வல்லரசுகளுக்கு இடையில் அணுப் படைக்கலப் போர் மூழும் அபாயத்தை 1962இல் Cuban missile crisis உருவாக்கியிருந்தது. இரசியா தனது அணுப்படைக்கலன்களை கியூபாவில் இருந்து அகற்ற ஒத்துக் கொண்டது. இதன் பின்னர் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் தொடர்ந்த முறுகல் நிலை பனிப்போர் எனப்பட்டது. இப்படி ஒரு நிலை இலங்கையில் ஏற்படுமா? சீனா தனது தந்திரோபாயங்களை மிக நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. அந்த நீண்ட்காலத் தந்திரோபாயத் திட்டத்தில் இலங்கைக்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு இலங்கையின் பூகோள நிலைமட்டும் காரணமல்ல. சிங்களவர்கள் ஆசியப் பிராந்தியத்திலேயே சீனாவின் நம்பகரமான நண்பர்கள். சிங்களவர்கள் அடிப்படையில் இந்தியாவை வெறுப்பவர்கள். அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தையும் வெறுப்பவர்கள். கொழும்பு வாழ் சில பெரும் பணக்காரர்களும் தாராண்மைவாதிகளும் அமெரிக்காவை விரும்பலாம். இப்போது முனைப்படைந்திருக்கும் சிங்களப் பேரினவாதிகளும் பௌத்த மத வெறியர்களும் தங்களது உபாயங்களிற்கு சீனாவைப் பெரிதும் நம்பி இருக்கின்றனர். இந்தியாவை தற்காலிக கருவியாகப் பாவிக்க விரும்புகின்றனர்.

தமிழர்களுக்கு பயன் தருமா?
அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் வளரும் சீன ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதற்காக தமிழர்களைத் தேடி வரும் என்று சிலர் நம்புகின்றனர். இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சக் கட்டத்தை அடையும் போது தமிழர்களுக்குச் சாதகமான நிலை தோன்றும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சிலர் தமிழர்களுக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கனவு காண்கின்றனர். இலங்கையில் சீனாவின் உச்சக்கட்ட ஆதிக்கம் ஏற்பட இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கலாம். அதற்கு முன்னர் சீனாவை தென்சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் சீனா முடக்கப்படலாம். அதன் ஆதிக்கப் போக்கு அங்கே கட்டுப்படுத்தப் படலாம். இது இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் நடக்கலாம். தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் மட்டுமல்ல ஒஸ்ரேலியா, நியூசிலாந்து  ஆகியவற்றிற்கு எதிராக சீனா வெற்றி பெறுவது எந்த அளவு சாத்தியம். உலகிலேயே மோசமான அயல் நாடுகளைக் கொண்ட நாடு சீனா. வட கொரியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் "நண்பர்கள்". ஏற்கனவே ஜப்பானுடனும் இரசியாவுடனும் போர் புரிந்து தோல்வியடைந்த நாடு சீனா. இந்தியாவுடன் போரில் வென்றது. இரசியாவுடன் எல்லைப் பிரச்சனை சீனாவிற்கு உண்டு. இந்தச் சூழலில்  தென் மற்றும் கிழக்குச் சீனக் கடல்களில் கடற்படை வலுவில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் சீனா வெற்றி பெற்ற பின்னர் இலங்கையில் தனது அணுப்படைக்கலன்களைக் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிறுத்தும் போது நடக்கும் போரில் ஈழம் கிடைக்குமா அல்லது வடக்குக் கிழக்கு இணைந்த தன்னாட்சி தமிழர்களுக்குக் கிடைக்குமா?   இப்படி ஒரு நிலைமை வரட்டும் என்று நாம் காத்திருந்தால் அந்த நிலைமை வரமுன்னர் இலங்கை முழுக்கச் சிங்களமயமாகி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சிறுபானமையினராக்கப்பட்டு விடுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் சிங்களவர்களை நண்பராக்குவதற்கு மிகவும் கடுமையான முயற்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்களை இணக்கப்பாடு என்ற பதத்தைக் காட்டி ஏமாற்றி அவர்களைச் சிங்கள மேலாதிக்கத்திற்கு கட்டுபட வைக்க முயற்ச்சிக்கின்றனர் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் செயல்களும் சொற்களும் எடுத்துக் காட்டுகின்றன. அமெரிக்கா அதிகாராப் பரவலாக்கம் என்ற பதம் பாவிப்பதே இல்லை. அது சிங்களப் பேரினவாதிகளை ஆத்திரப்படுத்தும் என்பதை அவர்கள் அறிவர். அமெரிக்க நிர்வாகம், பாராளமன்றம், படைத்துறைக் கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சிங்களவர்களின் நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு மாற்று வழிகள் உண்டு.
சீனாவின் கடற்பாதையக் கட்டுப்படுத்துவதாயின் அமெரிக்கா அதை மத்திய கிழக்கின் வளைகுடாப் பிராந்தியந்த்தில் வைத்துச் செய்ய முடியும். இந்துமாக்கடல் போன்ற ஒரு பெரும் கடலில் வைத்து அதைச் செய்வதிலும் பார்க்க வளைகுடா போன்ற ஒரு சிறு கடலில் வைத்து அதை இலகுவாகச் செய்ய முடியும். அங்கு அமெரிக்காவின் தளங்களும் இருக்கின்றன.

