Saturday 7 December 2013

மண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்கா

இன ஒதுக்கல் ஆட்சியின் பின்னர் மிகச்சிறப்பாக தென் ஆபிரிக்காவில் மக்களாட்சிப்படி மிகவும் சிறப்பாக குளறுபடிகள் எதுவுமின்றி ஒழுங்காகத் தேர்தல் நடாத்துவதில் நெல்சன் மண்டேலாவும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசும்  வெற்றி பெற்றார்கள்.  1994-ம் ஆண்டு தென் ஆபிரிக்க அதிபராக தனது 75வது வயதில் பதவியேற்ற நெல்சன் மண்டேலா ஐந்து ஆண்டுகளின் பின்னர் அரசியலில் இருந்து தனக்கு வயது கூடிவிட்டது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டார். தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களை அவர் வாரிசு ஆக்கவில்லை. இந்த இரண்டு வகையிலும் அவர் உலகில் பல அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தார். அவர் நினைத்திருந்தால் இறக்கும்வரை பதவியில் இருந்திருக்கலாம்.

தற்போது உலகிலேயே எழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடைவெளி அதிகமான நாடுகளில் தென் ஆபிரிக்காவும் ஒன்று. கறுப்பின மக்களின் சராசரி வருமானம் வெள்ளை இன மக்களின் சராசரி வருமானத்துடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்காகும். வெள்ளையர் ஆட்சி செலுத்திய போது வெள்ளையர் வாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்ற பின்னரும் வெள்ளையர்கள் வாழ்கின்றனர் கறுப்பினத்தவர்கள் தாழ்கின்றனர். ஒரு படைக்கலங்கள் தாங்கிய புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் மக்களாட்சி முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றியதால் ஏற்கனவே இருந்த பொருளாதாரக் கட்டமைப்பை மாற்ற முடியவில்லை. ஆபிரிக்காவின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களிடம் இருந்து சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியது. 1998-ம் ஆண்டிற்கும் 2011-ம் ஆண்டிற்கும் இடையில் தென் ஆபிரிக்காவில் சிசுக்கள் இறக்கும் விழுக்காடு இரு மடங்காக அதிகரித்து விட்டது. தென் ஆபிரிக்காவில் வன்முறைகள் தொடர்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. வேலையில்லாப்பிரச்சனை 25முதல் ஐம்பது விழுக்காடாக இருக்கின்றது. மூன்று இலட்சத்திற்கு அதிகமானவர்கள் எச் ஐ வீ  நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பல ஆபிரிக்க நாடுகள் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களாக மாறியுள்ள வேளையில் தென் ஆபிரிக்காவின் பொருளாதாரம் 1.9விழுக்காடு மட்டுமே வளர்கின்றது. நெல்சன் மண்டேலா அரசியலில் இருந்து ஓய்வு பெறும்போது தனக்கு அடுத்து சிரில் ரமபோசா வரவேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தபோ எம்பெக்கியைத் தேர்ந்தெடுத்தது. இதுவரை சமூக ஏற்றத் தாழ்வுகளால் ஒரு பெரும் மக்கள் எழுச்சி வராமல் பார்த்துக் கொண்ட தென் ஆபிரிக்க ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை நாட்கள் முறையான பொருளாதார மேம்பாடின்றி தாக்குப் பிடிக்க முடியும். சில பொருளாதார நிபுணர்கள் நெல்சன மண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் பொருளாதாரம் சீர் குலையும் இனக்குழுமங்களிடை மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். மண்டேலாவின் இருப்பு தென் ஆபிரிக்காவில் ஒரு திடமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இருந்தது. ஒரு அரசியல் நிகழ்வு பொருளாதாரத்தில் எவ்வளவு தாக்கம் செய்யும் என்பதை அந்த நிகழ்வின் பின்னர் அந்த நாட்டின் பங்குச் சந்தையின் விலைகளின் அசைவு சுட்டிக்காட்டும். நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தென் ஆபிரிக்கப் பங்குச் சந்தை விலையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டது. இது தென் ஆபிரிக்கப் பொருளாதாரம் இப்போது உள்ள நிலையில் தொடரப் போகிறது என்பதை அதாவது கறுப்பின மக்களுக்குப் பாதகமான நிலை தொடர்ப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அரச பதவிகளில் அமர்த்துபவர்களுக்கு தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் இன ஒதுக்கல் கொள்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இதனால் அமைச்சரவைப் பொறுப்புக்களிலும் அரச உயர் பதவிகளிலும் தரம் குறைந்தவர்கள் அமர்த்தப்பட்டனர். இது தென் ஆபிரிக்க அரசின் செயற்படுதிறனைப் பாதிக்கின்றது.

ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஒரு திறன் மிக்க ஆட்சி மூலம் கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் இன்னும் வெற்றி காணவில்லை. இந்த நிலை தொடருமானால் ஆபிரிக்காவிலும் ஒரு அரபு வசந்த பாணியில் மக்கள் புரட்சி வெடிக்கும் ஆபத்து மண்டேலா உயிருடன் இருக்கும் போதே இருந்தது. அவரது மறைவின் பின்னர் அது இன்னும் அதிகரிக்கலாம்.
மண்டேலாவிற்குப் பின்னர் ஆபிரிக்காவின் வழிகாட்டியாகவும் அரசியல் திடத்  தன்மை பேணக் கூடியவராகவும் ஒருவர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சில ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்கள் டெஸ்மண்ட் டூடூவின் பக்கம் திரும்புகிறார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...