Saturday 19 January 2013

அல்ஜீரியப் பணயக் கைதிகள்: முடிவின்றித் தொடர்கின்றது.

அல்ஜீரியாவின் இசுலாமியப் போராளிகள் இன்னும் பத்துப் பேரைப் பணயக் கைதிகளாக வைத்துள்ளனர். போராளிகளுக்கு அல்ஜீரிய அரசு இறுதிக் கெடு விதித்தும் பணயக் கைதிகள் விவகாரம் தொடரிகிறது. அல்ஜீரியாவின் லிபிய எல்லைக்கு அருகில் உள்ள அமீனா நகரில் உள்ள இயற்கை வாயு பெறும்  நிலையத்தின் பணியாளர்கள் 600 பேரை 16-01-2013 புதன் கிழமை இசுலாமியப் போராளிகள் குழு பணயக் கைதிகளாக்கியிருந்தது.

அல்ஜீரிய அரசு தாம் போராளிகளைச் சரணடையச் சொன்னோம். அவ்வளவுதான் மேற்கொண்டு பேச்சு வார்த்தை கிடையாது என உறுதியாகச் சொல்கிறது.

இதுவரை 30 பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தமது நாட்டவர்கள் பத்துப்பேரைக் காணவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஒரு அமெரிக்க நாட்டவரும் ஒரு பிரெஞ்சு நாட்டவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர்களின் அரசுகள் உறுதி செய்துள்ளன. பணயக் கைதிகள் விடுவிப்புப் பணியில் ஈடுபட பிரித்தானியச் சிறப்புப் படையணி ஒன்று சைப்பிரஸில் தயார் நிலையில் உள்ளது. ஆனால் பிரித்தானிய படை உதவியை அல்ஜீரிய அரசு வேண்டாம் என்று கூறிவிட்டது. மேற்கு ஐரோப்பிய நாட்டுப் படைகளையோ அல்லது அமெரிக்கப்படைகளையோ ஈடுபடுத்தினால் தமக்கு எதிரான இசுலாமியப் போராளிகளின் ஆத்திரம் இன்னும் கூடுன் என அல்ஜீரிய அரசு கருதுகிறது.

சரியான திட்டமிடல் இன்றி பணயக் கைதிகள் பிடிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குள் அல்ஜீரியப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் 30இற்கு மேற்பட்ட பணயக் கைதிகள் கொல்லப்பட்டதை பல நாடுகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் தம்மை போராளிகள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது அல்ஜீரியப் படையினர் தமது பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் தாக்குதல் நடத்தினர் என்றனர். ஒரு வாகனம் முழுமையாகத் தீப்பிடித்தது. இன்னும் ஒன்று பல அடிகள் உயரப் பறந்தது. சில பணயக் கைதிகளின் இடுப்பில் வெடி குண்டுகள் கொண்ட பட்டையைப் போராளிகள் இணைத்திருந்தனர். 600கைதிகளுள் 132பேர் வெளிநாட்டவர்கள். போராளிகள் அவர்களுள் இருந்த ஒரு ஐரிஷ் குடிமகனை முதலில் விடுவித்தனர்.போராளிகளில் ஒருவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதால் அவர் பிரித்தானியாவில் வாழ்ந்தவராக அல்லது குடிமகனாக இருக்கலாம் என பிரித்தானிய உளவுத் துறையான எம்.ஐ.5 சொல்கிறது.

இன்னும் போராளிகள் வசமிருக்கும் பத்து பணயக்கைதிகளில் ஒருவர்  அமெரிக்கர் இன்னும் ஒருவர் பிரெஞ்சு நாட்டவர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 போராளிகள் ஈடுபட்ட கடத்தல் நாடகத்தில் இப்போது பதின்மூன்றில் இருந்து பதினைந்துவரையான போராளிகள் பத்து பணயக் கைதிகளை தம்வசம் வைத்திருக்கின்றனர் எனப் பெயர் சொல்ல விரும்பாத அல்ஜீரிய அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுத் துறை பேச்சாளர் விக்டோரிய நுலண்ட் தாம் எந்த வித கைதிப் பரிமாற்றமும் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார். முன்னர் போராளிகள் அமெரிக்கச் சிறையில் உள்ள Sheikh Omar Abdel-Rahman என்னும் எகிப்தியக் குடிமகனையும் Aafia Siddiqui என்னும் பாக்கிஸ்தானியக் குடிமகனையும் விடுவித்தால தம் வசமுள்ளை அமெரிக்கக் குடிமகனை விடுவிப்பதாகத் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.

