Sunday 6 October 2013

அமெரிக்க அரச பணிமனைகளின் மூடலின் பின்னணியும் பின் விளைவுகளும்

அமெரிக்க அரசின்     அத்தியாவசியமற்ற சேவைகளில் பெரும்பாலானவற்றின்    பணிமனைகள்    ஒக்டோபர் முதலாம் திகதி மூடப்பட்டது.     அதன் ஊழியர்கள் எட்டு இலட்சம் பேர் சம்பளமற்ற விடுமுறையில்    அனுப்பப் பட்டனர்.    இது ஏன் நடந்தது என்பது பற்றிப்பார்க்க     அமெரிக்காவின் அதிகார மையங்கள்,    கட்சிகளின் உட்பிரிவுகள்,    ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக்காப்புறுதி      ஆகிய மூன்றையும் பற்றி    அறிந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவின் அதிகார மையங்கள்   என்று பார்க்கும் போது    அமெரிக்க அதிபர்,   கொங்கிரஸ் எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின்    இரு அவைகளான மக்களவை, மூதவை ஆகியவற்றுடன்    மாநில அரசுகள் ஆகியவை முக்கிய மானவை.   அதிபரை அவர் மாளிகையின் பெயரால் வெள்ளை மாளிகை என்றும் பாராளமன்றத்தை அது இருக்கும் இடத்தால் capital hill என்றும் சொல்வது வழக்கம்.   அமெரிக்க அதிபர் இலங்கை அதிபர் போலவே நிறைவேற்று அதிகாரமுடையவர். ஆனால் அமெரிக்க அதிபரால் அமெரிக்க பாராளமன்றம் இயற்றும் சட்டத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு.    அதாவது இரத்துச் செய்யும் அதிகாரம். இந்த இரத்து அதிகாரத்தை இருவகைப்படுத்துவர் ஒன்று pocket veto மற்றது Regular veto

தனக்கு அனுப்பிய சட்டத்தில் கையொப்பமிட்டு அங்கீகரிக்காமல் தனது பொக்கெற்றில் வைத்திருப்பதால் அது பொக்கெற் வீட்டோ எனப்படும். மற்றது தன்னிடம் அங்கீகாரத்திற்கு வந்த சட்டத்தை பத்து நாட்களுக்குள் தான் இரத்துச் செய்வதாக கடிததம் எழுதி திருப்பி பாராளம்ன்றத்தின் அவைகளுக்கு அதிபர் அனுப்பினால் அது Regular veto எனப்படும். அமெரிக்க அதிபரின் வீட்டோவை அமெரிக்கப் பாரளமன்றமான கொங்கிரஸின் இரு அவைகளும் மூன்றில் இரண்டு பெரும்பானமயுடன் வீட்டோ செய்யலாம். அதாவது வீட்டோவை வீட்டோ செய்வது. நடை முறையில் அமெரிக்க அதிபர் வீட்டோக்கள் செய்வது குறைந்து கொண்டே போகிறது.
ஜோர்ஜ் புஸ் நாற்பத்து நான்கு தடவைகள் வீடோ செய்தார். ஒபாம இருதடவைகள் மட்டுமே.

அமெரிக்காவின் பாரளமன்றமான கொன்கிரஸ் இயற்றும் சட்டப்படியே அமெரிக்க அதிபர் செயற்படவேண்டும். கொங்கிரஸின் இரு சபைகளில் மக்களவையில் 435 உறுப்பினர்களும் மூதவையில் நூறு உறுப்பினர்களும் இருக்கின்றனர். சட்டவாக்கல் அதிகாரம் இரு சபைகளுக்கும் சம்மாக இருக்கிறது. பன்னாட்டு மட்டத்தில் செய்யப்படும் உடனபடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மூதவையிடம் இருக்கிறது. வரிவிதிப்புச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மக்களவியிடம் இருக்கிறது.

அமெரிக்காவில் இரு கட்சிகள் முக்கியமானவை அவை டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியும்  ரிப்பப்ப்லிக் பார்ட்டி எனப்படும் குடியரசுக் கட்சியும் ஆகும். ஆனால் இந்தக் கட்சிகளுக்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அதிபர் பராக ஒபாமா டெமொக்ரட்டிக் பார்ட்டி எனப்படும் மக்களாட்சிக் கட்சியை சேர்தவர் ஆனால் அவரை டெமொக்கிறட்ஸ் என்று சொல்வதிலும் பார்க்க லிபரல் டெமோக்கிறட்ஸ் என்றே அதிகம் சொல்கிறார்கள். மக்களாட்சிக் கட்சிக்குள் முற்போக்கு மக்களாட்சியினர், தாராண்மை மக்களாட்சியினர், பழமைவாத மக்களாட்சியினர், தொழிற்சங்கவாதிகள், கிருத்தவவாதிகள், மதசார்ப்பற்றவர்கள் என பதினைந்திற்கு மேற்பட்ட பிரிவினர் உண்டு. குடியரசுக் கட்சியில் மரபுவாதிகள், பழமைவாதிகள், Neoconservative எனப்படும் புதிய பழமைவாதிகள், மிதவாதிகள், தாராண்மைவாதிகள் எனப்பத்திற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் ஒரு சட்டத்திற்கு வாக்களிக்கும் போது தமது கட்சிக் கொள்கையிலும் பார்க்க தமது உட்பிரிவின் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை விட ரீ பார்ட்டி என்னும் ஒரு முக்கிய குழு உள்ளது. இது குடியரசுக் கட்சியிலும் மக்களாட்சிக் கட்சியிலும் இருக்கும் வரி விதிப்பிற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களின் குழுவாகும். Taxed Enough Already என்ற சொற்தொடரின் முதலெழுத்துக்களான ரீ ஈ ஏ ஆகிய எழுத்துக்களை ஒன்று சேர்த்து இது ரீ பார்ட்டி எனப்படுகிறது.