அமெரிக்காவிற்கு ஈழத்தில் தளம் தேவையா?
அமெரிக்காவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதன் கடற்படைத் தளத்தை என்பது ஒரு மிதக்கும் தளமாக மாற்றிவருகின்றது. படையினரின் ஓய்வெடுக்கும் மற்றும் அவசர மீள் நிரப்பல்கள் போன்றவற்றிற்கு தென் சீனக் கடற்பிராந்தியத்தில் செய்து கொள்ளலாம். ஈழத்தில் ஒரு தளம் என்பது அமெரிக்கவின் கட்டாயத் தேவை அல்ல.

பன்னாட்டு நிலைமை எமக்குச் சாதகமாக மாறும் என நாம் காத்திருக்க முடியாது.

Monday 21 January 2013

உலகெங்கும் உள்ள விநோதமான சட்டங்கள்.

சீனாவின் அரசின் அனுமதியின்றி யாரும் மறு பிறவி எடுக்க முடியாது.

நெதர்லாந்தில் எங்கு வேண்டுமானாலும் கஞ்சா புகைக்கலாம் ஆனால் புகையிலை புககைக்க முடியாது

போர்த்துக்கலில் கடலுக்குள் ஒண்ணுக்கடிக்க முடியாது.

Samoaவில் மனைவியின் பிறந்த நாளை மறத்தல் குற்றம்.

பிரித்தானியாவில் கர்ப்பிணிப் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கிருக்கலாம்.

துபாயில் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் உல்லாச விடுதி அறையில் தங்கலாம்.

தாய்லாந்தில் நாணயத்தை காலால் மிதித்தல் குற்றம்.

சவுதி அரேபியாவில் மருத்துவரின் சான்றிதழின்றி நீங்கள் உங்களுடன் மருந்து வைத்திருக்க முடியாது.

எகிப்தில் விமான நிலையங்களிற்கு அண்மையில் தொலை நோக்குக் கருவிகள் வைத்திருக்க முடியாது.

 வெனிஸ் நகரில் புறாக்களுக்குத் தீனி போடுதல் குற்றம்.

நைஜீரியாவிவ்ல்  beer, mineral water, soft drinks, sparkling wine and fruits போன்றவற்றை இறக்குமதி செய்வது சட்ட விரோதம்

ஃபின்லாந்தில் போக்குவரத்துத் தொடர்பான தண்டம் உங்களது வருமானத்தைப் பொறுத்து விதிக்கப்படும்

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து வாகனங்களிலும் வேறு சில இடங்களிலும் chewing gum சப்புதல் சட்ட விரோதம்.