மொக்தர் பெல்மொக்தரின் தலைக்கான விலை அதிகரிப்பு
பணயக் கைதிகள் கடத்தலைத் தலைமை தாங்கி நடாத்திய மொக்தர் பெல்மொக்தரைக் கைது செய்வதற்கான தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களில் இருந்து பத்து இலட்சம அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொக்தர் பெல்முக்தர் பிரித்தானியாவில் செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய ரொபின் ஹூட்டையும் அமெரிக்காவால் கொல்லபப்ட்ட ஒசாமா பின் லாடனையும் கலந்த ஒரு மனிதர் எனப்படுகிறது. (Mokhtar Belmokhtar was described as a "cross between Robin Hood and Osama Bin Laden,") மற்ற இசுலாமிய புனிதப் போராளித் தலைவர்களைப் போல் அல்லாமல் இவர் கொஞ்சம் சாதுவானவர் எனப்படுகிறது. இவர் ஒரு சிறந்த வர்த்தகர் என்றும் சொல்லப்படுகிறது. அல்ஜீரியக் குடிமனான இவர் கடத்தல், வர்த்தகம், படைத்துறைப் போராட்டம் ஆகியவற்றில் வல்லவர். சிகரெட் கடத்தலிற்குப் பெயர் போனவர் என்பதால் இவர் "Mr. Marlboro" என்றும் அழைக்கப்பட்டார்.  வட மாலியிலும் தென் அல்ஜீரியாவிலும் உள்ள பல வறியவர்களுக்கு இவர் நிறைய உதவிகள் செய்துள்ளார். இவரது செயற்பாடுகள் புனிதப் போரும் வர்த்தகமும் கலந்தவையாக இருந்திருக்கிறது. பிரெஞ்சு உளவுத்துறை இவரை பிடிக்கப்பட முடியாதவர் ("The Uncatchable")என அழைக்கும். பெல்மொக்தரின் கைதியாக இருந்த ரொபேர்ட் ஃபவுலர் என்னும் கனடிய இராசதந்திரி அவரது படையணி தானறிந்த படைகளுள் மிகவும் இலக்கு சார்ந்த படையணி என்றார். பெல்மொக்தர் மாலிய அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர் எனப்படுகிறது. தமது நிலைகளுக்கு எதிராக பெல்மொக்தர் தாக்குதல் நடத்தாமல் இருக்க இவர் தமது நாட்டில் சுந்திரமாக நடாமட மாலிய அரசு அனுமதித்திருந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான போரில் இணைந்த பெல்மொக்தர் இருபது ஆண்டுகால புனிதப்போர் அனுபவமுடையவர். இவருக்கு இப்போது வயது 40.

பெல்மொக்தரின் படைகள் அல்ஜீரியாவில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

பத்து பணயக் கைதிகளுடன் தொடரும் பணயக் கைதிகளின் நாடகம் இன்னும் பல கொலைகளுக்கு வழி வகுக்கும்.

பிந்திக் கிடைத்த செய்திகள்:
அல்ஜீரியப் படையினர் அதிரடித் தாக்குதல் நடாத்தி பணயக்கைதிகள் விவகாரத்தை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளனர். 7 கைதிகளும் 11 போராளிகளும் கொல்லபப்ட்டுள்ளனர். 

மொக்தர் பெல்மொக்தரைக் கொல்ல ஏற்பாடு
அல்ஜீரிய பணயக் கைதி நாடகத்தின் சூத்திரதாரி மொக்தர் பெல்மொக்தரை கொல்ல பலநாட்டு உளவுப்படைகளும் ஆளில்லாப் போர் விமானங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன.


Friday 18 January 2013

அல்ஜீரியப் பணயக் கைதிகள் நாடகம்.

அல்ஜீரிய பணயக் கைதிகள் நாடகத்தின் சூத்திரதாரியாகக் கருதப்படுபவர் மொக்த்தர் பெல்மொக்த்தர் என்னும் கடத்தல் மன்னாகும். இலத்திரன் தொடர்பாடற் கருவிகளைக் கையாள முடியாமல் இருக்கும் இசுலாமியப் போராளி அமைப்புகளுக்கு அவற்றினடையே செய்திப்பரிமாற்றத்தைச் செய்பவராகவும் மொக்த்தர் பெல்மொக்த்தர் செயற்பட்டார். சிகரெட் கடத்தியதால் Mr. Marlboro என்று அழைக்கப்பட்டவர்.

மொக்த்தர் பெல்மொக்த்தர் பொருட்களைக் கடத்துவது மட்டுமல்ல ஆட்களையும் கடத்தி வைத்து கப்பம் வசூலிப்பதிலும் பல கோடிகள் சம்பாதித்தவர். இசுலாமிய போராளி அமைப்புக்களிற்கு படைக்கலன்களைக் கடத்திக் கொடுப்பதையும் தனது தொழிலாகக் கொண்டவர் இந்த ஒற்றைக்கண்ணர். வட ஆபிரிக்காவில் செயற்படும் இசுலாமிய போராளிகள் பணயக் கைதிகள் மூலம் 250மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.

மொக்த்தர் பெல்மொக்த்தர் அல் கெய்தாவின் பிராந்தியத் தளபதியாக இருந்தவர். பின்னர் அல் கெய்தாவில் இருந்து விலக்கப்பட்டவர். அவர் தலைமையிலான் போராளிகள் தம்மை குருதிப் படையணியினர் என அழைத்துக் கொண்டு இந்த பணயக் கைதிகளை சிறைபிடித்துள்ளனர். தம்மிடம் ஒன்பது வெளி நாடுகளைச் சேர்ந்த 40 பேர் உட்பட பலரைத் தாம் சிறைப்பிடித்ததாகச் சொன்னார்கள். இவர்கள் தம்மிடம் உள்ள கைதிகளுடன் லிபிய அரச கட்டுப்பாட்டில் இல்லாத லிபியப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்றனர்.

BP எனப்படும் British Petroleum அலிஜீரியாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் தொழிற்சாலையின் பணியாளர்கள் 600இற்கு மேற்பட்டோரைஅல் கெய்தாவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் Katibat Moulathamine என்னும் இசுலாமியப் போராளி அமைப்பு ஜனவரி 16-ம் திகதி இரவு பணயக் கைதிகளாக்கிக் கொண்டது. அவர்களின் நோக்கம் பணம் பெறுவதா அல்லது சிறையில் இருக்கும் தமது போராளிகளை விடுவிப்ப்பதா என்று இது வரை தெரியவில்லை. BPயின் இயற்கை எரிவாயு எடுக்கும் தொழிற்சாலை அலிஜீரியாவில் லிபிய எல்லைக்கு அருகில் உள்ள அமினா என்னும் இடத்தில் இருக்கிறது.