அமெரிக்கப் பாராளமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களில் lobbyist எனப்படும் தரகுப் பரப்புரையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு பாராளமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வார்கள். உதாரணத்திற்கு படைக்கலன்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவங்களுக்கு லொபி செய்பவர்கள் போரைத் தூண்டும் வகையில் பாராளமன்றத்தீர்மானத்தை திசை திருப்புவார்கள். துப்பாக்கி தாயாரிக்கும் தனியார் துறையினர் துப்பாக்கித் தடை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுப்பார்கள். யூதர்களில் லொபியும் அமெரிக்காவில் பலம் மிக்கது இவர்கள் அமெரிக்காவை இஸ்ரேலுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக ஒபாமாகெயார் எனப்படும் மருத்துவக் காப்புறுதித் திட்டம் பற்றிப்பார்ப்போம். ஒரு இலங்கையருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ ஒபாமாகெயார் என்பது ஆச்சரியமளிக்கும். இலங்கையிலும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவை உண்டு. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் மருத்துவ சேவைக்கு தாங்கள் வேலைசெய்யும் இடத்தில் செய்யப்படும் மருத்துவக் காப்புறுதியில் தங்கியிருக்கின்றனர். இதனால் அமெரிக்காவில் பல இலட்சம் மக்கள் போதிய மருத்துவ வசதியின்றி இருக்கின்றனர். இதைச் சரிசெய்ய அமெரிக்காவில் அதிபர் பராக் ஒபாமா வகுத்த திட்டப்படி The Patient Protection and Affordable Care Act 2010 இல் உருவாக்கப்பட்டது இதன் முதற் கட்டம் 2014இலும் இரண்டாம கட்டம் 2020இலும் அமூல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. இது அமெரிக்காவிலும் எல்லோருக்கும் மருத்துவ வசதி செய்யும் திட்டத்தின் முதற்படியாகும். இதன்படி வறியவர்களுக்கு இலவச மருத்துவக் காப்புறுதி செய்யும் மாநில அரசுகளுக்கு மைய அரசு நிதி உதவி செய்யும். வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் மருத்துவக் காப்புறுதி செய்யப்படும். இந்த The Patient Protection and Affordable Care Act திட்டத்தை குடியரசுக் கட்சியினர் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்தனர். இந்தத் திட்டடத்திற்கு Obamacare எனப்பட்டப் பெயர் சூட்டினர். அது நாளடைவில் பிரபலமடைந்து அதுவே அத்திட்டத்தின் செல்லப்பெயராகி விட்டது. அமெரிக்க அரசு ஏற்கனவே 2.7 ரில்லியன் அமெரிக்க டொலர்களை மருத்துவத்திற்காக செலவிடுகிறது. ஒரு ரில்லியன் என்பது ஒருஇலட்சம் கோடியாகும். அமெரிக்க மருத்துவச் செலவு பிரித்தானிய நோர்வே போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானது. ஆனால் பிரித்தானியர்களும் நோர்வே நாட்டவரும் ஆரோக்கியமானவர்கள். அமெரிக்காவில் சிசு இறப்பு விகிதம் இவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமானதாகும்.

