Wednesday 30 October 2013

பேச்சு வார்த்தைக்கு மறுத்த சிரியக் குழுக்கள். இரசியா கடும் ஆத்திரம்

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் பலமிக்க பத்தொன்பது குழுக்கள் ஜெனிவாவில் இரசியாவும் அமெரிக்காவும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானப் பேச்சு வார்த்தையில் பங்கு பெற மறுத்து விட்டன. இதே வேளை அமெரிக்காவுடன் ஜெனிவாவில் பேச்சு வார்த்தை நடாத்தியமைக்காக சிரியத் துணைத் தலமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சி செய்யும் குழுக்கள் ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு முன் நிபந்தனையாக சிரிய அதிபர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என வேண்டியுள்ளன. அசாத் பதவி விலகாமல் தாம் பேச்சு வார்த்தைக்குப் போவது சிரிய மக்களுக்குத் தாம் செய்யும் துரோகமாகும் என வலுமிக்க 19 சிரியப் போராளிக் குழுக்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் ரக்தர் பிராஹிமியைச் சந்தித்த சிரிய வெளிநாட்டமைச்சர் வலிட் முல்லெம் இலண்டனில் சிரியாவின் நண்பர்கள் குழு என்ற பெயரில் சில நாடுகள் கூடி நவம்பர் 23-ம் திகதி நடக்க ஒழுங்கு செய்த ஜெனிவா -2 பேச்சு வார்த்தையில் தமது அரசு பங்குபற்றும் என்றும் சிரியாவை யார் ஆள்வது என்பதை சிரிய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ரக்தர் பிராஹிமி ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் அதிபர் அல் அசாத்தும் ஒரு முக்கிய பங்காளர் எனத் தெரிவித்தார்.

சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் அறிக்கையால் ஆத்திர மடைந்த இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரோவ் 19 குழுக்களும் பேச்சு வார்த்தைக்கு வர மறுத்தமைக்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளே பொறுப்பு எனக் கூறி மேற்கு நாடுகளை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.

சிரியாவில் இதுவரை 115,000முதல் 150,000வரையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரியப் பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ளாத சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தனக்குக் கிடைத்த இரண்டு ஆண்டுகள் உறுப்புரிமையை வேண்டாம் என மறுத்துள்ளது. அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்காததாலும் சிரிய ஆட்சியாளர்கள் வேதியியல் குண்டுகள் வீசிய பின்னரும் லிபியாவில் செய்தது போல் சிரியாமீது தாக்குதல் செய்யாததும் சவுதி அரேபியாவை அமெரிக்காவிற்கு அமெரிக்காமீது கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவின் உளவுத் துறைத் தலைவர் பந்தர் பின் சுல்தான் சவுதி அரேபியா அமெரிக்கா தொடர்பான தனது கொள்கையில் பெரு மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தார். சவுதி அரேபியா தன்னிச்சையாகச் செயற்பட்டு சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தானே படைக்கலன்களை வழங்கி தனக்கு ஆதரவான ஒரு சர்வாதிகார அரசை சிரியாவில் உருவாக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...