தமது நாட்டுக் குடி மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டிருக்கின்றனர் என அறிந்த பிரித்தானியா, அமெரிக்க்கா, ஆகிய நாடுகள் அல்ஜீரிய அரசுடன் தொடர்பு கொண்டு எதாவது  படை நடவடிக்கை எடுப்பதாயின் தம்முடன் கலந்து ஆலோசிக்கும் படி கேட்டுக் கொண்டன. ஆனால் இந்த நாடுகளுக்குத் தெரியாமல் அல்ஜீரியா பணயக் கைதிகளை வைத்திருப்போர் மீது தாக்குதலைத் தொடுத்தது.

பணயக் கைதிகளை வைத்திருப்போர் மீது அல்ஜீரியப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் மிகவும் பணயக் கைதிகளுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தது. இந்தப் படை நடவடிக்கையிட்டு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன. பிரான்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளது.  பிரான்ஸ் மாலி நாட்டில் அல் கெய்தா தீவிரவாதிகலுக்கு எதிராகச் செய்த தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே பணயக் கைதிகள் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்ற்னர் என Katibat Moulathamine என்னும் இசுலாமியப் போராளி அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் பணயக் கைதியாக சிறைபிடிக்கும் திட்டம் பிரான்ஸ் மாலியில் தாக்குதல் நடத்த முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என பல படைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

படங்கள் நன்றி: டெய்லி மெயில்

ஒரு மணித்தியாலத்திற்குள் போராளிகளை அல்ஜீரியப் படையினர் சூழ்ந்து கொண்டனர்.


பிரித்தானியா, ஜப்பான், ருமேனியா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், மலேசியா, நோர்வே மற்றும் ஐரிஸ் நாட்டவரும் பணயக் கைதிகளுள் அடங்குவர். ஐரிஸ் நாட்டவரை உடனேயே விடுவித்துவிட்டார்கள். அல்ஜிரியப்படைகளின் தக்குதலின் போது பல கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

மாலியில் அல் கெய்தா பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: மாலியில் அல் கெய்தா

அல்ஜீரியாவின் படை நடவடிக்கைகயின் போது என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அடிப்படைத் தகவல் கூட தம்க்குத் தெரிவிக்கவில்லை எனன அமெரிக்கா விசனம் தெரிவித்தது. அமெரிக்க ஆளில்லா வேவு விமானம் அல்ஜீரியாவில் வட்டமிடுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் சார்பாக பணயக் கைதிகள்விவகாரத்தைக் கையாளும் ஐரோப்பிய ராசதந்திரி அல்ஜீரியா அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜப்பானிற்கு கொடுக்கும் தகவல்கள் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டதாக இருக்கின்றன என்கிறார்.

அல்ஜீரியாவின் படை நடவடிக்கைகளின் போது 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்ரன. எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரியவில்லை. பல் வேறு இடங்களில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கின்றனர். பணயக் கைதிகளுடன் நாட்டை விட்டு வெளியேற போராளிகள் விடுத்த வேண்டு கோளை நிராகரித்த அல்ஜீரிய அரசு பணயக்கைத்களை விட்டுவிட்டு தனியாக வெளியேறலாம் என்றது. பணயக் கைதிகளுடன் வெளியேற முயன்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

பொதுவாக பணயக் கைதிகள் பிடிபட்டிருக்கும் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என இழுத்தடித்து சம்பந்தப்பட்டவர்களை களைப்பும் சலிப்பும் அடையச் செய்து விட்டு தாக்குதல் நடத்துவது வழமை. ஆனால் அல்ஜீரியா உடனே படை நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டது. 

அல்ஜீரியா இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக எப்போதும் கடுமையாகவே நடந்து கொள்கின்றது.

இலண்டனில் COBRA எனப்படும் Cabinet Office briefing room A பணிமனையில் பிரித்தானிய அரசின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. 

பிந்திக் கிடைத்த செய்திகள்:
18/01/2013 GMT 12.10:  போராளிகளுக்கு கடைசிச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக அல்ஜீரிய அரசு அறிவித்தது. போராளிகள் சரணடைய மறுத்தனர். அல்ஜீரிய அரசு எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத விதமாகதத் தாக்குவோம் என எச்சரித்தனர் போராளிகள். இதுவரை 18 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Thursday 17 January 2013

அல் கெய்தாவின் புதிய தந்திரோபாயமும் மாலியும்


மாலி மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. ஆபிரிக்கா கண்டத்தில் ஏழாவது பெரிய நாடு. அங்குள்ள வறிய நாடுகளில் ஒன்று. தனக்கென்று ஒரு தனித்துவ கலாச்சார, பாரம்பரிய, சரித்திரம் கொண்ட நாடு. ஆபிரிக்காவில் மாலியின் இசை மிகச்சிறந்த இசை எனக் கூறப்படுகிறது. இந்த மாலியில் நடக்கும் போர் உலகத்தின் கவனத்தை இப்போது ஈர்த்துள்ளது. மாலியில் இருக்கும் கனிம வளங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை.


