Wednesday 30 October 2013

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மாறும் கேந்திரோபாயம்

மத்திய கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய கேந்திரோபாய நோக்கங்களில் 1. எரிபொருள் விநியோகம் தங்குதடையின்றி நடத்தல், 2. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்தல், 3. ஒரு நாடு மற்ற நாட்டில் ஆதிக்கம் செலுத்தாமல் எல்லா நாடுகளும் அமெரிக்காவிற்கு அடங்கி இருக்க வேண்டும், 4. இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுதல் ஆகியவை முக்கியமானதாக இருந்தன. அமெரிக்காவின் இந்த நோக்கங்கள் இப்போது பல முனைகளில் பெரும் சவால்களைப்  எதிர்கொள்கின்றன.

அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளிற்கும் இடையிலான உறவு நெருக்கடிக்கு உள்ளாகின்றது என்பதால் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி 03-11-2013இல் இருந்து மத்திய கிழக்கிற்கு ஒரு பயணத்தை மேற் கொண்டுள்ளார். இது ஒரு முன்னறிவிக்கப்படாத ஒரு பயணமாகும். இது நவமபர் 12-ம் திகதிவரை தொடரும். அவரது முதல் கால் வைத்தது எகிப்தில்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உள்ளக முரண்பாடுகளும் வெளி முரண்பாடுகளும் வெளி முரண்பாடுகளும் அமெரிக்காவுடனான அவற்றின் உறவில் தாக்கம் செலுத்துகின்றன.

துருக்கி
துருக்கி தேசமானது கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுநிலையாக துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே நாடு துருக்கி. அது ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஒரு இணை உறுப்பு நாடாக இருக்கின்றது.

துருக்கி அமெரிக்க உறவில் அதிருப்தி
மேற்கு நாடுகளுடன் இணைந்து ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்கி உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.

எகிப்து
எகிப்தில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹமட் மேர்சியின் ஆட்சியை எகிப்தியப் படைத்துறையினர் கவிழ்த்ததில் இருந்து அமெரிக்க எகிப்து உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அமெரிக்கா எகிப்திற்கான தனது நிதி உதவியை நிறுத்தியது. இதனால் எகிப்தியப் படைத்துறை ஆட்சியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். படைத்துறையினரின் ஆட்சிக் கவிழ்ப்பை ஒரு படைத்துறைச் சதி என அமெரிக்கா கருத்துத் தெரிவிக்காததால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினரும் அதன் ஆதரவாளர்களும் ஆத்திரமடைந்திருந்தனர். 

விரக்தியடைந்த சவுதி அரேபியா

அரபுநாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் கேந்திரமுக்கியத்துவம் மிகுந்த நட்பு நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் அதிபரான இளவரசர் பந்தார் பின் சுல்தான் அமெரிக்காவுடனான சவுதி அரேபியாவின் உறவில் பெரிய மாற்றம் ஏற்படவிருக்கின்றது என சில ஐரோப்பிய இராசதந்திரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் 2013 ஒக்டோபர் 23-ம் திகதி தெரிவித்தது மத்திய கிழக்கின் இராசதந்திர மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 22 ஆண்டுகள் வாஷிங்டனுக்கான சவுதியின் தூதுவராகப் பணியாற்றிய சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் அதிபரான இளவரசர் பந்தார் பின் சுல்தான் இப்படிக்கூறியது ஆச்சரியப்படவைக்கக் கூடியதே. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு போதிய படைக்கலன்கள் வழங்காததும் சிரியாவில் வேதியியல் படைக்கலனகள் பாவித்த பின்னரும் சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்காததும் விரக்தியை ஏற்படுத்தியது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்ததும் சவுதி அரேபியாவை ஆத்திரப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய கிழக்கில் சவுதியின் பிரதான எதிரியான ஈரானுடன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் பொருளாதாரத் தடை நீக்கம் தொடர்பாகவும் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்த முன்னர் அமெரிக்கா தம்மைக் கலந்தாலோசிக்காதது  சவுதி அரேபியாவைக் கடும் விரக்திக்குள்ளாக்கியது. இந்த விரக்தி சவுதி அரேபியாவை சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக் பெரும் படைக்கல உதவிகளை வழங்கி சிரியாவில் தனக்கு ஆதரவான ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வைக்கலாம். அது இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைந்தால் அமெரிக்கா பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கலாம்.

பாவம் பாஹ்ரேய்ன்

ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு பாஹ்ரேய்னில் தளம் அமைத்து இருக்கிறது. உலக எரிபொருள் வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணையைப் பாதுகாக்க பாஹ்ரேய்னில் இருக்கும் தளம் முக்கியமானதாகும். பாஹ்ரெய்னில் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபடி இருக்கின்றனர். பாஹ்ரெய்னின் சுனி இசுலாமிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் பதவியில் இருக்கின்றனர். பாஹ்ரெய்ன் ஆட்சியாளர்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது அமெரிக்காவும் அவற்றுடன் இணைந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. பாஹ்ரெய்னின் கிளர்ச்சிக்காரர்களுள் பெரும்பானமையானவர்கள் சியா முசுலிம்களே. அவர்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கிவருகின்றது.

தீவிரமடையும் தீவிரவாதிகள்

மும்மர் கடாஃபிக்குப் பின்னர் லிபியாவின் புரட்சியாளர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்கு என்று நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு அதற்குள் அடக்கு முறை ஆட்சியை செய்து வருகின்றன. ஈரான் லிபியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றது. லிபியாவில் அல் கெய்தா வளர்ந்து வருகின்றது. சிரியப் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அங்கு அல் கெய்தாப் போராளிகளும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தமக்குப் பலத்த உயிரழப்பை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா நம்பியிருந்தது. ஆனால் சிரியாவில் அவை இரண்டும் போர்க்கள அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் தமக்கு என்று  நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு நிலை கொண்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. சிரியாவில் அல் கெய்தா தனக்கு என ஒரு நிலப்பரப்பை கைப்பற்றிக் கொள்வது  மத்திய கிழக்கில் பெரும் பாதகமான நிலைமையை உருவாக்கும். சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் இணைந்து தொடர்பான சமரசத்திற்காக ஏற்பாடு செய்த ஜெனிவா-2 பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க சார்பு கிளர்ச்சி அமைப்புக்கள் பத்தொன்பது தாம் வரமாட்டோம் என மறுத்து விட்டன. இது இரசியாவைக் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இப்படிப்பட்ட பெரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமெரிக்க அரசு மத்திய கிழக்குத் தொடர்பான தனது கொள்கைகளையும் கேந்திரோபாய நோக்கங்களையும் மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் மனமாற்றம் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு கசிய விடப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கேந்திரோபாய நோக்கங்கள்:
1. ஈரானுடன் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டுதல், 2. பாலஸ்த்தினத்திற்கும் இஸ்ரெலுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்துதல்,
3. சிரியக் கிளர்ச்சியை தணித்தல்.

இதில் அமெரிக்கா ஜோர்ஜ் புஷ் காலத்தில் இருந்து சொல்லி வந்த இரு முக்கிய அம்சங்களைக் காணவில்லை. ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றது மக்களாட்சியை ஏற்படுத்துதல்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...