Friday 8 November 2013

ஈரான் பேச்சு வார்த்தையும் கேள்விக் குறியாகிய இந்தியாவின் வல்லரசுக் கனவும்.



தற்போது ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த வரை   ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்   பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையுடனும்   வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்துடனும்   வல்லரசு நாடுகளாக இருக்கின்றன.   ஐநாவை சீர்திருத்தம் செய்யும் நோக்கில்    இதில் மேலும் ஒரு நாட்டை அல்லது   ஒரு சில நாடுகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் பரவலான கருத்துக்களும் இருக்கின்றன.

இந்தியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா, ஜேர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் தாமும் வல்லரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றன. இவற்றில் மக்கள் தொகை அடிப்படையிலும் படைவலு அடிப்படையிலும் இந்தியா முன்னுரிமை பெறுகின்றது. ஐநாவிற்கான நிதிப் பங்களிப்பு அடிப்படையிலும் பொருளாதார வலு அடிப்படையிலும் ஜப்பானும் ஜேர்மனியும் முன்னுரிமை பெறுகின்றன.   பிராந்திய அடிப்படையில் வட அமெரிக்க நாடான ஐக்கிய அமெரிக்காவும்,   கிழக்கு ஐரோப்பிய நாடான இரசியாவும்,   மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஐக்கிய இராச்சியமும், பிரான்ஸும், ஆசிய நாடான சீனாவும் தற்போது வல்லரசாக இருப்பதால்  ஆபிரிக்க நாடான தென் ஆபிரிக்கா முன்னுரிமை பெறுகின்றது. மைய அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் தான் பிரதிநிதுத்துவப் படுத்துவதாக பிரேசில் சொல்கின்றது.

ஜப்பானும் ஜேர்மனியும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றன. பன்னாட்டு மட்டத்தில் இவை ஒத்த கருத்துக்களுடன் செயற்படுகின்றன. நேட்டோ நாடுகள் பிரேசில் வல்லரசாவதற்கு தம்முடன் பிரேசில் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டன. முக்கியமாக ஆபிரிக்கக் கண்டத்தில் பிரேசிலின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்கின்றன. அதற்கு இணங்க பிரேசில் பல ஆபிரிக்க நாடுகளுக்கு தான் வழங்கிய கடன்களை தனக்கு மீளச் செலுத்தத் தேவையில்லை என சொல்லி விட்டது.

இந்தியா இரசியாவுடன் நெருங்கிய நட்புடன் செயற்படுகின்றது. தனக்கு வேண்டிய நேரத்தில் இரசியா மூலம் ஐநா பாதுகாப்புச் சபையில் இரசியா மூலம் தனக்கு வேண்டப்படாத தீர்மானங்கள் வரும்போது அதை இரத்துச் செய்யலாம் என்பதால் இந்தியா இந்த நட்பைப் பேணுகின்றது. இந்த மாதிரி ஒரு நிபந்தனையற்ற ஏற்பாட்டை இந்தியாவால் ஐக்கிய அமெரிக்காவுடனோ, பிரித்தானியாவுடனோ அல்லது பிரான்ஸுடனோ செய்து கொள்ள முடியாது. இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று வல்லரசாக சீனாவின் அனுமதி அவசியம். இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் தீர்மானத்தை சீனாவால் இரத்துச் செய்ய முடியும்.

தற்போது ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்  தடை தொடர்பாகவும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் P5+1 என்னும் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐநா நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளும் அத்துடன் ஜேர்மனியும் இருக்கின்றன.

ஈரானுடனான பேச்சு வார்த்தைகளில் ஏன் இந்தியா ஈடுபடுத்தப்படவில்லை? நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்த்தான், ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பது போன்றவற்றில் இந்தியாவின் பங்களிப்பை வேண்டின. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு அவை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆப்கானிஸ்த்தானில் சில பிரதேசங்களில் கனிம வளங்களைச் சுரண்டும் உரிமை சீனாவிற்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவைச் சுற்ற வர உள்ள நாடுகளில் இந்தியாவின் ஆதிக்கம் படு மோசமாகி விட்டது.

தற்போது உலக அரங்கில் காத்திரமான பங்கு வகிக்கக் கூடியவையாக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையே இருக்கின்றன. இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியா போகாவிட்டால் அது இந்தியாவின் பாது காப்புக்கு அச்சம் என்ற கருத்து இந்தியப் பாதுகாப்புத் துறையிடம் இருக்கின்றது. இந்தியா என்ன வல்லரசா அல்லது சந்தானம் சொல்லியது போல் "டல்" அரசா? வல்லரசாவதற்கு தீயாக வேலை செய்யணும் இந்தியாவே!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...