மாலி இசை ஏன் ஹரிஸ் ஜெயராஜின் காதில் விழவில்லை? கேட்டுப்பாருங்கள்:


கனிம வளம் நிறை மாலி
மாலியில் bauxite, iron ore, base metals and phosphateஆகிய கனிம வளங்கள் இருக்கின்றன. 1.3மில்லியன் இரும்புக் கனிமம் மாலியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல மாலியில் தங்கமும் வைரமும் இருக்கின்றன. இல்மனைற்றும் நிறைய இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடிமட்டத்தால் வரைந்த அடி மட்ட எல்லைகள்
19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் ஒன்றிற்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு உலகின் பல பாகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றன. ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் பல பிரதேசங்கள் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டுகளுக்குக் கீழ் வந்தன. தாம் கைப்பற்றிய நாடுகளின் எல்லைகளை அங்கு வாழும் மக்களின் இன அடையாளங்களைக் கருத்தில் கொள்ளாமல் வகுத்துக் கொண்டன. பூகோள வரைபடங்களை வைத்து அடி மட்டங்களால் நேர் கோடுகளை வரைந்து தம் வசதிக்கு ஏற்ப ஆபிரிக்காக் கண்டந்தில் நாடுகளின் எல்லைகள் ஆக்கிரமிப்பாளர்களின் வசதிக்கேற்ப வரையப்பட்டன. ஒன்றுடன் ஒன்று ஒத்து வாழமுடியாத இனக்குழுமங்கள் ஒரு நாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஈராக், லிபியா, சிரியா, மாலி போன்ற நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு குடியேற்ற (காலனித்துவ)ஆட்சியாளர்களின் எல்லை வகுப்பு முக்கிய காரணம்.

மாலி காலியான கதை
11-ம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு வரை மாலியின் பொற்காலம். மாலியர்கள் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் பின்னர் பல அயல் நாடுகள் மாலியைக் கைப்பற்றி ஆண்டனர். 1898இல் பிரான்ஸ் மாலியை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. பிரான்ஸ் சூடான் என்னும் பெயர் மாலிக்குச் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் அடிபட்டுக் களைத்த ஐரோப்பிய நாடுகள் 1947இன் பின்னர் தமது குடியேற்ற ஆட்சி நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கத் தொடங்கின. 1960இல் மாலி பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மொடிபோ கீற்றாவின் தலைமையில் ஒரு ஒற்றைக் கட்சி சோசலிச அரசாக உருவெடுத்தது. 1968இல் ஒரு படைத்துறைப் புரட்சி மூலம் மூசா ட்ராரே ஆட்சியை கீற்றாவிடம் இருந்து கைப்பற்றினார். 1979இல் புது அரசியலமைப்பு, புது தேர்தல், புது ஆட்சி எனக் கலக்கினார் மூசா ட்ராரே. 1991இல் மீண்டும் புரட்சி மூசா விரட்டப்பட்டார். 1992இல் பல கட்சித் தேர்தலின் கீழ் அல்ஃபா கோனாரே ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995இல் 1999இல் உள்நாட்டு இனக்கலவரம் அரபு இனத்தவருக்கும் குன்ரா இனத்தவருக்கும் இடையில் நடைபெற்றது. 2002இல் தேர்தல் மூலம் அமடூ தூமானி பதவிக்கு வந்தார். தேர்தலில் முறை கேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2006இல் பிரிவினை கோரும் வட பிராந்தியம் வாழ் துவாரெக்(Tuareg) இனக் குழுமத்தினருடன் அல்ஜீரிய அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்த துவாரெக் இனத்தவர் 2009இல் அடக்கப்பட்டனர். 2012 மார்ச் மாதம் மூசா ட்ராரே படைத்துறையினரின் புரட்சியால் அகற்றப்பட்டார். 2012இல் மாலியின் வட பிராந்தியத்தில் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த துவாரெக் இனத்தவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். 2012 ஜூனில் துவாரெக் இனத்தின் அன்சார் டைன் (மதப் பாதுகாவலர்) இயக்கத்தினர் வட மாலியில் இசுலாமிய அரசை உருவாக்கி இசுலாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினர். 2012 நடுப்பகுதியில் அன்சர் டைன் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் இணைந்து திம்புக்து நகரைக் கைப்பற்றினர். பின்னர் 2012இன் இறுதியில் மேலும் முன்னேறி மாலியின் மத்திய பிராந்திய நகரங்களையும் கைப்பற்றினர். மாலிய மக்கள் தொகையில் 10% மட்டும் கொண்ட துவாரெக் இனத்தவரின் இந்த வெற்றி பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.

மாலியில் அல் கெய்தாவின் சோலி
அல் கெய்தா இயக்கம் மேற்கு நாடுகளை எதிர்ப்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட்டது. இசுலாமியர் பல கொடுங்கோலர்களின் ஆட்சியின் கீழ் பொருளாதார முன்னேற்றம் இன்றி அவதிப்படுவதைக் கருத்தில் கொல்ளவில்லை. விளைவு அரபு வசந்தம் மக்களின் இயல்பான புரட்சியானது.  துனிசியா, லிபியா, எகிப்த்து ஆகிய நாடுகளில் அல் கெய்தாவைப் புறந்தள்ளி விட்டு மக்கள் ஆட்சியாளர்களை விரட்டினர். இதில் லிபியப் புரட்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பியாவும் பேருதவி செய்தன. இதைத் தொடர்ந்து அல் கெய்தா தனது தந்திரோபாயத்தை மாற்றி கொண்டது. இயல்பாக எழும் மக்கள் எழுச்சியுடன் தானும் இணைந்தது. சிரியாவில் நடக்கும் போரில் அல் கெய்தா போராளிகள் பங்கு வகிக்கின்றனர். கொன்னா நகரைக் கைப்பறி தென் பிராந்தியத்தை நோக்கி அன்சார் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் முன்னேறத் தொடங்க அல் கெய்தா மாலியில் துவாரெக் இனக்குழுமத்துடன் இணைந்து தனக்கு என ஒரு நாட்டை உருவாக்கி விடும் என்ற அச்சம் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் ஐக்கிய அமெரிக்காவையும் ஆட் கொண்டது.  விளைவு பிரெஞ்சுப் படையினர் மாலியில் களமிறங்கினர். மாலியின் அயல் நாடுகளான சாட்டும் அல்ஜீரியாவும் பிரான்ஸின் நட்பு நாடுகள். அது பிரான்ஸிற்கு சாதகமாக இருக்கிறது. மாலியின் அதிபர் ட்ராரே வேண்டு கோளிற்கிணங்க தனது படைகளை அனுப்பியதாக பிரெஞ்சு அதிபர் கூறுகிறார். மாலியில் இயங்கும் அல் கெய்தா al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்னும் பெயருடன் செயற்படுகிறது.


