Wednesday 9 October 2013

அமெரிக்காவின் கடன் நெருக்கடியும் அஞ்சும் சீனாவும்


கடன்பட்டு கலங்குவதுண்டு. ஆனால் ஐக்கிய அமெரிக்காவிற்கு கடன் கொடுத்த நாடுகள் இப்போது கலங்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க பாராளமன்றமான காங்கிரஸின் இரு சபைகளில் ஒன்றான மக்களவைக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கும் இடையில் நடந்த இழுபறியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரச பணிமனைகளில் அத்தியாவசிய மற்றவற்றை தற்காலிகமாக மூடப்பட்டன. இழுபறியின் அடுத்த அம்சமாக அமெரிக்காவில் கடன் நெருக்கடி தோன்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு அரசு தான் கடன் வாங்கும் போது கொடுக்கும் பத்திரம் கடன் முறி எனப்படும். அமெரிக்காவில் கடன் நெருக்கடி தோன்றினால் அது உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகளில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அரசின் கடன் முறிகளில் பல நாடுகள் முதலிட்டுள்ளன. இவை வரவிற்கு மிஞ்சி செலவு செய்யும் அமெரிக்க அரசுக்கு இந்த நாடுகள் கொடுத்த  கடன்களாகும். அமெரிக்காவிற்கு அதிக கடன் கொடுத்த நாடாக சீனாவும் ஜப்பானும் இருக்கின்றன. இரு நாடுகளும் அமெரிக்க அரசை கடன் நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கக் கடன் உச்ச வரம்பு
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 1980 இற்குப் பின் கடன் உச்சவரம்பு 40 தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன. அமெரிக்காவின் மக்களவி ஒக்டோபர் 17-ம் திகதிக்கு முன்னர் அமெரிக்க அரசின் கடனை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அமெரிக்க அரசின் தற்போதைய நாளாந்த நிதிக் கையிருப்பு  முப்பது பில்லியன் டொலர்கள் மட்டுமே. ஆனால் அமெரிக்க அரசுக்கு நாளாந்தம் அறுபது பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது. 17-ம் திகதிஓக்டோபர் அமெரிக்க அரசு பதின்மூன்று பில்லியன் டொலர்களை தான் பட்ட வட்டிகளுக்காக செலுத்த வேண்டும். பின்னர் நவம்பர் மாதம் இடு இருபத்தைந்து பில்லியன் டொலர்களாக உயரும். அமெரிக்க அரசு தற்போது 16.94ரில்லியன் டொலர்கள் கடன் படலாம் என உச்சவரம்பு ஒன்றை அமெரிக்கப் பாராளமன்றம் நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு வரவிற்கு மிஞ்சி செலவு செய்வதால் இந்தக் கடன் உச்ச வரம்பை அடிக்கடி உயர்த்த வேண்டி இருக்கிறது.

அமெரிக்க அரசின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் படி குடியரசுக் கட்சியினர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமை நிர்ப்பந்திக்கின்றனர்.அதிலும் முக்கியமாக குடியரசுக் கட்சியினரை ஆத்திரப்படுத்துவது பராக் ஒபாமாவால் கொண்டுவரப்பட்ட ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டமாகும். ஒபாமாகெயாருக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் வரை எந்த ஒரு விட்டுக் கொடுப்பனவும் செய்யப்ப் போவதில்லை என குடியரசுக் கட்சியின் மக்களவைத் தலைவர் ஜோன் ஏ பொஹ்னர் சூளுரைத்துள்ளார்.

கடன் நெருக்கடியும் அதன் விளைவுகளும்
ஒரு அரசு தான் பட்ட கடன்களுக்கான நிலுவைகளையும் வட்டிகளையும் உரிய நேரத்தில் செலுத்த முடியாமலும் புதிய கடன்கள் பெற முடியாமலும் இருக்கும் போது கடன் நெருக்கடி உருவாகும். இதனால் அந்த அரசுக்கு மற்ற நாடுகளும் நிதி நிறுவன்ங்களும் கடன் கொடுக்கத் தயங்கும். இதனால் அந்த நாட்டின் கடன்படு தரம் தாழும். கடன் படு தரம் தாழும் போது புதிய கடன் பெறுவது கடினமாகவும் அதிக வட்டி கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும். அமெரிக்காவில் 2013-10-17-ம் திகதி நிகழவிருப்பதாக பலரும் அஞ்சி நிற்கும் கடன் நெருக்கடிக்கு அங்கு தற்போது நிலவும் கட்சிகளுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாகும் Obacare உட்பட எல்லா அரச செலவீனங்களையும் குறை அல்லது உன்னைக் அதிக கடன் பெற அனுமதிக்க மாட்டோம் என மக்களவையில் பெரும்பான்மையாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவை மிரட்டுகின்றனர். கடன் பட்டுக் கடன் அடைக்க வேண்டிய நிலையில் இருக்கும் அமெரிக்க அரசுக்கு இதனால் கடன் நெருக்கடி ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கடன் நெருக்கடி ஏற்பட்டால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வட்டி வீதம் இரும்டங்காகும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதுவரை காலமும் தனது கொடுப்பனவுகளை எந்த வித தாமதமோ குறையோ இல்லாமல் செலுத்து வந்த அமெரிக்க அரசுக்கு பெரும் சோதனையாகவும் வரலாற்றுக் கறையாகவும் கடன் நெருக்கடி அமையலாம்.

செல்வாக்கிழக்கும் குடியரசுக் கட்சியினர்
அமெரிக்க அரச பணிமனைகள் மூடப்பட்டதையும் அமெரிக்காவின் கடன்வரம்பை உயர்த்த மறுப்பதையும் பல அமெரிக்க மக்கள் வெறுக்கின்றனர். குடியரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யும் பண முதலைகளும் இவற்றை விரும்பவில்லை. சிலர் குடியரசுக் கட்சிக்கு தாம் செய்யும் வழமையான நிதி உதவிகளை இடை நிறுத்தியுள்ளனர்.இதனால் சில குடியரசுக் கட்சியினர் தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியினருடன் இணைந்து நிதி ஒதுக்கீடு சம்பந்தமான வாக்கெடுப்பில் வாக்களிக்கும் சாத்தியம் உண்டு. பராம் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிறைவேற்றிய நிதி ஒதுக்கீடு சம்பந்தமான சட்டத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடாமல் குடியரசுக் கட்சியினர் இழுத்தடித்து வருகின்றனர். ரீ பார்ட்டியினர் குடியரசுக் கட்சித் தலைவர் ஜோன் ஏ பொஹ்னருக்குக் கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம். பராக் ஒபாமா ஜேன் ஏ பொஹ்னருக்கு முடியுமானால் மூதவை நிறைவேற்றிய நிதி ஒதுக்கிட்டுச் சட்டத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடும்படி சவால் விடுத்துள்ளார். 2011இலும் இதே போன்ற ஒரு கடன் நெருக்கடி அபாயம் உருவாகி அதி இறுதிக் கணத்தில் தவிர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் வெள்ளைமாளிகைக்கும் மக்களவைக்கும் இடையிலான இழுபறிக்கு காரணமாக அமைந்தது ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டமாகும். இது பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: ஒபாமாகெயார்

a

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...