வட கரோலினாவில் பிரேதத்தின் முன் கெட்ட வார்த்தைகள் சொல்லுதல் சட்ட விரோதம்,

இஸ்ரேலில் ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் மூக்கை நோண்டுதல் குற்றம்,

சுவீடனில் பெண்கள் பாலியல் தொழில் புரிவது குற்றமல்ல. அவர்களின் சேவையை ஆண்கள் பெறுவது குற்றம்.

தாய்லாந்தில் உங்கள் உள்ளாடையின்றி வெளியில் செல்வது குற்றம்.

ஜேர்மனியில் விரைவு பெருந்தெருக்களில் வாகனங்களை நிறுத்துவது குற்றம்.  அங்கு பெற்றோல் முடிந்து வாகனங்கள் நின்றாலும் குற்றம்.

லெபனானில் ஆண் மிருகங்களுடன உடலுறவு கொள்ளுதல் குற்றம். பெண் மிருகங்களுடன் உறவு கொள்வது குற்றமல்ல.

ஒக்லோஹோமா(அமெரிக்கா) மிருகங்களுக்கு அழகு காட்டுதல் (ஈழத் தமிழில் நைக்காட்டுதல்) குற்றம்.

Salt Lake County, Utah இல் வயலினை காகிதப் பையில் காவிக்கொண்டு தெருவில் செல்லுதல் குற்றம்.

டெக்ஸஸில் நிர்வாணமாக நின்று கொண்டு தளபாடங்கள் செய்தல் குற்றம்

Bozeman, Montana இல் சூரியன் மறைந்த பின்னர் முற்றத்தில் உடலுறவு கொள்ளுதல் குற்றம்.

சன் பிரான்ஸிஸ்க்கோவில் உள்ளாடையால் வாகனத்தைத் துப்பரவாக்குதல் குற்றம்.

பிரான்சில் வேற்றுலக வாசிகளின் பொம்மையை விற்றல் குற்றம்.

மசாச்சுஸெற்றில் குளிக்காமல் உடலுறவு கொள்ளுதல் குற்றம்.

இலண்டனில் மக்கள் பயணிக்கும் வாடகை வாகனங்களில் பிரேதத்தை கொண்டு செல்லல் குற்றம்.

பிரித்தானியப் பாராளமன்றத்தில் இறத்தல் குற்றம்.

பிரித்தானியாவில்ல் ராணியின் முத்திரையை தலைகீழாக ஒட்டுதல் தேசத் துரோகக் குற்றம்.

டெக்சஸ்ஸில் குண்டில்லாத துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டுதல் குற்றம்

Arkansasஇல் திருமண ஆடை அணியும் ஆசையை நிறை வேற்றுவதற்காக இரண்டாம் முறை திருமணம் செய்தல் குற்றம்

ஒஸ்ரேலியாவில் உள்ள் விக்டோரியாவில் பிற்பகலில் ரோசாப்பூ நிற உள்ளாடையை அணிதல் குற்றம்

ஸ்பானிய நகர் பார்சலோனவில் நீச்சலுடையுடன் தெருவில் செல்லல் குற்றம்.

டென்மார்க்கில் ஒருவர் வயிறு நிறையச் சாப்பிடாமல் அவரிடம் உணவகத்தில் பணம் அறவிட முடியாது. 

அல் கெய்தா மீளவும் எழுச்சியடைகிறதா?

தற்போது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலாளாராக இருக்கும் லியோன் இ பானெற்றா அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் தலைவராக இருந்த போது அவரது தீவிர செயற்பாட்டல்  பின் லாடன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளார் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்றவுடன் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். அதன் போது ( ஜுலை 2011) அவர் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" என்றார். அல் கெய்தா தோற்கடிக்கப்படக் கூடியதா?

ஹமாஸ் என்றால் பலஸ்தீன மேற்குக் கரை, ஹிஸ்புல்லா என்றால் லெபனான். தலிபான் என்றால் ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான். லஷ்கர்-இ-தொய்பா  என்றால் பாக்கிஸ்தான்.  ஆனால் அல் கெய்தா ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குள் அடங்கவில்லை. அது பல நாடுகளில் பரந்து இருக்கிறது. 