பிரான்ஸின் ஒரு தலைப்பட்ச முடிவு

அன்சார் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும்  பெருங்கதியில் அடையும் வெற்றி பிரான்ஸை தனது நேட்டோ நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை செல்லாமல் மாலி அதிபரின் வேண்டுகோளை மட்டும் கருத்தில் கொண்டு ஒருதலைப்பட்சமாக துரித முடிவெடுத்து Operation Serval என்னும் குறியீட்டுப் பெயருடன் படைநகர்த்த வைத்தது. கொன்னா நகரைத் தொடர்ந்து தென் பிராந்திய மொப்டி நகரும் கைப்பற்றப்படலாம் என்ற அச்சமிருக்கையில் பிரான்ஸ் தலையிட்டது. மாலி வேண்டுகோள் விடுத்த மறு நாளே பிரெஞ்சுப் படையினர் களமிறங்கினர்.பிரான்ஸின் நேட்டோ நண்பர்கள் மாலிக்குப் படை அனுப்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

பிரான்ஸின் வியட்நாம்

மாலியின் வட பிராந்தியம் மட்டும் ஆப்கானிஸ்த்தான் அளவு நிலப்பரப்புக் கொண்டது. இந்தப் பெரும் பாலைவன நிலப்பரப்பு துவாரெக்கினருக்கு அத்துபடி. ஆனால் பிரெஞ்சுப் படையினருக்கு உகந்த நிலப்பரப்பல்ல. உகந்த கால நிலையுமல்ல. அல் கெய்தா இப்போது பிரன்ஸிலும் பார்க்க பெரிய நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அங்கு அல் கெய்தா ஆழக் காலூன்றினால் அது மத்தியகிழக்கிற்கு மட்டுமல்ல ஆபிரிக்காவிற்கு மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே ஆபத்து என பல மேற்கு நாடுகள் கருதுகின்றன. தனது தெற்குக் கோடியில் ஒரு அல் கெய்தா அரசு அமைவதை பிரான்ஸ் விரும்பவே மாட்டாது. ஆனால் மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளில் பிரெஞ்சுப்படையினர் பல தடவை போர் செய்துள்ளனர். பிரான்ஸிற்கு பிரித்தானியா உட்படப் பல நாடுகள் உதவுகின்றன. அமெரிக்கா மாலியில் தலையிடுவதற்கு சட்ட ரீதியான பிரச்சனை உண்டு.  அமெரிக்கா ஐநா பாதுகாப்புச் சபையூடாக தலையிடும்படி பிரான்ஸைக் கேட்டிருந்தது. போர் தொடங்கும் முன்னரே பிரான்ஸ் தனது நட்பு நாடுகள் தனக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கையேந்தியுள்ளது. மற்ற ஆபிரிக்க நாடுகளின் படைகள் தனக்கு உதவிக்கு வரும் என பிரான்ஸ் காத்திருக்கிறது. பிரான்ஸால் மாலியின் தெற்குப் பகுதியகள் கைப்பற்றப் படுவதை தடுக்க முடியும். வட பிராந்தியத்தை மீட்க பல மாதங்கள் எடுக்கலாம். பிரெஞ்சு விமானத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் துவாரெக்கினர் ஒரு சிறு நகரைக் கைப்பற்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

பிரான்ஸிற்கு அல் கெய்தாவின் எச்சரிக்கை
தம்மீது தாக்குதல் நடாத்தியதன் மூலம் பிரான்ஸ் நரகத்திற்கான வாசலைத் திறந்துள்ளது என எச்சரித்த அல் கெய்தா பிரன்ஸின் இருதயப்பகுதிகளைக் தாக்குவோம் எனச் சூளுரைத்துள்ளது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் உட்பட பல மேற்கு ஐரோப்பியரும் வட அமெரிக்கர்களும் அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் அவசரப்பட்டுவிட்டதா?
2012இன் ஆரம்பப்பகுதியிலேயே மாலியில் இசுலாமியக் கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கப் போகிறது என்று தெரிந்தவுடன் அமெரிக்கா பல ஆபிர்க்க நாட்டுப் படைகளுக்குச் சிறப்புப் பயிற்ச்சி அளிக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் இன்னும் தாக்குதலுக்கு தயார் இல்லை. இன்னும் சிலமாதங்களில் அவர்களை அமெரிக்கா மாலிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தது. மேற்கத்தியப் படைகள் நேரடியாகத் தலையிட்டால் நிலைமை அமெரிக்காவிற்கு எதிரான இசுலாமியரின் போர் எனத் திரிக்கப்பட்டுவிடும் என்று அமெரிக்கா புதிய உத்தியை வகுத்திருந்தது. ஆனால் தனது உத்தியை பிரான்ஸ் அவசரப்பட்டு குழப்பிவிட்டதாக அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. மேலும் அமெரிக்கா தற்போது அல் கெய்தாவிற்கு எதிராக தான் தேர்ந்தெடுத்த சில தலைவர்களைக் கொல்லும் உபாயத்தைக் கொண்டுள்ளது. மாலியில் அப்படி சில தீவிரவாதத் தலைவர்களைக் கொன்று நிலைமையை தனக்கு சாதகமாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்க சார்பு துவாரெக் விடுதலை அமைப்பும் இருக்கிறது.

