Monday 18 November 2013

ஈரானைத் தாக்குவதற்கு சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் கை கோர்க்கின்றன.

ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் அதன் மீதான பொருளாதாரத் தடை தொடர்பாகவும் P5+1 நாடுகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் பிரான்ஸ் அதிபர் பிரான்கொய்ஸ் ஹொலண்டே ஈரானுக்கு நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஒரு இடைக்காலத் தீர்விற்கு உடன்படுவதாயின் தனது நான்கு நிபந்தனைகளுக்கும் சம்மதிக்க வேண்டும் என்கிறார் அதிபர் பிரான்கொய்ஸ் ஹொலந்த்.

பிரான்ஸின் நான்கு நிபந்தனைகள்:

1. ஈரானின் எல்லா அணு ஆய்வு நிலையங்களும் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்கின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.

2. ஈரானின் எல்லா யூரேனியம் பதப்படுத்தல்களும் 20%இற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. ஈரானின் தற்போதைய பதப்படுத்தப்படுத்த யூரேனிய இருப்புக்கள் குறைக்கப்படவேண்டும்.

4. ஈரானின் ஆரக் நகரில் உருவாக்கப்படுத்தப்பட்டிருக்கும் கன நீர் பதப்படுத்தல் கட்டுமானங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

தற்போது ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்  தடை தொடர்பாகவும் நடக்கும் பேச்சு வார்த்தைகளில் P5+1 என்னும் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐநா நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளும் ( ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியா, பிரான்ஸ், சீனா) ஜேர்மனியும் இருக்கின்றது.

P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தை நவம்பர் 20-ம் திகதியில் இருந்து 23-ம் திகதி வரை நடை பெறுகின்றது.

நவம்பர் 7-ம் திகதி முதல் 10-ம் திகதி வரை நடந்த ஈரானுடனான முதற் சுற்றுப் பேச்சு வார்த்தையில் பிரான்ஸ் கடுமையான நிலைப்பாட்டையும் அமெரிக்கா மிதமான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறத்து. ஈரானுடனான முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முன்னர் பிரெஞ்சு அதிபர் இஸ்ரேலுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

 இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரானைத் தாக்குமா?
இஸ்ரேல் ஈரானின் எல்லா பதப்படுத்தப்பட்ட யூரேனியம் இருப்பையும் அழிக்க வேண்டும் என்கின்றது. சியா முசுலிம் நாடான ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதையிட்டு சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா இஸ்ரேலிலும் பார்க்க அதிக கரிசனை கொண்டுள்ளது. இஸ்ரேலும் சவுதியும் P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் அது தமது நாடுகளுக்கு ஆபத்தாய் அமையும் என அஞ்சுகின்றன. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இரு நாடுகளும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது. அந்த ஆழத்திற்கு துளைத்துச் செல்லக் கூடிய குண்டுகளை ஏற்கனவே ஈரான் உருவாக்கிவிட்டதா அல்லது அமெரிக்காவிடமிருந்தோ அல்லது பிரான்ஸிடமிருந்தோ அவற்றை வாங்கிவிட்டதா என்பது ஒரு கேள்வியாகும். இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட் ஏற்கனவே சவுதித் தலைநகர் ரியாத்தில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படும் என ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கை வெளிவிட்டுள்ளது. ஆனால் பராக் ஒபாமாவின் வெளியுறவுத் துறையினர் பலவீனமானவர்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இவர்கள் மிதமான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதால் சவுதியும் இஸ்ரேலும் பிரான்ஸைக் கடுமையான நிலைப்பாடு எடுக்கும் படி வற்புறுத்தியுள்ளன. பேச்சு வார்த்தைகள் இழுபடும் ஒவ்வொரு நாளும் ஈரான் அணுக்குண்டு உற்பத்தியை நோக்கி நகரும் நாள் என இஸ்ரேலும் சவுதியும் கருதுகின்றன.ஈரானுடனான பேச்சு வார்த்தையை விரைவில் சுமூகமாக முடிப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. இதில் அமெரிக்காவிற்கு இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று எரிபொருள் விலைகள் குறையும். இரண்டாவது ஈரானுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி மீள ஆரம்பிக்கும்.

ஈரானுடனான இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடையுமென்ற நம்பிக்கையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை இறங்குகின்றது.

இரசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த ஈரானிய அரசிய ஆய்வாளர் செய்யது முகம்மது மராண்டி இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுப்பதுடன் உலகப் பொருளாதாரத்தின் மீதும் பெரும் அடி விழும் என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...