தொடர்பாடலுக்கு மாற்றீடு

9-11 இன் பின்னர் அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்ட பின்னர் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும்.

தன்னிச்சைக்கிளை (franchise) அல் கெய்தாக்கள்
அல் கெய்தாவின் franchise இயக்கங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வட அமெரிக்க நாடுகளுக்கும் எதிரான தமது புனிதப் போரை முக்கிய இலக்காகக் கொண்டு செய்றபடுகின்றன.
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அல் கெய்தா இன் அரபுக்குடாநாடு -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.
இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் அல் கெய்தாவின் தலைமைப் பீடம் இருக்கும் ஆப்-பாக் எல்லையில் பயிற்ச்சி பெற்றவர்கள். இங்கு பயிற்ச்சி பெற்றுத் திரும்பும் புனிதப் போராளிகள் போர்த் திறனிலும் உலக அரங்கு தொடர்பான அறிவிலும் மேம்பட்டவர்களாக இருப்பர்.

இவற்றில் 2012இல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அரபுக்குடாநாட்டு அல் கெய்தா(AQAP) செயற்பட்டது. அமெரிக்க ஆளில்லா விமானங்களும் இவர்களை இல்க்கு வைத்தே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன. 

2013இன் ஆரம்பத்தை இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) அல்ஜீரிய பணயக் கைதிகள் மூலம் தனதாக்கிக் கொண்டது. மேற்கு நாடுகளையும் அதன் நண்பர்களையும் அது 2013 ஜனவரி மூன்றாம் வாரம் கலங்கடித்துவிட்டது. Maghreb என்பது வட மேற்கு ஆபிரிக்காக் கண்டத்தைக் குறிக்கும். இதில் எகிப்து, லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா துனிசியா, மாலி ஆகியவை அடங்கும். அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரம் அல் கெய்தா மீளவும் எழுச்சியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பினாலும் காத்திரமான அல் கெய்தாவின் செயற்பாடு மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா இயக்கம் துவாரெக் இனக்குழும விடுதலை இயக்கமான அன்சார் டைனுடன் இணைந்து கைப்பற்றியதுடன் வெளிப்பட்டது. மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா அன்சார் டைன் இயக்கத்துடன் இணைந்து கைப்பற்றியதுடன் மேலும் தெற்கு நோக்கி துரித கதியுடன் முன்னேறத் தொடங்கியது.

அல் கெய்தாவிற்குள் பதவிப் போட்டி
பல தன்னிச்சைக்கிளைகளாகச் செயற்படும் அல் கெய்தாவிற்குள் தான் முக்கியத்துவம் பெறுவதற்காகவே மொக்தர் பெல்மொக்தர் அல்ஜீரியப் பணயக் கைதிகள் நாடகத்தை அவசரப்பட்டு அரங்கேற்றினார் என அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளதாகச் சில தகவல்கல் தெரிவிக்கின்றன.  பெல்முக்தருக்கும் அபு முசாம் அப்துல் வடௌட்டிற்கும் (Abu Musab Abdel Wadoud) ஒரு தலைமைப் போட்டி நிலவுகிறதாம். பெல்முக்தர் இரத்தத்தில் ஒப்பமிடுவோர் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளாராம்.

மாலிக்குள் பாய்ந்த பிரான்ஸ்
வட ஆபிர்க்காவில் அல் கெய்தா தனக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி விடுமா என்ற அச்சம் பிரான்ஸை அங்கு படைரீதியாகத் தலையிட வைத்தது. மற்ற நேட்டோ நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் தீர்மானங்களை விரைவாக எடுக்கும் திறனுடையது என்பதை மாலிக்குத் தனது படையை விரைவாக அனுப்பியதன் மூலம் நிரூபித்தது. பிரெஞ்சு விமானங்கள் துவாரெக் இனக்குழுமத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுதியது. பல புனிதப் போராளிகளும் அப்பாவிப் பொதுமக்களும் பிரெஞ்சு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸிற்கு அல் கெய்தாவின் பதிலடி
பிரான்ஸ் மாலியில் தாக்கி பின்னர் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே. தீவிரவாதிகள் விடயத்தில் கடுமைப் போக்குடைய அல்ஜீரிய அரசு ஒரு மணித்தியாலத்திற்குள் பணயக் கைதிகளில் நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய, ஜப்பான் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் படை நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டது.
 