பாவம் துவாரெக் இனத்தவர்கள்
பல ஆண்டுகளாக அரசியலில் ஓரம் கட்டப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாகிய துவாரெக் இனத்தவர்கள் மாலியில் நடந்த படைத் துறைப் புரட்சியை தக்க தருணமாகப் பாவித்து தமது பிராந்தியத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் மத்தியில் நான்கு விடுதலை இயக்கங்கள் இருந்தன. அதில் மத சார்பற்ற MNLA எனப்படும் அஜவாட் தேசிய விடுதலை இயக்கமே மாலியின் வட பிராந்தியத்தில் போராடி வெற்றி பெற்றது. ஆனால் அன்சாரி டைன் இயக்கம் அல் கெய்தாவுடன் இணைந்து அஜவாட் விடுதலை இயக்கத்தை விரட்டிவிட்டு தான் முன்னணியில் வந்தது. அத்துடன் வடபிராந்தியத்தை மட்டும் தமது நாடாக பிரகடனப் படுத்தியதுடன் நிற்காமல் தென் பிராந்தியத்தையும் கைப்பற்ற முயன்றனர். இது அவர்களுக்கு பாதகமான ஒரு நிலையை பன்னாட்டு மட்டத்தில் உருவாக்கியுள்ளது.

மாலியில் இரத்தக் களரி
பிரெஞ்சு விமானப்படையினர் முதலில் நடத்திய தாக்குதலில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அல்ஜீரியாவில் 132 வெளிநாட்டவர்காள் உடபட 600பேர் பணயக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அங்கு ஒரு இரத்தக் களரி ஏற்பட்டது.  சோமாலிய அல் கெய்தாவினர் தம் வசம் இருந்த பிரெஞ்சு உளவாளியைக் கொன்றுள்ளனர்.பிரான்ஸ் தனது 3000தரைப்படைகளை மாலிக்கு அனுப்பியது. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் பல ஆபிரிக்க நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கா உட்படப் பல மேற்கு நாடுகள் பயிற்ச்சி அளித்து வருகின்றன. இவற்றில் சில ஏற்கனவே மாலியில் களமிறக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுப்படைகள் மாலிக்குச் சென்று விட்டன. அன்சர் டைன் போராளிகளும் அல் கெய்தாப் போராளிகளும் தாம் கைப்பற்றிய பிரதேசங்களை இழந்து வருகின்றன. மாலியப் படைகள் பல போராளிகளைக் கண்டபடி கொன்று குவிப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. இப்படிப்பட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என்கிறது பிரான்ஸ். பிரேன்சுப் படைகள் தாக்குதலில் இறங்கியதின் பின்னர் அன்சர் டைன் போராளி இயக்கம் பிளவு அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு பிரிவினர் போரைக் கைவிட்டு பேச்சு வார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளனர். துவாரெக் இனத்தின் நிலை ஈழத் தமிழர் நிலை போல் ஆகக் கூடாது.

Wednesday 16 January 2013

பெண்ணே நீயும் தமிழ்ப்படம் போலடி

சிரமமான புகுமுகத் தேர்வு
விலையான நுழைவுச் சீட்டு
அவள் இதயம்

குறிஞ்சி போல் பூக்கும்
நெருஞ்சி போல் குத்தும்
அவள் பார்வை

கிறங்கடிக்கும் மது
என்னையே மறக்கும் நிலை
அவள் தொடுகை

கொதிக்கும் என் மனது
முடிவின்றி நீளும் இரவு
அவள் நினைவு

Tuesday 15 January 2013

ஒரு நடிகை, ஓரு மந்திரி, ஓர் இரவு பத்து இலட்சம்!

அரசியல்வாதிகள் நடிகைகளை தம்முடன் இரவைக் கழிக்க அழைப்பதுண்டு. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பல கோடிகள் இதனால் சம்பாதிக்க முடியுமா?  இது நடிகைகளுக்கு இடையிலான போட்டி பொறாமையால் செய்யப்படும் பொய்ப்பரப்புரையா?

சீன நடிகை ஜாங் ஜிய் (Zhang Ziy) Crouching Tiger, Hidden Dragon, ஆகிய படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். பல விருதுகளை வென்றவர். இவர் பிரபலங்களுடன் இரவைக் கழித்து பெரும் செல்வம் சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை இவர் முற்றாக மறுத்துள்ளார். தன் மீது பொறாமையுள்ள நடிகைகள் இப்படி கதைகளைக் கட்டி விடுகின்றனர் என்கிறார். சீன நடிகை ஜாங் ஜிய். நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களை சீன நடிகை ஜாங் ஜிய் ச்ம்பாதித்துள்ளார் எனப்படுகிறது. இந்தச் செய்திகளை வெளிவிட்ட ஹாங்காங் பத்திரிகைக்கு எதிராக நடிகை ஜாங் ஜிய் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

The Apple Daily என்னும் ஹாங்காங் பத்திரிகை 33வயதான நடிகை ஜாங் ஜிய் பெரும் ஊழலுக்காக பதவியில் இருந்து விலக்கப்பட்ட சீன மந்திரி போ சிலாய்யுடனும் வேறு பல முக்கிய அரசியல்வாதிகளுடனும் பெரும் புள்ளிகளுடனும் தொடர்புகளை வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஒரு இரவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிமாறப்படுமாம். இது தொடர்பாக நடிக ஜாங் ஜிஅ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்கிறது ஹாங்காங் பத்திரிகை The Apple Daily.