1980இல் இருந்தே எல்லோர்க்கும் மருத்துவ வசதி என்னும் திட்டம் பற்றி அமெரிக்க அரசியல்வாதிகள் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். Obamacare திட்டம் அமெரிக்க அரச செலவீனங்களை அதிகரிக்கும் என்பதால் குடியரசுக் கட்சியின் பழமைவாதிகளும், புதிய பழமைவாதிகளும் அதைக் கடுமையாக எதிர்த்தனர். இவர்களுடன் ரீபார்ட்டியினரும் இணைந்து கொண்டனர். தாராண்மை மக்களாட்சியினர் மக்களுக்கான சமூக நலன்களில் அக்கறை காட்டுவது உண்டு. ஆனால் அது அரச செலவீனங்களை உயர்த்தும் அதனால் செல்வந்தர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் என்பதால் பழமைவாதிகளும் ரீபார்டியினரும் எதிர்க்கின்றார்கள். Obamacare சட்டத்தின் படி ஐம்பது பேருக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு இலகுவாகக் கட்டணம் செலுத்தக் கூடிய மருத்துவக் காப்புறுதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். Obamacareஇல தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களும் அக்கறை காட்டுவதில்லை. முதலாளிகளுக்கு நன்மை பயக்காததும் வரிச்சுமையை அதிகரிக்கக் கூடியதும்மான Obamacareஐ பழமைவாதிகளும் ரீ பார்ட்டியினரும் கடுமையாக எதிர்த்தனர். உச்ச நீதமன்றம் வரை Obamacare சட்டம் சென்றது. உச்ச நீதிமன்றம் Obamacareஐ ஏற்றுக் கொண்டது.

அமெரிக்கப்பாராளமன்றமான காங்கிரஸின் மக்களவையின் பராக் ஒபாமாவின் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக இருக்கிறது. மூதவையில் ஒபாமாவின் கட்சியான மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மையாக இருக்கிறது. அமெரிக்க அரசின் நிதி ஆண்டு ஓக்டோபர் முதலாம் திகதி தொடங்கி செப்டம்பர் முப்பதாம் திகதிவரையிலான காலப்பகுதியாகும். 2013 ஒக்டோபர் முதலாம் திகதி தொடங்கும் நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை கொன்கிரஸ் தீர்மானிக்கும் போது Obamacareஐக் கைவிடுங்கள் அல்லது அரச நிதி ஒதுக்கீட்டிற்கு முட்டுக் கட்டை போடுவோம் என குடியரசுக் கட்சியினர் மிரட்டினர். இதனால் வெள்ளை மாளிகை, மக்களவை மூதவை ஆகியவற்றிற்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது. மக்களவையும் மூதவையும் குருவின் காலை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பிடித்துவிட்ட மாணவர்கள் போல் ஒன்றின் தீர்மானத்தை மற்றது முட்டுக்கட்டை போடுவது தொடர்ந்தது. இதனால் புதிய நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற அரச சேவைகள் பல மூடப்பட்டு எட்டு இலட்சம் ஊழியர்கள் ஊதியமின்றி விடுமுறையில் அனுப்பப்பட்டனர். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பது போல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் செப்டம்பர் 30-ம் திகதி ஐந்து பில்லியன்களுக்கு மேல் செலவு செய்து கொண்டது.  ரீபார்ட்டியினர் ஒபாமாகெயரை எப்படியாவது தொலைத்துக் கட்டுவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
xxxxx

1976-ம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க அரசின் அத்தியாவசியமற்ற பணிமனைகள் மூடப்படுவது இது பதினெட்டாவது தடவையாகும் ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக இந்த மூடுவிழா நடக்காமலேயே இருந்தது. கடைசியாக 1996இல் நடந்த மூடுதல் இருபத்தியாறு நாட்கள் தொடர்ந்தன. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் மூடுதலும் நான்கு வாரங்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க தேசிய உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தது தசம் எட்டு அல்லது தசம் ஒன்பது விழுக்காடு குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசிற்கு நாள் ஒன்றிற்கு முன்னூறி மில்லியன்கள் நட்டம் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான அடுத்த முறுகல் அமெரிக்க அரச கடன் உச்ச வரம்பைத் தீர்மானிப்பதில் நடக்க விருக்கிறது. அமெரிக்க அரசு வரவிற்கு மிஞ்சி செலவு செய்வதால் அதன் கடன் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பாராளமன்றம் தீர்மானிக்கும். அமெரிக்க மக்களவை கடன் உச்ச வரம்பைக் கூட்டாவிடில் அரசு புதிதாகக் கடன் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் அமெரிக்க அரசு தான் ஏற்கனவே பட்ட கடனிற்கான நிலுவைகளையும் வட்டிகளையும் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் விளைவுகள் எதிர்வு கூறமுடியாமல் இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். உலக நிதிச் சந்தையில் படு பாதகமான விளைவுகள் ஏற்படும். பல உலக நிதிக் கட்டமைப்புக்கள் அமெரிக்காவிற்கு கொடுத்த கடனிலும் அதன் மூலமாகக் கிடைக்கும் வட்டியிலும் பெரிதும் தங்கியிருக்கின்றன. Obamacare ஆல் ஏற்பட்ட பிரச்ச்னை பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒரு பிரித்தானிய பொருளியியல் நிபுணர். அமெரிக்க வலதுசாரிப் பைத்தியங்கள் உலகப் பொருளாதாரத்தையே பணயக் கைதியாக்கி விட்டனர் என்றார்

மொத்தத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பனையால் விழுந்தவனை மாடு ஏறி மீதித்தது போலத்தான் Obamacareஆல் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட இழுபறி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...