Wednesday 23 October 2013

மேற்கு நாடுகளின் பரப்புரைக் கருவியாக மலாலா

அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானியப் 16 வயது பெண்ணான மலாலாவை அவதானித்து வருபவர்கள் அவர் ஒரு திறமை மிக்கவர் என்பதையும் அவருக்கு அளவுக்கு அதிகமாக மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது என்பதையும் அவர் கொடுக்கும் பேட்டிகளில் அவரது வாதத் திறமை நம்ப முடியானதாக இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது.

திட்டமிட்டு உருவாக்கப்படுகிறாரா?
நாளுக்கு நாள் மலாலாவின் பேட்டி கொடுக்கும் திறமை வளர்ந்து கொண்டு செல்லவதைப் பார்க்கும் போது அவர் நன்கு திட்டமிட்டுப் பயிற்றுவிக்கப்படுகின்றார் என்பது தெளிவாகின்றது. அரை நன்கு பயிற்றுவிப்பதும் அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் அவர் ஒரு பரப்புரைக்காகப் பயன்படுத்தப் படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்புகிறது. மலாலா அடிக்கடி வலியுறுத்துவது பெண்களின் கல்வியையே. தலிபான், அல் கெய்தா போன்ற இசுலாமியப் போராளிக் குழுக்களுக்கும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு மிதவாத அமைப்புக்களுக்கும் பலவீனமான மையமாக அவற்றின் பெண்களின் கல்வி தொடர்பான கொள்கை இருக்கிறது. அந்தப் பலவீனமான மையத்தில் தாக்க மலாலா பாவிக்கப்படுகின்றாரா என்ற ஐயம் நியாயமானதே. பாக்கிஸ்தானின் ஆப்கானிஸ்த்தானுடனான எல்லைப் பிரதேசத்தில் சுவட் பள்ளத்தாக்கில் பிறந்தவர் மலாலா யூசுப்சாஜ்.

நபிகள் பெண்களின் கல்விக்கு எதிரானவர் அல்லர்.
இறை தூதுவர் முஹம்மது கல்விக்கோ அல்லது பெண்களின் கல்விக்கோ எதிரானவர் அல்லர் என்றும் அவரது குர் ஆன் வாசி என்ற கட்டளையுடன் ஆரம்பமாகிறது என்றும் அந்தக் கட்டளை ஆண்களுக்கு மட்டுமல்ல என்றும் சொல்லப்படுகின்றது. அவரின் முதல் மனைவி தனியாக ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கையில் அவர் பெண் உரிமைக்கு எதிராகப் போதித்து இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.

மலாலாவிற்கு மட்டும் மனிதாபிபானமா?
பாக்கிஸ்த்தானின் வாரிஸ்த்தான் பகுதியில் இரு இனக் குழுமங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு நிலப் பிணக்கைத் தீர்த்து வைக்க ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அது இசுலாமியத் தீவிரவாதிகளின் கூட்டம் எனக் கருதி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அவர்கள் மீது குண்டுகளை வீசின. அப்போது பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். காயப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்க எந்த ஒரு மேற்கு நாடும் முயலவில்லை. ஆனால் மலாலாவிற்கு மட்டும் சிறந்த சேவை செய்தது பிரித்தானியா

பிபிசியில் ஆரம்பித்த மலாலா
மலாலாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்தும் அவர்மீது சூடு விழுந்த பின்னர் ஆரம்பித்தது அல்ல. அவர் 11வயதாக இருக்கும் போதே 2009-ம் ஆண்டு பிபிசியின் உருது மொழிப் பிரிவின் பதிவுப் பகுதியில் (Blog) தலிபான்களின் கீழ் வாழ்க்கை என்பது பற்றி எழுதி வந்தார். இதனால் பிரபலமடைந்த மலாலா பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரித்தது. இதனால் பிபிசியில் எழுதியவரை இனம் கண்டு கொண்ட தலிபான்கள் மலாலாவையும் அவரது இடதுசாரிக் கொள்கையுடைய தந்தையையும் தமது எதிரிகள் பட்டியிலில் இணைத்துக் கொண்டனர். பின்னர் 2012-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மலாலா பேருந்தில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் தலையில் சுடப்பட்டார். பின்னர் அவர் பிரித்தானிய பெர்மின்ஹம் நகரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிழைக்கச் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதுவரான முன்னாள் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் உலகில் எல்லோருக்கும் கல்வி என்ற பரப்புரையை ஆரம்பித்தார்.

பிரபல புள்ளியானார் மலாலா.
மலாலா அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகையின் உலகில் செல்வாககுச் செலுத்தக் கூடிய 100 புள்ளிகளுள் ஒருவராக இணைக்கபட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். பல அமைப்புக்கள் அவருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கின. மேற்கு நாடுகளின் எல்ல முன்னணி ஊடகங்களும் அவரைப் பேட்டி கண்டன. மலாலாவின் ஓவியங்கள் பிரபல ஓவியர்களால் வரையப்பட்டன. நோபல் பரிசுக்கு மலாலா பரிந்துரை செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். உலக வங்கியில் உரையாற்றினார். பிரித்தானிய அரசியின் அரண்மனைக்குச் சென்று அரசியைச் சந்தித்தார். வெள்ளை மாளிகை சென்று பராக் ஒபாமாவைச் சந்தித்தார். அவர் பல மில்லியன் பிரித்தானியப் பவுண்களைப் பெற்றுக் கொண்டு நான்தான் மலாலா என்ற  புத்தகமும் எழுதினார். இவ்வளவும் ஒரு 16வயதுப்பெண்ணால் ஓர் ஆண்டுகளுக்குள் சாதிக்க முடிந்தது.