சீன முன்னாள் மந்திரி போ சிலாய்யுடன் இரவைக் கழிப்பதற்கு சீன நாணயத்தில் ஒரு கோடி பெறுவாராம். இவர்கள் 2004இற்கும் 2007 இற்கும் இடையில் 10 தடவைகள் இப்படிச் சந்தித்தார்களாம்.

நடிகை ஜாங் ஜிய் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது என்கிறது ஹாங்காங் பத்திரிகை The Apple Daily.

Monday 14 January 2013

பொங்குவோம் விடுதலைப் பொங்கல்

பன்னாட்டுப் பாவியர் குத்திய
பயங்கரவாத முத்திரைக்
குப்பை தனைப் பெருக்கி
தேசியக் கோலமிட்டு
பொங்குவோம்
பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்

தாயகத் தாக அரிசியெடுத்து
துரோகமெனும் கல் நீக்கி
ஒற்றுமைப் பால் வார்த்து
புலமென்னும் பானையிலே - துணிந்தெழுந்து
பொங்குவோம்
பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்

ஈழ வேட்கை பட்டாசாக
தன்மானத் தேன் சேர்ந்து
தளரா மனக் கரும்பஞ் சாறூற்றி
வீரத் தீ மூட்டி தியாகக் கனி கூட்டி
பொங்குவோம்
பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்

வழியிங்கு பிறந்ததென - ஞாயிறு
ஒளியிங்கு வந்ததென

வஞ்சகர் மறைந்தனர் என
எதிரிகள் எங்கோ ஒளிந்தனரென - மார்தட்டிப்
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்

ஆழ்கடலும் நீள் நிலமும் நம் வசமாக வளமாக
வாடும் மனங்கள் இசை பாடும் மீன்களாக
நாடும் நலமாக யாழிசைக்க - தோள்தட்டிப்

பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல்
பொங்குவோம்

கொதிப்பது தமிழர் மனமாக
உதிப்பது எம் கதிராக - நெஞ்சில்
பதிப்பது அழியா மாவீரராக
மதிப்பது தாய்த் தமிழாக - திரண்டு கூடிப்

பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல்
பொங்குவோம்
பொங்கல் பொங்கல்
விடுதலைப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்

Sunday 13 January 2013

இலங்கையில் அரசமைப்பு நெருக்கடி(constitutional crisis) உருவாகுமா?

இலங்கையின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி விட்டு இலங்கை பாராளமன்றம் தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 255 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் பாராளமன்றத்தில் 155 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். தொடர்ந்து தலைமை நீதியரசர் ஷிரானியைப் பதவி நீக்கம் செய்தார் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

பன்னாட்டு நீதியாளர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, பொது நலவாய நாடுகள், மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் தலமை நீதியரசரைப் பதவி நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இலங்கை அரசின் எல்லா உறுப்புக்களும் தமது கைப் பொம்மைகளாகச் செயற்பட வேண்டும் என்ற அதிகார வெறியில் இலங்கையை ஆளும் மஹிந்த ராஜபக்சவும் அவரது உடன் பிறப்புக்களும் இருக்கின்றன என்று கருதப்படுகிறது.

ஷிரானிக்கும் ராஜபக்சவிற்கும் இடையிலான மோதலின் பின்னணி
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரைய பிரதம நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.  திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

என்ன இந்த  அரசமைப்பு நெருக்கடி(constitutional crisis)?
செயற்பாட்டுத் தத்துவங்கள் தொடர்பாகவோ அல்லது அரசியலமைப்பு யாப்புத் தொடர்பாகவோ தீர்வுகள் எட்ட முடியாத நிலை அரசமைப்பு நெருக்கடி எனப்படும். இது அரசின் உறுப்புக்களிடயே முரண்பாடுகள் ஏற்பட்டு ஒரு செயற்படாத நிலை உருவாகுவதாகும். அப்போது அரசமைப்பால் உறுதிசெய்யப்பட்ட கட்டுக்கோப்பும் சமநிலையும் கடுமையாகக் கலைந்து போகும். (A serious dislocation of country's constitutionally-guaranteed checks and balances.)

அரசமைப்பு நெருக்கடி உதாரணங்கள்

1. ஈரான்: 1953-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையும் பிரித்தானிய உளவுத் துறையும் Operation Ajax என்னும் குறியீட்டுப் பெயருடன் ஈரான் மன்னர் ஷாவிற்க்கு எதிராக செயற்பட்ட பிரதம மந்திரி  மொஹமட் மொஸெடேக்கின் அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தது. அப்போது ஈரானியப் படைத்துறையுனரும் மன்னர் ஷாவுடன் இணைந்திருந்தனர். மன்னர் ஷாவின் செயற்பாடுகள் அரசமைப்புக்கு முரணாக இருந்தன. பிரதம மந்திரி பதவி விலக மறுத்ததால் அரசமைப்பு நெருக்கடி ஒன்று அங்கு உருவானது. படைத்துறையினர் ஷாவுடன் இருந்தபடியால் அவர் தனது மன்னர் தன் செயற்பாடுகளைச் சரியானதாகப் பிரகடன்ப்படுத்திக் கொண்டார்.
 
