Friday 11 October 2013

அல் லிபி கைது: அமெரிக்கா நிலத்தில் அத்து மீறல் கடலில் மனித உரிமை மீறல்

லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் அத்து மீறிப் புகுந்த அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணியினர் கெய்தா உறுப்பினராகக் கருதப்படும் அபு அனஸ் அல்-லிபி எனப் பிரபலமாக அறியப்பட்ட நஜிஹ் அல்-ரகாயைக் கடத்திச் சென்றனர். ஒக்டோபர் ஐந்தாம் திகதி சனிக்கிழமை அதிகாலை தனது தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த அல் லிபியை மூன்று திசைகளில் இருந்து வந்த முகமூடியணிந்த டெல்டாப் படையணியினர் தனது வீட்டின் முன் தனது வண்டியை நிறுத்த முயன்று கொண்டிருதவரின் வண்டியின் கண்ணாடிகளை உடைத்து அவர் துப்பாக்கியைப் பிடுங்கி விட்டு அவரைக் கடத்தி கொண்டு போய் மத்திய தரைக்கடலில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் சன் அண்டோனியோ என்னும் கப்பலில் வைத்திருக்கின்றனர்.

நாற்பத்தி ஐந்து வயதான அபு அனஸ் அல் லிபி எந்த ஒரு நாட்டின் நியாய ஆதிக்கத்திற்கும் உட்படுத்தப்பட முடியாதவராக்கப்படுவதற்காக அவர் கடலில் வைத்திருக்கப்படுகின்றார். அவர் ஒரு குற்றவாளிக்குரிய எந்த ஒரு உரிமையும் இல்லாதவராக இருக்கிறார். அவர் ஜெனிவா உடன்படிக்கைக்கு அமைய விசாரிக்கப்படுகிறார் என அமெரிக்க அரசு சொல்கிறது. அவருக்கு அமெரிக்காவில் குற்றம் இழைத்தவராக கருதப்பட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் மிரண்டா உரிமை வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் பெண்டகன், சிஐஏ,  எஃப்பிஐ போன்ற துறையைச் சேர்ந்தவர்களின் நிபுணர்குழுவால் கடுமையாக விசாரிக்கபப்டுகின்றார். இவரை விசாரிக்கும் குழுவை High Value Detainee Interrogation Group என அழைப்பர். இந்த விசாரணையின் போது பெறப்படும் தகவல்கள் முறை சட்ட விரோதமானது என்பதால் அவர் நீதிமன்றின் முன் நிறுத்தப்படும் போது நீதிமன்றில் இத் தகவல்களை அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்க முடியாது. கியூபாவில் உள்ள அமெரிக்காவின் சித்திரவதைக் கூடமான குவான்டனாமோ குடாவிற்கு ஒருவரையும் அனுப்பக் கூடாது என்ற கொள்கையுடன் ஒபாமா இருக்கிறார்.

தற்போது அபு அல் லிபி ஒரு எதிரி நாட்டுப் படைவீரனைப் போல் நடத்தப்படுகிறார் என்கிறது அமெரிக்க அரசு. அபு அல் லிபி மீது உடலில் காயம் ஏதும் ஏற்படாத முறையில் நவீன முறையில் சித்திரவதை பிரயோகிக்கப்பட்டு அல் கெய்தாபற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வார்கள். பின்னர் அவர் அமெரிக்காவின் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அப்போது அவருக்கு அமைதியாக இருக்கும் உரிமை, வழக்கறிஞர் வைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன வழங்கப்படும் என்கிறது அமெரிக்க அரசு. அல் லிபி பல அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசு சோமாலியாவிற்கும் யேமனுக்கும் இடையில் ஏடன் வளைகுடாவில் ஒரு படகில் சென்று கொண்டிருக்கையில் கைப்பற்றிய சோமாலியப் போராளியான அஹமட் அதுல் கதீர் வர்சேம் (Ahmed Abdul kadir Warsame) அறுபது நாட்கள் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு அரசு தரப்புச் சாட்சியாக மாறினார்.

2001 செப்டம்பர் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ உலகெங்கும் பல நாடுகளில் பல இசுலாமியத் தீவிரவாதிகளைக் கைது செய்து கடத்திச் சென்று தனது இரகசிய நிலையங்களில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்து விசாரணை செய்தது.

அல் லிபியை அமெரிக்கா கடத்திச் சென்றமைக்கு லிபிய அரசு உதவி செய்ததாக இசுலாமியத் தீவிரவாதிகள் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1373இன் படி ஒரு நாடு பயங்கரவாதிகள் தொடர்பாகத் தனக்கு கிடைத்த தகவல்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள  வேண்டும்.

அல் லிபியை அமெரிக்க டெல்டாப் படையணியினர் கடத்திச் சென்றதைத் தொடர்ந்து லிபியத் தலைமை அமைச்சர் அலி சிடான் கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பு லிபியத் தீவிரவாதிகளுக்கு கடும் மிரட்டல்களை திரைமறைவில் விடுத்தனர்.  இதைத் தொடர்ந்து தலமை அமைச்சர் அல் சிடான் விடுவிக்கப்பட்டார்.

லிபியத் தலைமை அமைச்சர் கடத்தப்பட்டமை லிபியாவில் மும்மர் கடாஃபிக்குப் பின்னர் பல ஒன்றிற்கு ஒன்று முரணான படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்கின்றது. இக்குழுக்கள் தமக்கென சில பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இவைகளுக்கு இடையிலான முறுகல்கல் மோதல்களாக மாறினால் அது பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்தும். அல் கெய்தா ஆதரவுக் குழுக்கள், ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் போன்றவற்றை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. 2013 ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் திரிப்போலியில் உள்ள இரசிய தூதுவரகம் தாக்கப்பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...