சிரிய உள்நாட்டுப் போரில் அல் கெய்தா
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தந்திரோபாய மாற்றம்
சிரியாவிலும் மாலியிலும் அல்ஜீரியாவிலும் அல் கெய்தா வேறு வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டுள்ளது. சிரியாவில் போராளிகளோடு போராளிகளாக இணைந்தது. மாலியில் ஒரு நாட்டு உருவாக்கம் செய்ய முயல்கிறது. அல்ஜீரியாவில் மேற்கு ஐரோப்பியாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் எதிரான தமது தாக்குதலுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தது. மாலியில் பிரெஞ்சுப் படைகள் முன்னேறினாலும் அங்கு புனிதப் போராளிகளை பிரெஞ்சுப் படைகளால் முற்றாக அழிக்க முடியாது. வட ஆபிரிக்காவில் எந்த அரசினதும் கட்டுப்பாடுகளில் இல்லாத பிரதேசங்கள் பல இருக்கின்றன.  அவற்றுக்குள் பின்வாங்கிக் கொண்டு அவர்கள் தமது கரந்தடித் தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

அழிக்க முடியாத புனிதப் போராளிகள்
அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரத்தை சாட்டாக வைத்துக் கொண்டு இனி அமெரிக்கா வட ஆபிரிக்காவில் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை அதிகரித்து மேலும் பல அல் கெய்தாப் போராளிகளையும் தலைவர்களையும் கொல்லலாம். ஆனால் புனிதப் போராளிகள் முற்றாக அழிக்கப்பட முடியாதவர்களாகவே இருப்பார்கள். என் வீட்டுப் பின்புறத்தில் அழுக்கு நீர் இருக்கும் வரை நுளம்புத் தொல்லை இருக்கும்.

பிந்திக் கிடைத்த செய்தி:
ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் உள்ள போக்குவரத்துக் காவற்துறையின் தலைமையகத்தில் தலிபான் இயக்கத்தினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்து ஏழு மணித்தியாலங்கள் அங்கு சண்டை நடந்தது. ஆப் படையினர் தாமாகவே நேட்டோப்  படையினரின் துணையின்றி  நிலைமையைக் கையாண்டதாகத் தெரிவித்தனர்.

Sunday 20 January 2013

அவளைக் கவர உகந்த Machine

காதலிக்கப்படாமல் காதலிப்பவன்
தூக்கமின்றி கனவு காண்பவன்
பசியின்றி உண்பவன்
உழைப்பின்றி செலவளிப்பவன்
உருப்படாதவன்.

அவளைக் கவர்வதற்கு
Exercise Machine பாவித்தேன்
சரி வரவில்லை
ATM பாவித்தேன்
சரி வந்தது

காதலிக்கப்படாமல் காதலிப்பவன்
தூக்கமின்றி கனவு காண்பவன்
பசியின்றி உண்பவன்
உழைப்பின்றி செலவளிப்பவன்
உருப்படாதவன்.

விபச்சாரத்திற்கு
அரசு வழங்கும் அனுமதி
திருமணம்

பிரிக்க முடியாத   நட்பென்றார்கள்
அவர்கள் மோதிக் கொண்ட போது
பிரித்துவிடச் சிரமமாய் இருந்தது.

திருமணத்தின் முன்
அவள் பார்வை கவர்ந்தது
திருமணத்தின் பின்
அவள் பார்வை பிரித்தது

வெற்றிகரமான ஒவ்வொரு ஆணின் பின்னும்
ஒரு பெண் இருப்பாள் எப்போதும் நச்சரிப்புடன்
வெற்றிகரமான ஒவ்வொரு பெண்ணின் பின்னும்
ஒரு ஆண் இருப்பான் அவள் அழை இரசித்துக் கொண்டு



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...