2. பாக்கிஸ்த்தான்: 1997இல் பாக்கிஸ்த்தானியப் பிரதம மந்திரியாக இருந்த நவாஸ் ஷரிஃப் செய்ய முனைந்த அரசியலமைப்புத் திருத்தத்தை அப்போது தலைமை நீதியரசர் நிராகரித்திருந்தார். அவரைப் பதவி நீக்கம் செய்யும் படி குடியரசுத் தலைவருக்கு ஷரிஃப் உத்தரவிட்டார். அதை குடியரசுத் தலைவர் நிராகரிக்க குடியரசுத்தலைவரைப் பதவி நீக்கும் நடவடிக்கையில் ஷரிஃப் ஈடுபட்டார். மூன்று துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் அப்போது பாக்கிஸ்தானில் ஒரு அரசமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. பாக்கிஸ்தானிய அரசியலில் பெரும் பங்கு வகிக்கும் படைத்துறயினர் அப்போது தலையிட்டு நெருக்கடியைத் தவிர்த்தனர். பிரதம மந்திரி ஷரிஃப் பதவி விலகினார்.

3. தாய்லாந்து: 2006-ம் ஆண்டு தாய்லாந்தில் பாராளமன்றம் தெரிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டபோது பிரதம மந்திரி பதவி விலக மறுத்தார். அப்போது பல நீதி மன்றங்கள் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட தீர்ப்புக்களை வழங்கின.

4. கொங்கோ: 1960-ம் ஆண்டு கொங்கோவில் பிரதம மந்திரியும் குடியரசுத் தலைவரும் ஒருவரை ஒருவர் பதவி நீக்கம் செய்ததால் பெரும் நீதி மற்றும் நிர்வாக நெருக்கடி ஏற்பட்டது. அப்பொது படைத் தளபதி இருவரையும் பதவி நீக்கம் செய்து நிலமையைச் "சீர்" செய்தார்.

இலங்கை அரசமைப்பின் படி பாராளமன்றம் மட்டும் சட்டத்தை இயற்றலாம. சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் உரிமை நீதித் துறையிடம் மட்டுமே இருக்கிறது. பாராளமன்றம் இயற்றிய ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு இசைவானதா எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதித் துறையிடமே இருக்கிறது. பாராளமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை பாராளமன்றம் நினைத்திராத ஒரு வியாக்கியானத்தை நீதித் துறை செய்தால் அதைப் பாராளமன்றம் நிராகரிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் ஒரு பிழையான வியாக்கியானத்தைக் கொடுத்தாலும் அதில் பாராளமன்றம் தலையிட முடியாது. வேண்டுமானால் இன்னும் ஒரு சட்டத்தை தான் நினைத்த படி இயற்றலாம். தலைமை நீதியரசரின் பதவி நீக்கம் தொடர்பாக பாராளமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் சட்டபூர்வமானதல்ல என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கைப் பாராளமன்ற அவைத் தலைவரும்(சபாநாயகர்) மஹிந்த ராஜபக்சவின் அண்ணருமான சமல் ராஜபக்ச தெரிவித்தமை ஒரு அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் எனப் பலரும் கருதுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பாராளமன்றம் தலைமை நீதியரசரை பதவி நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மஹிந்த ராஜபக்சவும் அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ளது ஒரு தத்துவார்த்த முரண்பாடே.  தற்போது இலங்கையில் ஏற்பட்டுல்லது நீதித் துறைக்கும் பாராளமன்றம் எனப்படும் சட்டவாக்கற்துறைக்கும் இடையில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடு மட்டுமே. நீதித் துறையில் உள்ள கணிசமான தொகையினரைத் தவிர மற்ற எல்லா அரச துறையினரும் மஹிந்த ராஜபக்சவின் சுட்டுவிரல் அசைவின் கீழ் செயற்படுகின்றன. இலங்கையில் இனி எவரும் தலைமை நீதியரசர் பதவியை ஏற்க மாட்டோம் என நீதித்துறையைச் சேர்ந்த எல்லோரும் ஒன்றுபட்டு நின்றால் ஒரு நெருக்கடி உருவாகலாம். மேலும் யாராவது ஒருவர் தலைமை நீதியரசர் பொறுப்பை ஏற்றபின்னர் நீதித் துறையைச் சேர்ந்த எல்லோரும் ஒன்றுபட்ட்டு அவரின் கீழ் செயற்பட மாட்டோம் என்று நின்றால் ஒரு நெருக்கடி ஏற்படலாம். இவை இரண்டில் முதலாவது நிகழ மாட்டாது. இரண்டாவதும் ஏற்படாது. ஆனால் நீதித் துறையில் இருக்கும் கணிசமான நீதியரசர்களும் சட்டவறிஞர்களும் புதிய தலைமை நீதியரசரைப் புறக்கணிக்கலாம். அதில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அது ஒரு அரசமைப்பு நெருக்கடியாக மாட்டாது.

மீண்டும் நீதிமன்றம் செல்வார் தலைமை நீதியரசர்
தலைமை நிதியரசர் ("முன்னாள்") ஷிரானி பண்டாரநாயக்க பதவி விலக மறுக்கலாம். அவரின் சட்ட ஆலோசகர்கள் அவர் பதவி விலகுவாரா என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தன்னைப் பதவி நீக்க மஹிந்த அனுப்பிய கடிதத்தை ஷிரானி உச்ச நீதி மன்றத்தில் இனிச் சமர்ப்பித்து அது செல்லுபடியற்றது எனக் கோரலாம். அப்போது என்ன நடக்கும்? நீதித் துறையினர் தெருவில் இறங்கிப் போராடினால் அதிலும் அதிகமான தொகையினரை அதுவும் பொதுமக்கள் போல் படையினரை தெருவில் இறக்க மஹிந்தவால் முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...