பாக்கிஸ்த்தானில் நாளுக்கு நாள் மலாலா பிரபலமடைந்து வருகின்றார். இந்திய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த மலாலா தான் பாக்கிஸ்த்தானின் தலைமை அமைச்சராக வர விரும்புவதாகவும் தான் இந்திய பாக்கிஸ்த்தானிய உறவை மேம்படுத்துவார் எனவும் சொன்னார். தலைமை அமைச்சராக தனது முக்கிய பணி பெண்களுக்கான கல்வியாகவே இருக்கும் என்கிறார். ஆனாலும் மலாலாவிற்கு மேற்கு நாடுகளின் அரசுகளும் ஊடகங்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பல பாக்கிஸ்த்தானியர்களும் மற்றும் உலகெங்கும் வாழும் இசுலாமியர்களும் ஐயத்துடன் பார்க்கின்றனர். மலாலாவை இசுலாமிய மதத்திற்கு எதிரான பரப்புரைக் கருவியாக்கி விட்டனரா என்ற கேள்வி எழுந்து விட்டது. ஆனால் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு பரப்புரைக் கருவியாக அவர் பார்க்கப்படுகின்றார். தான் சுடப்பட்டவுடன் பல பெண்கள் நான்தான் மலாலா என்ற பதாகையுடன் பாக்கிஸ்த்தான் தெருவில் நின்றார்கள் ஆனால் நான்தான் தலிபான் என்ற பதாகையுடன் யாரும் தெருவில் இறங்கவில்லை என்கின்றார் மலாலா. ஒரு பாக்கிஸ்த்தானிய ஊடகர் மலாலா உலகிலேயே மிகப்பெரிய மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றார் என்றார். இன்னொரு இந்திய ஊடகர் மலாலாவை தகாத வார்த்தைகளால் விமர்சித்து பாக்கிஸ்த்தான் போன்ற ஒரு ஊழல் நிறைந்த நாட்டுக்கு ஊழலில் உருவான மலாலா தலைமை அமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதிகளும் உடையவர் என்றார். பாக்கிஸ்த்தான், பங்களாதேசம், இந்தியா போன்ற பல நாடுகளில் உள்ள படித்த இடதுசாரிக் கொள்கையுடையவர்களும் மலாலாவை வெறுக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் மலாலாவை ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாகப் பார்க்கின்றனர்.

மலாலா பற்றிக் கட்டிய கதையும் முட்டிக் கொண்ட்ட பிரெஸ் டிவியும்
மலாலாவை சிஐஏ பாவிக்கின்றது என்ற செய்தி பாக்கிஸ்த்தானில் தீவிரமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் போது பாக்கிஸ்த்தானின் பிரபல ஆங்கிலப்பத்திரிகையான் டௌன் ஒரு மலாலா பற்றிய ஒரு கதையை வெளிவிட்டது. அக்கதையின் படி : மலாலா ஒரு ஹங்கேரியில் ஒரு கிருத்தவ மடத்தில் பிறந்த கிருத்தவர். அவரை அவரது தந்தை தத்து எடுத்தார். மலாலா சிறு வயதாக இருக்கும் போது காதுக் குத்துக்காக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மலாலாவின் காதுக் குடுமியை(Ear wax) ஒரு குப்பியில் எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவரது பொழுது போக்கு தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் காதுக் குடுமியைச் சேகரிப்ப்து. மலாலாவின் காதுக் குடுமியில் செய்த டி.என்.ஏ பரிசோதனையின் படி அவர் ஒரு கிழக்கு ஐரோப்பியர் என்பது உறுதியாகி விட்டது. அவரைச் சுட்டது தலிபான் அல்ல சிஐஏயே. இப்படிப் போனது அந்தக் கதை. இதை உண்மை என நம்பிய ஈரானின் பிரெஸ் டிவி அதைப் பெரிய செய்தியாக்கியத். பின்னர் டௌன் பத்திரிகை தனது கதையை "யாவும் கற்பனை" எனச் சொன்னது. ஆனால் மலாலாவிற்கு எதிரான பரப்புரையைத் திசைதிருப்பவே டௌன் பத்திரிகை இப்படிச் செய்தது எனவும் விவாதிக்கலாம்.

அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியவற்றிற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பரப்புரை போதியதாக இல்லை. மலாலா அடுத்த பெனாஷிர் பூட்டோ எனவும் விமர்சிக்கப்படுகிறார். பெனாஷிரைப் போலவே மலாலாவின் வாழ்க்கைப் பயணம் ஆபத்து மிக்கதாகவும்  சாதனை நிறைந்ததாகவும் அமையப்போகிறது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...